கொழுப்பு தொடர்பான உங்கள்
கலக்கத்தையும் அது குறித்த கடிதங்களையும் கண்டேன். சமகாலத் தலைமுறையின் ‘நுண்ணறிவு’த் தள்ளாட்டங்களாகவே அவை எனக்குப் பட்டன. நுண்ணறிவை மட்டம் தட்ட வேண்டும் என்பது எண்ணமில்லை; அதன் போதாமையைச் சுட்டியாக வேண்டிய தேவை இருக்கிறது.
நான் மருத்துவன் அல்ல. வழிபாடு குறித்த ஐந்தாண்டு கால ஆய்வில் அதிகம் எனக்குக் கிடைத்தவை நோய் மற்றும் நல்வாழ்வு குறித்த தகவல்களே. வழிபாட்டுக்கு அடிப்படையான சமூகக் காரணங்களில் உடல், மன நோய் நீக்கமே முதன்மையாய் இருந்திருக்கிறது. சமூக வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கும் ஒருவரால், இதை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக, சமூக மருத்துவ முறைகளின்(சமூகப் பயன்பாட்டில் இருக்கும் மருத்துவ முறைகளைக் குறிக்கும் பொதுச்சொல்) பின்புலத்தை விளங்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். அவ்வகையில் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இங்கு நோக்கம்.
நோயும், மருத்துவமும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் வாழ்வில் இணைந்திருக்கின்றன. சங்க இலக்கியம் முதற்கொண்டு சமீபகாலம் வரை ”கடவுள் வழிபாட்டால் எங்கள் நோய் குணமாயிற்று” என்று சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். சமண சமயத்தில் இருந்த திருநாவுக்கரசரின் வெப்பு நோய் குணமானதால் சைவ சமயத்துக்கு அவர் மாறியதாக சான்று இருக்கிறது. அருணகிர்நாதரின் தொழுநோயை முருகனே குணப்படுத்தியதாக அவரின் திருப்புகழ்ப் பாடல்கள் தெரிவிக்கின்றன. பகழிக்கூத்தரின் தீராத வயிற்று வலியை திருச்செந்தூர் முருகனே சரி செய்தார் என்று அவரின் பாடல்கள் தெரிவிக்கின்றன. இப்பட்டியல் குமரகுருபரர், தேவராய சாமிகள், பாம்பன் சாமிகள், கிருபானந்த வாரியார் வரை நீள்கிறது. சமயச்சான்றோர்கள் என்றில்லை.. அம்மை நோய்க்கு அம்மனின் கோபமே காரணம் என நம்பும் சாமானியர்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். இத்தகவலை இங்கு குறிப்பிடக் காரணம்.. நோய்கள் ஏதாவது ஒருவகையில் நம்மைத் தொடர்ந்தபடியே இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள மட்டுமே. மற்றபடி, வழிபாட்டைப் பெருமைப்படுத்த அன்று(வழிபாட்டின் வழியாக நோய் நீங்குமா, நீங்காதா என்பது மற்றுமொரு விவாதம்).
மருத்துவத்துக்கு வருகிறேன். சமூக மருத்துவத்தை இரு பெரும் பிரிவுகளாய்ப் பகுத்துக் கொள்கிறேன். ஒன்று, நவீன மருத்துவம்; மற்றது மாற்று மருத்துவம். ஒவ்வொன்றைப் பற்றிய அடிப்படைகளையும் நாம் புரிந்து கொண்டால்தான், அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது குறித்த விழிப்புணர்வுக்கு நகர முடியும்.
முதலில், நவீன மருத்துவத்தைப் பார்ப்போம். நவீன மருத்துவம் மனிதனின் உடலை உடற்கூற்றியல் வழியாக முதலில் பாகங்களாகப் பிரிக்கிறது. பிறகு அதன் செயல்பாடுகளை உடற்செயல்பாட்டியல் வழியாகப் புரிந்து கொள்ளப் பார்க்கிறது. மேலும், இவ்விரண்டின் அடிப்படைகளைக் கொண்டே நோய்களையும் மருந்துகளையும் பரிந்துரைக்கிறது. நவீன மருத்துவம் தர்க்க அடிப்படையில் ஒரு மனிதனை உடலாக மட்டுமே பார்க்கிறது அல்லது உடலை மட்டுமே கருத்தில் கொண்டு நோய்களையும், மருந்துகளையும் தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சான்று. காய்ச்சல் என்று எடுத்துக் கொண்டால் மணியின் காய்ச்சலுக்கும், சத்திவேலின் காய்ச்சலுக்கும் ஒரே மருந்துதான். காய்ச்சலின் அளவைக் கொண்டு மருந்துகளில் வீரியம் கூடக் குறைய இருக்கும்; அவ்வளவுதான்.
நவீன மருத்துவத்தில் மற்றுமொரு சிக்கலாக எனக்குப் படுவது அதன் சிகிச்சை முறைதான். கண் மருத்துவர் என்பவர் கண்ணுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பவர். காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் என்பவர் அப்பாகங்களுக்கான மருத்துவர். இதயம், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கும் தனித்தனி மருதுவர்கள். தர்க்கப்படி ஒப்புக்கொள்ளக் கூடியதுதான்; நியாயமாகத் தோன்றுவதுதான். உண்மையில், கண்ணில் தோன்றும் பிரச்சினை என்பது கண்ணின் பிரச்சினை மட்டும்தானா? உடல் என்பது உறுப்புகளின் ஒன்றியம்தானே.. அவ்வகையில் உள் உறுப்பு ஏதாவது ஒன்றில் நிகழும் குறைபாடுகள் கண்ணில் வெளிப்படலாம்தானே.. கண் மருத்துவர் அப்படியா கவனித்துப் பார்க்கிறார். கண்ணைக் குறித்து மட்டும்தானே அவர் கவலை கொள்கிறார். கண்ணை முதன்மைப்படுத்தித்தானே அவர் சிகிச்சை அளிக்கிறார். இது அறிவியல்பூர்வமாக சரியானதுதானா?
நவீன மருத்துவத்தில் தரப்படும் மருந்துகளும் வேதியியல் கூடங்களில் செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை. சொல்லப்போனால், அவை வேதித்தூண்டிகளாகச் செயல்படும். எப்படி என்றால், ஒருவர் உடல்வலி என்று சொன்னால் அவ்வலியை மறக்கச் செய்யும்படியான் வேதிப்பொருளே மருந்தாகத் தரப்படும். அப்பொருளை உட்கொண்டால் வலி குறைந்த உணர்வு ஏற்படும்; உண்மையில் வலி குறையாது என்பதை நினைவில் வையுங்கள். மேலும், அவ்வேதிப்பொருட்கள் உடலின் இயற்கைத் தன்மையைச் சீண்டிப் பார்க்கவும் செய்யும். இயல்பான உடல் எதிர்ப்பாற்றலை நவீன மருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாய் மழுங்கடித்துக் கொண்டே வரும். நவீன மருந்துகளைத் தொடர்ச்சியாய் பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டவன் நான். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நவீன மருந்துக் கடைகளில் பகுதி நேரமாகப் பணியாற்றியும் இருக்கிறேன்.
இயற்கையான ஆக்சிஜனுக்கும், மனிதன் ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கும் ஆக்சிஜனுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது வழியாக நவீன மருந்துகளின் அடிப்படைப் பொருட்களை விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும். இரண்டிலும் கிடைப்பது ஆக்சிஜன்தான் என்றாலும், செயற்கை ஆக்சிஜன் ஓரளவே நமக்கு உதவும். அதிகப்படியாகும்போது அதுவே நமக்குக் கேடாகும். நமக்கு இரும்புச்சத்து வேண்டும் என்றால் பெர்ரஸ் சல்பேட் எனும் வேதிப்பொருளின் வழியே அதை நமக்கு நவீன மருத்துவம் வழங்கப் பார்க்கிறது. தர்க்க அடிப்படையில் சரிதான் என்றாலும்.. அது செயற்கையான இரும்புச் சத்து என்பதும் உடலால் அதை ஓரளவே ஏற்றுக்கொள்ள முடியும் என்பதும் நம்மில் எத்தனை பேருக்குப் புரியும்? இயற்கையான் இரும்புச் சத்தை முருங்கை இலை, அத்திப்பழம்(ஊற வைத்தது) போன்ற பழங்களின் வழியாக உடல் இயல்பாக எடுத்துக் கொள்கிறது. திரும்பவும் விளங்கிக் கொள்வோம். முருங்கை இலையில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்து இயற்கையானது; உடலால் இயல்பாக ஏற்றுக் கொள்ளக் கூடியது. நவீன மருந்துகளின் இரும்புச் சத்து செயற்கையானது; உடலால் ஓரளவே ஏற்றுக் கொள்ள முடிவது.
நவீன மருத்துவத்தைக் குறித்து மணிக்கணக்கில் பேசுவதற்குண்டான தகவல்கள் என்னிடம் உள்ளன. அவற்றைக் கொண்டு அம்மருத்துவத்தை நிர்மூலமாக்குவதோ. ஒதுக்கித்தள்ளுவதோ என் வேலையன்று. அம்மருத்துவத்தை எக்காலத்தில் பயன்படுத்த வேண்டுமோ, அப்போது மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் புரிதல். மற்றபடி, எடுத்த்துக்கெல்லாம் நவீன மருத்துவத்தை நாடுவது என்பது நமக்கு நாமே பறித்துக் கொள்ளும் குழியாகவே எனக்குப் படுகிறது. அம்மருத்துவம் தொடர்பான தகவல்களையும் பொதுப்புத்தி கொண்டு ஆய்ந்து பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் என் விருப்பம்.
நவீன மருத்துவத்தைக் குறித்து பலரும் சொல்லியாகி விட்டது என்றாலும், நினைவூட்டலுக்காக சொல்லியாக வேண்டி இருக்கிறது. நவீன மருத்துவம் நோய்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில்லை; மாறாக, பெருக்கிக் கொண்டே செல்கிறது. இங்குதான், அம்மருத்துவத்திற்குப் பின்னிருக்கும் பெருவணிகச் சந்தை குறித்த கேள்விகள் எழுகின்றன. இங்கு, சிலரைக் குறிப்பிட்டு இல்லுமினாட்டிகள், அவர்கள்தான் எல்லாவற்றையும் இயக்குகிறார்கள் என்றெல்லாம் ஜல்லியடித்துவிட மாட்டேன். நியாயமான சந்தேகத்தை உங்கள் முன் வைக்கிறேன்; அவ்வளவே.
மாற்று மருத்துவ முறைகளுக்கு வருவோம். முதலில், ஹோமியோபதி. ஜெர்மன் நாட்டில் தோன்றியது. புகழ்பெற்ற நவீன மருத்துவரான சாமுவேல் ஹானிமென் முன்வைத்த மருத்துவ முறை. நவீன மருத்துவம் மனிதனை உடலாக மட்டுமே கருத.. ஹோமியோபதி உடலின் நோய்களை மனதின் குறிகள் வழியாகப் பார்த்தது. சான்றாக், காய்ச்சலுக்கே மீண்டும் வருவோம். மணியின் காய்ச்சலும், சத்திவேலின் காய்ச்சலும் ஒன்றல்ல. அதாவது, வெறுமனே உடலை மட்டுமே கணக்கில் கொள்வதில்லை. காய்ச்சலின் போதான இருவரின் மனக்குறிகளைக் கொண்டே நோய் மதிப்பிடப்படுகிறது. மணியின் காய்ச்சல் குறித்து மணி சொல்பவனவற்றைக் கணக்கில் கொள்ளாமல், ஹோமியோபதியில் மருந்து தர மாட்டார்கள். மேலும், காய்ச்சலுக்கு என்று பொதுவான மருந்தை ஹோமியோபதி பரிந்துரைப்பதே இல்லை. காய்ச்சலின் போது ஒரு மனிதனின் மனதில் தோன்றும் நோய்க்குறிகளுக்கே மருந்து. ஹோமியோபதியைக் குறித்துப் பேசவும் தகவல்கள் நிறைய இருக்கின்றன என்றாலும், அவை இங்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்.
நவீன மருத்துவமும், ஹோமியோபதியும் மேற்கு நமக்களித்த கொடைகள். அக்குபஞ்சர் மருத்துவ முறை சீனா நமக்கு அளித்ததாக்ச் சொல்லப்படுகிறது. யுனானி கிரேக்க-அரேபிய மருத்துவ முறை. ரெய்கி ஜப்பானிய மருத்துவ முறை. ஆயூர்வேதம் வட இந்திய(சமஸ்கிருத) மருத்துவ முறை. மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிய விளக்கங்கள் கடிதத்தை நீளச் செய்து விடும் என்பதால், சுருக்கமாக ஒரு வரியில் சொல்கிறேன். நவீன மருத்துவமும், மாற்று மருத்துவ முறைகளில் சித்த மருத்துவம் தவிர்த்து மற்றவை எல்லாம் நமக்கு வெளியில் இருந்து வந்தவை. சித்த மருத்துவம் மட்டுமே நமக்கு மிக அணுக்கமான மாற்று மருத்துவ முறை.
சித்த மருத்துவம் தவிர பிற மருத்துவ முறைகள் முறைப்படியான அறிவியல் தர்க்கங்களைக் கொண்டு அறிவியலாக நிறுவப்பட்டுள்ளன. சித்த மருத்துவம் மட்டுமே இன்றளவும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. சித்த மருத்துவத்தை ’அறிவியல் தர்க்க மருத்துவமாக’ நிறுவிவிட இன்றைக்குப் பலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், அதை அப்படி அறிவியல் மருத்துவமாக நிறுவிவிட முடியுமா எனத்தெரியவில்லை. ஆனால், வாழ்வியல் மருத்துவமாகவே நம்மோடு அது உறவு கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
சித்த மருத்துவம் குறித்த எனது புரிதல்களை மட்டுமே நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பிற மருத்துவ முறைகள் எல்லாம் மனிதனை உடல் மற்றும் மனமாக மட்டுமே பார்க்க.. சித்த மருத்துவம் அவனை உடல், மனம் மற்றும் உயிர் என்பதாகப் பார்க்கிறது. மணி, மந்திரம் மற்றும் மருந்து என்பதான சித்த மருத்துவக் குறிசொற்களே அதற்குத் தகுந்த சான்று(சைவ சமயத்தை முன்வைத்து, இவற்றை விரிவாக விளக்க முடியும்).
சித்த மருத்துவத்தின் வரலாறை நிச்சயம் நம்மால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. அம்மருத்துவம் குறித்த தகவல்களை ஓரளவு தொகுத்துப் புரிந்து கொள்ளப்பார்க்கலாம். ”அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்” என்பது சித்த மருத்துவ மூல தத்துவம். எளிமையாகச் சொல்வதாயின், அண்டம் என்பது இயற்கை. பிண்டம் என்பது செயற்கை. இது ஓரளவுக்கே பொருந்தும் என்றாலும் புரிந்து கொள்வதற்காக இப்படித்தான் கொள்ள வேண்டி இருக்கிறது. அண்டமும், பிண்டமும் இணக்கமாக இருக்கும் வரை பிண்டத்துக்குக் கேடு வராது. அண்டத்தோடு பிண்டம் முரண்பட்டவுடன் அதற்குக் கேடு துவங்கி விடுகிறது. கேடு என்பது நோய் என்று சொல்லாமலேயே தெரிந்து கொண்டிருப்பீர்கள். இன்னும் எளிமையாகச் சொல்வதாயின், உடல் இயற்கைக்கு இணக்கமாக இருக்கும் வரை நம்மை நோய்கள் நெருங்கா. அவ்வியற்கைக்குக் கொஞ்சம் முரண்பட்டாலும் நோய்கள் தலைகாட்டத் துவங்கிவிடும். இங்கு நோய்கள் துன்பங்களே அன்று; உடல் இயற்கைக்கு நாம் முரண்பட்டிருக்கிறோம் என்பதைச் சுட்டும் அறிவிப்பான்கள்.
சித்த மருத்துவம் மனிதனின் நோய்களுக்கு வாதம், பித்தம், கபம் எனும் மூன்று காரணிகளை முன்வைக்கிறது. அவற்றை ஐம்பூதங்களின் கலவையாகவும் சொல்கிறது. ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் மண் எனும் ஐம்பூதங்களை நாம் அறிவோம். அவற்றில் மண்ணும், நீரும் கபத்துக்குக் காரணமாகின்றன. நெருப்பு பித்தத்துக்குக் காரணமாகிறது. காற்றும், ஆகாயமும் வாதத்துக்குக் காரணமாகின்றன. உடல் மண்ணும், நீருமால் ஆனது; மனம் ஆகாயம், காற்றால் ஆனது; உயிர் நெருப்பால் ஆனது. உயிர்ச்சூடு எனும் வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.
சித்தமருத்துவம் கணக்கிலடங்கா நோய்களைப் பட்டியலிட்டாலும் அவற்றை வாத, பித்த மற்றும் கப வகைகளுக்குள்ளாகவே அடக்கி விடுகின்றன. கபம் அதிகம் – கபம் குறைவு, பித்தம் அதிகம் – பித்தம் குறைவு, வாதம் அதிகம் – வாதம் குறைவு என்கிற பிரிவுகளுக்குள்ளாகவே நோய்களை அடக்கி விடுகிறது. நோய்களின் பெயர்களையோ அவற்றைக் கண்டு அஞ்சுவதையோ சித்த மருத்துவம் ஒப்புவதில்லை.
சித்த மருத்துவ மூன்று வகையான மருந்து வர்க்கங்களைப் பரிந்துரைக்கிறது. அவை – தாவர வர்க்கம், மாமிச வர்க்கம் மற்றும் தாது வர்க்கம். தாவர வர்க்க மருந்துகள் என்பவையே இன்றைய மூலிகை மருந்துகள் எனச் சொல்லப்படும் தாவர மூலிகை மருத்துவம்(கை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியமும் அடங்கும்). ஆரம்பகட்ட நோய்த்தன்மை அல்லது எளிய நோய்களுக்கு மூலிகை மருந்துகளே போதுமானது. இங்கு ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். மூலிகை மருந்துகள்தான் என்றில்லை. உணவுக்கு நாம் பயன்படுத்தும் தாவரவகைப் பொருட்களைக் கொண்டும் நம் நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அதையே இன்று உணவு மருத்துவம், சுவை மருத்துவம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
மாமிச வர்க்க மருந்துகள் என்பவை விலங்குகளைக் கொண்டு சமைக்கப்படும் அல்லது தயாரிக்கப்படும் மருந்துகளைக் குறிக்கும். நோய்த்தன்மை நடுத்தர நிலையில் இருப்பவர்களுக்கு மாமிச வர்க்க மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆட்டுக் கறி, நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக்கால் சூப், நண்டு சூப் உள்ளிட்டவை உணவு வகையிலான மாமிச வர்க்க மருந்துகள். நோய்த்தன்மை கொஞ்சம் அதிகரித்து விட்டவர்களுக்கு இவை நல்ல பலன்களைக் கொடுக்கும்.
தாது வர்க்க மருந்துகள் எளிய மக்களால் உணவாகவே தயாரிக்க முடியாதவை. தேர்ந்த பாரம்படிய வைத்தியர்களால் தயாரித்து அளிக்கப்படும் செந்தூரம், பஸ்பம் போன்றவையே தாது வர்க்க மருந்துகள். நோய்த்தன்மை வெகுதீவிரமாக இருக்கும் நபர்களுக்கு, இவ்வித மருந்துகளே பயன்தரக்கூடியவை. உயிர் மற்றும் உடலின் உறுதிக்கு அடிப்படையாய் இருக்கும் ஏழு தாதுக்களில் குறைபாடுள்ளவற்றைச் சீர்படுத்தும் மருந்துகள் என்பதால் தாதுவர்க்க மருந்துகள் என்கிறோம்.
சித்த மருத்துவரை நாடும்போது பத்தியம் என்பதைப் பரிந்துரைப்பார்கள். வாத அதிகமானதால் நோய் எனும்போது, வாதத்தை மேலும் அதிகப்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்ப்பது சிறந்ததுதானே? பொதுவாகவே உப்பு, புளி மற்றும் கார(வரமிளகாய் மற்றும் மசாலா) வகைகளை விலக்கிக் கொள்வது பொதுப்பத்தியம். வாத, பித்த மற்றும் கப அளவுகளைக் கொண்டு ஒவ்வொருவருக்குமான தனித்தனிப் பத்தியங்கள் உண்டு. பத்தியத்தின் மனதுக்குத் தெம்பளிப்பதற்காய் ஜோதிடத்தைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்தினர். “இந்தக் கோவிலுக்குச் சென்று வாருங்கள்!” என்பது போன்ற பரிகாரங்கள் நோய்கொண்டவரின் மனதை உளவியல்பூர்வமாக உறுதிப்படுத்தியது(ஜோதிடத்திலும், சித்த மருத்துவத்திலும்ம் ஊடுருவிவிட்ட போலிகளால் அவை மூடநம்பிக்கைகளாகச் சிறுத்துப் போயின).
சித்த மருத்துவ முறையைக் குறித்த நூற்றுக்கணக்கான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேசவும் இயலும். இங்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். சித்த மருத்துவ தத்துவம் நம் மண்ணுக்கு மிக அணுக்கமானது என்பதால், அதன்மீது எனக்குக் கொஞ்சம் பாசம் அதிகம். மற்றபடி, நவீன யுகத்தில் நோயாளியின் உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு அவருக்கு விருப்பமான மருத்துவ முறைகளைத் தெரிவு செய்வதே சிறப்பாக இருக்க முடியும்.
என்னளவில், வாழும் சூழலின் தன்மைகளைக் கருத்தில் கொண்ட மருத்துவ முறைதான் சிறந்தது. அவ்வகையில் சித்த மருத்துவம் மிகச்சிறப்பானது. மேலும், சித்த மருத்துவத்தை வெறுமனே சூரணம், லேகியம் என்ற அளவில் புரிந்து கொள்ளாமல் “உடல் இயற்கைக்கு இணக்கமாக வாழ்வதற்கு நம்மைத் தூண்டும் அணுக்கமான வாழ்வியல் முறை”யாகக் கருதிப் பயன்படுத்திக் கொண்டால் சிறப்பு. போலி சித்த மருத்துவர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், உங்கள் ஊரிலேயே நீங்கள் அறியாமல் இருக்கும் ஒரு நல்ல சித்த வைத்தியரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதுவே, உங்களின் முயற்சியாக இருந்தால் போதுமானது.
எம்மருத்துவ முறைகளையும் புனிதப்படுத்துவது அவசியமற்றது. அதேநேரம், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்தில் நிலவும் மருத்துவ முறைகள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த முயல்வதென்பதும் முக்கியம். அவ்வகையில் இக்கடிதம் மிகமிகமிகச் சுருக்கமான ஒரு திறப்பு மட்டுமே.
சத்திவேல்