Apr 25, 2018

மகத்துவம்

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் என்ற ஊர் பெயரை கேள்விப்பட்டிருக்கக் கூடும். ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவில்  ஒன்று இருக்கும் ஊர்.  அந்த மரக்காணம் பக்கத்தில் இருக்கும் நடுக்குப்பம் என்கிற கிராமத்தில் சில பெண்கள் சத்தமில்லாமல், அதே சமயம் மிக முக்கியமான செயலைச் செய்து கொண்டிருக்கிறார்கள். காடு மேடுகளில் தேடி அரிதினும் அரிதான தாவரங்களையும் மரங்களையும் தேடி எடுத்து நாற்றுக்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

'இதெல்லாம் அழிச்சிடுச்சே' என்று சொல்லப்படுகிற தாவரங்கள் இந்தப் பெண்மணிகளின் கண்களில் எப்படியோ பட்டுவிடும் போலிருக்கிறது. அவைகள் நாற்றுக்களாகிவிடுகின்றன. 'ஓவர் பில்ட்-அப்' என்று நினைக்கிறவர்கள் கட்டுரையின் இறுதியில் இருக்கும் பட்டியலை ஒரு முறை பார்த்துவிட்டு வரவும். அதில் எத்தனை தாவரங்களை நமக்குத் தெரியும் என்று கணக்குப் போட்டால் இந்த எளிய கிராமத்து பெண்களின் சாதனையின் மகத்துவம் புரியும்.

அரிதான வகை நாற்றுக்கள். 

நடுக்குப்பத்தில் மூன்று நான்கு பெண்கள் சேர்ந்து அன்னை மகளிர் சுயஉதவிக் குழு என்ற பெயரில் இயங்குகிறார்கள். செல்வி என்ற பெண்மணிதான்  அதில் முக்கியமானவர். நாங்கள் சென்றிருந்த போது அவருக்கு உதவியாக கங்கா, பவித்ரா என்ற இரண்டு பெண்கள் இருந்தார்கள். செல்விக்கும் கங்காவுக்கும் ஒவ்வொரு வகை தாவரம் குறித்தும் தெரிகிறது.


ஒவ்வொரு செடியைக் காட்டும் போதும் அதைச் சேகரித்த இடத்தையும் சொல்கிறார்கள். 'இது தேவதானப்பட்டியில இருந்து எடுத்து வந்தது' 'இது ஜவ்வாது மலைல கிடைச்சது' என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். எங்களுடன் இருந்த ஆனந்துக்கு வெகு சந்தோசம். ஆனந்த் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். மரங்களின் தகவல் சுரங்கம் அவர். இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். பெரும்பாலான மரங்களின் தாவரவியல் பெயரைச் சொல்லி அதன் இலை எப்படியிருக்கும், அதன் மலர்கள் எப்படி இருக்கும் என்று விவரிக்கிறார். அவர் படித்தது என்னவோ விமானவியல் துறை. அது பிழைப்புக்கு. ஆர்வத்துக்கு காடுகள். பள்ளிக்காலத்திலிருந்தே காடுகளுக்குள் சுற்றும் இளைஞர். வனங்கள் அமைப்பதில் அனுபவஸ்தர்.

'எவ்வளவு மரங்களை சேர்த்து வெச்சு இருக்காங்கண்ணா' என்றார். நாற்பத்தொன்பது வகை நாற்றுக்களை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கி கொண்டோம். விலை சற்று அதிகமாகத்தான் தெரியும். ஒரு நாற்று முப்பத்தைந்து ரூபாய் வரைக்கும் வருகிறது. ஆனால் வேறு எங்குமே இந்த வகை நாற்றுக்களைத்  தேடிப் பிடிக்க முடியவில்லை.

'விலையைக் குறைச்சுக்குங்கக்கா' என்றால்  'பொம்பளைங்க காட்டுக்குள்ளயும் மலை மேலயும் இதையெல்லாம் தேடுறது எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியும்ல' என்கிறார்கள். நிதர்சனமான உண்மை. அந்த உழைப்புக்கு ஏற்ற விலை.

கிளம்பும் போது 'நீங்க செய்யறது மிகப்பெரிய சேவை..எந்தக் காலத்திலேயும் இதை விட்டுடாதீங்க' என்றேன். அதை அவர்களிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. இந்தக் குழு மாதிரியானவர்கள் இல்லையென்றால் பல மரங்கள் அடையாளமற்றுப் போகவும் வாய்ப்பிருக்கிறது. அழிந்து போகவும் சாத்தியங்கள் இருக்கின்றன.

'நாங்க கடைசி வரைக்கும் செய்வோம்' என்றார் செல்வி.

புதுச்சேரியில் செயல்படும் ஆரோவில்லின் இடத்தை குத்தகைக்கு எடுத்து அந்த இடத்தில இந்தப் பெண்கள் நர்சரியை அமைத்திருக்கிறார்கள். பெயர்ப்பலகை கூடக் கிடையாது. ஆனாலும் செடிகளைத் தேடுகிறவர்கள் எப்படியாவது கண்டுபிடித்துவிடுகிறார்கள். 'அந்தக் குழுவினரிடம்தான் அரிதான செடிகள் இருக்கும்' என்ற நம்பிக்கையில் வருகிறார்கள். பொய்த்துப் போவதில்லை. இத்தகைய மனிதர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். பத்திரிக்கைகள் இந்தப் பெண்மணிகள் குறித்து வெளியுலகுக்கு எடுத்துச் சொல்லலாம். நம்மைப் போன்றவர்கள்  யாராவது நாற்றுக்களைத்  தேடுவது தெரிந்தால் நடுக்குப்பம் நர்சரியை தாராளமாகப் பரிந்துரை செய்யலாம்.

நடுக்குப்பம் நர்சரியிலிருந்து நாங்கள் வாங்கிய நாற்பதொன்பது  வகை நாற்றுக்கள் கீழே- 

வெயிலுக்கு தாக்குப் பிடித்து வளரும் நாட்டு வகை நாற்றுக்களாக மட்டும் எடுத்துக் கொண்டோம். இவற்றில் சில வகைகள் புதர்களாக அல்லது செடியாக மட்டுமே வளரும். அதுவும் அடர்வனத்தில் தேவைதான். மொத்தமாக ஆயிரம் நாற்றுக்களை வாங்கியிருக்கிறோம். அடர்வனத்துக்கு இன்னமும் ஆயிரம் நாற்றுக்கள் தேவை. புங்கன், வாகை மாதிரியான எளிதில் கிடைக்கும் வகைகளை வேறு பக்கம் வாங்கிக் கொள்ளலாம் என்று வந்துவிட்டோம். எப்படியும் எழுபது வகைகளுக்கும் குறையாமல் அடர்வனத்தில் இருக்கும். 
  1. பிராய்
  2. இடம்புரி (திருகு மரம்)
  3. ஒதியன்
  4. பேய் அத்தி
  5. பச்சை கனகாம்பரம் 
  6. நுணா
  7. நழுவை 
  8. கடுக்காய்
  9. அழிஞ்சல்
  10. காட்டு எலுமிச்சை 
  11. வெண் சீத்தா
  12. பாய் மொண்ணை 
  13. நொச்சி 
  14. பாவட்டம்
  15. வெப்பாலை 
  16. எட்டி
  17. இரும்புளி
  18. இலந்தை
  19. மா
  20. வன்னி
  21. இங்க் மரம் (இது வட்டார பெயர். சரியான பெயர் தெரியவில்லை)
  22. நரிவிலி
  23. தரணி
  24. கடல் ஆத்தி
  25. இருவாட்சி
  26. ஆத்தி
  27. வெல் விளா (காட்டுபாட்சி)
  28. வெண்ணாந்தை
  29. வில்வம்
  30. நீர் அடம்பை
  31. பூந்திக் கொட்டை (சோப் நட்)
  32. குகமதி
  33. வீரா
  34. முறுக்கன்
  35. காட்டு கறிவேப்பிலை
  36. கருமரம்
  37. கன்னிரா 
  38. கல்யாண முருங்கை
  39. காட்டு நாரத்தை
  40. செருண்டி
  41. சூரக்காய்
  42. சிறுதும்புளி
  43. அத்தி
  44. அகல்யா 
  45. ஈர்குள்ளி
  46. பாலமரம் (மனில்காரா)
  47. பச்சைக் கிளுவை
  48. குமிழம்
  49. எலும்பொட்டி 
எவ்வளவு பெரிய மகத்தான சேவையை இந்த மண்ணுக்கும் சூழலுக்கும் செய்து வருகிறார்கள். அற்புதமான பசுமைப் போராளிகள் இவர்கள்.  பல்லாண்டு வாழட்டும்.

திருமதி. செல்வியின் தொடர்பு எண்:7548808332.

11 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

ஒரு நாவலின் அத்தியாயங்களைப் போல் எத்தனை எத்தனை கிளைகளைப் பரப்புகிறது உங்கள் சமூகசேவை.
அதுவும் சுவராசியம் குறையாமல்
ஏரி தூர் வாருதலுக்கான ஒருங்கிணைப்பு

ஏரி தூர் வாரல்

குளம் நிரம்புதல்

அடர்வன அமைப்பிற்கான ஒருங்கிணைப்பு

அதற்கான மரங்கள் தேடல்

அன்னை மகளிர் சுய உதவிக் குழு
(தொடரும்)
ஒரு புள்ளியில் துவங்கி கைரேகைகளாய் விரியும் அத்தனையும் குருரேகைகளாய் அமைவது தான் சிறப்பு.
வாழ்த்துக்கள் சின்னையா

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் செயற்கரிய பணி பற்றி நிசப்தம் தளத்தில் படித்தேன். உங்களுக்கு கோடி கும்பிடு.வாழ்க வளமுடன்.பேராசிரியர்.கோபாலகிருட்டிணன்
9994240629 9344053440
-இது தவச்செல்வி. செல்விக்கு அனுப்பிய குறுஞ்செய்தி

Vaa.Manikandan said...

சில நாளா கவனிச்சுட்டு இருக்கேன் ..சின்னையான்னு அழைப்பதை...ஏற்கனவே ஒரு சின்ன அய்யா இருக்காரு..அடி வாங்க வெச்சுடாதீங்கப்பு..

சேக்காளி said...

37 வயது பிறந்த நாள் பதிவிற்கு நான் எழுதிய பின்னூட்டம்.
//முழுமையான அங்கிள். இதைத் தமிழில் சொன்னால் அத்தனை சிறப்பாக இருக்காது//
என்ன சின்னையா! இப்பிடி சொல்லிட்டேரு.
சித்தப்பு கூட நல்லாத்தான் இருக்கும் அத செவ்வாழைக்கே உட்டுருவோம்.//

அங்கிள் என்பதற்கு மாமா என்று மட்டுமல்லாமல் சித்தப்பா என்றும் அர்த்தம் கொள்ளலாமே என்பதனால் எழுதினேன்.
அதையும் தாண்டி எங்க ஊர் பக்கம் தாய்மாமா வை விட சின்னையாக்களுடனான நெருக்கம் அதிகமாக இருக்கும்.காரணம் பெண்களை வேறு ஊருக்கு கட்டி கொடுத்து விடுவதால் தாய்மாமாக்கள் அந்த ஊருக்கு போகும் நேரம் மட்டுமே மருமக்களை பார்க்க முடியும்.ஆனால் சின்னையாக்கள் அதே ஊரில் இருப்பார்கள்.
மகன்களுடனான ஒத்த வயதிலோ அல்லது வயது குறைவாயோ இருப்பவர்களுக்கே இந்த சின்னையா பொருத்தமாய் இருக்கும்.அந்த சொல்லில் ஒரு நெருக்கமும் உரிமையும் பாசமும் இருக்கும்.
மத்தபடி அடி வாங்க வைக்கணும் ன்னெல்லாம் இல்லை.
அடி வாங்கி குடுக்குற அளவுக்கு அபாயம் நெறைஞ்ச வார்த்தை ன்னா அதை தவிர்த்து விட்டே தொடரலாம்.

Anonymous said...

அருமை.

கோபி..., said...

Did you heard about this organisation?

https://www.tist.org/i2/proarea.php?varareaid=22

senthilkumar said...

மேல் சொன்ன அனைத்து நாட்டு மரங்களும் நமது மண்ணுக்கும், தட்பவெப்ப நிலைக்கு தாங்கி வளருமா என்பதை உறுதிசெய்துகொள்ளவும்

www.rasanai.blogspot.com said...

salute to their yoeman sorry yoewoman service. kudos to all including anand, jayaraj...... conserving rare plants, herbs. passion makes them achieve silently something stupendous. # Nadukuppam Noted.
sundar g chennai

Jaypon , Canada said...

சஅருமை. வாழ்க வளமுடன் செடி கொடிகளையும் சேர்த்து.

Anonymous said...

ANGELS

Anonymous said...

https://www.youtube.com/embed/HYvE9CPVYWg