சில பணிகளைச் செய்யும் போது உடனடியாகப் பலன் தெரிந்துவிடாது. ஆனால் நிச்சயமாகப் பலன் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்குமல்லவா? கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் குளத்தைத் தூர் வாரும் போது அப்படித்தான் இருந்தது. உள்ளூர்காரர் பழனிசாமி ‘இதைச் செய்ய முடியுமா?’ என்று கேட்டு அணுகிய போது கொஞ்சம் தயக்கமிருந்தது. அடுத்த சில நாட்களில் கோட்டுப்புள்ளாம்பாளையத்திற்குச் சென்று பார்க்கையில் குளம் முழுக்க பாறையாக மேடாகிக் கிடந்தது. அவரே உள்ளூர்வாசிகள் நான்கைந்து பேர்களை அழைத்துக் கொண்டு வந்தார். இரவு பத்து மணிக்கு மேலாக இருக்கும். வெகு நேரம் பேசினோம். என்ன செய்வது எப்படிச் செய்வது என்பது மாதிரியான திட்டமிடல்.
(குளம் - தூர் வாருவதற்கு முன்பாக)
ஊர்க்காரர்கள், ‘நாங்க பார்த்துக்கிறோம்’ என்று தைரியமாகப் பேசினார்கள். நம்பிக்கை வந்தது.
அடுத்த ஓரிரு நாட்களில் குளத்துக்கு எதிரில் இருக்கும் பழைய கோவில் ஒன்றில் ஊர்காரர்கள் பத்து அல்லது இருபது பேர்களுடன் கூடி விவாதித்தோம். ‘உள்ளூர் அரசியல் எதுவும் இல்லாம பார்த்துக்குங்க’ என்றேன். ‘அதெல்லாம் பிரச்சினையே இருக்காதுங்க’ என்றார்கள். செய்துவிடலாம் என்கிற தைரியம் வந்தது. அப்பொழுதே தாசில்தார் பூபதியிடமும் கோட்டாட்சியர் கோவிந்தராஜிடமும் பேசினோம். அனுமதி கொடுத்துவிட்டு தூர் வாரும் பணியை கோட்டாட்சியர்தான் தொடங்கியும் வைத்தார். கிட்டத்தட்ட முப்பது டிராக்டர்கள், மூன்று ஹிட்டாச்சி வண்டிகள் என உள்ளூர்வாசிகள் களமிறங்கினார்கள். சற்றேறக்குறைய பதினைந்தாயிரம் சுமை (லோடு) மண் குளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அந்தப் பகுதியிலேயே இவ்வளவு பெரிய அளவுக்குத் தூர்வாரப்பட்டது அநேகமாக கோட்டுப்புள்ளாம்பாளையம் குளமாகத்தான் இருக்கும். தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை விற்று வண்டி வாடகை, டீசல் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அப்படியே செய்தார்கள். அக்கம்பக்கத்து ஊர்களுக்கெல்லாம் கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்து மண் சென்றது. பார்த்த பக்கமெல்லாம் மேடாக்கி வைத்திருந்தார்கள்.
(தூர் வாரப்படும் போது)
குளத்தின் ஆழம் சராசரியாக பதினைந்து அடி அதிகரிப்பட்டது. குளத்தின் நடுப்பகுதியில் மட்டும் இருபது அடிவரைக்கும் தோண்டி எடுக்கப்பட்டது. முதலில் பாறையாகத் தெரிந்த குளம் கை வைத்தவுடன் உடைந்து போனது. அது மிகப்பெரிய உற்சாகம். மண்ணை அள்ளி எடுக்க ஏதுவாகிப் போனது. வாரி எடுத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.
(ஆழப்படுத்தப்படுகிறது)
குளத்து வேலை முடிந்த பிறகு உள்ளூர்காரர் பழனிசாமியிடம் இரண்டொரு முறை பேசினேன். ‘மழை பேஞ்சுதுங்களா?’ என்று கேட்டால் ‘பேஞ்சுதுங்க..ஆனா கொளம் நம்பற அளவுக்கு இல்லீங்க’ என்பார். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். அவரிடம் காட்டிக் கொள்ள மாட்டேன். கடமையைச் செய்தாகிவிட்டது. பலன் மெல்லக் கிடைக்கட்டும் என்கிற மனநிலை வந்து ஒட்டிக் கொண்டது.
பவானி ஆற்றிலிருந்து கால்வாய் பிரிந்து கீழ் பவானித் திட்டம் என்று ஓடுகிறது. அது பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் பிரித்திருக்கிறார்கள். அந்தக் கால்வாயில் தற்பொழுது நீரைத் திறந்து விட்டிருக்கிறார்கள். அதன் காரணமாகக் குளம் நிரம்பிவிட்டது. நிரம்பிய குளத்தை நிழற்படமெடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். நேற்று காலையில் படத்தைப் பார்த்தவுடன் வெகு சந்தோஷமாக இருந்தது. உள்ளூர்க்காரர்களிடம் அழைத்துப் பேசினேன். அக்கம்பக்கத்தில் இருக்கும் கிணறு, நிலத்தடி நீர்மட்டம் எல்லாம் தம் கட்டிக் கொள்ளும் என்றார்கள்.
‘நீங்க மட்டும் அன்னைக்கு சரின்னு சொல்லலைன்னா’ என்றார்கள். அவர்களிடம் பேசும் போது திரும்பத் திரும்ப அதையேதான் சொல்வார்கள். உண்மையைச் சொன்னால் ‘சரி’ என்று சொன்னது மட்டும்தான் என் பங்களிப்பு. பிற எல்லாமும் இயல்பாக நடந்தது. எவ்வளவோ கோரிக்கைகள் வருகின்றன. எல்லாவற்றையுமா செய்ய இயல்கிறது? இந்தக் காரியத்தை இவர்கள்தான் செய்ய வேண்டும் என்று எங்கோ விதிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய காரியங்களுக்கு ‘சரி’ என்று சொல்லத் தோன்றுகிறது. நாமெல்லாம் வெறும் காரியக் கருவிகள்தான். அதற்கு மேல் எதுவுமில்லை.
‘இந்த வருஷம் கொளம் நம்பாம போயிருந்தா பங்குனி சித்திரையில் குடிக்கிறதுக்கே தண்ணி இல்லாம கஷ்டம் ஆகியிருக்கும்’ என்றார். இனி அந்தப் பிரச்சினை இருக்காது. ஒன்றிரண்டு வருடங்களுக்காவது நிலத்தடி நீர் மட்டம் குறையாது என்ற நம்பிக்கையிருக்கிறது. இன்னொரு அம்சமும் உண்டு. ஒரு முறை நிரம்பிவிட்டால் இனி மழை பெய்தால் சட்டென்று நிரம்பிவிடக் கூடும். பார்க்கலாம்.
ஒரு வேலையைச் செய்யும் போது என்ன சங்கடம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நாம் அடையக் கூடிய இலக்குதான் முக்கியம். அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்காவது இந்த ரிசல்ட் பலனளிப்பதாக இருக்கக் கூடும்.
ஒரு வேலையைச் செய்யும் போது என்ன சங்கடம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நாம் அடையக் கூடிய இலக்குதான் முக்கியம். அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்காவது இந்த ரிசல்ட் பலனளிப்பதாக இருக்கக் கூடும்.
நிசப்தம் அறக்கட்டளை மூலமாகச் செய்யப்பட்ட கிராமம் சார்ந்து பணிகளில் இது முதல் வெற்றி. அட்டகாசமான வெற்றியும் கூட. உடன் நின்ற அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. குறிப்பாக உள்ளூர்காரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும். அவர்களது உற்சாகமும் அர்ப்பணிப்பும் இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. திரு.பழனிசாமி, திரு.அரசு தாமசு, திரு. கார்த்திகேயன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. எப்பொழுதும் போலவே நிசப்தத்தின் நன்கொடையாளர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம்.
வேகத்தை இன்னமும் அதிகரிக்க வேண்டும். Miles to go!
வேகத்தை இன்னமும் அதிகரிக்க வேண்டும். Miles to go!