குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது- குறிப்பாக பெற்றவர்கள்- கதைகளின் வழியாகவும் பாத்திரங்களினூடாகவும் தமக்கும் குழந்தைகளுக்குமான உரையாடலுக்கான வெளியை உருவாக்குகிறார்கள். அடுத்தவர்களின் கதைகளாக இருந்தாலும் உள்வாங்கி அதைப் பெற்றவர்கள் சொல்ல வேண்டும். நவீன காலத்தில் உரையாடல் மிக அவசியமானது. அதுதான் நமக்கும் குழந்தைகளுக்குமிடையில் அறிவார்ந்த, பாசப்பிணைப்பை உருவாக்கும். வெறும் பாசப்பிணைப்பு மட்டுமே இருந்தால் போதாது.
வெறுமனே பாசப்பிணைப்பு என்பது நமக்கிடையில் ஒரு மெல்லிய சுவரை எழுப்பும். உதாரணமாக நம் தலைமுறை வரைக்கும் கூட பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்குமிடையில் ஓர் இடைவெளி இருக்கும். நம்மால் அப்பாவிடமும் அம்மாவிடமும் பகிர்ந்து கொள்ளவே முடியாத விஷயங்களை பென்னம்பெரிய மூட்டைகளாகக் கட்டலாம். பயம், தயக்கம் என்ற ஏதாவதொரு தடை. ‘திட்டுவார்கள்’ ‘சொன்னால் வருந்துவார்கள்’ என்று ஏதாவொரு முட்டுக்கட்டை இருக்கும். பெற்றவர்களும் கூட அப்படித்தான். ‘நம் வருத்தங்கள், சிரமங்கள் எல்லாம் குழந்தைகளுக்குத் தெரிய வேண்டியதில்லை’ என்று நினைப்பார்கள். பாசத்தினால்தான் நினைக்கிறோம். இப்படி நாம் மாற்றி மாற்றி நினைத்துத்தான் நமக்கிடையில் சுவரைக் கட்டி எழுப்புகிறோம்.
குழந்தை மனோவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை சமீபத்தில் தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான கட்டுரைகள் சொல்வதெல்லாம் ‘பேசுங்க’ என்பதுதான். நண்பர்களிடம் எப்படி உரையாடுவோமோ அப்படி சகலத்தையும். தடைகள் இல்லாமல் குழந்தைகளிடம் பேசுவது என்பது பெரும் வரம். ஆனால் சற்று யோசித்துப் பார்த்தால் ‘என் குழந்தைங்ககிட்ட நான் ரொம்ப ஃப்ரீ’ என்று சொல்கிறவர்களில் கூட முக்கால்வாசிப்பேர் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர உண்மையில் அப்படி இருப்பதில்லை அல்லது இருக்க முடிவதில்லை.
நமக்கும் குழந்தைகளுக்குமிடையில் இடைவெளி இருப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தடைகள் இல்லாமல் உரையாடுகிறோமா என்று யோசிக்க வேண்டும்.
நமக்கும் குழந்தைகளுக்குமிடையில் இடைவெளி இருப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தடைகள் இல்லாமல் உரையாடுகிறோமா என்று யோசிக்க வேண்டும்.
எங்கள் சித்தி ‘குஞ்சை அறுத்து காக்காய்க்கு வீசுறேன்’ என்று பேசிய போது அது தவறாகவே தெரிந்ததில்லை. ஆனால் இன்றைக்கு எவ்வளவு பேர் இப்படியான பாலுறுப்புகள் சார்ந்து பேசுகிறோம்? அப்பட்டமாகப் பேச வேண்டியதில்லை. ஆனால் விளையாட்டுத்தனமாகவாவது பேசுகிறோமா? ‘நாகரிகமாகப் பேசணும்’ என்று முடிவு செய்து குழந்தைகளிடம் பாலுறுப்புகள் பற்றிப் பேசுவதேயில்லை. ஒருவகையில் இது ஒரு மனத்தடைதானே?
இத்தகைய மனத்தடைகள் நாமே அறியாமல் நமக்குள் உருவானவை. சமூகக் கட்டுப்பாடுகள், பண்பாட்டுக் கூறுகள் என பல காரணிகள் இருக்கின்றன. பாலுறுப்புகள் சார்ந்து மட்டுமில்லை. ஆய்ந்து பார்த்தால் நிறைய இருக்கும்.
பொதுவாகவே ‘இது பேசக் கூடாத விஷயம்’ என்று குழந்தைகளிடம் ஓர் எண்ணத்தை உருவாக்குகிறோம். அதனால்தான் வயது கூடக் கூட பாலியல் சார்ந்தும் அந்தரங்கம் சார்ந்தும் நம்மிடம் குழந்தைகள் பேசுவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் பேச வேண்டும் என்கிற உந்துதல் அவர்களை அவர்களது நண்பர்களை நோக்கித் தள்ளுகிறது. பதினைந்து அல்லது பதினாறு வயதுகளில் குழந்தைகள் பெற்றோரைவிடவும் ஏன் நண்பர்களை அதிகம் விரும்புகிறார்கள்? ஏன் வீட்டைவிடவும் வெளியில் இருக்கவே பிரியப்படுகிறார்கள் என்பவை உளவியல் சார்ந்த முக்கியமான வினாக்கள். அவர்களால் வெளியில் தங்குதடையின்றி இருக்க முடிகிறது. எந்தச் சொல்லையும் மிக இயல்பாக பிரயோகிக்க முடிகிறது. அந்தச் சுதந்திரம் வீட்டில் இருப்பதில்லை. மனமும் வெளியில், நண்பர்கள் குழாமுடனும் இருக்கவே முனைகிறது. வெர்ச்சுவல் உலகம் எனப்படும் இணையவெளியும் இதே காரணங்களுக்காகத்தான் குழந்தைகளை உள்ளேயிழுப்பதையும் கவனிக்க வேண்டும். நண்பர்கள் இல்லாத குழந்தைகள் இதற்குள் எளிதில் விழுகிறார்கள்.
பொதுவாகவே ‘இது பேசக் கூடாத விஷயம்’ என்று குழந்தைகளிடம் ஓர் எண்ணத்தை உருவாக்குகிறோம். அதனால்தான் வயது கூடக் கூட பாலியல் சார்ந்தும் அந்தரங்கம் சார்ந்தும் நம்மிடம் குழந்தைகள் பேசுவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் பேச வேண்டும் என்கிற உந்துதல் அவர்களை அவர்களது நண்பர்களை நோக்கித் தள்ளுகிறது. பதினைந்து அல்லது பதினாறு வயதுகளில் குழந்தைகள் பெற்றோரைவிடவும் ஏன் நண்பர்களை அதிகம் விரும்புகிறார்கள்? ஏன் வீட்டைவிடவும் வெளியில் இருக்கவே பிரியப்படுகிறார்கள் என்பவை உளவியல் சார்ந்த முக்கியமான வினாக்கள். அவர்களால் வெளியில் தங்குதடையின்றி இருக்க முடிகிறது. எந்தச் சொல்லையும் மிக இயல்பாக பிரயோகிக்க முடிகிறது. அந்தச் சுதந்திரம் வீட்டில் இருப்பதில்லை. மனமும் வெளியில், நண்பர்கள் குழாமுடனும் இருக்கவே முனைகிறது. வெர்ச்சுவல் உலகம் எனப்படும் இணையவெளியும் இதே காரணங்களுக்காகத்தான் குழந்தைகளை உள்ளேயிழுப்பதையும் கவனிக்க வேண்டும். நண்பர்கள் இல்லாத குழந்தைகள் இதற்குள் எளிதில் விழுகிறார்கள்.
பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியை சரி என்றும் தவறு என்றும் மேலோட்டமாகச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு மனிதர்களிடமும்- மேற்கத்திய சமூகத்திலும் கூட இத்தகைய ‘வரையறுக்கப்பட்ட’ உரையாடல்கள்தான் சாத்தியம். வரையறுக்கப்பட்ட முன்முடிவுகளிலிருந்து சில விதி மீறல்களைச் செய்வதன் வழியாகவே நமக்கும் குழந்தைகளுக்குமிடையிலான ஒத்திசைந்த உறவை உருவாக்க முடியும். குழந்தைகளின் வயதுக்குத் தகுந்தாற்போல உரையாடல்களின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் மாற்றுவது குழந்தை வளர்ப்பில் ஒரு கலை. நாம் எப்பொழுதும் நம் குழந்தைகளை தங்கமாகவும், கண்ணாகவுமே பார்க்கிறோம். ஆனால் அவர்கள் வளரும் போது தம்மை மீசை முளைத்தவர்களாகவும் வயது முதிர்ந்தவர்களாகவும் கருதுகிறார்கள். ‘இதெல்லாம் நம் குழந்தைக்குத் தெரியாது’ என்று நாம் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் போது அவர்கள் ‘எனக்குத் தெரியாத விஷயமே இல்லை’ என்று நம்பத் தொடங்குகிறார்கள். தமக்குத் தெரிந்ததைப் பற்றியெல்லாம் விவாதிக்கவும் தெரிந்து கொள்ளவும் ஆட்களைத் தேடுகிறார்கள்.
பத்து வயது வரைக்கும் குழந்தைகள் கதை கேட்பார்கள். அதற்குப் பிறகு? நம்முடைய கதையாடல் என்பது சுவாரசியமான உரையாடலாக மாற வேண்டிய தருணம் அது. கதைகளைத் தாண்டி ‘நானும் நீயும் நண்பர்கள்’ என்ற புரிதலை உண்டாக்குகிற உரையாடல். அதை வெளிப்படையாகச் சொல்லாமல் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போலச் சொல்லும் போது ‘அவன் என்னைப் பார்த்தான்’ என்றோ ‘அவள் மீது எனக்கு ஈர்ப்பு இருக்கிறதோ’ என்று தானாகவே சொல்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.
பெற்றோர்களிடம் பேச விரும்பாத/பேச இயலாத விஷயங்களை அவர்கள் பேசும் போது காது கொடுக்க உலகம் தயாராகவே இருக்கிறது. வீடு சொல்லித் தருவதைவிட வீதி சொல்லித் தருவதுதான் அதிகம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். குழந்தைகள் மனரீதியில் நம்மைவிட்டு விலகுவதற்கான அடிப்படையான காரணம் இதுதான். ‘இவங்ககிட்ட எல்லாத்தையும் பேச முடியாது’ என்கிற எண்ணம். அதை எப்படி உடைப்பது? குழந்தைகளுக்கு வெறுமனே கதை சொல்வதோடு நவீன பெற்றோர்களின் கடமைகள் முடிந்துவிடுகின்றனவா? இந்த உலகத்தின் பரிணாமங்களையும் இண்டு இடுக்குகளையும் அவர்களைப் பார்க்கச் செய்வதற்காக நாம் எத்தகைய உரையாடல்களையும் கதையாடல்களையும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது?
பதிப்பாளர் ஜீவ கரிகாலனுடன் பேசும் போது குழந்தைகளுடனான கதையாடல்கள் உரையாடல்கள் சார்ந்து சில புத்தகங்களை எழுதச் சொன்னார். சரியானதாகத் தோன்றியது. குழந்தைகளுக்கான கதைகள், பதின்பருவத்தினருடனான உரையாடல்கள் என்று கலந்து சில புத்தகங்களை எழுதுகிற திட்டமிருக்கிறது. அதைப் பற்றி வாசிப்பது, தெரிந்து கொள்வது, உரையாடுவது என அடுத்த சில மாதங்களுக்குத் தீவிரமாக வேலை செய்யலாம் என்றிருக்கிறேன்.
இந்தப் பேட்டையில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. தன்னந்தனியாக அமர்ந்து நமக்கு நாமே யோசிக்க வேண்டியவை என்று எக்கச்சக்கம். வாசிப்பின் வழியாகவும் தேடல்களின் வழியாகவும் அனுபவங்களைச் சேர்த்துச் சேர்த்து குழந்தைகளின் வயது கூடக் கூட நம்முடைய மன முதிர்ச்சியையும் குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த புரிதல்களையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
விழுதுகள் வலுவடையும் போது வேர்கள் வலுவிழக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வேர்களும் வலுவாகவே இருக்கலாம்!