Apr 14, 2016

பெருங்குட்டை

ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் அழைத்திருந்தார். கல்லூரி கோயமுத்தூரில் இருக்கிறது. அந்தக் கல்லூரியில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் இந்த ஆண்டு ஐந்து மாணவர்களைச் சேர்த்துவிட வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். தோராயமாக நாற்பது ஆசிரியர்கள் இருந்தால் கூட இருநூறு மாணவர்களை வளைத்துப் பிடித்துவிடலாம். மீதமிருக்கும் இடங்களை கவுன்சிலிங், அது இதுவென்று நடத்தில் இழுத்துவிடலாம் என்று கணித்திருக்கிறார்கள். எம்.ஈ, எம்.டெக் முடித்துவிட்டு பத்தாயிரத்துக்கும் பதினைந்தாயிரத்துக்கும் பேராசியர்கள் ஆகியிருப்பவர்களுக்கு இது ஒரு கொடுங்கனவு. ஆண்கள் கூட பரவாயில்லை. பெண்கள் என்ன செய்வார்கள்? திணறிக் கொண்டிருக்கிறார்கள். பல தனியார் கல்லூரிகளில் இப்பொழுது பிள்ளை பிடிக்கும் படலம் ஆரம்பமாகியிருக்கிறது. 

பிள்ளை பிடிக்கும் படலத்தின் ஓர் அங்கம்தான் பெரும்பாலான கல்லூரிகள் நடத்துகிற கல்விக் கண்காட்சிகள். வெற்றி நிச்சயம், வேத சத்தியம் மாதிரி கவர்ச்சிகரமான பெயர்கள். என்னிடம் பேசிய அந்த ஆசிரியர் அப்படித்தான் கோடு காட்டினார். ‘சார் நீங்க வந்து இஞ்சினியரிங் படிப்பு எப்படி இருக்கு? வேலை வாய்ப்புகள் என்னன்னு பொதுவா பேசுங்க...முடிக்கும் போது எங்க காலேஜ் பத்தி கொஞ்சம் நல்லபடியா சொல்லிடுங்க’ என்றார். இப்படி பேசுவதற்கு பணமும் தருகிறார்கள். போக்குவரத்துச் செலவையும் பார்த்துக் கொள்கிறார்கள். இரண்டு கல்லூரிகளில் பேசிவிட்டு வந்து ‘கல்வி ஆலோசகர்’ என்று நாமும் பெயருக்குப் பின்னால் எழுதிக் கொள்ளலாம்.

அவரவர்கள் பிரச்சினை அவரவருக்கு. கோடிக்கணக்கில் செலவு செய்து கல்லூரி கட்டியிருக்கிறார்கள். நாற்பது ஐம்பது ஆசிரியர்களை வைத்துச் சம்பளம் கொடுக்கிறார்கள். வரும்படி இல்லையென்றால் என்ன செய்வார்கள்? யோக்கியர்கள்.

பொறியியல் கல்வி எப்படி இருக்கிறது என்று பேசச் சொன்னால் நாறிக் கிடக்கிறது என்றுதான் பேசத் தோன்றுகிறது. முன்பொருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த பல கல்லூரிகள் கூட காலி பெருங்காய டப்பாக்களாகியிருக்கின்றன. பொறியியல் கல்வியை முடித்துவிட்டு வரும் முக்கால்வாசி மாணவர்களுக்கு அடிப்படையே தெரிவதில்லை என்று துண்டைப் போட்டு சத்தியம் செய்யலாம். முருகராஜ் என்ற நண்பர் மென்பொருள் நிறுவனமொன்றில் மேலாளராக இருக்கிறார். அவருக்கு கீழாக வேலை செய்கிறவர்கள் அத்தனை பேரும் கன்னடர்கள். ஒரு தமிழ் ஆளையாவது பிடித்துவிடலாம் என்று திணறிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். சமீபத்தில் ஒரு பெண்ணை நேர்காணல் செய்திருக்கிறார். ‘நீ ஏதாச்சும் ஒரு கேள்விக்கு பதில் சொல்லு..நான் உள்ள எடுத்துக்கிறேன்’ என்றாராம். அந்தப் பெண்ணுக்கு எதுவுமே தெரியவில்லை என்றார். எந்தக் கல்லூரி மாணவி என்றேன். சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. ஒரு காலத்தில் பிரமாதமான கல்லூரி அது. இது வெறும் சாம்பிள்தான். வேலைக்கு ஆட்களை எடுக்கும் பத்து மேலாளர்களிடம் பேசினால் ஒன்பது மேலாளர்கள் இதே கருத்தைத்தான் சொல்வார்கள்.

வளாக நேர்முகத் தேர்வுகளை (Campus Interview) நடத்துவதற்கு வராமல் பெரும்பாலான நிறுவனங்கள் தமிழ்நாட்டுக் கல்லூரிகளைத் தவிர்ப்பதற்கு காரணமே இதுதான். தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் என்றாலே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறார்கள் என்பதை மறுக்கவே முடியாது. மாணவர்களைக் குறை சொல்ல முடியாது. ப்ளஸ் டூ முடித்தால் போதும் என்று கல்லூரிகளில் அள்ளியெடுத்துக் கொள்கிறார்கள். பெற்றவர்களும் ‘எம்புள்ளையும் எஞ்சினியர்’ என்று சொல்லி வங்கியில் கடனை வாங்கி சேர்த்துவிடுகிறார்கள். நான்கு வருட ஃபீஸை வசூலித்துக் கொண்டு வெறும் சக்கைகளாக மாணவர்களை வெளியில் துப்பும் கல்லூரிகளைத்தான் கை நீட்ட வேண்டும். ‘நம் பிள்ளை அறிவாளி’ என்று நினைத்துக் கொள்வதுதான் பெற்றோரின் மிகப் பெரிய மூடநம்பிக்கை. பல லட்சம் முட்டாள்களோடு சேர்த்து நம் பிள்ளையையும் முட்டாளாக அனுப்புகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதல் வந்துவிட்டாலே பாதி தப்பித்துவிடலாம்.

கல்விக் கண்காட்சிக்கு சென்று பார்த்தவர்களுக்குத் தெரியும். தங்களுடைய கல்லூரியில் கிட்டத்தட்ட அத்தனை இடங்களும் காலியாகிவிட்டதாகவும் ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே மிச்சமிருப்பதான பாவனையை உருவாக்குவார்கள். பதறுகிற பெற்றோர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பணத்தைக் கட்டிவிட வேண்டும் என்பதுதான் நோக்கம். ‘பத்தாயிரம் மட்டும் கட்டுங்க சார்..சீட் கன்பார்ம் பண்ணிடுவோம்’ என்பார்கள். கட்டிவிட்டால் அவ்வளவுதான். பக்காவான சதுரங்க வேட்டை.

பெற்றோர்களுக்கு ஒரேயொரு வேண்டுகோள்தான் - கல்விக் கண்காட்சிகள் என்ற போர்வையில் நடக்கும் தகிடுதத்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டால் போதும். இங்கே கல்வி ஆலோசகர்கள் என்ற பெயரில் சுற்றுகிறவர்களில் ஏகப்பட்ட பேர்கள் தில்லுமுல்லுகள்தான். ஐந்தாயிரம் பத்தாயிரம் கமிஷனை வாங்கிக் கொண்டு தங்களுக்கு சாதகமான கல்லூரியில் தயக்கமேயில்லாமல் தள்ளிவிட்டுவிடுவார்கள். போக்குவரத்து பஞ்சப்படியை வாங்கிக் கொண்டு ‘ஆஹா ஓஹோ’வென்று பேசுவார்கள்’. இவர்களைப் பற்றியே தனிக்கட்டுரை எழுத முடியும். அதனால் டுபாக்கூர் கல்வி ஆலோசகர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் அதிலும் கூட கவனமாகத்தான் இருக்க வேண்டியிருக்கும்.

இன்னமும் தேர்வு முடிவுகள் வருவதற்கான அவகாசம் இருக்கிறது. மிகத் தெளிவான அலசலைச் செய்ய முடியும். பொறியியல் மட்டுமே படிப்பில்லை. ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. தொழில் சார்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், மருத்துவத்துறைக்கு உதவும்படியான படிப்புகள் என்று மிகப்பெரிய பட்டியல் ஒன்றைத் தயாரித்துவிட முடியும். கண்களை சற்றே அகலத் திறக்க வேண்டியிருக்கும். விதவிதமான படிப்புகள் குறித்தான அலசல்களைத் தொடங்குவதற்கு இது சரியான தருணம். ப்ளஸ் டூ முடிக்கிற மாணவர்களையே இதைச் செய்யச் சொல்லலாம். ஒவ்வொரு படிப்பிலும் என்ன சொல்லித் தருகிறார்கள், வேலை வாய்ப்புகள் என்ன, எவ்வளவு செலவாகும் என்பது குறித்து முழுமையான பட்டியலைத் தயார் செய்து கொள்ளலாம். ஒருவேளை மாணவர்களால் தகவல்களைத் திரட்ட முடியவில்லை என்றால் கல்வி வழிகாட்டிக்கு என்றே நிறைய இதழ்கள் வருகின்றன அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். ஆசிரியர்களிடம் பேசிப் பார்க்கலாம். டுபாக்கூர்களைத் தவிர்த்துவிட்டு தகுதியான கல்வி ஆலோசகர்களிடம் ஆலோசனைகள் கேட்கலாம்.

சரியான படிப்பைக் கண்டறிதல், பொருத்தமான கல்லூரியைத் தேர்ந்தெடுத்தல் போன்றவையெல்லாம் முடியவே முடியாத காரியமில்லை. தேர்வு முடிவுகள் வரும் வரைக்கும் காத்திருந்தால்தான் பிரச்சினை. முடிவுகள் வந்தவுடன் தேவையில்லாத பதற்றம். இப்பொழுதிருந்தே சற்றே மெனக்கெட்டால் போதும். மிகத் தெளிவான முடிவுக்கு வந்துவிடலாம். எல்லோரும் குட்டையில் குதிக்கிறார்கள் என்பதால் நாமும் கல்லைக் கட்டிக் கொண்டு அதே குட்டையில் விழ வேண்டியதில்லை.

கல்வி, கல்லூரி சேர்க்கை சம்பந்தமாக சந்தேகங்கள் அல்லது கருத்துக்கள் இருப்பின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். எனக்குத் தெரியவில்லையென்றாலும் கூட விசாரித்து தகவல்களைச் சேகரித்துக் கொடுத்துவிடுகிறேன். பொதுவெளியில் பேச ஆரம்பித்தால் யாருக்காவது நிச்சயமாகப் பயன்படும்.

12 எதிர் சப்தங்கள்:

RK said...

முற்றிலும் உண்மை. இன்றைய பொறியியல் கல்லூரிகளில், ஆசிரியர்களின் வழக்கமான பணிகள் தவிர்த்து, ஆள் பிடிக்கும் வேலையும் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்வு, அதற்கு சமமான எண்ணிக்கையில் தொழிற்சாலைகளை உருவாக்கத் தவறியது போன்ற காரணங்களால் பொறியியல் கல்விக்கான வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஆதலால், மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பொறியியல் கல்வி மீதான ஆர்வம் குறைந்துள்ளது.
பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பின்பு, மாணவர்களால், அங்குள்ள பாடங்களை சரியாகப் படிக்க முடியவில்லை. காரணம், அதுவரை மனப்பாடம் மட்டுமே செய்து படித்து வந்தவர்களால், புரிந்து படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. ஆதலால், பாடத்தின் அனைத்துப் பகுதிகளையும் படிக்காமல், சில பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்து படித்து விட்டு, 'பார்டர் மார்க்' வாங்கி பாஸ் செய்து விடுகிறார்கள். இவர்களால், வேலை வாய்ப்பு சந்தையில் போட்டிபோட முடியவில்லை.
இது தொடர்பாக, நான் எழுதிய கட்டுரை ஒன்று, விகடனில் பிரசுரமாகியுள்ளது.
http://www.vikatan.com/news/article.php?aid=51517

Vinoth Subramanian said...

Well said sir. Plenty of frauds roaming in the country.

Unknown said...

Hello Manikndan,

Thanks for the post. you are the only Blogger/Writer who speaks this subject more regularly than anyone else I follow. My only worry is how to take your writings (on this subject) to the majority. There is no point in fighting with these businessman, as you said we need to educate the people continuously. Long way to go.Thanks for your small stone (Suppose your is the biggest stone in Writers community)in making the bridge.

Vaa.Manikandan said...

நன்றி. கல்வி குறித்து எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து சிறு கையேடாக அச்சிட்டு மாணவர்களிடையே விநியோகம் செய்யும் திட்டமொன்றை கோவையைச் சேர்ந்த சுந்தர் முன் வைத்தார். ஆனால் அதற்கான செலவு, உழைப்பு போன்றவற்றின் காரணமாக கைவிட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.

சேக்காளி said...

சரியான நேரத்தில் வந்திருக்கும் நல்லதொரு கட்டுரை.
அதோடு படித்து முடித்தால் மட்டும் போதாது.அப்புறம் உழைக்கும் மனமும் வேண்டும் என்பது முக்கியம்.

சேக்காளி said...

RK உங்கள் கட்டுரையையும் வாசித்தேன்.நல்ல சிந்தனைதான்.மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இன்றைய சூழலில் புரிந்து படிக்க ஆசிரியர்கள் அனுமதிப்பார்களா என சந்தேகிக்கிறேன்.

Amanullah said...

மிக சரியாக சொன்னீர்கள். ஒரு பக்கம் வேலையாட்கள் பற்றாக்குறை. மறுபக்கம் வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள். இப்போதெல்லாம் யாரும் ITI, Diploma வுடன் படிப்பை நிறுத்துவதில்லை. பெருகிவிட்ட பொறியியல் கல்லூரிகளின் பொறியில் மாட்டி வசதியில்லாதவர்களும் கூட
வங்கியில் கடன் வாங்கி கட்டுகிறார்கள். படித்துமுடித்து விட்டு வருபவர்களும்
ஐ.டி யில் வேலை கிடைக்காவிட்டால் கிடைக்கும் வேலையில் சேர்ந்து முன்னேற விரும்புவதில்லை.(மாணவர்களும் சரி அவர்கள் பெற்றோரும் சரி)

இப்போதெல்லாம் நான் வேலைக்கு ஆள் எடுக்கும் போதே B.E என்றால் தவிர்த்துவிட தோன்றுகிறது.ஏனென்றால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் மகன் உடல் உழைப்பு தேவைப்படும் வேலையை செய்வதை விரும்புவதில்லை.

thiru said...

மணி,

வருஷா வருஷம் வெயில் காலம் வந்தா உங்களோட இதே அக்கப்போர் தான்..

2013
----
இரண்டு குட்டையில் எந்தக் குட்டை நல்ல குட்டை?(http://www.nisaptham.com/2013/05/blog-post_11.html)
பொறியியல்: எப்படி கல்லூரியையும் பாடத்தையும் தேர்ந்தெடுப்பது?
(http://www.nisaptham.com/2013/04/blog-post_8.html)

2014
----
எப்படி தேறுவார்கள்?
(http://www.nisaptham.com/2014/06/blog-post_7.html)

2015
----
பொறியியல் கல்லூரிகளின் சதுரங்க வேட்டை
(http://www.nisaptham.com/2015/05/blog-post_27.html)

மாற்றம் என்ற ஒன்றே இல்லாத விஷயம்.எப்படி மாற்றுவது .. யாருக்கும் புரியவில்லை





வெட்டி ஆபீசர் said...

சமூகத்தில் உள்ள மிகப்பெரிய பிம்பங்களில் பொறியியல் மற்றும் மருத்துவ துறை மட்டுமே வளமான எதிர்காலத்தை தரும் என்பது..... அதை படித்தால் மட்டுமே புத்திசாலிகள் என்ற ஒரு தவறான ஒரு கருத்து பரவலாக உள்ளது...

இந்த படிப்பு சாராத எவ்வளவோ துறைகள் உள்ளன...அதை மக்களிடம் பரவலாக எடுத்து செல்ல எவருமே இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை....

இரா.கதிர்வேல் said...

இனி வரும் காலங்களில் நிசப்தம் தளத்தில் கல்வி தொடர்பான கட்டுரைகள் அதிகம் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். நீங்கள் ஏற்கனவே செல்போன், நேர்காணல் பற்றி எழுதிய பதிவுகளை என் கிராமத்தில் கல்லூரிகளில் மாணவர்களிடம் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுத்து படிக்கச்சொல்லி வருகிறேன். ஆகையால் நிசப்தம் தளத்தில், பொதுவெளியில் கல்வி தொடர்பான கட்டுரைகளை எழுதும்பட்சத்தில் அது அனைவரையும் சென்றடையும். வாழ்த்துகள் சார்.

Balu Gandhi said...

I have a slightly different viewpoint on your statement about it is not students' fault if the college is not providing quality education. In the internet, youtube and khan academy world, students can acquire the knowledge whether the college is providing quality education or not. It is very challenging the status quo of current engineering college model in Tamil Nadu. Instead of changing the current engineering college model, the more realistic and long term viable option would be evangelizing the community to use the engineering college as a place to collaborate the knowledge learned from the internet content.

kailash,hyderabad said...

More detailed view and solution

https://www.quora.com/profile/Abhishek-Kumar-Pandey