Mar 28, 2016

அறக்கட்டளை தொடங்குவதற்கான வழிமுறைகள்

அறக்கட்டளை பதிவு செய்வது குறித்தும் அது சார்பான சந்தேகங்கள் குறித்தும் அவ்வப்பொழுது யாராவது கேட்பதுண்டு. நல்ல விஷயம்தானே.  நுட்பமான சில கேள்விகளுக்கு பதில் தெரியாது என்றாலும் அனுபவஸ்தன் என்கிற முறையில் சொல்கிற தகவல்கள்தான் இவை- சிலருக்கு உதவக் கூடும்.

அறக்கட்டளையைப் பதிவு செய்வதற்கு வழக்கறிஞர் யாரும் அவசியமில்லை. ஒரு பட்டயக் கணக்கரை(ஆடிட்டர்) பிடித்தால் போதுமானது. அவரிடம் அறக்க்ட்டளையின் பெயர், அதன் நோக்கம், யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கப் போகிறார்கள் என்ற தகவல்களைச் சொல்லிவிட வேண்டும். அறக்கட்டளையில் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் அவசியம். அதிகபட்சம் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் குறைவுதான் நிறைவு- தேவையற்ற பிக்கல் பிடுங்கல் இருக்காது. நிறைய உறுப்பினர்களை வைத்திருந்தால் அவர்களைச் சமாளித்துக் கொண்டிருப்பதே பெருங்காரியமாக இருக்கும்.

அறக்கட்டளையின் உறுப்பினர் விவரங்கள், அதன் செயல்பாடுகள், விதிமுறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கி ஆவண மாதிரியை (Sample document) பட்டயக் கணக்கர் தட்டச்சு செய்து நம்மிடம் கொடுப்பார். இந்த ஆவண மாதிரியை மிகுந்த கவனத்துடன் சரி பார்க்க வேண்டியது அவசியம். ஒரு முறை பதிவு செய்யப்பட்ட பிறகு எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும் மீண்டும் சார்பதிவாளரின் ஒப்புதலுடன்தான் செய்ய முடியும் என்பதால் அது தேவையற்ற மண்டைக் குடைச்சல். அதுவுமில்லாமல் ‘என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க? ட்ரஸ்ட்ல இருக்கிற எல்லோரையும் கூட்டிட்டு வாங்க’ என்று சொல்லித் தாளிப்பார்கள். ஒருவேளை அறக்கட்டளையின் பதிவு ஆவணத்தில் குறிப்பிடாத காரியங்களைச் செய்தால் எதிர்காலத்தில் வருமான வரித்துறையினர் உள்ளிட்டவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் ஆவணம் மிகச் சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் நல்லது.

ஆவண மாதிரி சரியாக இருக்கிறது எனில் நம்முடைய ஒப்புதலை பட்டயக் கணக்கருக்குச் சொல்லிவிடலாம். அவர் அந்த விவரங்களை பத்திரத் தாளில் தட்டச்சு செய்து தருவார். பத்திரத் தாளில் தட்டச்சு செய்யப்பட்டதை எடுத்துக் கொண்டு பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களையும் அன்றைய தினத்தில் சார்பதிவாளர் முன்பு அடையாள அட்டை, முகவரிச் சான்றுடன் ஆஜராகச் சொல்வார்கள். இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு அந்தந்த ஊரின் ‘மாமூல்’ வழக்கப்படி பத்திரம் பதிவு செய்யப்படும். முக்கியமான விஷயம்- அறக்கட்டளையின் முகவரி எந்தப் பத்திரப் பதிவு அலுவலகத்தின் எல்லைக்குள் வருகிறதோ அந்த ஊரில்தான் பதிவு செய்ய முடியும்.

பதிவு செய்யப்பட்ட பத்திரம் கைக்கு கிடைத்தவுடன் PAN அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதையும் பட்டையக் கணக்கரே செய்து கொடுத்துவிடுவார். PAN அட்டை கிடைத்த பிறகுதான் வங்கிக் கணக்குத் தொடங்க முடியும். PAN அட்டை மற்றும் பதிவு செய்யப்பட்ட பத்திரத்துடன் வங்கியை அணுகி அறக்கட்டளையின் பெயரில் வங்கிக் கணக்குக்கான கோரிக்கையை முன் வைக்கலாம். ஆனால் ஒரு பிரச்சினை இருக்கிறது- இந்தியாவில் 90% அறக்கட்டளைகள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதில்லை. அதனால் வருமான வரித்துறையினர் தங்களைத்தான் ராவு ராவென ராவுகிறார்கள் என்று பெரும்பாலான வங்கிகள் நெட்டி முறிப்பார்கள். அதனால் சாமர்த்தியமாகப் பேச வேண்டியது அவசியமாக இருக்கும். என்னையெல்லாம் இரண்டு மூன்று வங்கிகளில் அடித்துத் துரத்தாத குறைதான்.

அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டு, PAN அட்டையும் வாங்கி, வங்கிக் கணக்குத் தொடங்கிவிட்டால் வேலை முடிந்த மாதிரிதான். அதன் பிறகு நன்கொடையாளர்கள் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பத் தொடங்கலாம். நாம் செய்கிற காரியங்களின் ஆவணங்கள் (ரசீதுகள், பயனாளிகளின் விவரங்கள், வரவு செலவுக் கணக்கு, நிழற்படங்கள்) உள்ளிட்டவற்றைச் சேர்த்து 12 A மற்றும் 80 G ஆகியவற்றுக்கு பதிவு செய்து கொள்ளலாம். இதையும் கூட வருமான வரித்துறை அலுவலகங்களில் தொடர்புடைய பட்டயக் கணக்கரே செய்து தந்துவிடுவார். 12 A என்பது இலாப நோக்கமற்ற, அரசு சார்பற்ற நிறுவனம் என்பதற்கான பதிவு. 80 G என்பது வருமான வரி விலக்குக்கான பதிவு. அறக்கட்டளையின் ரசீதைக் காட்டி நன்கொடையாளர்கள் தாம் செலுத்திய தொகைக்கான வரிவிலக்கைப் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டு நிதியை நேரடியாகப் பெற வேண்டுமானால் FCRA என்று பதிவு செய்யப்படல் வேண்டும். அப்பொழுதுதான் டாலர், யூரோ போன்ற பணத்தில் பரிமாற்றம் செய்ய முடியும். நிசப்தம் அறக்கட்டளை அந்த விதியின் படி பதிவு செய்யப்படவில்லை என்பதால் முழுமையான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை.

அறக்கட்டளை தொடங்குவதற்கு வழக்கறிஞர் வேண்டும், காவல்துறை அதிகாரி வேண்டும் என்றெல்லாம் குழம்பிக் கிடக்க வேண்டியதில்லை. அப்படி யாராவது புருடாவிட்டாலும் நம்ப வேண்டியதில்லை. அறக்கட்டளை தொடங்குவது மிக எளிமையான காரியம்தான். அதிகம் செலவு பிடிக்கும் காரியமும் இல்லை. ஒரே பிரச்சினை - தொடங்கிய பிறகு ஒழுங்காக வேலையைச் செய்ய வேண்டும். நிதி மற்றும் சட்டம் சம்பந்தப்பட்டது என்பதால் சற்றே பிசகினாலும் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்து சேர்ந்துவிடும். 

அதனால் திருவள்ளுவரை நினைத்துக் கொள்ளுங்கள். 'எண்ணித் துணிக கருமம்’. இதைத் தாண்டி வேறு ஏதேனும் விவரம் வேண்டுமெனில் தொடர்பு கொள்ளவும். எனக்கும் பதில் தெரியாது. சேர்ந்து விடையைக் கண்டுபிடிக்கலாம். Information is wealth!

12 எதிர் சப்தங்கள்:

நேத்தா கார்த்திக் said...

நன்றி,, ரொம்ப உபயோகமான தகவல்.

RAJ said...

Thank you Mani sir for sharing a very useful information

alagu said...


really it is very useful for person who has lack of knowledge in this matter.

womenstraining said...

good job. It is easy to beginners.

Unknown said...

Sir need a separate office for ...

Unknown said...

நன்றி.கூடுதல் டிரஸ்ட் உறுப்பினர் சேர்ப்பது எப்படி என்று கூறவும்

Anonymous said...

மிக்க நன்றி ஐயா, அருமையான தெளிவுரை.

Vicky mannai... said...

நன்றி சகோ!

Unknown said...

அருமையான விளக்கம்...அண்ணா..
எளிதாக இருந்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது..

SELVAM PALANISAMY said...

நன்றி

Unknown said...

சகோதரர் அறக்கட்டளையில் மாத சந்தாவாக எவ்வளவு நியமனம் செய்யலாம். எனது எண் 8870790213

Unknown said...

அண்ணா, நீங்கள் கூறும்படி நான் அறக்கட்டளை ஆரம்பித்தாலும், அறக்கட்டளையில் வரும் தொகையை எந்தவித பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். அரசு உதவியினை பெற முடியுமா?