வீரமணியின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள். ஆனால் நன்றாகப் படிக்கக் கூடிய பெண். பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண்களும் பனிரெண்டாம் வகுப்பில் 1096 மதிப்பெண்களும் வாங்கியிருந்தார். கள்ளிப்பட்டி பள்ளியின் தலைமையாசியர் சுந்தாராயாள் அழைத்து- ‘கண்ணு நல்லா படிக்கிற பொண்ணு.. பி.எஸ்.ஸி அக்ரி கிடைச்சிருக்கு...வீட்ல படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லுறாங்க...ஏதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமா?’ என்ரார்.
சுந்தாராயாள் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். கள்ளிப்பட்டி பள்ளிக்குத் தலைமையாசிரியராகச் சென்றிருந்த போது பள்ளி நாறிக் கிடந்திருக்கிறது. இடுப்புயரக் காம்பவுண்டில் எட்டிக் குதித்து வந்து மது அருந்துவதும் கண்டபடி எழுதி வைப்பதும் சகலத்திற்கும் பிரச்சினை செய்வதுமாக இருந்த ரவுடிப் பள்ளியை ஒற்றையாளாக நின்று கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். கள்ளிப்பட்டியில் விசாரித்துப் பார்த்தால் பெருமையாகச் சொல்கிறார்கள். முதல் வேலையாக தடுப்புச் சுவரை உயரப்படுத்தி பூட்டுப் போட்டு ஒரு காவலரை நியமித்து காவல்துறையை உதவிக்கு அழைத்து என நிறையச் செய்திருக்கிறார். இப்பொழுது பள்ளி மிக ஒழுக்கமாக நடைபெறுகிறது. Staff council என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். தவறு என்று தெரிந்தால் மாணவரையும் அவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். காதலுக்காக தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணிலிருந்து பெண்கள் கழிவறையின் கதவுகளை உடைத்த மாணவர்கள் வரை சகட்டு மேனிக்கு மிரட்டி வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார். இன்னமும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறப் போகிறார். அதற்குள் ஏகப்பட்ட மாறுதல்களைக் கொண்டு வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
அவர் வீரமணியின் மதிப்பெண் பட்டியல்களை அனுப்பி வைத்திருந்தார். நண்பர் கதிர்வேல் நேரடியாக கள்ளிப்பட்டிக்குச் சென்று விசாரித்தார். மிகச் சிரமப்படும் குடும்பம். அப்பாவியான மாணவி. விவசாயக் கல்லூரியில் ஆன்லைன் வழியாக பணம் கட்டச் சொல்லியிருந்தார்கள். ஆன்லைன் வழியாகப் பணம் கட்ட முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. தலைமையாசிரியரை அழைத்து ‘பணத்தை பள்ளியின் நிதியிலிருந்து கட்டிவிடுங்கள். காசோலையை அனுப்பி வைத்துவிடுகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். கட்டிவிட்டார்கள். காசோலையை அனுப்பி வைத்த பிறகு சேர்க்கைக்கான ஆவணங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஒரு சாதாரண விவசாயக் கூலியின் மகள் தனது விவசாயப் படிப்பை படிப்பதற்கான முதல் படியை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். சிறு விளக்கு இது.
(2)
விஷ்ணுப்பிரியா இன்னொரு மாணவி. சென்னையில் ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறார். அப்பா தையல் வேலை செய்கிறார். அம்மா வீட்டில்தான் இருக்கிறார். ஆனால் இருதய நோயாளி. எழுத்தாளர் சந்திராதான் இந்தப் பெண் குறித்துச் சொல்லியிருந்தார். விசாரித்த பிறகு அவர்களது சிரமம் புரிந்தது. மிக அமைதியாக பேசுகிறார் கல்லூரியில். ஃபீஸ் கட்டமுடியாமல் தேர்வு எழுதுவதற்கு நுழைவுச் சீட்டு தராமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பனிரெண்டாயிரம் கட்ட வேண்டியிருந்தது. காசோலையை அனுப்பிய பிறகு ரசீதுகளை அனுப்பச் சொல்வதற்காக அலைபேசியில் அழைத்த போது அவருடைய அம்மாதான் எடுத்தார். நெகிழ்ந்தவராகப் பேசினார். ‘உடம்பு நல்லா இருக்காங்க?’ என்று கேட்டவுடன் அவருக்கு அழுகை வந்துவிட்டது. மேற்கொண்டு பேச விரும்பவில்லை. ‘உங்க பொண்ணு வந்தவுடன் பேசிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு துண்டித்துவிட்டேன்.
மாலை தேர்வு முடிந்து வந்தபிறகு அவரே அழைத்தார். ரசீதுகளுடன் சேர்த்து ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். உருக்கமான கடிதம் அது. என்ன பதில் எழுதுவதென்று தெரியவில்லை. தொலைபேசியில் அழைத்து ‘எதைப்பத்தியும் கவலைப்படாம நல்லா படிங்க..படிச்சுட்டு என்ன உதவி வேணும்ன்னாலும் சொலுங்க’ என்று சொல்லியிருக்கிறேன். பரிவான சொற்கள் ஆற்றல் மிகுந்தவை என்பது தெரியும். அது மிகப்பெரிய உந்துசக்தியைக் கொடுக்கக் கூடியவை. ‘கண்டிப்பா சார்’ என்றார்.
ஒருவகையில் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
பணம் மிகப்பெரிய மாயவித்தைக்காரன். எளிய மனிதர்களின் கைகளில் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டுகிறது. கண்ணீரோடும் பதற்றத்தோடும் அவர்கள் துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். பனிரெண்டாயிரம், பதினைந்தாயிரம் என்பது கூட பல குடும்பங்களுக்கு மிகப்பெரிய தொகை. அது கிடைக்காமல் படிப்பை நிறுத்துபவர்களும் மருத்துவச் செலவுகளை ஒத்தி வைப்பவர்களும் நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் நம்மால் உதவ முடியாது. ஆனால் கண்களுக்குத் தெரிகிற மனிதர்களுக்கு உதவலாம். ஒரு குடிசைக்குள் சிறு அகல்விளக்கை ஏற்றி வைப்பது மாதிரிதான். ஆனால் அந்த அகல்விளக்கு ஒரு குடும்பத்துக்கே ஒளி கொடுக்கக் கூடியது என்பதுதான் நமக்குக் கிடைக்கக் கூடிய சந்தோஷம்.
அனைவருக்கும் நன்றி.
அனைவருக்கும் நன்றி.
7 எதிர் சப்தங்கள்:
Good
Very Good....
unable to read without tears-vishwa
Kudos to Headmistress Mrs. Sundarayal. She was classmate of my elder sister. My mind recoil back to the happy days of sitting together to prepare for SSLC exam in 1975 March.
உங்கள் சேவையில் நாங்களும் இணைய முயல்கிறோம்,ஒவொரு மாதமும் வீண் செலவுகள் இழுத்துவிடுகின்றன,மற்றவர்கள் மகிழ்ச்சி நமது மனதிற்கு எல்லை இல்லாத நிமதியை தருகிறது,நாங்களும் எங்கள் செலவுகளை குறைத்து உங்கள சேவையில் பங்குகொள்ள முயல்கிறோம்,உங்களது பகிர்தல் எங்களையும் தூண்டுகிறது,நன்றி.
ungal sevaiyil naanum ennal mudindha udhavigalai seyya virumbugiren. mukkiyama nandraaga padikka virumbum pengalukku.
Vazthukkal Mani . Thodarattum ungal pani
Post a Comment