Oct 21, 2015

சின்ன நதி - அறிவிப்பு

சின்ன நதி இதழ் வருவதில்லை என்று சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் நிசப்தத்தில் செய்யப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் அந்த இதழுக்காக சந்தா செலுத்தியிருந்தவர்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. சின்ன நதி இதழ் குழந்தைகளுக்கு ஏற்புடையதாக இருந்ததால் பரிந்துரை செய்திருந்தேன். இதழை தொடர்ந்து நடத்துவதில் சில சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன போலிருக்கிறது. தமிழகத்தில் சிறு பத்திரிக்கைகளை நடத்துவதில் இருக்கும் சவால்கள் குறித்து ஓரளவு புரிதல் இருக்கிறது என்கிற அடிப்படையில் அவர்களின் சூழலை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் அத்தனை சந்தாதாரர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் தொடர்ந்து கேட்கத் தொடங்கியிருந்தார்கள். இதழின் தற்போதைய நிலை குறித்து சின்னநதியின் நிர்வாகத்தினரிடம் விசாரித்ததற்கு அவர்கள் பின்வரும் பதிலை அனுப்பியிருக்கிறார்கள்.

                                                                     ***

அன்புடையீர் வணக்கம். நண்பர் வா.மணிகண்டன் உங்கள் புகார் தகவலை எனக்கு அனுப்பியிருந்தார். கடந்த 5 மாதங்களாக சின்ன நதி வரவில்லை. முதற்காரணம் RNI (Registrar of Newspaper for India) பெறுவதில் சிறு தாமதம். மற்றும் அலுவலக நடைமுறையில் சில மாற்றங்கள் நிகழ்வதால் தொடர்ந்து வரவில்லை. மேலும் ஒரு கட்டத்தில் தாங்கள் செலுத்திய சந்தா தொகை 1 ரூபாய்கூட குறைவின்றி திருப்பித்தரப்படும் என்று நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மேற்சொன்ன தகவல்கள் குறித்து ஏற்கெனவே தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் பதில் அளித்துள்ளோம். எங்கள் அலுவலக எண் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுபோன்று சில சந்தாதாரர்கள் அவ்வப்போது பேசும்போது பதில் அளிப்பது எங்கள் கடமையாகவே நாங்கள் கருதுகிறோம். நிச்சயம் விரைவில் சின்ன நதி மற்றும் பயணி உங்களை வந்தடையும். அது நடவாதபொழுது நிச்சயமாக உங்கள் பணம் திருப்பித் தரப்படும் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறோம்.

                                                                          ***

புகார் மின்னஞ்சலை சின்னநதியின் அலுவலகத்துக்கு அனுப்புவதற்கு தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் இதழை பரிந்துரை செய்தவன் என்ற முறையில் சரியான பதிலைப் பெற்றுத் தரும் பொறுப்பு எனக்கிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

தமிழில் அவ்வளவு தரத்துடன் குழந்தைகளுக்கான சஞ்சிகை வருவது அசாதாரணமான நிகழ்வு. தொடர்ந்து இயங்க முடியாமல் இருக்கிறார்கள் என்பது நிச்சயமாக வருத்தமளிக்கும் செய்திதான். சின்ன நதி மீண்டும் வெளி வர வேண்டுமென மனப்பூர்வமாக விரும்புகிறேன். சந்தா செலுத்தியவர்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகமிருப்பின் சின்னநதி குழுமத்தினரிடம் விசாரித்துக் கொள்ளலாம். தேவைப்படுமாயின் என்னையும் தொடர்பு கொள்ளவும். நன்றி.

இன்றைய மற்றொரு பதிவு: சுடர் 

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Thank you Manikandan.