ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. வடநாட்டுக்காரர். அப்பா மேற்குவங்காளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இன்றிலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பான காலகட்டம் அது. இவர் தறுதலையாகச் சுற்றியிருக்கிறார். உள்ளூர் அரசியல்வாதி அதுவும் அதிகாரமிக்க அரசியல்வாதி என்றால் தம்மைச் சுற்றி நண்பர்கள் குழாம் சேரும் அல்லவா? அப்படிச் சேர்ந்திருக்கிறது. ஏழெட்டுப் பேர்கள். இந்தக் கதையைச் சொல்வதற்கு ட்வின் பீக்ஸ் என்ற இடத்துக்கு அடைத்துச் சென்றிருந்தார். அது என்ன Twin peaks என்று கேட்கக் கூடாது. அது ஒரு குடிக் கூடம். இத்தினியூண்டு துணியை அணிந்த பெண்கள் ஊற்றிக் கொடுப்பார்கள். Eat, Drink, Scenic views என்று எழுதி வைத்திருந்தார்கள். தின்பதும் குடிப்பதும் இரண்டாம்பட்சம். மூன்றாவது விஷயத்துக்காகத்தான் அழைத்துச் சென்றிருந்தார். பத்து டிஷ்யூ காகிதங்களை உதட்டுக் கீழாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.
முதல் இரண்டு குடுவை உள்ளே இறங்கு வரைக்கும் ‘ மிஸ்டர்.மணிகண்டன்...’ என்று அதிபயங்கர நாகரிகத்துடன் பேசிக் கொண்டிருந்தவர் மூன்றாவது குடுவையிலிருந்து குப்புற விழுந்துவிட்டார். ‘பொண்ஜ்ஜுங்க சூப்பழா இருக்காங்களா’ என்று ஆரம்பித்தவர் தம்மை மறந்து தனது கடந்த கால பிரதாபங்களை அடுக்கத் தொடங்கினார். அவர் சொன்னதையெல்லாம் கேட்கக் கேட்க தலை சுற்றியது. ஸ்டாலின் எழுபதுகளில் எப்படித் திரிந்தார் என்று சமீபத்தில்தான் விக்கிலீக்ஸ் செய்தியொன்றைப் படித்தேன். அதில் எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை. அதிகாரம் படைத்த அரசியல்வாதியின் மகன்களுடன் பழகுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடைத்ததில்லை என்பதால் எல்லாவற்றையும் கிசுகிசுவாகக் கேட்பதோடு சரி. ஆனால் இந்த வங்காளி கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். பனிரெண்டு வயதில் சிகரெட். அடுத்த வருடம் சாராயம். பதினாறாவது வயதில் முதல் பெண்.
நிமிர்ந்து அமர்ந்தேன்.
‘முதலில் சிகரெட், பிறகு குடி, அதன் பிறகு பெண்கள்- இதையெல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. போதை வஸ்து. அதை அடைந்துவிட்டால் உலகத்தின் உச்சத்தை அடைந்த மாதிரி’ என்றார். சிகரெட் பிடித்துப் பழகிய பிறகு இதற்கு அடுத்து என்ன இருக்கிறது என்று தோன்றும். குடித்துப் பழகிய பிறகு அதற்கு மேல் என்ன இருக்கிறது என்று தோன்றும். இப்படியே ஒவ்வொரு குழியாக மாறி மாறி இறங்குவது ஒரு தேடல்தானே.
அனுபவம் பேசிக் கொண்டிருந்தது.
அப்பா எம்.பி ஆக இருந்த போது நரசிம்மராவ் ஆட்சி. காங்கிரஸ் அரசாங்கம் பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. மைனாரிட்டி அரசாங்கத்தை வைத்துக் கொண்டு ஐந்தாண்டுகள் எப்படி தம் கட்டுவது என்பதை நரசிம்மராவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அதைப் பாராட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. எவ்வளவு கீழ் மட்டத்துக்கு வேண்டுமானாலும் இறங்கி பிரதமராக நீடித்துக் கொண்டிருந்தார். எம்.பிக்களை வளைப்பதற்கென்றே தனி அணி செயல்பட்டதாம். அதனால் அவருக்கு ஜால்ரா தட்டும் எம்.பிக்களுக்கு நல்ல செல்வாக்கு இருந்திருக்கிறது. அதை வங்காளி பயன்படுத்திக் கொண்டார். அப்பனுக்கு அதிகாரம் கையிலிருக்க மகனுக்கு தேவையானதெல்லாம் கிடைத்திருக்கிறது. கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். நாறிப் போய்விட்டார். அவருடைய நண்பர்கள் குழாமிலிருந்த இரண்டு பேர் ஒரே நாளில் இறந்திருக்கிறார்கள். ஹெராயின் அளவுக்கு மீறி ஏறி மண்டையைக் காலி ஆக்கியிருக்கிறது. அதுவரை எம்.பியின் மனைவியாக பட்டுச் சேலையுடுத்திக் கொண்டிருந்த இவரது அம்மாவுக்கு முதல் ஜெர்க். மகன் திசை மாறிக் கொண்டிருக்கிறான் என்பது புரியத் தொடங்கிய போது நிலைமை கை மீறிச் சென்றிருக்கிறது. அடுத்த ஒன்றிரண்டு வாரங்களில் போதையுடன் கார் ஓட்டிச் சென்று மோதியதில் கண்ணாடி உடைந்து நெஞ்சில் குத்தியிருக்கிறது. தலை முழுவதும் காயம். குரூரமான அடி அது. இன்னமும் நெஞ்சிலும் வயிற்றிலும் பெரிய தழும்புகள் இருப்பதாகச் சொன்னார்.
அதன் பிறகு மருத்துவமனையில் ஆறு மாதங்கள் இடையிடையே மன மாறுதலுக்கான மருத்துவம் அப்படியே மஹாராஷ்டிராவில் படிப்பு என்று குடும்பத்தைவிட்டு வெகு தூரம் விலகியிருக்கிறார். அப்பாவுக்கும் அரசியல் அதன்பிறகு பெரிய அளவில் எடுபடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கியிருக்கிறார். அவருக்கு அது மன உளைச்சல். எப்படியும் மந்திரியாகிவிட வேண்டும் என்ற நினைப்பு பலிக்கவேயில்லை. வயது கூடிக் கொண்டேயிருந்திருக்கிறது. ஓய்ந்துவிட்டார். இவருக்கும் அம்மா அப்பா மீதெல்லாம் பெரிய ஒட்டுதல் இல்லை. எம்.எஸ் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்து தொண்ணூறுகளின் இறுதியில் அமெரிக்கா வந்துவிட்டார். இப்பொழுது வீடு வாங்கிவிட்டார். பச்சை அட்டை கொடுத்துவிட்டார்கள். ‘இந்த ஊரில் போதை வஸ்து ஈஸியாக் கிடைக்குது...ஆனா நான் தொடறதில்லை...என் பயமெல்லாம் என் பையன் தொட்டுடக் கூடாதுன்னுதான்....எப்படியும் என் ஜீன் இருக்கும்ல?’ என்றார்.
இருக்கும். இல்லாமல் இருக்குமா? அதுவும் இந்தக் காலத்துக் குழந்தை. அமெரிக்க வளர்ப்பு. அமெரிக்க வளர்ப்பு என்ன அமெரிக்க வளர்ப்பு? எல்லா ஊரிலும்தான் எல்லாமும் கிடைக்கின்றன. நாசமாகப் போக வேண்டுமானால் எங்கிருந்து வேண்டுமானாலும் அழிந்து போகலாம். நாம் வளர்ப்பதில்தான் இருக்கிறது. அத்தனை பிள்ளைகளுமே பெற்றவர்களின் வளர்ப்பினால்தான் ஒழுக்கமானவர்களாகவும் சீரழிந்தும் போகிறார்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனால் பெரும்பான்மையானவர்களின் வாழ்க்கையானது பெற்றவர்களினால்தான் திசை மாற்றப்படுகிறது. அது நல்ல வகையிலாக இருந்தாலும் சரி; கெட்ட வகையிலாக இருந்தாலும் சரி.
‘எம்பையன் மேல எனக்கு ஏகப்பட்ட பாசம்’ என்று யாராவது சொன்னால் சிரிப்பு வந்துவிடும். யாருக்குத்தான் தம் குழந்தைகள் மீது பாசமில்லை? அது உயிர்களின் அடிப்படையான உணர்ச்சி. எவ்வளவுதான் மோசனமானவனாக இருந்தாலும் தனது குழந்தை என்று வந்துவிட்டால் நெஞ்சின் ஓரத்திலாவது துளி ஈரம் இருக்கும். அது பெரிய விஷயமே இல்லை. நம் குழந்தையை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் பெரிய விஷயம். நான்கு வயதில் ஏன் பள்ளிக்குச் செல்வதில் சுணக்கம் காட்டுகிறான்? ஐந்து வயதில் ஏன் கோபப்படுகிறான்? எட்டு வயதில் ஏன் விலகுகிறான்? பதினான்கு வயதில் ஏன் வெறுக்கிறான் என்பதைப் புரிந்து கொள்வதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது.
சுவரில் கிறுக்கினால் அப்பாவுக்கு கோபம் வரும். குப்பை போட்டு வைத்தால் அம்மா திட்டுவார். மதிப்பெண் குறைந்தால் அப்பா திட்டுவார் அம்மா அடிப்பார் என்கிற பயம்தான் குழந்தைகளுக்கு முக்கியமான பிரச்சினை என்றால் எமோஷனல் இன்னொரு பிரச்சினை. ‘அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப ஃபீல் செய்வாங்க..சொல்லாம மறைச்சுடலாம்’ என்கிற மனநிலை. இந்த இரண்டுமே ஆபத்தானதுதான். குழந்தை வளர வளர இந்த பயமும் எமோஷனலும் சேர்ந்தே வளர்கிறது. இதுதான் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமான நீண்ட தூரத்தை உருவாக்குகிறது. இந்த தூரத்தை சுருக்குவதில்தான் நம் பிள்ளை வளர்ப்பு முறையின் சூட்சமமே இருக்கிறது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக விவாதிக்கத் தெரிய வேண்டும். நான்கு வயதுப் பையன் நமக்குத் தெரியாமல் தனது அந்தரங்க உறுப்போடு விளையாடிக் கொண்டிருப்பான். முக்கால்வாசிப் பேர் ‘அது ஹைஜீனிக் இல்லை’ என்று தடுப்பார்கள். கால்வாசிப் பேர் கையை எடுக்கச் சொல்லி மிரட்டுவார்கள். இரண்டையும் தாண்டி அதை சகஜமாக எடுத்துக் கொண்டு அதைப் பற்றி பேசச் சொல்கிறார்கள். பனிரெண்டு வயதுப் பையன் நண்பர்களோடு சேர்ந்து சிகரெட் பிடித்தால் அதை தனது பெற்றவர்களிடம் சொல்லும் தைரியம் அவனுக்கு வேண்டும். அதைப் புரிந்து கொண்டு அதைப் பற்றி பேசுகிற பக்குவம் பெற்றவர்களுக்கு வேண்டும்.
இப்படி அத்தனை விவகாரத்திலும் ஒரு மனமொத்த சிநேகிதத்தை- கோபம், மிரட்டல், அன்பு உள்ளிட்ட உணர்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நம்முடைய குழந்தைகளிடம் நட்புணர்வை உருவாக்கிவிட்டால் போதும். அவர்களால் எதைப் பற்றியும் நம்மிடம் விவாதிக்க முடியும். பிரச்சினைகளைப் பற்றியும் நல்லது கெட்டது பற்றியும் பேச முடியும். இதைச் செய்வது பெரிய காரியமில்லை. நம்முடைய ஈகோவை விட வேண்டும். ‘எங்கப்பா முன்னாடி நான் உட்கார்ந்து பேச மாட்டேன் தெரியுமா?’ என்கிற அதே கெத்தை நம் பிள்ளைகளிடமும் எதிர்பார்க்கக் கூடாது. இந்தக் காலகட்டத்தில் அது சாத்தியமில்லை. அப்படி வெகு பவ்யமாக இருக்கிறார்கள் என்றால் எதையோ மறைக்கிறார்கள் என்றோ அல்லது ஏதோ போலித்தனம் நம்மிடமிருக்கிறது என்றோ முடிவு செய்து கொள்ளலாம். இதைத் தவறாகச் சொல்லவில்லை. நாம் வாழ்கிற காலகட்டத்தின் சூழலும் அந்தச் சூழல் உருவாக்கித் தரும் வாய்ப்புகளும் அப்படித்தானிருக்கின்றன.
ஈகோ இல்லாத, பயமற்ற, அதீத எமோஷனல் இல்லாத சுமூகமானதொரு பெற்றோர்- பிள்ளை உறவுநிலைதான் அடுத்த தலைமுறைக்குத் தேவையானது. புற உலகம் கொடுக்கக் கூடிய அழுத்தங்களினால் குழந்தைகளின் அக உலகில் உண்டாகும் அதிர்வுகளைத் தாங்கிப் பிடிக்க அத்தகையைதொரு உறவுதான் அவசியமானதும் கூட.
6 எதிர் சப்தங்கள்:
பிள்ளைகளோடு நண்பர்களாக பழக வேண்டும் என்று அழகாக சொன்னீர்கள்! அதீத கண்டிப்பும் அதே சமயம் அதீத கண்டிப்பின்மையும் பிள்ளைகளை பாழாக்கிவிடும். அவர்களை புரிந்து கொண்டு வளர்ப்பதில்தான் பெற்றோர்களின் திறமை இருக்கிறது!
wonderful parenting tip
வழக்கம்போல அருமையான பதிவு.
Thanbi, eppadi kuzhandhai valakkanum enbathai nee valaththathukku appuram sollalame? Do you think you are really qualified to discuss this matter?
செத்த பிறகுதான் சாவைப் பற்றி எழுத வேண்டும்; நோய்மையில் விழுந்த பிறகுதான் அதன் வலியை எழுத முடியும் என்பது போல இருக்கிறது. எழுத்து என்பது அனுபவத்தின் வழியாக உருவாவதுதான். ஆனால் அனுபவம் மட்டுமே எழுத்து உருப்பெறும் வழியாக இருப்பதில்லை. எழுதிய விஷயத்தில் தவறு என்றால் சொல்லுங்கள்; விவாதிக்கலாம். எழுத்தை விட்டுவிட்டு எழுதியவனைப் பற்றி ஆராய விழைந்தால் பிரச்சினை உங்களிடம்தான் என்று அர்த்தம். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
Dinamani-yil ungal vimarsanathodar ippoluthu varuvathillaya ?
Post a Comment