Oct 20, 2015

செப்டெம்பர்- அக்டோபர்

செப்டம்பர்- அக்டோபர் மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு விவரம் இது. கடந்த மாதம் பதிவு செய்யாமல் விடுபட்டுவிட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் வன்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வந்திருக்கிறது, எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற விவரங்களைப் பார்த்துவிட்டு அவற்றை பதிவு செய்வது வழக்கம். கடந்த மாதம் ஒபாமா தேசத்திற்கு வந்ததில் அதைச் செய்யாமல் விட்டிருக்கிறேன். ஆனால் அது குறித்து யாருமே கேட்கவில்லை என்பது ஆச்சரியம்தான். இருந்தாலும் தவறு தவறுதான். ஒரு மாத விடுபடலுக்கான மன்னிப்பு கோரலுடன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களுக்கான விவரங்கள் ஒன்றாகச் சேர்த்து பதிவு செய்யப்படுகிறது.





வரிசை எண் 5- (காசோலை எண்: 49) :
மதன் நாமக்கல் மாவட்டம் மலையம்பட்டியைச் சார்ந்த தலித் மாணவர். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு கோயமுத்தூர் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.ஈ படிப்புக்கான சேர்ந்திருக்கிறார். பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள். படிப்பிற்கான உதவி கிடைத்தால் மட்டுமே படிப்பைத் தொடர முடிகிற சூழல். நல்ல கல்லூரி, நல்ல பாடம். ஆனால் வறுமையான குடும்பச் சூழல். மதன்குமாருக்கு உதவுவது அவசியமாகத் தெரிந்தது. அவரது கல்லூரிப் படிப்பின் சேர்க்கைக்கான தொகையான ரூபாய் பத்தாயிரம் கல்லூரியின் பெயருக்கு காசோலையாக அனுப்பி வைக்கப்பட்டது.

வரிசை எண் 14 (காசோலை எண்: 47) :
கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஏழு கிராமப்புற அரசு மற்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டன. அந்தப் பள்ளிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த கடைக்காரர்களிடம் கூப்பன்களைக் கொடுத்துவிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை மாணவர்களை வைத்துத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. மாணவர்களே புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு அது. கண்காட்சியின் இறுதி நாளன்று ஒவ்வொரு கடைக்காரர்களிடமிருந்த கூப்பன்கள் பெறப்பட்டு அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப தொகை எழுதப்பட்டு காசோலை வழங்கப்பட்டன. மொத்தம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது. அதில் ஒரு காசோலைதான் எண்- 47.

வரிசை எண்: 20 மற்றும் 43:
குழந்தை வைபவ் கிருஷ்ணாவின் மாதாந்திர பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவிகளுக்காக வழங்கப்பட்ட காசோலை. மாதம் தலா இரண்டாயிரம் எடுத்துக் கொள்கிறார்கள்.

வரிசை எண் 35:
உதகமண்டலத்தைச் சார்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனான தினேஷின் தண்டுவட அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட காசோலை இது. தினேஷுக்கு தண்டுவடத்தின் அதீதமாக வளரத் தொடங்கியது. இந்த வளர்ச்சி காரணமாக உள்ளுறுப்புகள் நசுங்கத் தொடங்கின. பெங்களூர் நாராயண ஹிருதயாலயா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார்கள். முதல் அறுவை சிகிச்சைக்கு ஐம்பதாயிரம் வழங்கியிருந்தோம். சிகிச்சை முடிந்து ஊருக்குச் சென்றிருந்தார்கள். ஆனால் திடீரென்று உடல்நிலை மோசமடைந்து அவனால் நடக்கவே முடியாமல் போய்விட்டது. உடனடியாக அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலின் படி கடந்த மாதம் அதே நாராயண ஹிருதயாலையாவில் அனுமதித்திருந்தார்கள். இப்பொழுது இரண்டாம் அறுவை சிகிச்சைக்கு உதவும் பொருட்டு இன்னொரு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

வரிசை எண் 23:
வருமான வரித்துறையினர் கேட்டதற்கிணங்க அறக்கட்டளையின் தொடக்கத்திலிருந்து இன்றைய தேதி வரைக்கும் வங்கி ஸ்டேட்மெண்ட் வழங்கக் கோரியிருந்தேன். மென்பிரதியாக மின்னஞ்சலில்தான் அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் ஆயிரத்து இருநூறு ரூபாய் கணக்கு எழுதியிருக்கிறார்கள். ஊருக்கு வந்த பிறகு முதல் வேலையாக இதை விசாரிக்க வேண்டும். அநியாயமாக இருக்கிறது. 

அறக்கட்டளையின் கணக்கில் ஏழு லட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து எழுநூற்று எழுபத்தாறு ரூபாய் (ரூ. 797776.15) இருக்கிறது. அடுத்த வாரம் இந்தியா திரும்பியவுடன் நிறையப் பேருக்கு காசோலை அனுப்ப வேண்டிய வேலை இருக்கிறது. அக்டோபர் இறுதிக்குள் கொடுக்க வேண்டிய காசோலைகளைக் கொடுத்துவிட்டு இதுவரைக்குமான வருமான வரித் தாக்கலை முடித்தாக வேண்டும். 

சமீபமாகச் சந்திக்கும் நண்பர்களில் நிறையப் பேர் ‘அறக்கட்டளை பெரிய வேலை’ என்று பேசுகிறார்கள். ஏற்கனவே எழுதியதுதான். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ‘நாம் செய்து கொண்டிருக்கிற காரியம் பெரிய காரியம்’ என்ற நினைப்பு மட்டும் வரவே கூடாது. அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி, எந்த வேலையாக இருந்தாலும் சரி.  அப்படியொரு நினைப்பு வந்துவிட்டால் நமக்கு எதிரியெல்லாம் தேவையில்லை. அந்த நினைப்பே நம்மைக் காலி செய்துவிடும். நாம் செய்து கொண்டிருப்பது பெரிய காரியமா சாதாரணக் காரியமா என்பதை நமக்கு பின்னால் வரும் தலைமுறை முடிவு செய்யட்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சரியான பாதையில் செல்கிறோமா என்பதை மட்டும் பார்த்தபடி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். கடிவாளம் போட்ட குதிரை மாதிரி ஓடிக் கொண்டேயிருப்போம். எவ்வளவு தூரம் ஓடினாலும் தூரம் மட்டும் குறையப் போவதேயில்லை. அறக்கட்டளையும் அப்படித்தான். எதையும் மறைக்காமல் இருந்தால் போதுமானதாக இருக்கிறது. வெளிப்படையாக இருந்துவிட்டால் எந்தச் சுமையும் இல்லை. நான்கு பேருக்கு நம்மால் நன்மை விளைகிறது என்று தெரிந்தால் நம்மைத் தாங்கிப் பிடிக்க நாற்பது பேராவது வரிசையில் நிற்பார்கள். ‘இதெல்லாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் நல்லா இருக்கும்...ஆனால் உண்மை வேற மாதிரி’ என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். இதுதான் நிதர்சனம். அதனால் பெரிய காரியம் சிறிய காரியம் என்ற நினைப்பெல்லாம் மண்டைக்குள் வரவே கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். இவன் இப்படியே இருக்கட்டும் என்று நீங்களும் ஆசிர்வதித்துவிடுங்கள். 

நன்றி.

அறக்கட்டளையின் செயல்பாடுகள், நிதிவிவரங்கள் குறித்து ஏதேனும் வினாக்கள், சந்தேகங்கள் இருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

பிரகாஷ் குமார் said...

சிறப்பான அறிவுறைகளை அளித்தமைக்கு மிக்க நன்றி!


"‘நாம் செய்து கொண்டிருக்கிற காரியம் பெரிய காரியம்’ என்ற நினைப்பு மட்டும் வரவே கூடாது. அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி, எந்த வேலையாக இருந்தாலும் சரி."