Sep 17, 2015

அறம் செய விரும்பு

நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாயை விகடனிடம் கொடுத்திருக்கிறார். விகடன் குழுமத்தார் தமிழகம் முழுவதிலுமிருந்து நூறு பேரைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு லட்சமாகக் கொடுக்கிறார்கள். நம்முடைய கைக்கு காசு வராது. நாம் பரிந்துரைக்கும் மனிதருக்கு அந்தப் பணம் சேர்ந்துவிடும். எப்பொழுது அந்த ஒருவரைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதையெல்லாம் இன்னமும் சொல்லவில்லை. இப்போதைக்கு நூறு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இருப்பார்கள் போலிருக்கிறது. அந்த நூறு பேரில் நிசப்தம் அறக்கட்டளை நடத்துவதன் காரணமாக எனது பெயரையும் சேர்த்திருக்கிறார்கள்.


கோவாவில் இருக்கும் போது நிழற்படத்தை அனுப்பி வைக்கச் சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்த நண்பர் கார்த்திகேயன் படம் எடுத்துக் கொடுத்தார். சுயகுறிப்பு ஒன்றும் கேட்டிருந்தார்கள். ஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையத்தைச் சார்ந்தவன் என்பதை முதல் வரியாகச் சேர்த்திருந்தேன். அதைச் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். ஊரைவிட்டு வெளியில் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போது ஏகப்பட்ட புதிய முகங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஊரின் முகங்களும் அடையாளமும் உருமாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த ஊர் என்னைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்கிறது போன்ற பிரமை உருவாவதைத் தடுக்க முடியவில்லை. 

கோபியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியிக்கு அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழில் கூட ‘வா.மணிகண்டன், பெங்களூர்’ என்று அடித்திருந்தார்கள். ஒரு வினாடி குப்பென்றாகிவிட்டது. பெங்களூர் என்பது பிழைக்க வந்த ஊர். எவ்வளவுதான் இந்த ஊரை விரும்பினாலும் உணர்வுப்பூர்வமான பிணைப்பு என்று எதுவுமில்லை. ஆனால் கோபியும் கரட்டடிபாளையமும் அப்படியில்லை. இதைப் பற்றி இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம்.


அறம் செய விரும்பு பற்றி முழுமையாகத் தெரியாது. இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு லட்ச ரூபாயை ஏதேனும் குழந்தைக்கு பரிந்துரை செய்துவிடலாம் என்ற யோசனை இருக்கிறது. இல்லையென்றால் அரசு/கிராமப்புற பள்ளியின் கட்டமைப்புக்கு பரிந்துரை செய்துவிடலாம். 

இந்த வார விகடனில் இடம்பெற்றிருக்கும் இந்த நிழற்படத்தையும் குறிப்பையும் நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்குரிய ஒரு அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். 

எப்பொழுதும் உடன் வரும் நிசப்தம் வாசகர்களுக்கும் ஆனந்தவிகடனுக்கும் மிக்க நன்றி.

6 எதிர் சப்தங்கள்:

Bala's Blog said...

Congrats Mani!

The more we come out and do good to others, the more our hearts will be purified, and God will be in them.

Swami Vivekananda.

Above words very true Main!

அன்பே சிவம் said...

நிசப்தமாக பல சாதனைகள் புரிந்து வரும் தங்களை தேர்ந்தெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. புதுகை சந்திப்புக்கு பதிவிட வேண்டுகிறேன், நேரமிருப்பின் எனது வலைப்பக்கம் வருகை தர வேண்டுகிறேன். நன்றி.

அன்பே சிவம் said...

நிசப்தமாக பல சாதனைகள் புரிந்து வரும் தங்களை தேர்ந்தெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. புதுகை சந்திப்புக்கு பதிவிட வேண்டுகிறேன், நேரமிருப்பின் எனது வலைப்பக்கம் வருகை தர வேண்டுகிறேன். நன்றி.

Vinoth Subramanian said...

Wow!!! Great sir!!! Let your service continue in all the possible ways!!! My best wishes.

Parthiban.M.A said...

Felt really happy to see you in Vikatan yesterday... Take care.. All the best

நேத்தா கார்த்திக் said...

வாழ்த்துக்கள்!👍💐