மே-ஜூன் மாதங்களில் நிசப்தம் அறக்கட்டளைக்கு நிறைய பணம் வந்திருக்கிறது. வழக்கமாக ஐந்து லட்சம் ரூபாய் என்கிற அளவில்தான் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும். இந்த மாதம் கிட்டத்தட்ட மூன்றே கால் லட்சம் ரூபாய்க்கு உதவிகள் வழங்கியிருக்கிறோம் என்ற போதிலும் கையிருப்பு ஐந்து லட்சத்து எண்பதாயிரம் ரூபாயாக இருக்கிறது. (துல்லியமாகச் சொன்னால் ரூ.5,80,831.95- ஐந்து லட்சத்து எண்பதாயிரத்து எந்நூற்று முப்பத்தோரு ரூபாய்). அந்த அளவுக்கு பணம் வந்திருக்கிறது.
1. மொபைல் வழியாக அனுப்பப்பட்ட பண விவரங்களில் மொபைல் எண்கள் தெரிவதால் முதல் சில எண்களை மட்டும் மறைத்திருக்கிறேன். பணம் அனுப்பியவர்கள் சரி பார்த்துக் கொள்வதற்கு ஏதுவாம கடைசி இலக்கங்களை மறைக்கவில்லை.
2. வரிசை எண் 1 இல் இருக்கும் தொகை தினமணியில் சினிமா பற்றிய தொடர் எழுதுவதற்காக அவர்கள் எனக்கு அனுப்பி வைக்கும் தொகை. எழுதுவதன் வழியாக வரும் பணத்தை அறக்கட்டளைக்கு பயன்படுத்திக் கொள்வது என்கிற முடிவின் காரணமாக அவர்களிடமிருந்து நிசப்தம் அறக்கட்டளையின் பெயரிலேயே காசோலை வாங்கிக் கொள்கிறேன்.
3. வரிசை எண் 5 இல் இருக்கும் தொகையை யாரோ வங்கியில் நேரடியாக செலுத்தியிருக்கிறார்கள். பெயர் தெரியவில்லை.
4. வரிசை எண் 14- இந்தத் தொகையையும் வங்கியில் நேரடியாகத் தொகையைச் செலுத்தியிருக்கிறார்கள்- தாங்கள் லண்டனில் இருப்பதாகவும் தங்களுடைய தந்தையார் வங்கியில் பணத்தை நேரடியாகச் செலுத்திவிடுவார் என்றும் சொன்னார்கள். அப்படி வந்த தொகை அது. பணம் வந்து சேர்ந்தவுடன் அவர்களுக்குத் தகவல் அனுப்பியதாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது அவர்களுடைய பெயர் மற்றும் மற்ற விவரங்களுக்காக மின்னஞ்சலைத் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.
வரவு பற்றிய மற்ற விவரங்கள் தெளிவாக இருக்கின்றன.
5. வரிசை எண் 38- பாவனா என்னும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்கப்பட்ட தொகை இரண்டு லட்ச ரூபாய். (விவரம் இணைப்பில்)
6. வரிசை எண்: 42- ஒவ்வொரு மாதமும் சிறுவன் கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் உதவித் தொகையான இரண்டாயிரம் ரூபாய் (விவரம் இணைப்பில்)
7. வரிசை எண் 46- R.P.ராஜநாயஹம் பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும். எழுத்தாளர். ஒரு காலத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்பொழுது இல்லை. திருப்பூரில் வசிக்கிறார். சமீபத்தில் அவருடைய மனைவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று நிறைய கடன் ஆகியிருக்கிறது. சில நண்பர்கள் அழைத்து ராஜநாயஹத்துக்கு உதவுமாறு சொல்லியிருந்தார்கள். அதே சமயத்தில் ராஜநாயஹமும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தற்பொழுது தனியார் பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியராக இருக்கிறார். முன்பு அவர் பணியாற்றிய பள்ளி சம்பளம் தராமல் ஏமாற்றியதாலும் தற்போதைய சொற்ப வருமானத்தினாலும் மிகுந்த வருத்தத்தில் இருந்தவருக்கு இன்னொரு பிரச்சினையாக கண்களில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு உதவி கோரியிருந்தார். ராஜநாயஹம் அவர்களின் கண் அறுவை சிகிச்சைக்காக ஐ பவுண்டேஷனுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்ட்ட தொகை ரூபாய் பதினாறாயிரத்து இருநூறு. இன்று தன்னுடைய கண் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.
8. வரிசை எண் 47- காசோலை எண் 37 பி.எஸ்.ஜி மருத்துவமனையின் பெயரில்தான் வழங்கப்பட்டது. ஆனால் வங்கியின் ஸ்டேட்மெண்ட்டில் நிசப்தம் அறக்கட்டளை என்று வந்திருக்கிறது. என்ன காரணம் என்று பரோடா வங்கிக்குத்தான் வெளிச்சம். இந்த ஒரு லட்சம் ரூபாய் ஈரோடு மாவட்டம் கோபிப்பாளையம் பிரிவில் குடியிருந்து வரும் கூலித் தொழிலாளியான ரவிக்குமார் அவர்களின் மனைவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது மனைவி, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கல்லீரலில் கட்டி உருவானதன் விளைவாக காமாலை பீடித்துக் கொண்டது. இந்தச் சிக்கல்களின் காரணமாக குறைப் பிரசவத்தின் மூலமாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் தனித்தனியாக சிறப்பு அறைகளில் (ICU) கோவை பி.எஸ்.ஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே ஒரு லட்ச ரூபாய் செலவாகியிருப்பதாகவும் இன்னமும் மூன்று இலட்சம் வரை தேவை என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தொடர்பு கொண்டார்கள். கூலித் தொழிலாளிக்கு இது பெரிய செலவுதான். முழுமையான விசாரணைக்குப் பிறகு அந்த ஊர் தலைமையாசிரியர் திரு. தாமஸ் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை அனுப்பி வைக்க, அதை அவர் அந்தக் குடும்பத்திடம் சேர்ப்பித்தார். இப்பொழுது அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
9. வரிசை எண் 48- தமிழ்நாடு அறிவியல் கழகத்தில் தீவிரமாகச் செயலாற்றும் பாண்டியராஜன் மதுரையில் ஒரு பள்ளி நடத்துகிறார். சம்பக் என்பது பள்ளியின் பெயர். தனியார் பள்ளிதான் என்றாலும் பெரும்பாலும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி இது. எழுத்தாளர்கள் விழியன் போன்றவர்கள் இந்தப் பள்ளிக்கு ஏதாவதொருவிதத்தில் உதவ வேண்டும் என பரிந்துரைத்திருந்தார்கள். செல்வி. அகிலா பள்ளிக்கு ஒரு முறை நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு வந்து விவரங்களைக் கொடுத்திருந்தார். அதனடிப்படையில் பள்ளியின் கழிவறை வசதி மேம்பாட்டுக்காக பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டிருக்கிறது.
இது ஜூன் மாதத்திற்கான வரவு செலவு விவரங்கள். மே மாத வரவு செலவு விவரங்களை இணைப்பில் காணலாம்.
அடுத்த மாதத்தில் செய்யவிருக்கும் உதவிகளுக்காக விசாரணைகள் நடந்து வருகின்றன. உதவி தேவைப்படும் இடங்களுக்கு நேரடியாகச் செல்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உண்மை நிலையைக் கண்டறிவதற்கும் நிறைய நண்பர்கள் உதவிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையிலான அத்தனை காரியங்களுக்கும் இத்தகையவர்களின் உதவிகள்தான் பெரும்பலம்.
பணம் அனுப்பி வைத்த நண்பர்களுக்கும், அறக்கட்டளைக்குத் தேவையான பல்வேறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி.
வெளிப்படையான பணப்பரிமாற்றம் என்பதுதான் முக்கியமான உறுதிப்பாடு. அதில் இதுவரை ஒரு கீறல் கூட விழவில்லை என்பதில் வெகு திருப்தியாக இருக்கிறேன். இனியும் இது அப்படியேதான் தொடரும்.
இருப்பினும் எந்தவிதமான சந்தேகம் என்றாலும் vaamanikandan@gmail.com என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
1 எதிர் சப்தங்கள்:
to little remuneration by dinamani :( going great.
Post a Comment