பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த போது இணையத்தின் பக்கமே வரவில்லை. நல்லதாகப் போய்விட்டது. இரண்டு நாட்கள் கழித்து வந்த போது இருபது வருடங்களுக்கு முன்பாக நானூறு மதிப்பெண்கள் வாங்கியதற்காகக் வீதி முழுக்க சாக்லேட் கொடுத்த சரவணனின் நினைவுகள்தான் வந்து போயின. அவன் விவசாயக் கூலியின் மகன். என்னைவிட இரண்டு வயது மூத்தவன். கிராமப்புற பள்ளியில் இரண்டாம் இடம் வாங்கியிருந்தான். முதல் இடம் நானூற்று இருபது மதிப்பெண்கள். சரவணனின் அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம். மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆகிவிடுவான் என்று கணக்குப் போட்டார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இப்பொழுது ஊரில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தினக்கூலியாக இருக்கிறான்- கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களாக.
சரவணனைப் பற்றிச் சொல்வதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை.
ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக வரையிலும் கூட 400 மதிப்பெண்களைத் தாண்டினாலே கூட கெளரவமாகப் பார்த்தார்கள். 450 ஐத் தாண்டினால் கொண்டாடித் தீர்த்தார்கள். இப்பொழுதெல்லாம் அவையெல்லாம் மதிப்பெண்களே இல்லை என்றாகிவிட்டது. மதிப்பெண்களை எந்த மதிப்புமே இல்லாத வெற்று எண்களாக்கி வைத்திருக்கிறார்கள். வினாத்தாள் வெகு எளிமையானதாக இருக்கிறது. தெரிந்ததை எழுதி வைத்துவிட்டு வந்தால் போதும். விடைத்தாள் திருத்தம் அதை விட எளிமையானதாக இருக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வுத் தாள் திருத்தும் பணிக்குச் சென்ற ஆசிரியரிடம் பேசிய போது அதிர்ச்சியாக இருந்தது. இருபத்து நான்கு மதிப்பெண்களைத் தாண்டியிருந்தால் கூட முப்பத்தைந்தாக மாற்றி தேர்ச்சி வழங்கியிருக்கிறார்கள். அப்படியே தோல்வியடைந்தாலும் உடனடியாக மறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களை இவ்வளவு அதிமாகத் தேர்ச்சியடைச் செய்வதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. கர்நாடகாவில் அறுபத்தைந்து சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தாலே பெரிய காரியம். ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இருக்கின்றன. அவர்கள் கல்வித் தரத்தில் எந்தவிதத்திலும் தாழ்ந்துவிடவில்லை. ஆனால் தமிழகம் மட்டும்தான் தறிகெட்டு ஓடுகிறது.
எதை எழுதினாலும் மதிப்பெண் கிடைத்துவிடும் என்ற மனநிலை உருவாக்கம் என்பது மழுங்கிப் போன மாணவர் சமுதாய கட்டமைப்பதற்கான முதற்படி. அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை யாரையுமே தோல்வியடையச் செய்வதில்லை. ஒன்பதாம் வகுப்பில் மிக மட்டமாகப் படிக்கும் மாணவர்களை அழைத்து ஒரு எச்சரிக்கையுடன் பத்தாம் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பத்து லட்சம் பேர் எழுதும் பொதுத் தேர்வில் ஒன்பது லட்சத்துக்கும் அதிமானவர்கள் தேர்ச்சியடைகிறார்கள். அதில் சரிபாதிக்கும் மேலானவர்கள் எழுபது அல்லது எண்பது சதவீத மதிப்பெண்களைத் தாண்டுகிறார்கள். அரசுக் கல்வித் துறை ஒவ்வொரு வருடமும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர் தேர்ச்சி இரண்டு சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது சரியான இலக்குதான். ஆனால் அந்த இலக்கை அடையும் வழிமுறைதான் சரியாக இல்லை. கற்றலிலும் கற்பித்தலிலும் சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டுமே தவிர இப்படி வினாத்தாளையும், திருத்தும் முறையையும் எளிமையாக்கி மாணவர்களை தூக்கி மேல் வகுப்புகளுக்கு வீசக் கூடாது.
ஏன் இப்படி ப்ராய்லர் கோழி வளர்ப்பு மாதிரி தமிழக கல்வி முறை மாறிக் கொண்டிருக்கிறது? எதனால் சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட, வெளியுலகம் பற்றி சிந்திக்காத மோல்டிங் செய்யப்பட்ட பொம்மைக்கட்டைகளாக மாணவர்களை வடிவமைக்கிறார்கள்? இப்படி தாறுமாறான மதிப்பெண்களுடன் தேர்ச்சியடையச் செய்வதால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன? கொஞ்சம் உள்ளே இறங்கிப் பார்த்தால் பகீரென்றிருக்கிறது.
பத்தாம் வகுப்பில் நானூறு மதிப்பெண்களைத் தாண்டுபவர்களில் பெரும்பாலானவர்கள் பதினோராம் வகுப்பில் முதல் பாடப்பிரிவில் (ஃபர்ஸ்ட் க்ரூப்) சேர்கிறார்கள். இப்படிச் சேர்பவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டுகிறது. இவர்கள் அத்தனை பேரும் பனிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பிலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரப் போவதில்லை. பத்தாம் வகுப்பில் நானூறு மதிப்பெண்களைத் தாண்டியவர்களில் பெரும்பாலானவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் பெருத்த அடி வாங்குகிறார்கள். ஆனாலும் பிரச்சினையில்லை. எழுநூறு மதிப்பெண்கள் வாங்கினாலும் எங்கள் கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்று ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரியும் வலை விரித்துக் காத்திருக்கின்றன. வசதியில்லாத மாணவர்களைக் கூட ‘பேங்க் லோன் வாங்கிக்கலாம்’ என்று இழுத்துச் சென்று அமுக்குகிறார்கள். தமிழகத்தில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான பொறியியல் படிப்புக்கான இடங்கள் இருக்கின்றன. அந்தப் இடங்களை நிரப்ப வேண்டுமானால் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் பேராவது முதல் க்ரூப்பில் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியல் பாடங்களில் சேரும் சொற்பமான மாணவர்களைத் தவிர மீதமிருப்பவர்கள் பொறியியலில் சேர்வார்கள்.
கருப்பு மார்கெட் இது.
தமிழகம் முழுவதும் பல நூறு பொறியியல் கல்லூரிகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான பொறியியல் படிப்புக்கான இடங்கள் இருக்கின்றன. அதை நிரப்ப வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அப்பொழுதுதான் பேராசிரியர்களுக்கு சம்பளம் தருவதிலிருந்து பெருத்த லாபம் கொழிப்பது வரை அத்தனையும் சாத்தியம். அதற்காக முதல் க்ரூப் பாடப்பிரிவில் மாணவர்களைக் குவித்தே தீர வேண்டும். இந்த ஒரு பின்னணியோடுதான் இந்தத் தேர்ச்சி விகிதத்தையும் அள்ளி வீசப்படும் மதிப்பெண்களையும் பார்க்கிறேன். இதைத் தாண்டி வேறு எந்தக் காரணத்தையும் யோசிக்க முடியவில்லை. இதனால் கல்வித்தரம் உயர்கிறது, மாணவர்களின் அழுத்தம் குறைகிறது என முன் வைக்கப்படும் எந்தவொரு காரணமும் சரியான தரவுகளுடன் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
தன் மகன் ஏன் நானூறு மதிப்பெண்களை வாங்கியிருக்கிறான்? இந்த மதிப்பெண்ணுக்கு அவன் உண்மையிலேயே தகுதியானவன்தானா? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாத அல்லது விடை தெரிந்து கொள்ள விரும்பாத அப்பாவிப் பெற்றோர்கள் மகனும் மகளும் நானூறு மதிப்பெண்களைத் தாண்டியவுடன் புளகாங்கிதம் அடைகிறார்கள். மாணவர்களும் தங்களுக்கு ஆகச் சிறந்த திறமை இருப்பதாக மதிமயங்கிப் போகிறார்கள். ஆனால் இவையெல்லாம் தமிழகக் கல்விச் சூழலை இருண்ட பகுதியொன்றுக்கு மிக வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.
7 எதிர் சப்தங்கள்:
Very good article!!
Actually worried about where TN is heading !!
Also don't think the situation is going to change -- do you think these students think of IIT and all?
Real facts... right time to awake else never....
Our education system in the state causes worry. Politicians and private educational institutions are the culprits. Good article.
உண்மைதான் ஐயா ! ! ! இங்கே தென்காசி அருகே உள்ள ஒரு பள்ளியில் 450 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியவர்களுக்கு மட்டுமே விண்ணப்பம் விநியோகித்தார்கள் ! ! ! மதிப்பெண்களுக்கு மதிப்பே இல்லாமல் செய்துவிட்டார்கள்.....
இதுவரை கல்வித்துறையில் பின் புலமாக நின்று முடிவெடுத்துக் கொண்டு இருந்த வியாபாரத்துறை தனியார் கல்வி நிறுவனங்கள் ஏதோ ஒரு அசூரத்தனமான முடிவோடு இரண்டு ஆட்சிகளின் பக்க பலத்தோடு முன் புலப்படும்படி குதிதெழுந்துள்ளன.கடைக்கொடியில் இன்னும் மஞ்சள் பை தூக்கிக் கொண்டு ஏதோ நம்பிக்கையில் வரும் அந்த கிராமத்து கனவுகள் பாடு என்ன ஆகப் போகிறதோ ?
There is no easy way to point finger at few. Think a little. Every one is part of the problem.
பகாசுர பூதங்கள் எப்போது ஒழியப்போகின்றனவோ. இவர்களுக்கெல்லாம் கருடபுராணத்தில் என்ன தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது ?
Post a Comment