Apr 22, 2015

சுஜாதா விருதுகள் - 2015

2015 ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விருதுகளை இன்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் அறிவித்திருக்கிறார். 

சுஜாதா சிறுகதை விருது பாவண்ணன் எழுதிய பச்சைக் கிளிகள் தொகுப்புக்கும், நாவல் விருது விநாயக முருகனின் சென்னைக்கு மிக அருகில் தொகுப்புக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

போகன் சங்கரின் கவிதைத் தொகுப்பான எரிவதும் அணைவதும் ஒன்றே  சுஜாதா கவிதை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

கட்டுரை விருது சமஸ் எழுதிய யாருடைய எலிகள் நாம் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

இணைய விருதை சுரேஷ்கண்ணன் மற்றும் சந்தோஷ் நாராயணன் பெறுகிறார்கள். 

சிற்றிதழ் பிரிவில் திணை மற்றும் அடவி ஆகிய சிற்றிதழ்கள் விருதைப் பெறுகின்றன.


விருது பெறும் அனைவருமே மிகத் தீவிரமாக இயங்கி வருபவர்கள். சுரேஷ் கண்ணனின் சினிமாக் கட்டுரைகள் வெகுகாலமாக கவனம் பெற்று வந்தவை. பத்து வருடங்களுக்கும் மேலாக  இணையத்தில் இயங்கி வருபவர்களில் முக்கியமானவர் அதே சமயத்தில் கவனிக்கத் தகுந்தவர் சுரேஷ் கண்ணன். 

அதே போல சந்தோஷ் நாராயணனின் அஞ்ஞானச் சிறுகதைகளும், மினிமலிஸ ஓவியங்களும் இந்த வருடத்தில் இணையத்தின் டாப் கவன ஈர்ப்பாக இருந்தன. ஒருவரின் மூளை இவ்வளவு சுறுசுறுப்பாக  இயங்குமா என்று அவ்வப்போது அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்.


வழக்கமாக ஒருவருக்கு வழங்கப்படும் இணைய விருது இந்த முறை இரண்டு பேருக்கு அளிக்கப்படுகின்றன. இரண்டு பேரும் மிகச் சரியான தேர்வுகள்.


சிறுகதைகள் பிரிவில் பாவண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. ஆரவாரமேயில்லாமல், எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான எழுத்தாளர் பாவண்ணன். எழுத்தாளர், விமர்சகர் என்பதையெல்லாம் தாண்டி நல்ல மனிதர். அவரிடமிருந்து கற்றுக் கொள்ள அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு எவ்வளவோ இருக்கின்றன. அவரை அங்கீகரிப்பது காலத்தின் அவசியம்.


இந்த வருட புத்தகக் கண்காட்சியில் நின்று கொண்டிருந்த போது மிக வேகமாக விற்றுக் கொண்டிருந்த புத்தகங்களில் ஒன்று யாருடைய எலிகள் நாம். சமஸ் தம் எழுத்துக்கென மிகப்பெரிய வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி அந்த விற்பனை. தி இந்துவில் சமஸ் எழுதும் கட்டுரைகளின் தீவிர வாசகன் நான். ஒரு விஷயத்தை முற்றிலும் புதிதான கோணத்தில் அணுகும் சமஸின் அணுகுமுறையும் சிந்தனையும் வியப்பூட்டக் கூடியவை.


விநாயக முருகன் புதிதாக எழுத வருபவர்களின் inspiration. எழுத்தைத் தாண்டி எழுத்தாளன் கற்றுக் கொள்ள வேண்டிய திட்டமிடல், நேர்த்தி, வியூகம், தர்க்கம் உள்ளிட்டவற்றை விநாயக முருகனிடம் கவனிக்கலாம்.


போகன் சங்கர் கவிதைக்கான புதிய வெளியையும் மொழியையும் மிகுந்த உத்வேகத்துடன் முன்வைக்கிறார். எந்தவிதமான தடங்கலுமின்றி தொடர்ந்து இயங்குகிறார்.

விருது பெறும் ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் தனித்தனியாகவும் விரிவாகவும் எழுத வேண்டும் என விரும்புகிறேன்.

இந்த வருடத்தின் விருதுக்குரிய அத்தனை பேரும் ஏதாவதொருவிதத்தில் முக்கியமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். விருது பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் சில சலசலப்புகளை கவனிக்க நேர்ந்தது. இது இயல்பான ஒன்றுதான். எந்த விருது அறிவிக்கப்பட்டாலும் இப்படி யாராவது பேசத்தான் செய்வார்கள். இவர்களைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்களே இல்லையென்றால் இருக்கக் கூடும்தான். ஆனால் இவர்கள் யாரும் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை. அத்தனை பேரும் தகுதியானவர்கள்தான். 

விருது பெறும் அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். விருது வழங்கும் உயிர்மைக்கும், சுஜாதா அறக்கட்டளைக்கும், தேர்வுக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.