இன்று காலையில் ஒரு துணை ஆய்வாளரிடம் சிக்கிக் கொண்டேன். போக்குவரத்து எஸ்.ஐ. வண்டியை ஓரம் கட்டினார்கள். அருகில் செல்வதற்கு முன்பாகவே அவர் ‘ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டிய கேஸ் இருக்கிறது’ என்றார். தம்பியின் வண்டி அது. அவன் எப்பொழுதாவது அப்படி ஓட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது. ‘சரி ஃபைன் கட்டிவிடுகிறேன்’ என்றேன். அருகில் இருந்த காவலர் தனியாக அழைத்துச் சென்று ‘ஒரிஜினர் உரிமத்தைக் கொடுங்க’ என்றார். அதை எதற்கு வைத்திருக்கப் போகிறேன்? ஒரிஜினல் வீட்டில் இருக்கிறது. ‘யாரையாவது கொண்டு வரச் சொல்லுங்க’ என்றார். அடி போடுகிறார் என்று தெரிந்துவிட்டது. ஐந்நூறு ரூபாயை கையில் வைத்திருந்தேன். எவ்வளவு அபராதத் தொகையோ அதைக் கட்டிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் அதை அமுக்கப்பார்த்தார்.
‘நீ ஒரிஜினல் எடுத்துட்டு வாங்க...ஃபைன் போடுறோம்...கோர்ட்டில் கட்டிக்குங்க’ என்றார். ஒருவிதமான மிரட்டல்தான். அலுவலகம் செல்கிறான். எப்படியும் படிந்துவிடுவான் என்று நம்புகிறார். ஒரு வழியாக ‘ஐந்நூறு கொடுங்க’ என்றார். அப்படித்தானே ஆரம்பிப்பார்கள்? முடியாது என்றேன். பேரம் இருநூறில் வந்து நின்றது. பணத்தைக் கொடுத்த பிறகு ரசீது கொடுத்தார்கள். அதில் தொகை வெறும் பூச்சியம் என்றிருந்தது. ஆட்டையைப் போட்டுவிட்டார்கள். அவனவன் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறான். இந்த இருநூறும் முந்நூறும் பெரிய பிரச்சினையா? ஆனால் ஒரு நூறு ரூபாய்க்காவது ரசீது கொடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் பழைய கேஸையாவது சரி செய்திருக்கலாம். இருநூறையும் எடுத்துக் கொண்டார்கள்.
ஆனால் ஒன்று- தமிழ்நாட்டு போலீஸ்காரர்களோடு ஒப்பிடும் போது பெங்களூர் போலீஸ்காரர்கள் பன்மடங்கு உயர்வானவர்கள்.
கடந்த சனிக்கிழமை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு போலீஸ்காரனைப் பார்த்தேன். சீருடை இல்லை. வாக்கி டாக்கி வைத்திருந்தான். அவனுக்கு மரியாதை எதுவும் தேவையில்லை. அவன் இவன் என்றே எழுதலாம். அங்கே படுத்திருந்தவர்கள் சாதாரண மனிதர்கள். மணி பத்தரை இருக்கும். கொண்டு வந்த பையை தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார்கள். விடிந்தால் ஊருக்கு பேருந்து பிடித்துவிடுவார்கள். அவர்களை துரத்துகிறான். அதுவும் மிகப்பெரிய லத்தியொன்றை வைத்துக் கொண்டு ‘போடா டேய்...எந்திரிடா பாடு...ஓத்தா ஓடுடா’ இப்படியே பேசிப் பேசித் துரத்துகிறான். சிலருக்கு அடியும் விழுந்தது. முதியவர்களும், அப்பாவிகளும் அடிக்கு பயந்து ஓடுகிறார்கள். எனக்கு ஊருக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. ‘நாசமாகப் போடா பொறுக்கி’ என்று மனதில் சாபம் விட்டு வந்து பேருந்தைப் பிடித்துக் கொண்டேன்.
பெங்களூர் போலீஸில் இத்தகைய பொறுக்கித் தனங்களைப் பார்க்க முடியாது. மரியாதையாகத்தான் பேசுவார்கள். இந்தக் காவலர்களும் மரியாதையாகத்தான் பேசினார்கள். ஆனாலும் அலுவலகத்திற்கு வந்தவுடன் எரிச்சலில் பின்வரும் மின்னஞ்சலை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையாளருக்கு அனுப்பிவிட்டேன்.
Respected Sir,
Today(24-Feb-2015) morning I came through ASC centre signal in my two wheeler where I was stopped by Traffic police(I couldn't recognize his name) but he was along with Sub Inspector Mr. ***. They have told me that I had some old offences like 'driving without helmet'.I never ride my vehicle in the city without Helmet. That is fine. I was ready to pay the penalty but they were demanding Rs.500 to pay as bribe. as an alternate option they have asked me to surrender my vehicle and I supposed to pay the fine through court. It was kind of blackmailing. I was reluctant to do so and finally they asked me to pay Rs.200/- I have no other option as it was my rush hour to office and I gave 200 rupees and they provided me a receipt. It was a surprise that amount mentioned in the receipt was '0'.
CRR Number: E/17/1092
Violation Type: FTVR Notice
Total Amount: 0
If I am wrong I don't mind paying my penalty. But I do not want to bribe anyone.
I sincerely request you to verify the above matter and kindly take a right action on this.
Thank you.
Regards,
Manikandan
கண்டு கொள்வார்கள் என்று தோன்றவில்லை. ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் பதில் வந்தது. ‘உங்களுடைய புகார் அல்சூர் ஆய்வாளருக்கு அனுப்பப்படுகிறது’ என்று அனுப்பியிருந்தார்கள். அடுத்த முப்பத்தைந்தாவது நிமிடத்தில் அதே துணை ஆய்வாளர் ஃபோனில் அழைத்தார். குரலில் அவ்வளவு பதற்றம். எனக்கே சங்கடமாகப் போய்விட்டது. ‘தெரியாமல் நடந்துவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார். இதை எதிர்பார்க்கவில்லை. அவர் துண்டித்த அடுத்த மூன்றாவது நிமிடத்தில் அந்தக் காவலர் அழைத்து ‘மதர் ப்ராமிஸ்..உங்கள் பணத்தை நான் வைத்துக் கொள்ளவில்லை’ என்றார். பத்து முறையாவது மன்னிப்புக் கோரியிருப்பார். இப்பொழுது எரிச்சல் எல்லாம் போய் அவர்கள் மீது பரிதாபம் வந்துவிட்டது.
ஒரு அரசு அலுவலரின் சிரமங்கள் எனக்குத் தெரியும். அம்மாவும் அப்பாவும் அரசு ஊழியர்களாக இருந்தவர்கள். இப்படியான புகார்களினால் எவ்வளவு மன உளைச்சல் அடைவார்கள் என்று தெரியும். அந்தக் காவலர்களை சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என நான் விரும்பவில்லை. அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் என்றிருக்கும் அல்லவா? இந்த இருநூறு ரூபாய்க்காக அவர்களை மாட்டிவிடுவது ஒரு வகையில் பாவம்தான். ஆனால் புகார் அனுப்பியாகிவிட்டது. என்ன செய்ய முடியும்? உடனடியாக அதே மின்னஞ்சலுக்கு பின்வருமாறு பதில் அனுப்பியிருக்கிறேன் -
Respected Sir,
Thank you very much for your quick action on this.
Just now received a call from SI Mr. Shetty and he mentioned that this was purely a mistake. Whatever may be the reason, I am really satisfied with his answer and the way of approach. as a common citizen, I am happy to see this kind of revert back from police department.
I would like to leave this issue here.
As an end note, I really appreciate Bangalore Traffic Police's tremendous efforts and sincerity.
Thank you once again.
Regards,
Manikandan
அந்தக் காவலர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டார்கள் என நம்புகிறேன். கடந்த இரண்டு மணி நேரங்களாக அந்தக் காவலரின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பணி இடைநீக்கம் வரைக்கும் போகலாம் என்றார். என் வேலைக்கு ஏதாவது பிரச்சினை என்றால் எவ்வளவு பதறுவேன்? அவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்? எதற்காக அவ்வளவு விரைவாக புகார் அனுப்பினேன் என்று பிடிபடவேயில்லை. வேலை செய்வதற்கு மனம் வரவில்லை. பாவமாக இருக்கிறது. பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டேன். அவர்களும் மனிதர்கள்தானே!