கவிதை என்றாலே பதறியடித்து ஓடுபவராக இருந்தாலும் கூட இந்த இரண்டு கவிதைகளை வாசித்துப் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்துவிடும். பிடிக்கவில்லையென்றால் 9663303156 என்ற எண்ணில் அழைத்துத் திட்டுங்கள். வாங்கிக் கொள்கிறேன்.
இவை முகுந்த் நாகராஜனின் கவிதைகள்.
தமிழில் கவிதைகளை மிக மிக இலகுவாக்கியவர் முகுந்த் நாகராஜன். அவரது கவிதைகளை புரிந்து கொள்ள எந்தச் சிரமமும் இருக்காது - நேரடியான கவிதைகள். தனது கவிதைகளை கிட்டத்தட்ட குழந்தைகளின் மனநிலையிலிருந்து எழுதுகிறார் அல்லது பெரியவர்களின் பார்வையில் குழந்தைகளின் உலகத்தை கவனித்து துல்லியமாக எழுதுகிறார். இவரது ‘அகி கவிதைகள்’ என்ற தொகுப்பு 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த போது தாறுமாறாக சிலாகித்தார்கள். ‘இதுதான்யா கவிதை’ ‘கவிதையில் நிகழ்ந்த புதுப்பாய்ச்சல்’ என்றெல்லாம் எழுதப்பட்ட வாக்கியங்கள் மிரளச் செய்தன. பிரம்மராஜன், தேவதச்சன், தேவதேவன் போன்றவர்களின் கவிதைகள் மட்டுமே கவிதைகள் என்று நம்பியிருந்த என்னைப் போன்ற பொடியன்களுக்கு முகுந்தின் கவிதைகள் உண்மையிலேயே கவிதைகள்தானா என்ற குழப்பம் உண்டானது.
இந்த இடத்தில் கவிதைக்கும் கவிதையைப் போல எழுதப்பட்ட போலிகளுக்குமிடையில் இருக்கும் வித்தியாசத்தை குறிப்பிட்டுவிட வேண்டும்.
ரொம்ப சிம்பிள்.
கவிதையில் எப்படியாவது பொய்யை விரட்டியடித்துவிட்டு உண்மை இடம்பெற்றுவிடும். ‘அந்த நிலாவை உனக்கு பிடித்துத் தரணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு..ஆனா அது எப்படி என்னால முடியும்?’ என்று உண்மையை ஒத்துக் கொண்டால் அது கவிதை. அதுவே ‘ஒரு ராக்கெட் செஞ்சு உனக்காக அந்த நிலாவுக்கு போயே தீருவேன்’ என்று உடான்ஸ் விட்டால் அது கவிதையைப் போல எழுதப்பட்ட போலி. கவிதையின் சிறப்பம்சமே அதன் உண்மைத்தன்மைதான். ஆனால் நம்மவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ‘கவிதைக்கு பொய்யழகு’ என்று யாரோ அடித்துவிட்டு போனதை நம்பிக் கொண்டு இல்லாததும் பொல்லாததுமாக எழுதிக் குவித்து கவிதை என்று நம்ப வைத்துவிட்டார்கள்.
ஒரு காட்சி அல்லது உரையாடல் அல்லது நிகழ்வை எந்தவிதமான ஜிகினா வேலையுமில்லாமல் முகுந்த கவிதையாக்கினார். அதனாலேயே அவை கவிதைகளாக மின்னின. அவரது மொழியில் இருந்த நேரடியான தன்மையும் திருகல் இல்லாத நடையும் அவரை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்தன. Reading Pleasure என்பதை இவரது கவிதைகளில் முழுமையாக உணர முடியும். முகுந்த்தின் கவிதைகளை வெளிப்படையாக யாரும் எதிர்மறை விமர்சனம் செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் வாய்ப்பேச்சில் ‘அதெல்லாம் கவிதையே இல்லை’ என்று சில பெரிய கவிஞர்கள் சொன்னார்கள்.
இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அந்த பெரிய கவிஞர்கள் சொன்னதை நிராகரித்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. இவ்வளவு எளிமையாகவும் கவிதை எழுத முடியும் என்று கவிதையின் போக்கில் ஒரு சலனத்தை உருவாக்கியவர் முகுந்த நாகராஜன். அடுத்தடுத்து அவரது ஒன்றிரண்டு தொகுப்புகள் வெளி வந்தன. ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது, க்ருஷ்ணன் நிழல் ஆகியன எனக்குத் தெரிந்த தொகுப்புகள். இவை தவிர வேறு ஏதேனும் தொகுப்புகள் வந்திருக்கின்றனவா என்று தெரியவில்லை. இப்பொழுது அவர் எங்கிருக்கிறார் என்று கூட தகவல் இல்லை. அவர் தொடர்ந்து எழுதாதது தமிழ் கவிதைக்கு ஒருவிதத்தில் இழப்புதான். பெரிய இழப்பு.
(1)
கிருஷ்ணராஜபுரத்தில் என்ன ஃபேமஸ்?
‘இது என்ன ஸ்டேஷன்’ என்று கேட்டார்,
இரவுப் பயணம் முடிவை நெருங்கிய அதிகாலையில்.
‘கிருஷ்ணராஜபுரம்’ என்றேன் வெளியே பார்த்து.
‘இங்கே என்ன ஃபேமஸ்’ என்று கேட்டார் சகஜமாக.
திடுக்கிட்டேன் நான்.
இன்னொரு முறை கேட்டார்.
என்னவாக இருக்கும்?
மலைக் கோயிலா, அருவியா,
மத்திய அமைச்சரா,
இனிப்புப் பலகாரமா,
நாடி ஜோசியமா...
என்னவாக இருக்கும்?
இறங்கி உள்ளே போய்,
ஊர்க்காரன் எவனையாவது பிடித்துக் கேட்கலாம்.
ஆனால், ஒன்றுமே ஃபேமஸ் இல்லாவிட்டால்
அவமானத்தில் அவன் மனம் உடைந்துவிடக் கூடும்.
இல்லாவிட்டால், சனிக்கிழமைதோறும் கூடும்
சாதாரணச் சந்தையைப் பற்றி உற்சாகமாக
ஒரு மணி நேரம் பேசவும் கூடும்.
ரயிலோ இரண்டு நிமிஷம்தான் நிற்கும்.
அட, வெட்கம் கெட்ட கிருஷ்ணராஜபுரமே,
உனக்கெல்லாம் ஒரு ஸ்டேஷன் ஒரு கேடா?
(2)
உனக்குத் தெரிந்தால்
நீ எழுதிவிட்டுத் திருப்பித் தந்த பேனாவையும்
ஃபோன் செய்ய என்று பொய் சொல்லி
உன்னிடமிருந்து நான் வாங்கிய
ஒரு ரூபாய் நாணயத்தையும்
இன்னும் வைத்திருக்கிறேன் பத்திரமாய்
அவ்வப்போது
தொட்டுப் பார்த்துக் கொண்டும்
முத்தம் கொடுத்துக் கொண்டும்
இதெல்லாம்
கல்யாணம் ஆகிக் குழந்தைகள் பெற்று
அம்மாவாகிப் போன உனக்குத் தெரிந்தால்
சந்தோஷப்படுவாய்தான்
ஆனால்..