Aug 18, 2014

ஒரு ஏக்கர் நிலம் கிடைக்குமா?

ஊர்ப்பக்கத்தில் விவசாய நிலம் ஒரு ஏக்கர் வாங்க வேண்டுமானால் பதினைந்து லட்ச ரூபாயாவது தேவைப்படுகிறது. பாசனத்திற்கு ஓரளவு தண்ணீர் இருந்து சுமாரான சாலை வசதியோடு இருந்தால் இந்த விலை. அதுவே நல்ல சாலைகள், நல்ல மண் என்றால் முப்பது லட்சத்தைக் கூடத் தொடுகிறது. தண்ணீர் இல்லாத வறக்காடு என்றாலும் கூட ஏழு அல்லது எட்டு லட்சத்துக்கு விலை சொல்கிறார்களாம். அதற்கும் குறைவாக வாய்ப்பே இல்லை. தண்ணீர் இல்லாத காடுகளை வாங்கி என்ன செய்வது? ஜேசிபியை விட்டு நிரவி சுற்றிலும் வண்ணக் கொடிகளைக் கட்டி ‘மிகச் குறைந்த விலையில் சைட் விற்பனைக்கு’என்ற பேனர் வைக்கலாம். ஆனால் வறக்காடுகளில் ஆழ்துளைக் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யலாம் என்று நினைத்தால் அதை விட பைத்தியகாரத்தனம் வேறு இருக்க முடியாது. ஆயிரம் அடிகளைத் தொட்டால் கூட ‘வெறும் காத்துதான் வருது’ என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் தோண்டினால் பெட்ரோல் கிடைத்தால் கூட கிடைக்கலாம் ஆனால் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை.

சத்தியமங்கலத்தைச் சுற்றிய பகுதிகளில் ஆழ்துளைக் குழாய் தோண்டினால் தண்ணீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அங்குதான் பவானி ஆறு பாய்கிறது. இந்த ஆறு காலங்காலமாக நிலத்துக்கடியில் இறங்கிய நீரை நாம் மோட்டார் வைத்து உறிஞ்சலாம்தான். ஆனால் அதற்கும் பெரிய அடி கொடுத்திருக்கிறார்கள், பெருமுதலைகள். அந்த ஊரைச் சுற்றிலும் பெரிய பெரிய காகித ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பாக தோட்டங்காடுகள் இவ்வளவு விலையில் விற்கவில்லை அல்லவா? அதனால் இந்த முதலைகள் ஏக்கர் கணக்கில் வளைத்துப் போட்டுவிட்டார்கள். அந்த நிலங்களில் காகித ஆலை செயல்படத் தொடங்கியதும் ஆலையைச் சுற்றிலும் இருக்கும் தங்கள் இடத்தில் ஆயிரம் அடிகளுக்கு போர்வெல்லை இறக்கியிருக்கிறார்கள். தண்ணீர் எடுக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். காகித ஆலைக் கழிவு நீரை நிலத்துக்குள் இறக்குவதற்காகத்தான் இந்தக் குழிகள்.

ஆலையின் கழிவு மொத்தத்தையும் இந்த ஆழ்துளைக் குழாய்களில் நேரடியாக இறக்கிவிடுகிறார்கள். பூமாதேவியின் ரத்தத்தில் கசப்பு ஏற்றுகிறார்கள். ஒன்று அல்லது இரண்டு ஆலை என்றால் பரவாயில்லை- சுற்றுப்புறத்தில் இருக்கும் கிட்டத்தட்ட அத்தனை ஆலைகளுமே இதைத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான லிட்டர் அசுத்த நீர் புவிக்குள் இறங்கிக் கொண்டேயிருக்கிறது. மாவட்ட நிர்வாகத்திலிருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வரைக்கும் நோட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள் போலிருக்கிறது. அள்ளி வீசாமல் இவ்வளவு பெரிய அக்கிரமத்தை நிகழ்த்த முடியுமா? bones பொறுக்குபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். 

சுற்றியிருக்கும் தோட்டங்காட்டுக்காரர்கள் ஆற்று நீரில் பாசனம் செய்தால் பிரச்சினையில்லை. ஒருவேளை தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆழ்துளை தோண்டினால் அவ்வளவுதான். காகிதப்புண்ணியவான்கள் இறக்கிய கசப்பு நீர்தான் போர்வெல்லில் வருகிறது. குடிக்க முடியாவிட்டாலும் கூடத் தொலைகிறது- விவசாயத்திற்கும் ஆவதில்லை. கொடுமை.

இவர்கள் துளையிட்டு பூமிக்குள் ஊற்றும் நச்சு நீர் அதே இடத்தில் நிற்கவா போகிறது? புவிக்கடியில் இருக்கும் பாறையிடுக்குகளின் வழியாக பல கிலோமீட்டர்கள் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. புவிக்கடியில் எந்த இடத்தில் நீர் இருந்தாலும் அதோடு கலந்து நாசமாக்குகிறது. சுற்றுவட்டாரத்தில் எந்த இடத்தில் துளையிட்டு தண்ணீரை வெளியே எடுத்தாலும் இந்தக் கசப்புதான் நாக்கில் ஊறுகிறது. அக்கிரமம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஓ.ஆறுமுகசாமி என்றொரு வள்ளல் இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் பல கோடி ரூபாய் கல்வித்தொகையை அள்ளி வீசுகிறார். அவருடைய தொழில் என்னவென்று விசாரித்தால் ஆற்றில் மணல் எடுக்கிறார். சத்தியமங்கலத்துக்கு அருகில் சாரதா பேப்பர் மில் என்றொரு மிகப்பெரிய ஆலையை வைத்திருக்கிறார். அவருடைய ஆலையிலும் கூட நிலத்துக்குள்தான் கழிவு நீரை இறக்குவதாகச் சொல்கிறார்கள். இது உண்மையான குற்றச்சாட்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது. சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். பேப்பர் மில், மணல் எடுப்பது தவிர வேறு என்னென்ன தொழில்களை நடத்துகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டு தொழில்களும் போதாதா- பூமியைச் சீரழிக்க? பூமியை நாசக்கேடாக்கி அதில் பல நூறு கோடிகளைச் சம்பாதித்து மாணவர்களுக்கு கோடிகளை அள்ளி வீசுகிறார். அவரிடம் கைநீட்டி பணம் வாங்கிவிட்டு எப்படி பேசத் தோன்றும்? கொங்குநாட்டில் அவரைப் பற்றி கேட்டுப் பாருங்கள். ‘அவர் எப்படியோ சம்பாதிச்சுட்டு போகட்டும்....அள்ளிக்கொடுக்க மனசு வேணுமில்ல’ என்கிறார்கள். அத்தனை செல்வாக்கு அவருக்கு. அவர் கொடுப்பதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் சற்றேனும் பூமி பற்றிய அக்கறை இருக்க வேண்டுமல்லவா? காலகாலத்துக்கும் இந்த நிலத்தை மலடாக்கிவிட்டு இந்தத் தலைமுறை மாணவர்களுக்கு பணம் கொடுத்து என்ன பிரையோஜனம்? 

சரி விடுங்கள். பெரிய இடத்து விவகாரம்.

நிலத்தின் விலை இவ்வளவு அதிகமாக என்பதால் விவசாயம் கொடிகட்டுகிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பெரும்பாலான இடங்களில் விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது. வாழைக்காயில் எடை வருவதில்லை. வெங்காயம் பாதியிலேயே கருகிப் போகிறது. பூச்செடி வைத்தால் அதிலும் பெரிய விளைச்சல் இல்லை. கத்தரிக்காயில் நோய் விழுகிறது. கிட்டத்தட்ட எல்லா பயிர்களுமே இப்படித்தான். ஜீவனத்தை நடத்த வேண்டும் என்பதற்காக இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்களும் தொழிலதிபர்களும் நிலத்துக்காக பல லட்சம் கொடுப்பதாக ஆசை காட்டினால் ‘இந்த வேளாணமையைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதைவிட நிலத்தைக் கொடுத்துவிட்டு வேறு ஏதேனும் செய்து கொள்ளலாம்’ என்று நினைப்பவர்கள்தான் அதிகம். படுவேகமாக விவசாயத்தைக் கொன்று வருகிறோம்.

எனக்குத் தெரிந்து எந்த விவசாயியும் தனது அடுத்த தலைமுறை இந்தத் தொழிலுக்கு வர வேண்டும் என்று நினைப்பதில்லை. அது எவ்வளவு பெரிய மிராஸ்தாராக இருந்தாலும் சரி- வருங்காலத்தில் விவசாயம் செய்வது சுலபமான காரியமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். நீர் குறைந்து கொண்டே வருகிறது. சூழல் நாசக்கேடாகிக் கொண்டிருக்கிறது. விளைச்சல் ஒவ்வொரு வருடமும் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது இதுவரை அறிமுகமேயில்லாத புழுக்களும், நோயும் வந்து பயிர்களைத் தாக்குகின்றன. அப்படியே கொஞ்சநஞ்சம் விளைந்தாலும் விலை கிடைப்பதில்லை. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் விவசாயிக்கு அடிதான். எப்படி இந்தத் தொழில் பிழைக்கும்?

உழவுக்கு வந்தனை செய்யாவிட்டாலும் தொலைகிறது- நம்மவர்கள் வளர்ச்சி, வருமானம், தொழில்மயம் என்ற வெவ்வேறு பெயர்களில் அடித்துத் துவைக்கிறார்கள். நிலத்தை மிக வேகமாக மலடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாக விவசாயம் செழித்த நிலங்கள் இப்பொழுது தரிசாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த பதினைந்து வருடங்களில் இந்த மலடாக்கலின் வேகம் பன்மடங்காக இருக்கிறது. அரசாங்கமும் ஆட்சியாளர்களும் இதைப்பற்றியெல்லாம் எவ்வளவு தூரம் கவனத்தில் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. 

மோடியின் அரசு செல்வி.உமாபாரதியை நீர்வளத்துறை அமைச்சராக நியமித்தவுடன் சந்தோஷமாக இருந்தது. நீர்வளத்துக்கென்று தனி அமைச்சர். ஆனால் அந்த அம்மையார் காசியைத் தாண்டி கீழே வர மாட்டார் போலிருக்கிறது. கங்கையும் காசியும் அவசியம்தான். ஆனால் அவற்றைத் தவிர்த்து கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீருக்காக ஏங்கிக் கிடக்கின்றன. லட்சக்கணக்கான ஏரிகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. பல லட்சம் விவசாயிகள் வேறு தொழிலைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். நிலத்தடி நீர் சுத்தமாகக் காலியாகிக் கொண்டிருக்கிறது. காய்ந்து கிடக்கும் தரிசு நிலங்களுக்கு ஏதாவது திட்டத்தை அறிவிப்பார் என்றால் காணாமல் போய்விட்ட சரஸ்வதி நதியைக் கண்டுபிடிப்போம் என அறிவித்திருக்கிறார். கண்டுபிடிக்கட்டும். அப்படிக் கண்டுபிடித்த பிறகாவது அந்த சரஸ்வதி தேவி எங்களை ஆள்பவர்களுக்கு புத்தியைக் கொடுக்கட்டும்.

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா

11 எதிர் சப்தங்கள்:

வவ்வால் said...

நொய்யல் ஆற்றிலும் ,பவானி ஆற்றிலும் ஏற்கனவே சாயப்பட்டறை, மற்றும் காகித ஆலைக்கழிவு நீர் தான் ஓடுது, கண்ணுக்கு தெரிஞ்சே கழிவை விடுறாங்க அதையே ஒன்னும் செய்ய முடியலை, இதுல ரகசியமா போர் போட்டு இறக்கினாஎன்ன செய்வாங்க அவ்வ்!

இந்த ஆலைகள் மீதெல்லாம் நடவடிக்கையே எடுக்க முடியாது, தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு போகுது, அன்னிய செலவாணி போயிடும்னு சொல்லி தப்பிச்சுடுவாங்க :-))

# மாசு உண்டாக்கும் தொழில்களை நம்ம தேவைக்கு செஞ்சா இந்தளவு கழிவு நீர் உருவாகாது, வெளிநாட்டுக்காரனுக்கு விக்க செய்வதால் அதிக கழிவுகளை நம்ம நாடு சுமக்க வேண்டியதாக உள்ளது.

மாசு உண்டாக்கும் தொழில்களை தம் நாட்டில் நடத்தினால் வருங்காலத்தில் சுற்று சூழல் பாதிக்கப்படும் என பணக்கார நாடுகள் எல்லாம் நம்மக்கிட்டே டாலரை எறிந்து வேலையை முடிச்சிக்கிறாங்க, இந்தியாவுக்கு மென்பொருள் வேலைகளை கொடுக்க காரணமும் அதான் , மென்ப்பொருள் துறை மிக அதிக மின்சாரம் பயன்ப்படுத்தும் ஒன்று, மின்சாரத்துக்கு நிலக்கரி எரிக்கணும் ,அதானால் காற்றூ மாசடையும் , எனவே மிக எளிதாக அவுட் சோர்சிங்க் செய்து "அவர்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள்!

Raj said...

Fact....!

”தளிர் சுரேஷ்” said...

விவசாயத்தை விற்றுவிட்டு, பூமியை மாசுபடுத்திவிட்டு எத்தனை காலம் வாழப்போகிறோமோ தெரியவில்லை!

என்.ராமதுரை / N.Ramadurai said...

அமெரிக்காவில் shale gas எடுப்பதாகக் கூறி அதற்குப் பயன்படுத்திய பிறகு மிஞ்சும் கழிவு நீரை பல ஆயிரம் அடி ஆழத்துக்குள் செலுத்தியதன் விளைவாகப் பல இடங்களில் நில நடுக்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. ஆக்லஹாமா நகரம் இதற்கு ஓர் உதாரணம். இங்கு அப்படி எதுவும் ஏற்படாமல் இருந்தால் நல்லது

சேக்காளி said...

//ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா//
சமஸ்கிருத வாரம் பாதிச்ச மாதிரி இருக்கு.

Unknown said...

நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே போட்டி போட்டுகொண்டு தங்களது நிலங்களை விற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு ஏக்கர் நிலம் வாங்கி நீங்க என்ன விவசாயம் பண்ணப் போறீங்க.....?

சதுக்க பூதம் said...

காவிரி டெல்டா பகுதியில் ஒரு ஏக்கர் 3 முதல் 5 லட்சம் வரை கிடைக்கும். ஆனால் அது களி மண். நெல், கரும்பு, பயிறு,எள் போன்ற சில பயிரை மட்டுமே விளைவிக்கலாம்.

Ram said...

வவ்வால், எதை வைத்து மென்பொருள் துறை அதிக மின்சாரம் பயன்படுத்தும் துறை என்கிறீர்கள்? இது உங்கள் எண்ணம்/யூகம் என நினைக்கிறேன்.

மின்சாரம்/எரிசக்தி குறைந்த விலையிலும், பற்றாக்குறையில்லாமலும் கிடைக்குமிடம் அமெரிக்கா. என் இந்த மாத மின்சார ரசீதில் கணக்கிட்ட விலை: ஒரு யூனிட்: ரூபாய் 5.45 ($0.09083 per KWH). பெட்ரோலின் விலை நம்மூரை விட குறைவு (என் வீடு இருக்கும் பகுதியில்: லிட்டர்: 61 ரூபாய் ($3.90 per gallon)). மிகையான மின்சாரப் பயனுக்காகத்தான் அவுட் சோர்சிங்க் செய்து "அவர்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள்" என்பது தவறான கருத்து. ஊருக்கே தெரியும் அபரீதமான மனிதவளம் தான் இத்துறை நம்மூரில் செழிக்க அடிப்படைக்காரணம் என்று.

உங்கள் எண்ணத்தில் மென்பொருள் துறையை விட குறைவாய் மின்சாரம் பயன்படுத்தும் துறைகளைக் கூறுங்கள்.

வவ்வால் said...

ஹி...ஹி மற்றத்துறைலாம் மாசு உண்டாக்குதுனு சொன்னால் , ஆமாம் போடுவீங்க, மென்ப்பொருள் துறையும் மாசு உண்டாக்குது என சொன்னால் நம்ப முடியாதா அவ்வ்!

From chip to software கணினித்துறை முழுவதும் மின்சாரத்தினை தான் சார்ந்துள்ளது, சராசரியாக மற்ற துறைகளுக்கு குறையாமல் மின் உபயோகம் கொண்டதே கணீனி துறை.

90 களில் கியோட்டோ புரோட்டோகாலின் போது ,வளரும் நாடுகளின் ஆற்றல் நுகர்வை குறைக்க சொல்லி அமெரிக்கா சொன்னது , ஆனால் அமெரிக்கா தான் மிக அதிக ஆற்றல் நுகர்வு செய்யும் நாடு, எனவே அதனையும் குறைக்க சொன்னார்கள், பெருமளவு ஆற்றல் நுகர்வை குறைக்கவில்லை என்றாலும் , மேலும் ஆற்றல் நுகர்வின் அளவை அதிகரிக்காமல் இருக்க முடிவெடுத்து செயல்ப்பட்டார்கள், அதன் விளைவு தான் "ஆற்றல் நுகர்வு தேவையுள்ள மற்றும் சுற்று சூழல் மாசடையும் வேலைகளை எல்லாம் அவுட் சோர்சிங் செய்வது ஆகும்.

அமெரிக்காவில் மின்சாரம் ,பெட்ரோல் விலை கம்மியா இருக்கலாம், ஆனால் அவை எல்லாவற்றுக்கும் கிராண்ட்ஸ் மற்றும் மாநியம் கொடுக்கிறது, மேலும் முழு உற்பத்தியும் அமெரிக்காவிலே செய்தால் இன்னும் அதிக மின்சாரம் ,எரிப்பொருள் செலவாகும், அதற்கும் மாநியம் கொடுக்க பணம் இருக்கலாம் , ஆனால் எரிப்பொருள் (நிலக்கரி,பெட்ரோல் என) அதிகம் செலவாகும், அதனால் பசுமை இல்ல வாயு அதிகரிக்கும், இன்றைய தேதியில் அமெரிக்கா மட்டுமே உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு பசுமை இல்லவாயுவை வெளியிடுகிறது, எனவே மேலும் அமெரிக்காவினை மாசடையாமல் செய்யவே அவுட் சோர்சிங் செய்கிறார்கள்.

உலக அளவில் எரிக்கப்படும் நிலக்கரியில் சுமார் 20 % ஐ அமெரிக்கா மட்டுமே எரித்து வருகிறது,( சீனாவும் அதே அளவு) அதான் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்குது, இதில் அனைத்து உற்பத்தியும் உள்நாட்டில் செய்தால் நிலக்கரி எரிக்கும் அளவு அதிகமாகும் , எனவே "மின்சாரத்தினை" மட்டும் நம்பி நடக்கும் தொழில்களை அவுட் செய்வதில் அதிக முனைப்புக்காட்டுகிறது அமெரிக்கா.

energy-intensive industry இல் தேசிய அளவில் முக்கியத்துவம் குறைவான மற்றும் மிக எளிதாக அவுட் சோர்சிங்க் செய்யக்கூடியது மென்பொருள் துறை ஆகும் , ஏன் மனித வளம் அதிகம் இருக்கு என இந்தியாவில் இன்டெல் சிப் தயாரிக்கலாமே? ஏன் செய்யவில்லை என சிந்தித்தால் விடை கிடைக்கும்.


# //உங்கள் எண்ணத்தில் மென்பொருள் துறையை விட குறைவாய் மின்சாரம் பயன்படுத்தும் துறைகளைக் கூறுங்கள்.//

விவசாயம், விவசாயிகளுக்கு குளிரூட்டப்பட்ட அறைத்தேவையில்லை, மென்ப்பொருள் நிறுவனங்கள் மிக அதிகமாக ஃப்ரியான் என்ற CFC வாயுவினை வெளியேற்றுகின்றன அதை எல்லாம் ஒப்பிட்டால் காகித ஆலை மாசு ,ஒரு தூசு :-))

nerkuppai thumbi said...

நிலத்தடி நீர் மாசுபடுவது ஒரு பெரிய பிரச்னை தான். மாசுக் கட்டுப்பாட்டு கழகம் அமைத்து பணியாளரை அமர்த்தத்தான் அரசால் முடியும். சட்டங்களையும், விதிமுறைகளையும் தீட்ட முடியும். அங்கு பணி செய்யும் அலுவலர்கள் வாங்கிய சம்பளத்திற்கு கடமை ஆற்றாமல் இருந்தால் (நீங்கள் சொன்னதுபோல் எலும்புக்காக வாலை ஆட்டினால்) எந்த அரசும் ஒன்றும் செய்து விட முடியாது. நம் நாட்டின் சாபக்கேடு நம் அரசு அலுவலர்களின் கையூட்டு கலாச்சாரம் தான். இந்தியன் படத்தில் மனோரமா ஓரிடத்தில் சாபம் இடுவார் பாருங்கள், அந்த காணொளியை ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தினம் தினம் போட்டுக் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.

நிலங்கள் வாரிசுப் பிரிவினையில் துண்டாடப்படுவதால் சிறு சிறு நிலத் துண்டுகள் ஆகிவிட்டன. Scale -up அல்லது Scale Economy க்கு வழி இல்லை. கூட்டுறவுப் பண்ணைகள் வரும் என்று நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் (1955-1970) ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் கூட்டுறவுக் கழகங்கள் அரசியல் கலந்ததாலோ வேறு காரணங்களாலோ செயல் பட வில்லை. புதியதாக வேளாண்மையைக் கையில் எடுக்க ஒருவரும் முன்வரமாட்டார். //நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே போட்டி போட்டுகொண்டு தங்களது நிலங்களை விற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு ஏக்கர் நிலம் வாங்கி நீங்க என்ன விவசாயம் பண்ணப் போறீங்க.....?//

Corporates should come forward to take lands on long-term lease; aggregate small pieces into one large farm and introduce new methods o f cultivation. நிலத்தை விற்ற/குத்தகைக்கு விட்ட விவசாயிகளே பணியாளர்களாக வேலையும் செய்யலாம்.




Unknown said...

T.N. AGRI TODAY;speak k.ramasamy vice t.n. agri unversity kovai T.N. popluation60% agri total income 6% onlyfarmers(t.n. total income)##farmers work force break up age wise 50age above60% ;;25 y to 50y ;28%; below 25 age 12% only. tamil nadu youth 18 to 23 age group 80lakhs. only 5 lacks people in agri. rest 75 lacks in various job edu, modern world entred you tube watch www.youtube/user/ddchennai/agri