கேசவனும், ப்ரணீதாவும் கல்லூரியில் சேர்ந்த பிறகும் வெகு நாட்களுக்கு பேசிக் கொள்ளவே இல்லை. ராஜேஸ்வரி மேடம் கேசவனைக் கலாய்க்கும் போது மட்டும் ப்ரணீதாவை பார்ப்பான். மற்ற பெண்களைப் போலவே அவளும் சிரித்துக் கொண்டிருப்பாள். அவளைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்து கொள்வான்.
ஓரிரண்டு மாதங்களுக்குப் பிறகு ராகிங்கின் போதுதான் கேசவன் ப்ரணீதாவுடன் முதன் முதலாக பேசினான். அதுவும் அவனாகப் பேசவில்லை. பேச வைத்தார்கள். சீனியர் பாலகுமாரனும் இன்னும் சிலரும் கேசவனை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தார்கள். காலேஜில் ராகிங் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் முரட்டுத்தனமாக எதுவும் செய்தால் பிரச்சினை ஆகிவிடும். சிக்கினால் டிஸ்மிஸ்தான் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தார்கள் என்பதால் சீனியர்களும் கூட பயந்து கொண்டுதான் ராகிங் செய்தார்கள்.
கேசவனை அழைத்து ‘அதோ தூரமா போறா இல்ல...பச்சை சுடிதார் அவகிட்ட போய் மணி என்னன்னு கேட்டுட்டு வா’ என்றார்கள். அது ப்ரணீதாதான். விடுதிக்குச் சென்று கொண்டிருந்தாள்.
‘எங்க க்ளாஸ்தாண்ணா...ஆனா பேசினதில்லையே’ என்று கேசவன் பதறினான்.
‘இதுதாண்டா சான்ஸ்...பேசி அப்படியே பிக்கப் ஆகிக்கலாம்...போ’ என்றான். கேசவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அவளை நோக்கி வேகமாக ஓடிவிட்டான். ஆனால் பேசுவதற்கு தயக்கமாக இருந்தது.
‘ஏங்க...’என்றான். அவளுக்கு காது கேட்டிருக்கவில்லை. ஆனால் யாரோ வந்திருப்பதன் அசைவை வைத்துத் திரும்பினாள்.
‘ஏங்க...’என்றான். அவளுக்கு காது கேட்டிருக்கவில்லை. ஆனால் யாரோ வந்திருப்பதன் அசைவை வைத்துத் திரும்பினாள்.
‘டைம் என்னங்க?’ என்றான்.
ப்ரணீதா தயங்கக் கூடியவள் இல்லை. ‘அதைக் கேட்வா இவ்வளவு தூரம் ஓடி வந்தீங்க பாஸ்?’ என்றாள்.
‘இல்லைங்க ராகிங்...சீனியர் கேட்க சொன்னாங்க’
‘ஓ....உங்க பேரு என்ன?’ தெரியாதவள் போலக் கேட்டாள்.
‘கேசவன்’
‘உங்க கேர்ள் ப்ரெண்ட் பேர் என்ன?’அவள் கேட்டவுடன் அருகில் இருந்தவர்கள் சிரித்தார்கள். சிரித்தார்கள் என்றால் சினிமாவைப் போல கெக்கபிக்கே என்றில்லை. ப்ரணீதாதான் வாயாடி. மற்றவர்கள் சாதாரண ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ். அதற்கேற்ப அளவாக சிரித்தார்கள்.
‘அப்படியெல்லாம் யாரும் இல்லைங்க’
‘பாஸ்..சும்மா சொல்லாதீங்க...உங்க ஸ்டைலுக்கும் அழகுக்கும்....’ ப்ரணீதா இழுத்தாள். மீண்டும் சிரித்தார்கள்.
‘என்னங்க நீங்க ராகிங் பண்ணுறீங்க?’ கேசவன் பதறினான்.
‘சும்மா இருடி’ பக்கத்தில் இருந்தவள் ப்ரணீதாவிடம் காதைக் கடித்தாள்.
‘சரி..அஞ்சு ஆகுது’ அதே வேகத்தில் திரும்ப ஓடினான்
இந்த ஒன்றரை நிமிட பேச்சை வைத்துக் கொண்டே வெகுநாட்களுக்கு ஹாஸ்டலில் பேசித் திரிந்தான். ஆனால் ப்ரணீதாவுடன் எதுவும் பேசவில்லை.
***
அன்றைய கணித வகுப்பு வித்தியாசமானதாக இருந்தது. ராஜேஸ்வரி மேடம் அன்று அழகு சற்று தூக்கலாகத் தெரிந்தார். விகாரமாக இல்லை- அழகாக. ஏதோ பேசிக் கொண்டிருந்தவர் ‘கேசவன்....நீங்க வந்து க்ளாஸ் எடுங்க’ என்றார்.
கேசவன் அதைத் துளி கூட எதிர்பார்க்கவில்லை. ‘சும்மா எடுங்க...’ என்று சாக்பீஸை கையில் கொடுத்துவிட்டார்.
‘எதுவுமே ப்ரிப்பேர் பண்ணலை மேடம்’
‘ப்ரிப்பேர் பண்ணியிருந்தீங்கன்னா கலக்கிடுவீங்களா?’ அதில் ஒரு நக்கல் தொனி இருந்தது.
‘சரி க்ளாஸ் எடுக்க வேண்டாம்....பாட்டு பாடுங்க’- அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
‘என்ன கேசவன் எதுவுமே செய்ய மாட்டேங்குறீங்க’
‘மேடம் அவனோட கேர்ள் ப்ரெண்ட் சொன்னா செய்வான்’ யாரோ கடைசி வரிசையில் இருந்து கத்தினார்கள்.
‘யாருப்பா அது?’
‘ப்ரணீதா’ இதுவும் கடைசி வரிசையில் இருந்து வந்தது.
ராஜேஸ்வரி மேடம் ப்ரணீதாவை பார்த்தார். அவள் சிரித்தபடியே ‘தலையும் ட்ரெஸ்ஸும்’ என்றாள். கேசவன் உடைவதற்கு அது போதுமானதாக இருந்தது.
***
அடுத்த நாள் ப்ரணீதாவின் முகத்தையே இவன் பார்க்கவில்லை. விலகிக் கொண்டான். அதற்கடுத்த நான்கைந்து நாட்களும் இப்படித்தான். ராஜேஸ்வரி மேடம் கலாய்த்த போது எதிர்த்து பேசிவிட்டு ப்ரணீதாவை பார்த்தான். அவள் தனது புருவங்களை மேலே உயர்த்தி என்ன வேண்டும் என்பது போல பாவித்தாள். இவன் தலையைக் குனிந்து கொண்டான்.
அன்று மதியம் அவளாகவே பேசினாள். ‘எனக்கு ரூட் போடுறியா?’ கேசவனுக்கு தொண்டைத் தண்ணீர் வறண்டு போனது. இப்படியெல்லாம் எந்தப் பெண்ணும் அவனிடம் பேசியதில்லை.
‘இல்லைங்க அவங்கதான்..’
‘அப்போ என்னை உனக்கு பிடிக்காது..அப்படித்தானே?’
‘என்னங்க இப்படி சொல்லுறீங்க?’
‘அப்போ புடிக்குமா?’
‘ஆமாங்க..செமயா புடிக்கும்’
‘அப்படீன்னா ஐ லவ் யூ சொல்லிடுவியா?’
‘ச்சே..ச்சே...அதெல்லாம் இல்லைங்க..’
‘அப்போ வேற எந்தப் பொண்ணுக்கு சொல்லுவ?’
‘நீங்க ஓவரா கலாய்க்குறீங்க’ கேசவன் சிரித்தான். அன்றிலிருந்து கேசவனும் ப்ரணீதாவும் நெருக்கம் ஆகிவிட்டார்கள்.
*****
‘உன் கூட க்ளோஸா பழகுறதால லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டுத் திரியறியா?’ பேருந்தில் போய்க் கொண்டிருக்கும் போது ப்ரணீதா கேட்டாள். அப்பொழுது கடை வீதியிலிருந்து கல்லூரி விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
‘இல்லையே’
‘ஆனா க்ளாஸ்ல அப்படித்தானே பேசிக்குறாங்க’
‘ஆமா..ஆனா அவங்களை கண்டுக்காத’
‘அப்போ உனக்கு என் மேல லவ் இல்லையா?’
..............
‘சொல்லுடா’
‘ப்ளீஸ் ப்ரணீதா...சும்மா இரு’
‘பதில் சொல்லுடா’
‘சரி..நீ சொல்லு..என்னை நீ லவ் பண்ணுறியா?’ கேசவன் திருப்பிக் கேட்டான்.
‘இல்ல’
‘அப்போ நானும் இல்ல’
‘நிஜமா?’
‘நீயும் நிஜமா?’
அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.
****
இரவில் ஃபோனில் அழைத்தான்.
‘உன்கிட்ட பேசணும்’
‘ம்ம்ம்..சொல்லு’
‘ஹாஸ்டலிலிருந்து வெளிய வா’
‘இந்த நேரத்துலயா’
‘ஆமாம்’
‘ப்ரோபோஸ் பண்ண போறியாடா?’
‘எப்போ பாரு இதேதான் கேட்பியா...வெளிய வா ப்ரணி’
சில நிமிடங்களில் வந்தாள்.
‘நாளைக்கு ரெக்கார்ட் நோட் முடிச்சுத் தருவியா?’
‘இதுக்குத்தான் கூப்பிட்டியா?’
‘ஆமாம்..’
‘ச்சீ..போடா’
சிரித்தான். அவளுக்கு எரிச்சலாக இருந்தது. நோட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.
‘குட்டி....’
‘என்னன்னு கூப்பிட்ட?’
‘குட்டின்னு’
‘அதிசயமா இருக்கு...’
‘உனக்கு எல்லாமே explicit ஆ சொல்லணுமா...குட்டின்னு சொன்னேன்’
‘எதுக்கு?’
‘ம்ம்ம்...லவ் யூ.....’
அவள் நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கேசவன் அன்று ப்ரணீதாவைவிட அழகாகத் தெரிந்தான். மார்கழி நிலவு காய்ந்து கொண்டிருந்தது.
[‘சூது கவ்வும்’ பதிவுடன் தொடர்புடையது]
8 எதிர் சப்தங்கள்:
ஒரு காதல் மலர்ந்த தருணம். மாது கவ்வும். சூடாக எழுதினாலும் சுவை.
இதுவும் ஏதோ நாலஞ்சு படத்த கலந்து ஜூஸ் புழிஞ்சாப்ல தான் இருக்குது
‘என்னன்னு கூப்பிட்ட?’ ‘குட்டின்னு, ‘ப்ரோபோஸ் பண்ண போறியாடா?’ எங்கயோ யாருக்கோ sync ஆகுது நான் என்ன சொல்லல.... ;)
/ /காதல் பெருகிக் பொங்கி பிரவாகமெடுத்த கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்//
நாளைக்கு சொல்லிருங்க.இல்லேன்னா நான் சொல்ல வேண்டிவரும்.
கொலை வெறி காதல் கதை ஒன்றை தடுத்தமைக்கு பதிவுலகம் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
அருமையான காதல் கதை....
gud..
Interesting short story. Thanks.
Post a Comment