Jul 12, 2014

குழந்தையை வளர்க்கத் தெரியுமா?

குழந்தைகளுக்கான மனோவியல் ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. யதேச்சையான சந்திப்பு இல்லை. நண்பர் ஒருவர் ஆலோசகரைப் பற்றிச் சொல்லியிருந்தார். வெகு காலமாகவே இந்த சப்ஜெக்டில் எனக்கு குழப்பம்தான். அதுவும் இந்த ஃபேஸ்புக் வந்த பிறகு எக்கச்சக்கம். 

முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைகளுக்காக இந்தத் தலைமுறையினர் அளவுக்கு excite ஆகவில்லையென்றுதான் நினைக்கிறேன். ‘என் மகன் அதைச் செய்கிறான்; என் மகள் அறிவாளியாக இருக்கிறாள்’ என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அடுத்தவர்களை பதற்றமடையச் செய்யவில்லை. அப்படியே அறிவாளியாகவும், திறமையாளனாகவும் இருந்தாலும் கூட அதை அப்பட்டமாக வெளியில் பேசியதில்லை. ஆனால் நம் தலைமுறை மாறிவிட்டது. தம் மகன் ஒன்றுக்கடிப்பதைக் கூட படம் எடுத்து போட்டுவிடுகிறார்கள். இதைத் தவறு என்று சொல்ல முடியாது. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன- வெளிப்படுத்துகிறார்கள். ஆளாளுக்கு தங்களின் பிள்ளைகளைப் பற்றி எழுதுவதையெல்லாம் பார்க்கும் போது ‘நாம்தான் சரியாக இல்லையோ’ என்ற குழப்பத்தை உருவாக்கிவிடுகிறது.

அப்படியெல்லாம் எதுவும் இல்லை- குழம்பத் தேவையில்லையாம். நான் சொல்லவில்லை. அந்த ஆலோசகர்தான் சொன்னார். அவர் மராத்திவாலா. பெங்களூரில்தான் பல வருட வாசம். பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துகிறார். கார்பொரேட் நிறுவன ஊழியர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கிறார். அது போக சில மருத்துவமனைகளில் கவுன்சிலிங் செய்கிறார். அத்தகைய பெரிய மனிதர் மணிக்கணக்கில் பேசினார் - முக்கியமான விஷயம்- பைசா இல்லாமல். இந்த மாதிரி சரக்குள்ள ஆட்கள் யாராவது  ஓசியில் பேசினால் வஞ்சனையே இல்லாமல் காதுகளை நீட்டிவிடுவேன். நாலு விழுந்தால் ஒன்றாவது பயன்படுமல்லவா?

அவர் சொன்னதன் சாராம்சம் ஒன்றுதான் - குழந்தைகள் வளர்ப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று- நம்மையும் அறியாமல் நமது குழந்தைகளின் மீதான நமது எதிர்பார்ப்பை அதிகமாக்கிக் கொள்கிறோம். இரண்டாவதாக  நாம் எதிர்பார்க்கிறோம் என்பது குழந்தைகளுக்குத் தெரியவரும் போது தம் மீதான அழுத்தத்தை அவர்களும் உணரத் துவங்குகிறார்கள். subconscious pressure. அவர்களுக்கே தெரியாத அழுத்தம் இது.

ஒரு வகையிலான பாலிஷ்ட் சித்ரவதை. 

நமது கல்வி முறையே அழுத்தத்தை உருவாக்கக் கூடிய கல்விமுறைதானே? ஒரு மாணவனுக்கு பூகோளம் பிடித்திருக்கலாம். இன்னொருவனுக்கு மொழிப்பாடம் பிடித்திருக்கும். இன்னொருவனுக்கு கணிதம் விருப்பமாக இருக்கக் கூடும். இன்னொருவனுக்கு விளையாட்டு பிடித்திருக்கும். ஆனால் பத்தாம் வகுப்பு தாண்டும் வரையில் அவனவன் தனித்துவத்தை வெளிக் கொணரும்படி எது இருக்கிறது? எல்லோருமே ஒரே குட்டைதான். குரங்காக இருந்தாலும். யானையாக இருந்தாலும், முதலையாக இருந்தாலும் நாற்பது அடி மரத்தின் உயரத்தை அடைவதுதான் இலக்கு. எதில் திறமை இருந்தாலும் தொண்ணூற்றைந்து சதவீத மதிப்பெண்ணைத் தாண்டுவதுதான் குறிக்கோள். எல்லா பாடத்தையும் நெட்டுரு போட்டாக வேண்டும். பாடத்திட்டம்தான் இப்படி நேரடியாக அழுத்தம் கொடுக்கிறது என்றால் ‘என் பிள்ளை அதைச் செய்கிறான்; இதைச் செய்கிறான்’ என்று நாமும் ஏன் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்? ஒன்று குழந்தைகள் தங்கள் மீது சுமத்தப்பட்ட பாரத்தை பொறுத்துக் கொண்டு திணறுவார்கள் அல்லது ‘இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸூ’ என்று நமது அபிலாஷைகளை உதாசீனப்படுத்தத் துவங்குவார்கள். கடைசி காலத்தில் ‘எம்பையன் என்னை மதிக்கவே மாட்டேங்குறான்’ என்பது வரைக்கும் போய் நிற்கும்.

இது டூ மச்சாகத்தான் தெரியும். ஆனால் சிக்மண்ட் ஃப்ராய்ட் அப்படித்தானே சொல்கிறார்? ஒரு மனிதனின் எந்தவொரு குணாதிசயத்தையும் அவனது குழந்தைப்பருவ பாதிப்புகளோடு இணைக்க முடியும். . அப்படித்தான் ஒருவன் அம்மா அப்பாவை மதிக்காததையும் கூட அவனது குழந்தைப்பருவத்து நிகழ்வுகளோடு இணைக்கலாம். 

சரி. இதற்கு மேலும் பேசி நிறையப்பேரின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள முடியாது. அவரவர் பிள்ளை; அவரவர் பாடு.

ஆனால் இந்த டிப்ஸ் உபயோகமானதாக இருக்கக் கூடும்.

பெற்றோர்களில் மூன்று வகை உண்டு. சர்வாதிகாரி சண்முகம் (Authoritarion), அசால்ட் ஆறுமுகம் (Permissive), ஜனநாயகவாதி ஜம்புலிங்கம் (Democratic). 

சர்வாதிகாரி என்றால் ‘நீ அதைச் செய்யக் கூடாது’ ‘அங்கே போகக் கூடாது’ என்று மறுப்பவர். மீறிச் செய்தால் கடும் தண்டனை இருக்கும். எந்தவொரு சூழலிலுமே அப்பா திட்டுவார், அம்மா திட்டுவார் என்று குழந்தைகள் பயந்து நடுங்குவார்கள். வளரும் போதும் பெற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து குற்றங்களைச் செய்யத் துவங்குவார்கள். 

அசால்ட் ஆறுமுகம் நேரெதிர். ‘நீ செய்யுடா ராஜா’ ‘உன் இஷ்டம் கண்ணு’ வகையறா. இப்பொழுது வேண்டுமானால் ‘எம்பையனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கேன்’ என்று சொல்வதற்கு பெருமையாக இருக்கும். ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிக அபாயகரமானது. பதின்பருவ பிள்ளைகளின் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த வளர்ப்பு முறைதான் காரணமாகிறது. வளர்பருவத்தில் தங்களின் ஒவ்வொரு தவறுக்கும் இதை அட்வாண்டேஜாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த மூன்று முறைகளில் ஜனநாயகவாதிதான் பெஸ்ட் என்கிறார்கள். ‘நீ ஆசைப்பட்ட மாதிரியே சினிமாவுக்கு போயிட்டு வா. ஆனா நாம ஏற்கனவே முடிவு செஞ்ச மாதிரி இந்த மாசத்துக்கான கோட்டா இதோடு முடியுது. ஓகேவா?’ என்பவர்கள். தடியும் முறியவில்லை. பாம்பும் சாகவில்லை க்ரூப். 

தேடினால் இன்னமும் ஏகப்பட்ட குழந்தை வளர்ப்பு முறைகள் இணையத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் இந்திய வளர்ப்புமுறையில் நாம் பெரும்பாலும் இந்த மூன்றையும்தான் கலவையாக பயன்படுத்துகிறோம். இதில் எதை அதிக விகிதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் குழந்தைகளின் வெற்றி தோல்விகள் மட்டுமில்லை- நம்முடைய வெற்றி தோல்வியும் அடங்கியிருக்கிறது. அவர் மிகத் தெளிவாக புரிய வைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

கிளம்பும் நேரம் ஆகியிருந்தது. 

கடைசியாக ஒரு கேள்வி ‘நீங்க குளிச்சுட்டு வரும் போது வித்தியாசமா பார்க்கிறானா?’ என்றார். 

‘கவனிச்சதில்லையே’ என்றேன். 

‘பார்ப்பான். இனிமேல் கவனிச்சு பாருங்க’ என்றார். 

கிளம்பும் போது குழப்பிவிட்டுவிடுவார் போலிருந்தது. ஆனால் அவர் சொல்ல வந்தது எளிமையான விஷயம். குழந்தைகள் நம்மைவிட விவரமானவர்கள். நாம்தான் நினைத்துக் கொண்டிருப்போம்- அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று; ஆனால் நாம் அறியாமலே அவர்கள் கவனிப்பார்களாம்.

‘குழந்தைகள் தூங்கும் போது மனைவியோடு சண்டையிட்டுப் பாருங்கள். அடுத்த நாள் பகலில் குழந்தைகளிடம் வித்தியாசத்தை உணரலாம்’ என்றார்.

‘ஏன்?’

‘அவர்களது காதுகள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கும்’.

அடுத்தநாள் தெளிவாக ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் முந்தின இரவில் என்னவோ வித்தியாசமாக நடந்திருக்கிறது என்பதை அவர்கள் மனம் தெரிந்து வைத்திருக்கும். சண்டைக்கு மட்டுமில்லை கொஞ்சல், மிஞ்சல் இத்யாதி இத்யாதி எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். இதெல்லாம் மூன்றிலிருந்து ஒன்பது வயதிலான குழந்தைகளுக்கு. அதைத் தாண்டிய குழந்தைகளைப் புரிந்து கொள்வது இன்னொரு கலையாம். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு முதலில் இவனை புரிந்து கொள்கிறேன். பிறகு அடுத்த கலையைப் பார்க்கலாம்.

10 எதிர் சப்தங்கள்:

ராஜி said...


நான் சர்வாதிகாரி சன்முகமும், அசால்ட் ஆறுமுகமும் கலந்த கலவை. இது சரிப்பட்டு வருமா!?

”தளிர் சுரேஷ்” said...

பயனுள்ள தகவல்கள்! நான் ஜனநாயகவாதியாகவே இருக்க விரும்புகிறேன்! நன்றி!

சேக்காளி said...

//இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு முதலில் இவனை புரிந்து கொள்கிறேன்//
ஒண்ணுமே இல்லாமத்தான் இந்த பதிவ எழுதப்பட்டதா. நல்லா வருவீங்க தம்பி.நீங்க நல்லா வருவீங்க.

வல்லிசிம்ஹன் said...

ஓடும் வெள்ளத்துக்கு நல்ல அணைகளாகப் பெற்றோர் இருக்கவேண்டும் னு புரிகிறது. அவர்களே முதிர்ச்சி இல்லாதவர்களாக இருந்தால் பிள்ளைகள் பாடு மிகக் கஷ்டம். இன்னும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Kamala said...

ஒரு செடியை இந்தப் பக்கம் கிளை விடு, அந்தப் பக்கம் போகாதே, வேரை ரொம்ப ஆழமாக போக விடாதே என்று சொல்வது போலதான் இன்றைய குழந்தை வளர்ப்புகளும். பெற்றோர்கள் அவர்களைப் படுத்தும் பாடு ஒரு பக்கம், தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது ஒரு பக்கம்! பாவம் குழந்தைகள்.குழந்தைகள் வளர்வதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பதுதான் நிஜம்.

Yarlpavanan said...

சிறந்த உளநல வழிகாட்டல்

Uma said...

Kusumbu...

வெட்டி ஆபீசர் said...

இதுதான் சரியான குழந்தை வளர்ப்பு முறை என்று எதையும் பின்பற்ற முடியாது...ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் அவர்களுக்குரிய தனிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பதுதான்....


எங்கள் வீட்டை பொருத்தவரை எது நல்லது எது கெட்டது என்ற தெரியாத வயது வரை எங்கள் தந்தை சர்வாதிகார மற்றும் ஜனநாயக கலவையும் , ஓரளவிற்கு வளர்ந்த பின்பு முழுமையாக ஜனநாயக முறையையும் பின்பற்றினார்...


செய்யக்கூடாது...செய்தே ஆகவேண்டும் என்று நிர்பந்திக்க பட்ட போது...சிறிது வருத்தம் இருக்கவே செய்தது...ஆனால் அது எதற்காக என்று அம்மாவால் விளக்க பட்ட போது...அது சரியாக பட்டது...


குழந்தை பருவம் தொட்டு சரியான மற்றும் தேவையான விஷயங்களை செய்ய நிர்பந்திக்க பட்டதனால் அது ஒரு வாழ்க்கை முறை ஆகி போனது...எனவே நாங்களாக முடிவெடுக்க வேண்டிய காலகட்டங்களில் எங்களால் சரியான முடிவை எடுக்க முடிந்தது...


முதலில் பெற்றோர்கள் தங்கள் இயலாமைகளையும், ஏக்கங்களையும், நிறைவேறாத ஆசைகளையும் குழந்தைகள் மேல் திணிக்காமல் இருந்தாலே போதும்....

அமுதா கிருஷ்ணா said...

நான் ஜனநாயகவாதியாக இருந்தாலும்,சில பல பெற்றோர்களை பார்த்து நல்ல வேளை அவுங்கள மாதிரி நாம இல்லை என்று சில நேரங்களிலும்,அவுங்கள மாதிரி நாம் இருந்திருக்கலாமோன்னு சில நேரங்களிலும் தோணும்.ஆனாலும் யார் கரெக்ட் என்று எப்படி தெரியும்.விதி விட்ட வழின்னு தேத்திக்குவேன்.

சேக்காளி said...

ஐயய்யோ அப்டில்லாம் ஒண்ணும் இல்லீங்_.