Feb 24, 2014

யாரை நோக்கி கைநீட்டுவது?

சென்னையில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த உமா மகேஸ்வரி என்ற பெண் கொல்லப்பட்டது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரவு நேரத்தில் அலுவலகத்திலிருந்து வெளியேறி, பின் அறைக்குத் திரும்பாத பெண்ணின் அழுகிய உடலை பத்து நாட்களுக்குப் பிறகாக புதருக்குள் கண்டெடுத்திருக்கிறார்கள். கழுத்து, அடிவயிறு போன்ற இடங்களில் கத்திக் குத்து. கொடுமை. 

இந்தக் கொலைக்கு யாரைக் கை நீட்டுவது? வழக்கம் போல ஒரு பக்கம் அந்தப் பெண் ஏன் தனியாகச் சென்றாள் என்று கேட்பார்கள். இன்னொரு பக்கம் நிறுவனமும், காவல்துறையும் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பேசுவார்கள்.

ஆனால் உமாமகேஸ்வரியின் பெற்றோர்களுக்கு மகள் போனது போனதுதான்.

இப்பொழுதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதை மனிதாபிமானச் செயல் என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போகாமல் தடுப்பதற்காகவேண்டியாவது இத்தைகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. எட்டு மணிக்குப் பிறகாக அலுவலகத்தைவிட்டு வெளியேறும் பெண்களுக்கு வண்டி ஏற்பாடு செய்து கொடுக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பாக கார் டிரைவரே ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று வன்புணர்ந்த பிறகு இப்பொழுது ஒவ்வொரு வண்டியிலும் ஒரு செக்யூரிட்டியை அனுப்பி வைக்கிறார்கள். அப்படியும் நம் ஆட்களை நம்பமுடியாது- வாகன ஓட்டியும், பாதுகாவலனுமே இணைந்து இந்தக் காரியத்தைச் செய்துவிடக் கூடும் என்பதால் பெரும்பாலும் செக்யூரிட்டிகளை மாற்றி மாற்றி அனுப்புகிறார்கள். இன்று ஒரு வாகனத்தில் துணைக்கு செல்லும் பாதுகாவலன் நாளைக்கு இன்னொரு வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார். 

இன்னொரு பிரச்சினையாக பெண்களுக்கான வேலை நேரத்தை ஏன் இரவு வரை நீட்டிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். வேலை நேரத்தை மாலை ஆறு மணியோடு முடிப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. பெரும்பாலான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பகல் நேரத்தோடு தங்கள் வேலை நேரம் ஒத்து வரும்படி அமைக்கிறார்கள். அப்படித்தான் வாடிக்கையாளர்களும் கோருகிறார்கள். ஐரோப்பாவில் வாடிக்கையாளர் இருப்பின், நமது பணி நேரம் இரண்டு மணி முதல் பதினோரு மணி வரை என்பதுதான் அவர்களின் வேலை நேரத்தோடு ஒத்துப் போகும். அதனால் அனைத்துப் பெண்களுக்கு காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரைதான் வேலை நேரம் என்று மாற்றியமைப்பதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். 

ஷிஃப்ட் நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்தைவிட்டு உமாமகேஸ்வரி வெளியேறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இது மட்டும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் நிறுவனத்தை குற்றவாளி ஆக்கவே முடியாது. ஒன்று செய்திருக்கலாம்- ‘இரவு நேரத்தில் வீட்டில் விட வேண்டியது எங்கள் பொறுப்பு. நீங்கள் தனியாகச் செல்ல அனுமதிக்க முடியாது’ என்று உறுதிபடச் சொல்லியிருக்கலாம். 

இன்னமும் விசாரணையே முழுமையாக முடியாதபட்சத்தில் இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு கருத்துச் சொல்வது அதிகப்பிரசங்கித்தனம். உமாமகேஸ்வரி தவறு செய்தார் அல்லது நிறுவனம்தான் குற்றவாளி அல்லது காவல்துறைதான் பொறுப்பு என்று எதைச் சொன்னாலும் அது தவறாகிவிடக் கூடும்.

ஆனால் தவறு ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது; நம் ஒட்டுமொத்தச் சமூகத்திடமும் இருக்கிறது.

நமக்கு கிடைக்கும் சுதந்திரத்தையும், பணத்தையும் எல்லாவிதத்திலும் தவறாக பிரயோகிக்கத் தயாராக இருக்கிறோம். காதலர் தினம், புத்தாண்டு என எதையெல்லாம் வணிக மயமாக்க முடியுமோ அதையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் மிகத் திறமையாக வணிகமயமாக்கிக் கொண்டிருக்கின்றன. காதலர் தினத்தில் ரோஜாப் பூவின் விலை நூறு ரூபாயைத் தாண்டியது. கிஃப்ட் வாங்கவும், பூங்கொத்து வாங்குவதற்குமான கூட்டத்தை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில் பார்த்திருக்க வேண்டும். முந்தின நாளே இப்படியென்றால் காதலர் தினத்தன்று நிலைமை இன்னமும் மோசமடைந்திருந்தது. காபி டே போன்ற கடைகளில் உள்ளே அமர்வதற்கு இடமில்லாமல் ஏகப்பட்ட பேர்கள் வெளியே காத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. எதற்காக இப்படியொரு hype உருவாக்கப்பட வேண்டும்? இந்த தினங்களில் இருக்கும் commercialization ஐ புரிந்து கொள்ளாமல் நாமும் ‘காதலர் தினத்தைக் கொண்டாடுவோம்’ என்று உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். காதலைக் கொண்டாடுவதற்கும் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 

உண்மையில், தொழிநுட்பமயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலின் வேகத்திற்கு ஏற்ப நமது சமூகம் பக்குவப்பட்டதாக மாறவில்லை. அதுதான் பிரச்சினையின் அடிப்படை. இணையம், மொபைல் போன்றவை நமக்கு அளிக்கும் சுதந்திரம்- இதை சுதந்திரம் என்று நம்புகிறோம்; வணிகமயமாக்கலின் விளைவாக நம்மிடையே மலிந்து போயிருக்கும் கொண்டாட்ட மனநிலை போன்றவை மாற்றியமைக்கும் life style ஆகியவற்றை கிரகித்துக் கொள்ளும் அளவிற்கு நம்மிடையே பக்குவம் இல்லை. சுதந்திரம் என்பதில் எல்லை மீறல்களை அனுமதிக்கிறோம். கொண்டாட்ட மனநிலை என்பதில் அத்து மீறுகிறோம். இந்த வேகங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தாறுமாறாக குற்றங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடெல்லாம் எதுவும் கிடையாது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் Transition generationன் சாபக்கேடு இது.

நம்மை நாமே திருத்திக் கொள்ளாவிட்டாலும், சமூகத்தை பக்குவபடுத்தாவிட்டாலும் நிலைமை இன்னமும் மோசமாகிக் கொண்டுதான் போகும். போலீஸ்காரன் பாதுகாக்கவில்லை, நிறுவனம் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

இதை எழுதிவிட்டு திரும்ப வாசிக்கும் போது உமாமகேஸ்வரிதான் குற்றவாளி என்ற தொனி சேர்ந்துவிட்டது. அந்த ஜீவனை குற்றவாளியாக்குவது என் நோக்கமில்லை. அந்தப் பெண்ணுக்காகவும் அவளைவிட அதிகமாகவும் அவளது பெற்றோருக்காகவும் வருந்துகிறேன். ஆனால் இதுதான் மனதில் இருக்கிறது. இந்த எண்ணத்தை வேறு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.

0 எதிர் சப்தங்கள்: