Mar 25, 2013

ஊரும் பேரும்


ஆறா மீன் பிடிக்கப் போகும் போது அயிரை மீன் மாட்டிக் கொண்டால் வேண்டாமென்று விடவா போகிறோம்? அப்படித்தான் கோபிச்செட்டிபாளையத்தின் வரலாற்றை கொஞ்சம் தேடிப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தேடும் போதுதான் சுந்தரரும் மாட்டுகிறார், பவணந்தி முனிவரும் மாட்டுகிறார். சுந்தரர் அவிநாசி வரைக்கும் ‘ட்ரிப்’ அடித்திருக்கிறார். அப்படியே இன்னும் ஒரு நாற்பது கிலோமீட்டர் நடந்திருந்தால் கோபியைப் பற்றிய குறிப்பை எழுதியிருக்கலாம். ஆனால் எழுதாமல் அப்பீட் ஆகிவிட்டார்.

பவணந்தி முனிவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். நன்னூலை எழுதியவர். சுந்தரமூர்த்தி நாயனாராவது அவினாசியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் நடந்திருந்தால்தான் கோபியை அடைந்திருக்க முடியும். ஆனால் இந்த முனிவர் இருக்கிறார் பாருங்கள். சீனாபுரம் வரை வந்திருக்கிறார். சோம்பேறித்தனம் படாமல் பதினைந்து கிலோமீட்டர் நடந்திருந்தால் கோபிக்கு வந்திருக்கலாம். ஆனால் இவரும் வந்த மாதிரி தெரியவில்லை. இப்பொழுது கிடைத்தால் மண்டையில் ஒரு கொட்டு வைத்துவிடுவேன்.

பவணந்தி முனிவர் சனகாபுரி என்ற ஊர்க்காரராம். இவர் பூசை செய்த கோயில் ஒன்று இன்னமும் சீனாபுரத்தில் இருக்கிறது. சனகாபுரிதான் சீனாபுரம் என்று மாறிவிட்டது என்று நம்புகிறேன். ஆனால் ஜைனர்புரம்தான் மருவி சீனாபுரம் என்றாகிவிட்டது என்கிறார்கள். எது உண்மை என்று அந்த முனிவருக்குத்தான் வெளிச்சம். இந்த சீனாபுரம், விஜயமங்கலம் எல்லாம் ஒரு காலத்தில் சமணர்களின் பேட்டையாக இருந்திருக்கிறது என்கிறார்கள். 

சுந்தரர், முனிவரையெல்லாம் திட்டி பிரயோஜனம் இல்லை. கொங்குநாட்டின் எந்த வரலாற்றைத் தேடினாலும் கோபிக்கு அருகில் இருக்கும் ‘காஞ்சிக்கோயில்’ என்ற ஒரு உள்நாட்டைப் பற்றிய தகவல்கள்தான் இருக்கிறது. No கோபி.

இதையெல்லாம் பார்த்தால் அந்தக் காலத்தில் கோபி என்ற ஊரே கிடையாது போலிருக்கிறது. பிறகு எப்படி  Mr.சுந்தரரையும் திருவளர் பவணந்தியாரையும் திட்ட முடியும்? ‘ஏன் எங்கள் ஊருக்கு வரவில்லை?’ என்றால்  ‘ எங்கள் காலத்தில் அப்படியெல்லாம் ஊரே இல்லைப்பா’ என்று பேந்த பேந்த முழிப்பார்கள் என நினைக்கிறேன். இன்றைக்கு கோபி டவுனாக இருந்தாலும் மிகச் சமீபத்தில்தான் ஊராக உருவாகியிருக்கக் கூடும். 

வரலாறு எபப்டியோ போகட்டும். atleast பெயர்க்காரணத்தை தெரிந்து கொள்ளலாம் அல்லவா? ஒவ்வொரு ஊருக்கும் பெயர்க்காரணத்தை தெரிந்து கொள்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. உதாரணமாக தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் இருக்கும் 80 டன் எடையுள்ள பிரம்ம மந்திரக்கலை மேலே கொண்டு செல்வதற்கு ஐம்பது கிலோமீட்டர் தூரத்திலிருந்து சாய்வான சாரம் அமைப்பதற்காக மணலைக் கொட்டி, பாலம் போல அமைத்து, யானைகளை வைத்து கல்லை உருட்டிச் சென்றார்களாம். இந்த சாரத்தின் தொடக்கப்புள்ளிக்கு சாரப்பள்ளம் என்ற பெயர் நிலைத்துவிட்டதாக குறிப்பை வாசித்த போது ஆச்சரியமாக இருந்தது. 

இப்படியான ஏதாவது ஒரு வரலாறு கோபிக்கும் இருக்குமல்லவா? தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு தமிழ் பேராசியரரிடம் பேசிய போது அவரிடமும் ஒரு கதை இருந்தது. 

பாரியூர் என்ற கோயில் எங்கள் பகுதியில் பிரசித்தம். அதுதான் தொடக்ககாலத்தில் ஊராக இருந்ததாம். வாய்க்கால் வெட்டும் போதோ வெள்ளம் வரும் போதோ மேட்டுப்பாங்கான இடம் தேடி மக்கள் நகர்ந்திருக்கிறார்கள். நகர்ந்த இடத்ததைத்தான் இப்பொழுது இருக்கும் கோபிச்செட்டிபாளையம் என்கிறார்கள். ஆனால் இது செவி வழிச் செய்திதான். ஆதாரம் என்றெல்லாம் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் காலத்தில் செவிவழிச்செய்திகளை வரலாறாக பதிவு செய்வது பெரும்பாலும் தவறான முடிவாகவே அமைந்துவிடும் என நினைக்கிறேன்.

ஊரின் வரலாறு இது. ‘ஊருக்கான பெயர்க்காரணம் தெரியுமா?’ என்று கேட்ட போது இன்னொரு கதையைச் சொன்னார்.

கோபிச்செட்டுபிள்ளான் என்ற ஒருவரின் பெயரிலிருந்து ஊர்ப்பெயர் உருவாகியதாகவும் ‘செட்டு’ என்றால் வாணிகம் என்றொரு அர்த்தம் இருக்கிறது என்றார். (இந்தச் சொல்லிலிருந்துதான் வணிகர்களை செட்டியார் என்று அழைக்கத் துவங்கி பிறகு அதுவே சாதிப்பெயராய் நிலைத்துவிட்டது என்றார்). அதே போல பிள்ளான் என்ற சொல் அந்தக்காலத்தில் சாதீயப்பெயராக பயன்படுத்தப்படவில்லை என்றார். இப்படியிருக்க கோபி என்பவர் செட்டியாராகவும் இல்லை பிள்ளையாகவும் இல்லை என்றார். 

“பிறகு?” என்ற போது 

“அவன் கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன்” என்றார்.

இது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் நம்பப் போவதில்லை. இதே ஸ்டேட்மெண்ட்டை வேறொரு சாதியைச் சார்ந்தவரிடமிருந்து வந்திருந்தால் நம்பிவிடுவேன். கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர் சொல்லும் போது இன்னும் கொஞ்சம் தேட வேண்டும் என நினைக்கிறேன்.