Dec 19, 2012

அதிகாரவர்க்கத்திற்கு உயிர் என்பது மயிருக்குச் சமானம்

நம் ஊர்ப்பக்கம் அதிகாரவர்க்கம் யாரையாவது கொல்ல விரும்பினால் அவ்வளவு சீக்கிரமாக வீதியிலேயே வைத்து  சுட்டுத்தள்ள மாட்டார்கள். பிடித்துக் கொண்டு போய் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து என்கவுண்ட்டரில் போட்டால்தான் உண்டு.  அந்த அளவில் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்தான். ஆனால் மணிப்பூர், காஷ்மீர் போன்ற பகுதிகளில் நிலைமை அப்படியில்லையாம். ஆயுதப்படையினர் தங்களுக்கு தூக்கம் வராமல் இருக்க யாரையாவது சுட்டுத் தள்ளினால் கூட “சும்மா விளையாட்டுக்கு” என்று அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அந்தளவிற்கு அங்கிருக்கும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினருக்கு வரைமுறையற்ற சுதந்திரத்தை அரசுகள் வழங்கியிருக்கின்றன.

ஆயுதப்படையினரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற Armed Forces Special Power Act (AFSPA) என்ற பிரிவை வைத்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ‘எந்த’ காரியத்திலும் ஈடுபடுவதற்கான அனுமதியை இந்த சிறப்புப் பிரிவு வழங்குகிறது. எந் இப்படித்தான் 2000 ஆம் ஆண்டில் மணிப்பூரில் மாலோம் என்ற இடத்தில் பேருந்துக்கு நின்றிருந்த பத்து பேரை ஆயுதப்படையினர் பொசுக்கித் தள்ளினார்கள். அந்தப் பத்து பேரும்தான் இம்பாலில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என்று கேஸை மூடிவிட்டார்கள். எவனாவது வாயைத் திறந்தால் அவனையும் லிஸ்டில் சேர்க்கும் முடிவில்தான் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அடுத்த இரண்டாவது நாளில் 27 வயதான இளம்பெண் உண்ணாவிரதத்தை துவக்கினாள். அவள் முன் வைத்த கோரிக்கை மிக எளிமையானது. AFSPA வை மணிப்பூரில் இருந்து நீக்க வேண்டும். அவ்வளவுதான்.

அரசுகளாவது செவிமடுப்பதாவது? நாட்கள் மாதங்களாகி வருடங்களும் ஓடிவிட்டன. அந்தப் பெண்மணி உண்ணாவிரதத்தைத் துவங்கி இப்பொழுது பன்னிரெண்டு ஆண்டுகள் முடிந்தாயிற்று. அரசும் இறங்கி வந்ததாகத் தெரியவில்லை, அந்தப் பெண்ணும் ஓய்ந்து போனதாகத் தெரியவில்லை. அத்தனை ஜால்ரா மீடியாக்களும் செய்தி கசிந்துவிடாமல் மறைத்தாலும் அவள் பிரபலமாகிக் கொண்டிருந்தாள். அவளைத்தான் மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் தங்கள் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு ‘ஐகானாக’ மாறிவிட்ட அந்த இரும்புப் பெண்மணியின் பெயர் இரோம் ஷர்மிலா.


கொஞ்ச நாட்களுக்கு ஷர்மிலாவை வெளியில் விட்டு வைத்த அரசாங்கம் இவள் தலைவலியாக மாறிவிடக் கூடும் என நினைத்து செக்‌ஷன் 309 ல் உள்ளே தள்ளிவிட்டார்கள். பிரிவு 309 என்பது தற்கொலை முயற்சி செய்பவர்களை தண்டிப்பதற்கான சட்டப்பிரிவு. அதிகபட்சமாக ஒரு வருடம் மட்டுமே சிறையில் வைத்திருக்கலாம். ஷர்மிலாவை ஒரு வருடம் கஸ்டடியில் வைத்திருப்பார்கள். பிறகு பெயரளவில் ‘ரிலீஸ்’ செய்துவிட்டு மீண்டும் கைது செய்துவிடுவார்கள். 

கைது செய்தாலும் ஷர்மிலா தனது உண்ணாவிரதத்தை தொடர்வதால் மூக்கு வழியாக ஒரு குழாயைச் செருகி வலுக்கட்டாயமாக எதையாவது ஊற்றி ஷர்மிலாவை உயிரோடு வைத்திருக்கிறார்கள். 

பன்னிரெண்டு வருடங்களாக மூக்கு வழியாகச் செலுத்தப்படும் உணவை உண்டு, ஆறேழு ஆண்டுகளாக பல் கூட துலக்காமல், தனது அபிலாஷைகள், உணர்வுகள் என அத்தனையும் மழுங்கடித்து மனித உரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஷர்மிலாவின் அத்தனை போராட்டமும் மூன்றாவது மனிதனுக்கானது. தனது அத்தனை கஷ்டங்களையும் வேறு யாருக்காகவோ அனுபவிக்கிறாள். தனக்காவோ, தனது குடும்பத்திற்காகவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னை சிறுகச் சிறுக அழித்துக் கொள்ளும் அந்தப் பெண்மணி உண்மையிலேயே ‘சல்யூட்’டுக்குரியவள்.

ஷர்மிலாவுக்கு போராளி என்பதைத் தாண்டி இன்னொரு முகம் இருக்கிறது. அது கவிதை முகம். தனது கவிதைகளை ‘மைதைலான்’ என்ற மணிப்பூரின் மொழியில் எழுதியிருக்கிறார். இந்தக் கவிதைகள் தமிழிலிலும் கிடைக்கின்றன. மொழியாக்கம் செய்திருப்பவர் அம்பை. ஷர்மிலாவின் பன்னிரெண்டு கவிதைகள் அடங்கிய “அமைதியின் நறுமணம்” என்ற தொகுப்பை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கவிதைகள் என்ற அளவில் வாசித்தால் சாதாரணமானவையாக தெரிவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கவிதையின் வழியாக இரோம் ஷர்மிலாவை காண முடிந்தால் அது மிக முக்கியமான அனுபவமாக இருக்கும்.

இந்தத் தொகுப்பின் இரண்டு பத்திகள் வாசித்ததிலிருந்து மிகவும் அலைகழிக்கின்றன. 

“என்னை விடுவியுங்கள்
செய்யாத தவறுக்கு 
கூண்டுப் பறவையான என்னை
இந்தச் சிறு அறையில் பிணைத்திருக்கும்
இந்த முள் சங்கிலியிலிருந்து

இந்த திகிலூட்டும் சிறையில்
பல குரல்களின் அருவி இல்லை
அவை நிறுத்தாமல் பேசும்
பறவைகளின் கீச்சொலி இல்லை
பொங்கி எழும் சிரிப்பொலியும் இல்லை
தாலாட்டின் இனிய ஒலியோ
இல்லவே இல்லை”

இந்தக் கவிதையில் ஷர்மிலாவின் குரலைக் கேட்க முடிந்த ஒவ்வொருவரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகக் கூடும். தன்னை விடுவிக்கக் கோரும், சிறையின் வேதனையை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் இந்தப் பெண்மணி உழலும் அதே தேசத்தில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவளுக்காக எந்தத் துரும்பையும் எடுத்துப் போடாத, ஒற்றைச் சொல்லைக் கூட உதிர்க்காத நம்மை நாமே வெட்கித்துக் கொள்ளச் செய்யும் எழுத்துக்கள் இந்தப் பத்தியிலிருக்கின்றன.

‘காலச்சுவடு’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் ஆவணம் என்ற வகையிலும், குரல் நசுக்கப்படும் ஒரு இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்ணின் வாக்கு மூலம் என்ற அடிப்படையிலும் மிக முக்கியமான புத்தகம். 

புத்தகத்தை வாசித்துவிட்டு தூக்கம் வராமல் ஷர்மிலா பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தேன்.  நீண்ட பட்டினியால் அவரது உடலின் பல பாகங்கள் சிதைந்து கொண்டிருப்பதாக ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அரசுக்கும், பெரும்பான்மை ஊடகங்களுக்கும் இது பற்றிய கவலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

இலட்சக்கணக்கான உயிர்களைக் கூட கொல்வதற்கு தயாராக இருக்கும் இந்த பயங்கரவாத அதிகார வர்க்கத்திற்கு சிதைந்து கொண்டிருக்கும் ஒற்றை உயிர் என்பது உதிர்ந்து கொண்டிருக்கும் ஒற்றை மயிருக்குச் சமானம்.

5 எதிர் சப்தங்கள்:

Seeni said...

unmIthaan sako.....


vethanai .....

சேக்காளி said...

//அரசுக்கும், பெரும்பான்மை ஊடகங்களுக்கும் இது பற்றிய கவலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை//
இதுக்கெல்லாம் கவலை பட்டால் பிறகு பன்னாட்டு க்ம்பெனிகளை பற்றி யோசிக்க நெரம் கிடைக்காமல் போய் விடுமே.

அகல்விளக்கு said...

:(

Uma said...

மனம் வதைபடுகிறது மணிகண்டன்!

அருண் பிரசாத் ஜெ said...

இவரை பற்றி நானும் பல வருடங்களாக படித்து கொண்டு இருக்கிறேன்.
ஆனால் எருமை மாட்டில் பெய்த மழை போல யாருமே கண்டு கொள்ளவில்லை நாம் உள்பட.

மிகுந்த வருத்தத்திற்கு உரியது. ஐ.நா போன்ற எதாவது ஒரு அமைப்பின் வெளிச்சம் இவர் மீது பட்டால்
நிலைமை கொஞ்சம் மாற வாய்ப்பு இருக்கிறது .