சம்பவம் 1:
ஹைதராபாத் இன்போஸிஸ் கட்டடம். ஜூலை 31, 2012. இரவு 10.30 மணி.
தற்கொலைக்கான காரணம்- கள்ள உறவு.
சம்பவம் 2:
திருப்பூர் வீரபாண்டி கிருஷ்ணா நகர். அக்டோபர் 29.
மீனாட்சிதேவி என்ற 19 வயதுப்பெண் தனது இரண்டரை வயது மகளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொல்கிறார்.
கொலைக்கான காரணம்- கள்ள உறவு.
***
***
நீலிமாவும் சரி, மீனாட்சியும் சரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்குமே குழந்தை உண்டு. அடுத்த சில வருடங்களுக்குள்ளாக காதல் திருமண வாழ்க்கை கசந்து வேறொருவருடன் காதல்/கள்ள உறவு மலர்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கும், கொலை செய்வதற்கும் தூண்டப்பட்டிருக்கிறார்கள்.
நீலிமா இதற்கு முன்பாக வேலை செய்த ஐ.டி நிறுவனத்தில் தன்னோடு பணி புரிந்த பிரசாந்த் என்பவருடன் உறவு ஏற்பட்டு அதைக் காதல் எனக் கற்பிதம் செய்திருக்கிறார். தற்கொலை செய்வதற்கு முன்பாக “உனக்கும் எனக்கும் ஒத்துவராது” என தனது கணவன் சுரேஷூக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார். தனக்கும் சுரேஷூக்கும் ஒத்துவராது என்பதை காதலித்த போதோ அல்லது திருமணத்திற்கு பிறகோ புரிந்து கொள்ளாத நீலிமா, தனது வாழ்வில் மூன்றாவதாக ஒருவன் குறுக்கே வந்தபிறகு புரிந்து கொள்கிறார்.
மீனாட்சிதேவி தனது காதல் கணவனைவிட்டு பிரிந்து தாயாருடன் வசித்துவருகிறார். பிரிந்து வாழ்ந்தாலும் தனது மனைவியையும் குழந்தையும் பார்க்க அவளது கணவன் அவ்வப்போது தனது மாமியார் வீட்டுக்கு வந்து போகிறார். இந்த நிலையில் சூர்யா என்ற என்பவருடன் ஏற்பட்ட உறவின் காரணமாக அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் மீனாட்சிதேவி. இதற்கு முதல் கணவனுடனான தனது குழந்தை தொந்தரவாக இருக்கக் கூடும் என கொலை செய்திருக்கிறார்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே சாம்பிள்தான். வேலூரில் தனது மனைவியின் கழுத்தை மட்டும் தனியாக வெட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்த ராணுவ வீரனிலிருந்து, தனது கணவனை ஆள் வைத்துக் கொன்ற ஈரோட்டு பெண்மணி வரைக்கும் பெரும்பாலான குற்றச்சம்பவங்களின் பின்ணனியில் இருப்பது கள்ள உறவுதான். விசாரிக்காமல் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட திருச்சி ராமஜெயத்தின் கொலைப் பின்ணணியில் பெண் விவகாரம் இருக்கிறது என்ற பேச்சு உண்டு.
படித்தவர்கள், பாமரர்கள், நகர்ப்புற வாழ்க்கை, அமெரிக்க ரிடர்ன், பட்டிக்காட்டு வாழ்க்கை, பெரியமனிதர்கள், விளிம்பு நிலை வாழ்க்கை என எந்த பேதமும் பாராமல் விரவிக்கிடக்குகிறது கள்ள உறவு. இதை வெறும் உடல் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே அணுக வேண்டியதில்லை. உடல் சார்ந்த இச்சைகள் பிரதானம் என்ற போது அதையும் தாண்டி அரவணைப்பு, பற்றுதல் என ஏதோ ஒன்றை இவர்களின் மனம் நாடியிருக்கிறது. சகிப்புத்தன்மையை தொலைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கும், கொலை செய்வதற்கும் தேவையான மனச்சிக்கல்களை உருவாக்கிய அம்சம் எது என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும்.
கள்ள உறவு என்ற சிக்கலை தனிமனிதனின் பிரச்சினையாக மட்டுமே எடுத்துக் கொண்டு விவாதித்துக் கொண்டிருப்பது எந்தப் பயனையும் தரப்போவதில்லை. இது ஒட்டுமொத்த சமூகத்தின் பண்பாட்டுச் சிக்கல்.
பிறத்தியாருடனான உறவு என்பது இன்று நேற்று உருவானதில்லை. சங்ககாலத்திலிருந்தே உண்டு. தமிழ் இலக்கியத்தில் பெருந்திணை என்ற பிரிவு இருக்கிறது. பெருமளவில் நடைபெறுவதால் இதற்கு பெருந்திணை என்று பெயர் என்ற இலக்கணகுறிப்பும் கூட இருக்கிறது. அந்தக்காலத்திலிருந்தே பரவலாக கள்ள உறவு இருந்தாலும் இது சார்ந்து கொலைகளும், தற்கொலைகளும் தற்காலத்தில் அதிகளவில் நடப்பதற்கான காரணம்தான் சமூக ஆய்வியலுக்குட்படுத்தப்பட வேண்டியது.
பண்பாடு என நாம் உருவாக்கி வைத்திருப்பது அடுத்தவர்களைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கான அம்சமாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தன் மனைவி இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்பதிலிருந்து, அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தன் கணவன் யாருடன் பழக வேண்டும், மகனும் மகளும் எங்கே போக வேண்டும், யாருடன் சுற்ற வேண்டும் என அடுத்தவர்கள் மீதான தங்கள் கண்காணிப்பை இறுக்கிக் கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆயுதம். அவ்வளவுதான். ’சுய ஒழுக்கம்’ என்பதை நமது பண்பாடு போதிப்பதில்லை அல்லது போதிக்கப்பட்ட கொஞ்ச நஞ்ச சுய ஒழுக்கத்தையும் கைவிடாமல் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியை உருவாக்கத் தவறிவிடுகிறது.
இதற்கு ஏற்றாற்போல டிவியில் ஆரம்பித்து, எஸ்.எம்.எஸ், கம்யூட்டர், இண்டர்நெட் என சகல அறிவியல் வசதிகளும் உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகள் நம் ‘சுய ஒழுக்கம்’ என்பதில் இருக்கும் ஓட்டையின் வழியாக சிக்கல்களை ஊதி வளர்க்கின்றன. கள்ள உறவு என்பது அதில் ஒரு சிக்கல்.
அரசாங்கம் போன்ற நிறுவனங்கள்(Institutions) சமூகச் சிக்கல்களின் பரிமாணங்களை முழுமையாக புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. நடிகையின் ஆடையை திரைப்படங்களில் சரி செய்வதாலும், சிகரெட் புகைப்பதை காட்சி ஊடகங்களில் காட்ட வேண்டாம் என வலியுறுத்துவதாலும் மட்டும் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது என்ற அடிப்படை புரிதல் முதலில் உருவாக வேண்டும். இது பாலியல் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை என்ற கோணத்தில் அணுகப்பட வேண்டும்.
பண்பாடு என நம் முன்னோர்கள் உருவாக்கிவைத்திருக்கும் அடுத்தவர்கள் மீதான இத்துப்போன கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அது காலத்திற்கு ஏற்ப சுய ஒழுக்கத்தை போதிப்பதாக அமைய வேண்டும். “நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்ற மனநிலையை உருவாக்கும் பண்பாடும் கலாச்சாரமும் ஆபத்தானவை. அதைத்தான் நாம் காலங்காலமாக பின்பற்றியும் கொண்டாடியும் வருகிறோம்.
“நீ எப்படி வேண்டுமானாலும் போ நான் இப்படித்தான் இருப்பேன்” என்ற மனநிலை உருவாக்கம்தான் காலத்தின் தேவை. இதைத்தான் கல்வி நிறுவனங்களில் தொடங்கி சமூக அமைப்புகள், அரசாங்கம் என ஒவ்வொரு நிறுவனமும் முன்னெடுக்க வேண்டும். சகிப்புத்தன்மை என்பது இந்த மனநிலையிலிருந்துதான் தொடங்குகிறது. இன்றைய அவசர, நவீன உலகத்தில் உருவாக்கப்படும் சகிப்புத்தன்மை மட்டுமே எண்பது சதவீத பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும். இங்கு யாருக்குமே சகிப்புத்தன்மையில்லை என்பது எவ்வளவு பெரிய துக்கம்?
சகிப்புத்தன்மையற்ற சமூகத்தில் அன்பு, பிரியம், குற்றச் செயல்கள் இல்லாத சூழல் என்பனவற்றையெல்லாம் போதிப்பதும் எதிர்பார்ப்பதும் மடத்தனம். சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் So called Institutions ஐச் சார்ந்தவர்கள்.
8 எதிர் சப்தங்கள்:
ALL BECAUSE OF "MONEY MONEY MONEY"
Prehanaiyin moolam Panam...
Panathaal varum peraasai
Panathin pinnal oduvathaal/Iyandhara thanamaana vazhkaiyaal varum veruppu
Ithu thaan intha prechanaiyin adi muthal kaaranam, Anna...
அருமையான சிந்தனைகள் மணிகண்டன்.
நவநீதகிருஷ்ணன்,
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்.
சிவகாசி.
நன்றி பிரவீண், நவநீதகிருஷ்ணன்.
nalla thakaval!
yosanai..
Good Post!
நிதர்சன உண்மைகள்...
மிக அருமையாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள். பண்பாடு என்பதைவிட சுயஒழுக்கம், சகிப்புத்தன்மை இருபாலரும் பின்பற்றவேண்டும்.
கள்ள உறவுக்கு பணம் மட்டுமே காரணம் என ஏற்றுக் கொள்ள முடியாது.
35 வயதைக்கடக்கும் பெண்கள் அன்புக்கு ஏங்குவது கணவர் உணர்ந்து
அனுசரணையாக நடந்துகொள்ளவேண்டும்..
arumaiyana sindanai nandri
Post a Comment