உலகின் வெளிச்சம் படாத பகுதிகள் என்று போதை உலகைச் சொல்லலாம். இந்த உலகம் குறித்தான எந்த நிகழ்வும் சாமானியர்களின் பார்வைக்கு அதிகம் வருவதில்லை. ஒரு கிலோ போதைப் பொருள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புடையது என்பது நம்மை வாயடைக்க வைக்கும் விஷயமாக இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் மிஞ்சக் கூடிய - நம்மை ஆச்சரியத்தின் நுனிக்குச் அழைத்துச் செல்லக் கூடிய சமாச்சாரங்கள் எல்லாம் இந்த போதை உலகில் உண்டு.
முதன்முதலாக மனிதன் எப்படி போதையை கண்டறிந்திருப்பான் என்று யோசிப்பவர்கள் கற்பனைக் குதிரையை தட்டிவிடலாம். பசி நேரத்தில் கைக்கு கிடைத்த செடியின் இலையையோ அல்லது பூவையோ மென்றுவிட்டு ஏறிய போதையில் மணிக்கணக்கில் குப்புற விழுந்து கிடந்திருக்கலாம். எழுந்து பார்த்தவன் "எவனோ மண்டையில ஓங்கி தட்டிட்டான்டா" என்று புலம்பியிருக்கலாம் அல்லது விலங்குகளிடம் இருந்து கூட கற்றுக் கொண்டிருக்கலாம்.
விலங்குகளில் 'மப்பு' ஏற்றிக் கொள்ளும் பெருங்கூட்டங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலிய கோலாக்கள் யூக்கலிப்டஸ் இலைகளுக்கான அடிமைகள். அந்த போதைக்காக யூக்கலிப்டஸைத்தான் உணவாகவே உண்கின்றன. விடிந்தும் விடியாமல் டாஸ்மாக் சென்றுவிடும் குடிமகன்களைப் போன்றவை இவை. இவை தவிர அணில், காட்டுப் பூனைகள் என்ற பல விலங்கினங்கள் சில குறிப்பிட்ட தாவரங்களை பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றன. விலங்கினங்களின் தாவர அறிவு நமக்கு புதிரானவை. இந்திய வகைக் குரங்கு (பெயர் சரியாக நினைவில் இல்லை) நாக பாம்பு கொத்தினால் ஓடிச் சென்று ஒரு வகை தாவர இலையை தின்றுவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிடும் என்று படித்த ஞாபகம் மூளைக்குள் ஏதோ ஒரு நியூரானில் ஒளிந்திருக்கிறது.
சில தாவரங்களில் போதைத்தன்மை உண்டு. இத்தகைய தாவரங்களை பயிரிடுவதும் உபயோகப்படுத்துவதும் நம் தாத்தாக்கள் காலத்திலேயே துவங்கிவிட்டது. இந்த தாத்தாக்களின் எலும்பு கூட மிச்சம் இருக்குமா என்று தெரியவில்லை. ஏறத்தாழ கி.மு. 7000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தாத்தாக்கள் இவர்கள்.
போதையின் நுணுக்கமே அதன் உபயோக அளவிலிருந்துதான் தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட அளவில் தூக்க மருந்தாக இருக்க கூடிய அதே பொருள் கொஞ்சம் அளவு(அவுன்ஸ் கணக்கில்தான்)மாறும் போது போதையாகிவிடுகிறது. வேறொரு அளவில் உட்கொண்டால் ஆளையே கூட முடித்துவிடுகிறது.
***
"டோப் அடிச்சிருக்கான்" என்று யாராவது சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம்.டோப் என்பது ஹெராயினுக்கு ஒரு செல்லப்பெயர். ஹெராயினுக்கு இப்படி தெருக்களில் புழங்கும் லோக்கல் செல்லப் பெயர்கள் நிறைய உண்டு. டீசல், குதிரை, ஜென்னி, பிரவுன், ஹெச் என்பதெல்லாம் அவற்றில் சில.
உலகம் முழுவதும் ஹெராயின் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஹெராயின் தயாரிப்பு, விற்பனை அல்லது கைவசம் வைத்திருத்தல் என எப்படியாயினும் அது சட்டவிரோதம். ஆனால் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் டையாமார்பின் என்ற பெயரில் மருந்துக் கிடைகளில் இவை கிடைக்கின்றன. சில மருத்துவ பயன்களுக்காக இந்த ஹெராயினை உபயோகப்படுத்துகிறார்கள். அதேசமயம் மருத்துவத்தின் பெயரில் திருட்டுத்தனமாக போதைக்காக பயன்படுத்துவதும் நடந்து கொண்டிருக்கிறது.
1874 ஆம் ஆண்டு பிரிட்டனைச் சார்ந்த ஆல்டர் ரைட் என்ற வேதியியலாளர் மார்பின் என்ற வேதிப்பொருளை பல்வேறு அமிலங்களுடன் சேர்த்து எதையோ தயாரிக்க முயன்று கொண்டிருந்தார். மார்பினை, அசிட்டிக் அமிலத்தின் ஒரு வகையுடன் சேர்த்து அடுப்பில் மணிக் கணக்கில் கொதிக்கவைத்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு சந்தோஷத்தில் தலை மீது குண்டு பல்பு எரிய ஆரம்பித்துவிட்டது. தான் ஒரு மிகச் சிறந்த வேதிப்பொருளை கண்டுபிடித்துவிட்டதாக துள்ளிக் குதித்தார். இது மிகச் சிறந்த மருத்துவக் குணம் நிறைந்ததாக இருக்கும் என்பது அவரது கணிப்பு. அவரை துள்ளிக்குதிக்க வைத்த வஸ்துதான் ஹெராயின். ஹெராயினை கண்டுபிடித்தாயிற்று. பரிசோதிக்க வேண்டுமே. வழக்கம் போலவே ஏமாந்த சோணகிரிகளான நாய்களுக்கும், எலிகளுக்கும் இவை கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. ஆய்வு முடிவுகள் பின்வருமாறு இருந்தது. "பயம், தூக்கம் போன்றவை உணரப்பட்டது, கண்கள் மிதப்பது போலிருக்கின்றன, சிலவற்றில் வாந்தி உணரப்பட்டது, அதிகமாக எச்சில் வடிக்கின்றன.."
பேயர் என்னும் ஜெர்மன் நிறுவனத்தின் ஃபெலிக்ஸ் ஹாப்மேன் என்பவர், ஹெராயின் என்னும் பெயரை 'ட்ரேட்மார்க்'காக பதிவு செய்தார். ஆஸ்பிரின் என்ற மருந்தின் பின்/பக்கவிளைவுகள் குறித்த பயத்தின் காரணமாக ஆஸ்பிரினுக்கு மாற்று மருந்தாக ஹெராயின் பரவலாக பயன்படுத்த துவங்கப்பட்டது. 1898லிருந்து 1910 வரைக்கும் ஹெராயின் மருத்துவத்துறையில் கொடிகட்டியது. குழந்தைகளுக்கான இருமல் மருந்தாக முக்கிய இடம் பெற்றது. மார்பினுக்கு அடிமையானவர்கள்(இந்த இடம் வரைக்கும் ஹெராயின் வேறு மார்பின் வேறு என்ற எண்ணம் இருந்து வந்தது) ஹெராயினை உட்கொள்வது மூலம் மார்பின் அடிமைத்தனத்திலிருந்து வெளிவரலாம் என்ற ரீதியில் ஹெராயினை பேயர் நிறுவனம் வணிகப்படுத்தியது. பின்னர் ஏதோ ஒரு பரிசோதனையில் மனிதனின் ஈரலில் ஹெராயின், மார்பினாக மாற்றப்படுகிறது என்று கண்டறியப்பட்டு அதிர்ச்சியை உண்டாக்கியது. இது பேயர் நிறுவனம் வரலாற்றுப் பிழை ஒன்றை செய்துவிட்டது என்று உறுதியாக்கியது.
போதைகளில் ஓபியம், கஞ்சாச் செடி போன்ற விவசாயப் பயிர்கள் ஒரு வகை என்றால், ஆல்ஹகால் போன்று நொதித்தல் முறைகளில் தயாரிக்கப்படுபவை இன்னொரு ரகம். ஹெராயின் இரண்டாவது வகை என்றாலும் ஓபியத்திலிருந்தும் ஹெராயினை தயாரிக்க முடியும். ஹெராயினை தயாரிக்க பெரிய அறிவும் ஆற்றலும் தேவையில்லை. நம் ஊர்ப்பகுதிகளில் பேட்டரித்தூளைப் போட்டு சாராயம் காய்ச்சுபவர்களிடம் சொல்லிக் கொடுத்தால் அவர்களே கூட தயாரித்துவிடலாம். ஓபியத்திலிருந்து முதல் மூன்று தரமுடைய(grades) ஹெராயின் தயாரிப்பது மிகச் சுலபம். ஆனால் அதற்கு அடுத்த தரம் மிகச் சிக்கலானது.இன்றைய மார்கெட் மதிப்பில் அரை கிலோ ஹெராயின் $5000லிருந்து $7000 வரைக்கும் விலை போகிறது. (1$=55 ரூபாய்கள்).
டெக்னாலஜி இதுதான் - மார்பினை முதலில் ஓபியத்திலிருந்து பிரிக்கிறார்கள் (ஓபியத்தை நீரில் கரைத்து, சுண்ணாம்போடு சேர்த்து வீழ்படியச் செய்ய வேண்டும். அதன் பிறகாக இதை அமோனியாவுடன் சேர்த்து வினைபுரியச் செய்ய வேண்டும். இதை வடிகட்டினால் மார்பின் கிடைக்கும்). இந்த மார்பினை நீரற்ற அசிட்டிக் அமிலத்துடன் உடன் ஐந்தடுக்கு வழிமுறையில் வினை புரியச் செய்து ஹெராயினை தயாரிக்கிறார்கள்.
ஐந்தடுக்கு முறையில் முதலில் மார்பினை அதே அளவு எடையுள்ள நீரற்ற அசிட்டிக் உடன் சேர்த்து 85 டிகிரி செல்சியஸில் கொதிக்க வைக்கிறார்கள். இரண்டாவது நிலையில்(Second stage) முதல் நிலையில் கிடைத்த பொருளை நீருடனும், ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடனும் சேர்த்து வினை புரியச் செய்யப்படுகிறது. மூன்றாவது நிலையில் இந்தப் பொருளை சோடியம் கார்பனேட்டுடன் சேர்த்தால், திடப்பொருளாக குடுவையின் அடிப்பகுதியில் படிகிறது. இந்த திடப்பொருள் நான்காவது நிலையில்(Fourth Stage) ஆல்கஹால் மற்றும் தூண்டப்பட்ட கார்கோலுடன் சேர்த்து ஆல்கஹால் முற்றாக ஆவியாகும் வரை கொதிக்க வைக்கப்படுகிறது. இப்பொழுது ஹெராயின் தயார். இதற்கடுத்த ஐந்தாவது நிலை அவசியமானது இல்லை என்றாலும் இந்த முறையில் ஹெராயின் வெண்மை நிற பவுடராக மாறுகிறது. இது மேற்கத்திய நாடுகளுக்கு பரவலாக கடத்தப்படுகிறது. இதற்கு "நெ.4 ஹெராயின்" என்று பெயர். இந்த ஐந்தாவது நிலை மட்டுமே மிகச் சிக்கலானதும், ஆபத்து நிறைந்ததும் ஆகும்.
மற்ற போதைப் பொருட்களைக் காட்டிலும் ஹெராயினை அதிகம் விரும்புபவர்கள் இருக்கிறார்கள். இரத்தத்தில் மிக வேகமாக கலந்து மூளையை குத்தாட்டம் போட வைக்கும் வேகத்தில் ஹெராயினுக்கு நிகர் ஹெராயின் தான். ஹெராயினை எப்படி உட்கொள்வது என்பதற்கு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். ஊசி மூலமாக உடம்புக்குள் செலுத்திக் கொள்ளலாம், ரூபாய்த்தாளை கூம்பு வடிவத்தில் சுருட்டி அதன் ஒரு முனையில் ஹெராயினை வைத்து மறுமுனையில் மூக்கு அல்லது வாயின் வழியாக உறிஞ்சிக்கொள்ளலாம். "டிராகனை துரத்துதல்(chasing the dragon)" என்ற ஒரு முறையும் இருக்கிறது.இந்த முறையில் ரூபாய்த்தாள் போன்ற கெட்டியான காகிதம் ஒன்றில் ஹெராயினை வைத்துக் கொண்டு அதன் கீழ் பகுதியில் மெழுகுவர்த்தியை பற்ற வைத்துவிடுவார்கள். சூடேறுவதால் ஹெராயினிலிருந்து கிளம்பும் புகையை உறிஞ்சுவார்கள். இது இமிடியேட் சொர்க்கமாம்.
ஒவ்வொரு முறையில் உட்கொள்ளும் போதும் போதை உண்டாவதற்கான நேர அளவு மாறுபடும். தசைகளில் ஊசி மூலமாக செலுத்தினால் 5 முதல் 8 நிமிடங்கள் என்றால் நரம்புகளில் ஊசி மூலமாக செலுத்தினால் 7 முதல் 8 வினாடிகளிலேயே போதை ஏறிவிடும். "டிராகன்" முறையில் 2முதல் 5 நிமிடங்களில் மண்டை கிறுகிறுத்துவிடும்.
ஹெராயினுக்கு அடிமையானவர்கள் திடீரென்று ஹெராயின் உட்கொள்வதை நிறுத்தினால் அதன் விளைவுகள் மிகக் கொடூரமானதாக இருக்கும். இதற்கு withdrawal syndrome என்று பெயர். ஹெராயினை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தவர் அதனை நிறுத்திய ஆறு மணி நேரத்தில் விளைவுகள் தென்படத் துவங்கும். வியர்வை, மன அழுத்தம், பதட்டம், மூட்டுகளில் உண்டாகும் வலி, தூக்கமின்மை, தசை மற்றும் எலும்பு வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு என்று இந்தப் பட்டியலை நீட்டினால் இன்னும் அரைப்பக்கத்திற்கு மேலாக போகும்.ஹெராயினை எந்தவிதமான மருத்துவ ஆலோசனையும் இன்றி திடீரென நிறுத்துவது எதிர்மறையான விளைவுகளிலேயே முடிந்திருக்கின்றன. அதிக பட்சமாக மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் காரணமான தற்கொலைகள் வரை.
பார்த்து சூதானமா நடந்து கொள்ளாவிட்டால் கதை கந்தலாகிவிடும்.
[சில ஆண்டுகளுக்கு முன் உயிரோசை-இணைய இதழில் வெளியானது]
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment