விபத்துகளில் தப்பித்துக் கொண்டிருந்த
அவனிடம்
மூன்று கேள்விகளை கேட்க விரும்பிய கடவுள்
முதலில்
ஒரு பன்றிக்குட்டியை தூது அனுப்பினார்
தொந்தரவுகளை விரும்பாதவன்
முதல் கேள்வியே புரியவில்லை என்று திருப்பியனுப்பியதில்
கோபமுற்ற கடவுள்
முதல் கேள்வியைத் தவிர்த்துவிட்டு
இரண்டாம் கேள்விக்கான பதிலை தரச்சொல்லி
குழந்தையை அனுப்பியிருந்தார்
அக்குழந்தைக்கு இனிப்பொன்றை கொடுத்து
பதிலின்றி அனுப்பி வைத்தான்
அவமானமுற்ற கடவுள்
மூன்றாம் கேள்வியுடன் அவன் இடத்தை அடைந்தபோது
அவன் காணாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள்
217 வருடங்களாக
அவனைத் தேடிக் கொண்டிருக்கும் கடவுளின்
கேள்விகளை கண்டறிய
தவமிருக்கும்
இந்த மூக்குத்தி தேவதைக்கு தெரிய வாய்ப்பில்லை
அந்தக் கேள்விகள் உங்களிடம் இருக்கிறதென.