Tuesday, November 22 By: வா.மணிகண்டன்

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி



கருமுகில் திரண்டு நிற்கும்
இந்த மழைக்கால மாலையில்
மிக மூர்க்கமாக முயன்று கொண்டிருக்கிறேன்
செம்மண்ணைக் குழப்பி 
ஒரு குருவியைச் செய்துவிட-

தன் 
அழகின்மையின் துக்கத்தை 
கண்களில் சேகரித்திருக்கும் 
தவிட்டுக்குருவியைத்தான் உருவாக்கவிருக்கிறேன்

சின்னஞ்சிறு மஞ்சள் அலகில்
வயல்வெளியைத் தூக்கிச் செல்லும்
என் குருவி
தன் தலையை சிலுப்பி 
ஒரு நதியை இடம் மாற்றும்

அதன் 
சிறகுகளின் சாம்பல் நிறத்திற்காக
இந்நகரத்தின் இல்லாத வனங்களை பொசுக்கி வைத்திருக்கிறேன்
அலகுகளின் நிறத்திற்கு
சோடியம் விளக்கின் செம்மஞ்சள் ஒளியை சேகரித்திருக்கிறேன்
சீரற்ற அதன் பாடலுக்கு
வாகன இரைச்சலை பயன்படுத்திக் கொள்வேன்

தனக்கான போட்டியாளனை விரும்பாத
கடவுள்
பறக்கவே முடியாத இந்நகரத்தில்
குருவியின்
எளிமையான முதல் சிறகசைப்பு குறித்து
கேலி செய்கையில்
அவனை செருப்பால் அடித்து 
விரட்டிய கணம்
குழைத்த சேற்றுக்குள்
விழுகிறது
முதல் மழைத்துளி