Tuesday, June 14 By: வா.மணிகண்டன்

இது விபத்து நடந்த பகுதி



கருணையில்லாத
இந்நகரத்தின் மழைக்கால சாலைகள்
விபத்தில்
இறந்தவர்களின் கதைகளை
வட்டமிட்டு காட்டுகின்றன

மார்கெட் சாலையின்
மூன்றாவது திருப்பத்தில்
ஷோபனா
விழுந்துகிடந்த இடத்தில்
வட்டத்தினை
வரைந்து கொண்டிருந்தார்கள்

வட்டத்திலிருந்து
ஐந்தரையாவது அடியில்
அமர்ந்திருந்த
ஒரு கிழவி
மூன்று வயது நவ்நீத்தை
தவிக்கவிட்டுவிட்டாள்
என வஞ்சித்துக் கொண்டிருந்தாள்

துடைக்க
எந்தக் கையும்
நீளாத வெறுமையில்
ஈரமான கண்களுடன்
உறங்கிக் கொண்டிருக்கிறான்
நவ்நீத்.

முடிவுறாத கோடை நாளின்
மதியத்தில்
அவனுக்கான பாடல் ஒன்றை
இசைத்துக் கொண்டிருக்கிறது
தூரத்து தனிப்பறவை

வெறிச்சோடிக் கிடக்கும்
வசந்தகாலத்தின் சாலைகளில்
இவன்
அசைவில்
பதறி எழுகிறது
ஒரு செம்பறவை

பொம்மைகள் கிறுக்கப்பட்டிருக்கும்
அறையின் சுவர்களில்
வழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் குளிர்

பேய்க்காற்று அவனுக்கான
கதைகளை சுமந்து
அலையும்
இன்று
ஷோபனாவின் வட்டத்திற்கு
அருகில்
இன்னொரு வட்டத்தை வரைகிறார்கள்.

ஒரு பருவத்தில்
இருந்து
இன்னொரு பருவத்திற்கான
இடைவெளியில்
இறந்து பிறக்கிறான்
நவ்நீத்
நீங்களும்
நானும் அறியாமல்.