Thursday, September 30 By: வா.மணிகண்டன்

மரணம் தின்னும் காமம்


காமத்தால் நிரம்பியிருக்கும்
தன்
குளிர்ந்த இரவொன்றில்
இவன்
மரணத்தை நினைக்கத் துவங்குகிறான்

மரணத்தின் நிறமென
அடித்து இழுக்கப்பட்ட
பிணத்தின்
அடர் சிவப்பு குருதிப் பட்டை
கொன்று
எரிக்கப்பட்ட உடற்கருமை
பீய்ச்சிய
விந்தின் வெண்மை
எதுவும் பொருந்தவில்லை

சாவின் உருவமென
ஓடிய நீரின் ஒழுங்கீனம்
நடுங்கும் நெருப்பின் நடனம்
முலைகளில் பதிந்த விரல்வரிகள்
எதுவும் ஒப்புதலில்லை

மரணத்தின் குரலென
குரல்வளையில் துளையிடப்பட்ட
குழந்தையின் வீறிடல்
நொறுங்கும் கண்ணாடியின் ஒசை
கலவியின் உச்சத்தில் முனகும்
பெண்ணின் குரல்
எதுவும் பொருத்தமில்லை

சாவின் வடிவமென
விஷமேற்றப்பட்ட ஊசி
விட்டத்தில் அசையும் நைலான் கயிறு
தரை தெரியாத மலையுச்சி
எதுவும் அமையவில்லை

நள்ளிரவு தாண்டிய
நடுங்குதலில்
மரணம் பிடிபடாத
துக்கத்தில்
இவன்
இப்பொழுது
மரணத்தை விடுத்து
காமத்தின் நுனியை தொட
முயல்கிறான்

உதிர்ந்து கொண்டிருக்கின்றன
காமமும்
மரணமும்
பந்தலிருந்து
நழுவிச் சொட்டும்
நீர்த்திவலைகளென.