
மரணத்திற்கும்
உடல் சிதறலுக்குமான
இடைவெளியில்
நிகழ்ந்த
விபத்தொன்றில்
சிவப்புச்சாயத்தில் விழுந்த
துணியென கிடந்தவனை
நிலம் உரச
வெளியில் இழுத்தார்கள்.
அனிச்சையாக நகரும்
கரங்களின் சிவப்புப்பட்டையை
புதிரான ஓவியமாக்கிவன்
சில பெண்களின்
கருணையைப் பெற்றுக் கொண்டான்.
நினைவு வந்த கருநாளில்
அவனிடம்
தண்டுவடம் முறிந்து போனதாகச்
சொன்ன போது
இடுப்புக் கீழ் செயல்படாதென்ற
துக்கத்தின் கண்ணீர்
ஈரமாக்கிய தலையணையிலிருந்து
கருணையின் கடவுள் தோன்றினார்.
மது அருந்துவதிலும்
சிகரெட் உறிஞ்சுவதிலும்
தடையில்லை என்றவுடன்
சற்று ஆசுவாசமடைந்த
மெலிபவனின் பொழுதுகள்
காற்றில் அலையும்
டிஜிட்டல் உருவங்களால்
வடிவமைக்கப்படலாயிற்று.
சலனமில்லாத வெறும் பகலில்
ஒரு தலைவன் மார்க்ஸியம் பேசிக் கொண்டிருக்கிறான்
பழைய கிரிக்கெட் போட்டியில் ஒருவன் பந்தை விரட்டிக் கொண்டிருந்தான்
கவிஞன் என்று சொல்லிக் கொண்டவன் தன் பிரதாபங்களை அடுக்குகிறான்
பெட்ரோல் விலை பற்றி வட்டமாக அமர்ந்த நால்வர் அரிதாரங்களுடன் பேசுகிறார்கள்
காட்டெருமைகளால் நிரம்பிய வனத்தில் ஒரு யானை தனித்து அலைகிறது
சலித்துச் சேனலை மாற்றியவன்
உந்திச் சுழி தெரிய நடந்து கொண்டிருந்த
நெடுந்தொடர் நாயகியைஅழைக்கிறான்.
யாரும் இல்லாத தனிமையில்
அவள்
டிவியில் இருந்து இறங்கி வருகிறாள்
கண்களை மூடிக் கொண்டவனுடன்
சல்லாபித்து திரும்பியவள்
இனிமேல் வரப்போவதில்லை என
சொல்லிச் செல்கிறாள்.
அதிர்ந்தவன் காரணம் கேட்க
எத்தனிக்கும் கணத்தில்
வேறொரு விளம்பரப் பெண்
ஆட
வந்துவிடுகிறாள்.