Jan 26, 2010

கோவை சந்திப்பு- ஜெயமோகன்: சில விமர்சனங்கள்

கோவை ஞானியுடன் ஜெயமோகன்

ஜெயமோகன் மீது வைக்கப்படுவதாக நான் கோவை வாசகர் சந்திப்பில் குறிப்பிட்ட விமர்சனங்களின் தொடர்ச்சியாக ஜெ வுடன் நிகழ்த்திய மின்னஞ்சல் பரிமாற்றங்களின் தொகுப்பு.

===============
டியர் சார்,

வணக்கம். நாகர்கோயிலை அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களை சனிக்கிழமையன்று கோவையில் சந்தித்தது மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் அளிப்பதாக இருந்தது. குறிப்பாக ஹோட்டல் அறையில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அமெரிக்க தேசத்தில் இருந்து உருவாகி வந்திருக்கும் விமர்சனக் கோட்பாடுகள், நகுலனின் 'ராமச்சந்திரன்' கவிதையில் அமெரிக்க விமர்சன சாராம்சத்தோடு சு.ரா கொண்டிருந்த பார்வை, நாவல் உள்ளிட்ட இலக்கிய படைப்புகளின் வடிவம், யுவனின் மணற்கேணி வாசகனுக்குள் உருவாக்கும் சித்திரங்கள், கவிதையின் வடிவத்தில் நாம் இன்று அடைந்திருக்கும் புள்ளியியை நோக்கிய இரண்டாயிரம் ஆண்டுக்கான பயணம், சுகுமாரன் தமிழ்க் கவிதை வெளிக்குள் நிகழ்த்திய பிரவேசம், Abstract ஆன புரிதல் போன்றவற்றை குறித்து நீங்கள் பேசியவற்றை உரையாடலின் சுவாரசியமான பகுதிகளாக உணர்ந்தேன்.

அந்தச் சமயத்தில் உங்களின் மீதாக வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் பற்றிக் குறிப்பிட்ட என் பேச்சின் தொடர்ச்சியாக எனக்குள் இருந்த சில வினாக்களை அறையிலேயே கேட்டிருக்க வேண்டும் என பிறகு தோன்றியது. அவற்றை பின்னர் நிகழ்ந்த வாசகர் சந்திப்பில் தவிர்த்திருக்கலாமோ என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

உங்களின் மீதான எதிர்மறை விமர்சனங்களாக இலக்கியப்பரப்பில் வைக்கப்படுபவைகளில் நான் வாசகர் சந்திப்பில் குறிப்பிட்டவை:

1. ஜெயமோகன் தன் படைப்புகள் மீதான எந்த விதமான பரிச்சயமும் இல்லாத இணைய வாசர்களுக்காகவும் Compromise செய்து கொண்டு தனக்கான ஒரு பீடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

2. தன்னோடு இருப்பவர்கள் வாசகனாக இருப்பதை விரும்பும் ஜெ.மோ அவன் எழுத்தாளனாக விரும்புவதில்லை.

3. முந்தைய விமர்சனத்திற்கான துணை விமர்சனம். சமீபத்தில் வந்திருந்த இணையக் கட்டுரையிலிருந்து- ஜெயமோகன் புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்காமல், தனக்கு உவப்பானவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துபவர்.

இத்தகைய விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்க்கொள்கிறீர்கள், இவை உங்களின் படைப்பூக்கத்தில் குறுக்கிடுகின்றனவா, இந்த மூன்று விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் அளிப்பதாக இருந்தால் என்ன சொல்வீர்கள். இதுதான் நான் பேசியது.

இதைச் சொல்லி முடிக்கும் போது பின்வரிசையில் நின்று கொண்டிருந்த என்னை முன்னால் அமர்ந்திருந்த சிலர் திரும்பி பார்த்த விதத்தில் கொஞ்சம் தடுமாறினேன். அடுத்த கணம் கோவை ஞானி அவர்கள் எழுந்து இந்த வினாக்கள் இலக்கியச் சூழலில் இருபது வருடங்களாக எழுப்படுபவை என்றும், இவை குழாயடிச் சண்டையின் நீட்சி என்றும், தாங்கள் இவற்றிற்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்ற போது திடுக்கிடலாக இருந்தது.

ஞானியோ அல்லது வேறு எவரோ அந்த இடத்தில் எழுவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வெட்டிப்பிரச்சினை செய்ய வந்திருக்கும் ஒரு இளைஞன் என்றே என்னைப் பற்றிய பிம்பம் உருவாகியிருக்கும் என்று மனம் யோசிக்கத் துவங்கிவிட்டது. நீங்கள் பதில் சொல்ல ஆரம்பித்திருந்தீர்கள். ஞானிக்கு என் நிலையை தெளிவாக்க அடுத்த முறை என்ன பேச வேண்டும் என்று மூளை வார்த்தைகளைப் பின்னிக் கொண்டிருந்ததால் உங்களின் பதிலை முழுமையாக உள்வாங்க முடியவில்லை.

வேறு ஒருவர் குறுக்கிட்டிருந்தால் அத்தனை சலனம் அடைந்திருக்க மாட்டேன் என்று என்னால் சொல்ல முடியும். ஞானி என்னும் ஆளுமை பற்றி நான் வாசிக்கத் துவங்கிய கட்டத்தில் இருந்து உருவாக்கியிருந்த பிம்பம் பிரம்மாண்டமானது. அத்தகைய ஒரு ஆளுமை நான் பேசியதற்கு எதிர்வினையாற்றுவதை எப்படி எதிர்கொள்வது என்பதை திட்டமிட வேண்டிய கட்டாயத்திற்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு தள்ளப்பட்டேன். அவை பதட்டமான நிமிடங்களாகவே எனக்குள் பதிந்திருக்கிறது.

எனது நோக்கம் வேறானது. இத்தகைய விமர்சனங்கள் உங்களை காயப்படுத்துகிறதா என்பதையும், அவற்றை எதிர்கொள்ளும் போது எப்படி கடந்து வருகிறீர்கள் என்பதையும் அறிய விரும்பும் நான் இத்தகைய கேள்விகளை மற்ற அனைத்து எழுத்தாளர்களிடமும் எழுப்பப் போவதில்லை. மிக விருப்பமான எழுத்தாளர்களிடம் மட்டுமே இந்த எதிர்மறை விமர்சனங்களை என்னால் நேரடி பேச்சில் முன் வைத்திருக்க முடியும். நாம் முன்னோடிகளாக கருதுபவர்கள், தங்களின் மீதான பல்வேறுவிதமான விமர்சனங்களையும் எப்படி தாண்டி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் இருக்கும் எளிய ஆர்வத்தில் உருவாகும் வினாக்கள் அவை.

தமிழ் இலக்கியப் பரப்பில் தற்கால விமர்சன முறைகளின் அவலச் சூழல் பற்றி நாஞ்சில் நாடன் அவர்கள் குறிப்பிட்ட செய்திகளின் தொடர்ச்சியாகவும் என் பேச்சை அமைத்துக் கொள்ள நான் முயன்றதன் விளைவே எனக்குள் உருவான இந்த பதட்டத்தின் துவக்கப்புள்ளி.

நன்றி.

அன்புடன்,
வா.மணிகண்டன்.
=======
அன்புள்ள மணிகண்டன்,

இந்த வாதங்கள் மட்டுமல்ல இத்தகைய எந்த வாதங்களுமே என்னை பாதிப்பதில்லை. நான் உங்களிடம் மட்டுமல்ல அத்தனை நண்பர்களிடமும் கோருவதே அப்படி பாதிக்க அனுமதிக்காதீர்கள், பாதிப்பதை தடுக்க முடியவில்லை என்றால் முழுமையாக ஒதுங்கிவிடுங்கள், படிக்கவே படிக்காதீர்கள் என்பதே. சில்லறை விவாதங்கள் அளவுக்கு புனைவுத்திறனை பாதிக்கும் விஷயம் வேறில்லை. அதற்கு அடுத்ததாக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது சில்லறை விஷயங்கள் நம் படைப்பில் கண்டு பாராட்டப்படுவது.

இந்தக் குற்றச்சாட்டுகளையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் தமிழில் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரமாக விமர்சனங்கள் செய்துவருகிறேன். நேர்மையான ஒரு விமரிசகன் ஒரு படைப்பை நல்லது என்றால் அதன் வழியாக நூறு படைப்புகளை நிராகரிக்கிறான். அந்த நூறு பேருக்கும் மனக்கசப்பை அளிக்கிறான். அதிலும் நான் மிகக்கூர்மையாக, கறாராகச் சொல்பவன். அப்படியானால் எத்தனை கசப்பு இருக்க வேண்டும்? அந்தக் கசப்பு என் மீது இருப்பதில் ஆச்சரியமே இல்லை.

விமரிசகன் ஒருவன் புனைகதைகளும் எழுதினான் என்றால் அது இன்னமும் சிக்கலானது. அந்த நூறுபேரும் வன்மத்துடன் பாய்வதற்காக அவன் தன் கதைகளை திறந்து வைக்கிறான் அல்லவா? அதை நான் இருபதாண்டுக்காலமாகச் செய்து வருகிறேன். அது ஒரு வெல்விளி.

அப்படி இருந்தும் என் படைப்புகளைப்பற்றி இன்று வரை ஆணித்தரமான மறுப்புகள் அல்லது நிராகரிப்புகள் எத்தனை வந்துள்ளன? போகிறபோக்கில் மேலோட்டமாக ஏதாவது சொல்வார்கள். சொல்பவனின் தகுதியின்மைக்குச் சான்றாக அந்த வரிகள் இருந்துக்கொண்டிருக்கின்றன. அல்லது சில்லறை பிழைகண்டுபிடிப்புகள் -- அப்போதுகூட உருப்படியான பிழைகள் ஏதும் இன்றுவரை சுட்டப்பட்டதில்லை.

இது எனக்கு நானே வைத்துக்கொண்ட அறைகூவல், சோதனை. என்னை நானே தாண்டிச்செல்வதற்கான முயற்சி. தமிழ் அறிவியக்கத்தின் பெருபகுதியை எனக்கு எதிரான சக்தியாக நிறுத்திக்கொண்டு இந்த முரணியக்கத்தை நிகழ்த்துகிறேன். இதில் இக்கணம் வரை நான் மிக தூரத்தில் முன்னகர்ந்துகொண்டுதான் இருக்கிறேன் .இது புதுமைப்பித்தனும் தனக்கு விட்டுக்கொண்ட அறைகூவல்தான்.

இதையே இந்தக் கிசுகிசுக்கள் குறித்தும். இத்தனை எழுதும் ஓர் எழுத்தாள- விமர்சகனைப் பற்றி இத்தனை மேலோட்டமாக, ஆதாரமில்லாத சில விஷயங்களை கிசுகிசுக்க மட்டுமே முடிகிறதென்றால் அது எத்தனை பெரிய சான்று இல்லையா? உண்மையில் இவ்வரிகள் அளித்த மன எழுச்சியும் தன்னம்பிக்கையும் சாதாரணமானதல்ல.

இத்தகைய ஒரு தொடர் செயல்பாட்டில் பிழைகள் கண்டிப்பாக நிகழக்கூடும். கவனமின்மை காரணமாக பாரபட்சங்கள் நிகழக்கூடும். ஆனால் என் கடுமையான விமரிசகர்கள்கூட இத்தனை அபத்தமாக சிலவற்றை மட்டுமே சொல்லமுடிகிறது என்பது அதிகமாக ஏதும் பிழை நிகழவில்லை என்பதற்கான நற்சான்றிதழ்.

1. இந்த இணையதளத்தில் என்ன சமரசம் செய்துகொண்டிருக்கிறேன் என்பதை இதை வாசிக்கும் எவருமே மதிப்பிடலாம். என் எழுத்துக்கான எனக்கான தளம் இது. இதில் என் விருப்பப்படி எனக்கான வாசகர்களுக்காக மட்டுமே எழுதுவேன் என்று அறிவித்து இந்த இணையதளத்தை தொடக்கம் முதல் நடத்தி வருகிறேன். சென்ற இருவருடங்களில் வந்த பல மிகக் கனமான நூல்கள் அனைத்தும் இந்த இணையதளத்தில் வெளிவந்தவை. 'ஈழ இலக்கியம் ஒரு பார்வை' 'இந்தியஞானம்' 'புதியகாலம்' போன்று பல. இந்நூல்களை விட தரமான, கனமான எந்த நூல்கள் சென்ற இருவருடங்களில் தமிழில் வெளிவந்துள்ளன?

நான் இன்றுவரை எழுதிய விஷயங்களின் உச்சநிலை வெளிப்பாடுகள் பல இந்த இணையதளத்திலேயே வந்துகொண்டிருக்கின்றன கீதைமுதல் இன்றைய காந்தி. இவ்விமரிசனங்களைச் சொல்பவர்களில் எத்தனைபேரால் இவற்றை சாதாரணமாக வாசிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியும் என்றே எனக்கு தெரியவில்லை. இது எதையுமே படிக்காமல், புரிந்துகொள்ள முடியாமல் செய்யப்படும் ஒரு குத்து மதிப்பான பேச்சு மட்டுமே

பீடத்தை உருவாக்க இந்த இணையதளத்தை நான் நடத்துகிறேன் என்பதையும் இதன் பக்கங்களை வைத்தே மதிப்பிடலாம். இந்த இணையதளம் வாசகர்களை 'தாஜா' செய்து திரட்டுவதில்லை. அவர்களை சீண்டுகிறது, உடைக்கிறது, சோதிக்கிறது. இதில் ஏதேனும் ஒரு விஷயத்தால் சீண்டப்படாமல் எத்தனை வாசகர்கள் இதை வாசித்திருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள் -- நீங்கள் உட்பட. இது விவாதிக்கவே அறைகூவுகிறது

அதை மீறி 'பீடம்' உருவானால் அது காலம் கலைஞனுக்கு அளிக்கும் பீடம். அவனுக்குரிய பீடம் அது. உலகெமெங்கும் கலைஞர்கல் அமர்ந்திருக்கும் பீடம். அந்த பீடத்தின் முன் பிறர் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். முடியாதவர் மூலையில் அமர்ந்து பொருமவும் செய்யலாம்


2 நான் இன்றுவரை எந்தெந்த ஆக்கங்களை பற்றி பேசியிருக்கிறேன் என்று ஒரு பட்டியல் போட்டு அதில் எவர் என் நண்பர்களாக இருந்து எழுத ஆரம்பித்ததும் என்னால் விலக்கப்பட்டவர்கள் என்று சொல்லி நிரூபிக்க வேண்டிய விஷயம் அல்லவா இது? அப்படி ஒரே ஒருவரைப் பற்றி சொல்லட்டும் .

சமீபத்தில் நான் எழுதிய கட்டுரைகளை பார்ப்போம். யுவன் சந்திரசேகர், எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் என் நண்பர்களாக இருந்து எழுத வந்து இன்றும் நண்பர்களாக நீடிப்பவர்கள். இப்படி குறைந்தது 10 பேரையாவது சொல்லமுடியும். இவர்களில் பலருக்கு அவர்களின் ஆரம்பகால எழுத்துக்களை வடிவமைக்க, பிரசுரிக்க நான்தான் உதவிசெய்திருப்பேன்.

அதேபோல சு.வெங்கடேசன் போன்றவர்கள் என் மிகப்பரிய எதிரிகளாக அறியப்பட்டவர்கள். அப்படி பேசியவர்கள், எழுதியவர்கள். பேசி எழுதி வருபவர்கள். அது அவர்களின் அரசியல்நிலைபாடு. கண்மணி குணசேகரன், ஜோ.டி.குரூஸ் போன்றவர்கள் எனக்கு அறிமுகமே இல்லாதவர்கள். இவர்களைப்பற்றி நான் எழுத இவர்களின் படைப்புகள் என்னைக் கவர்ந்ததே காரணம். அதேசமயம் எனக்கு தெரிந்தவர் என்பதற்காக என்னைக் கவராத ஒரு ஆக்கத்தை ஒருபோதும் நான் நன்று என்று சொல்வதில்லை.

காரணம் எனக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். யாருமே வாசிக்காமல் ஒரு முன்னுரை, மதிப்புரை எழுதிவிட்டுச் செல்பவன் அல்ல நான். உடனடியாக சிலநூறு எதிர்வினைகள் எனக்கு வரும். அந்த வாசகர்கள் என் நேர்மையை, ரசனையை நம்புகிறார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டவன்.


3. எனக்கு 'உவப்பானவர்களை' தானே நான் எழுதமுடியும்? இலக்கியம் வழியாக, எழுத்து வழியாக உவப்பானவர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு 'உவப்பற்ற'வர்கள் என்னை கடுமையாக எழுதியவர்கள் தரமான ஆக்கங்களைக் கொடுத்தபோது அவர்களின் ஆக்கங்களை முதன்முதலில் எடுத்து அறிமுகம் செய்து முன்வைப்பவனாகவே இக்கணம் வரை இருந்திருக்கிறேன். ஷோபா சக்தியோ, சு வெங்கடேசனோ இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போமே... இன்றைக்கு எனக்கு உவப்பில்லாமல் இருப்பவர்கள், என்னை உவக்காதவர்கள் ஒரே ஒரு நல்ல ஆக்கத்தை எழுதி நான் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன் என்றால் அவர்கள் அதை சுட்டிக்காட்டலாமே

இந்த ஒட்டுமொத்த விவாதத்தையே இப்படிச் குறுக்கலாம். தமிழில் வெளிவந்த எந்த நல்ல ஆக்கத்தை நான் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் புறக்கணித்திருக்கிறேன்? எந்த மோசமான ஆக்கத்தை தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் தூக்கிப்பிடித்திருக்கிறேன்? இவர்கள் அதை எடுத்துச் சொல்லி, அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதலாமே. அதற்கு நான் பதில் சொல்கிறேன். அதுதானே இலக்கிய விவாதத்தின் வழி?

என் ரசனை மிக வெளிப்படையானது. காரணகாரியங்களை விரிவாகச் சொல்லாமல் ஒரு படைப்பைக்கூட நான் விமரிசித்ததில்லை. அந்த காரண காரியங்களுக்கு ஒரு தெளிவான தொடர்ச்சி உண்டு. அதன் வழியாக துலக்கமாக தெரியும் என்னுடைய பார்வை ஒன்று உண்டு. அந்தப்பார்வை சீரானது. அதில் முரண்பாடிருந்தால் சுட்டிக்காட்டலாம். அதற்காகவே அவை பிரசுரிக்கப்படுகின்றன. மனம் போன போக்கில் ஒன்றை சொல்லவும் முடியாது விடவும் முடியாது. நான் சொன்ன பல்லாயிரம் வாசகர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

*
நீங்கள் கோவை அரங்கில் அக்கேள்விகளை அரங்கில் கேட்டதில் தவறில்லை. அது தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் ஞானி பொறுமை இழந்ததிலும் காரணம் உள்ளது. இருபது வருடங்களாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் -- வேறு வேறு எழுத்தாளர்கள். இதற்கு விரிவாக திட்டவட்டமாக மீண்டும் மீண்டும் பதில் சொல்லப்பட்ட பிறகும் புதிய குரல்கள் கிளம்பிவருகின்றன. ஒரு ஆதாரம் கூட காட்டாமல் இதையே சொல்கிறார்கள். அதை ஞானியும் இருபதாண்டுகளாக, நிகழ் நடந்த காலம் முதல், கண்டுவருகிறார்.

பலரது முயற்சியால் பல வருடங்கள் கழித்து ஒரு கூட்டம் நிகழும்போதும் இதையேதான் பேசவேண்டுமா என்றுதான் அவர் கேட்டார். நான் எழுதிய இத்தனை பெரிய நாவல்கள் இருக்கின்றன, இத்தனை கதைகளும் கோட்பாடுகளும் என்னால் எழுதப்பட்டிருக்கின்றன, அவற்றைப்பற்றி பேச்சே இல்லாமல் மீண்டும் வம்புகளைத் தவிர எதையுமே என்னிடம் கேட்பதற்கில்லையா என்றுதான் அவர் சினம் கொண்டார்.

அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயம் இதுவே. மிக கோபமாகக் கூட சொல்லியிருக்கிறார். 'நீங்கள் இந்த வம்புகளின் தளத்தைவிட்டு விஷ்ணுபுரம் வழியாக வெளியே போய்விட்டீர்கள். கொற்றவை வழியாக முற்றிலும் புதிய இடத்துக்கு சென்றுவிட்டீர்கள். அங்கே வரக்கூடியவர்களை தவிர எவருமே உங்களிடம் பேச தகுதியற்றவர்கள். மற்றவர்களை புறக்கணித்துவிடுங்கள். பதில் சொல்லாதீர்கள்' என்று அவர் எனக்கு பலமுறை ஆணையிட்டிருக்கிறார். அந்த ஆணையைத்தான் அங்கேயும் சொன்னார். அது என் ஆசானின் ஆணை. ஆனால் அதை முழுமையாக நிறைவேற்ற என்னால் இயலவில்லை. ஆகவே தான் மீண்டும் இப்பதில்கள்

ஜெ
=====
டியர் சார்,

ஒரு நீண்ட பதிலுக்கு நன்றி.

ஜெயமோகனை விஷ்ணுபுரம் வழியாகவோ அல்லது கொற்றவை வழியாகவோதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழின் சிறந்த படைப்பாளி ஒருவரை வேறு முறைகளில் எதிர்கொள்ளுதல் வெற்று அரசியலாகிவிடலாம்.

ஆனால் வெறும் இலக்கிய படைப்பு சார்ந்த செயல்பாடுகளில் மட்டும் நீங்கள் இயங்குவதில்லை. மத ரீதியான விவாதங்களை நீங்கள் முன்னெடுக்கிறீர்கள், இலக்கிய அரசியல் பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள். சித்த மருத்துவம் தொடங்கி இந்திய தத்துவ மரபியல் வரை பல்வேறு தளம் சார்ந்த இயக்கத்தில் இருக்கும் ஒருவரை அவரின் படைப்புகளை முன்வைத்து மட்டுமே எதிர்கொள்வது என்பது சாதாரண வாசகன் ஒருவனுக்கு சாத்தியமா?

வெறும் அச்சு ஊடகம் மட்டுமே இருந்த சமயத்தில் தீவிர இலக்கியத்தில் இயங்கும் படைப்பாளியை நோக்கி தொடர்ந்த வாசிப்பு பயிற்சியின் மூலமாகவே வாசகன் ஒருவன் வர முடியும். அப்படி வாசிப்பனுபவம் நிறைந்த ஒருவன் படைப்பாளியை நோக்கி வெற்று விமர்சனங்களை வைக்கும் போது அவை உருப்படியில்லாதவை என்று நிராகரிக்கலாம்.

ஆனால் வாசிப்பு என்பதே சிறிதும் இல்லாத மிக மிகச் சாதாரணமான வாசகர்கள் உலவும் தளமாகவே இணையத்தை பார்க்கிறேன். விகடன், குமுதத்தில் படித்தவைகளை மட்டுமே வைத்துக் கொண்டு, தொலைதூர பஸ்ஸில் சே பற்றியும், கம்யூனிஸம் பற்றியும் உரத்த குரலில் பேசும் நபர்களை சந்திக்கும் அதே அனுபவம் தானே இணையத்தில் ஒரு தீவிரமான விஷயத்தை எழுதும் ஒவ்வொரு முறையும் நேர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் போகிற போக்கில் எந்தவிதமான விமர்சனத்தையும் ஒரு மின்னஞ்சலில் தட்டி விடுகிறார்கள். இந்த மாதிரியான வெற்று வார்த்தைகளுக்கு பதில் அளிக்கும் போது அவர்களை நீங்கள் நிராகரிப்பது இல்லை என்று ஆகிவிடுகிறது அல்லவா.

மூன்றாவதாக நான் சொன்ன வாதம் ஒரு பைசாவுக்கு பிரையோஜனமில்லாத விமர்சனக்கட்டுரையிலிருந்துதான் உருவினேன். ஆனால் அதையும் நான் குறிப்பிடக் காரணம், புத்தகக் கண்காட்சி சமயத்தில், ட்விட்டர் போன்ற தளங்களில் எழுதியவர்கள் நீங்கள் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை பற்றி திடீரென பேசுகிறீர்கள் என்று எழுதியதை கவனிக்க முடிந்தது. தமிழினியில் எழுதும் எழுத்தாளர்களின் புத்தகங்களை முன்னிலைப்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டுதானே.

என் கேள்விகளின் சாரம்- விமர்சனங்கள் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு காலகட்டத்தில் உங்கள் மீது சுமத்தப்படுகின்றன.அந்த விமர்சனங்களை நிராகரிப்பது பற்றியோ அல்லது உங்களிடம் அதற்கு பதில் இருப்பின் அவற்றை பெற்றுவிடுவதான முயற்சி.

பீடம் என்பது பற்றிய உங்களின் கருத்து பற்றி- ஒரு கலைஞனுக்கு எதற்காக பீடம் தேவைப்படுகிறது. பீடத்தில் இருக்க வேண்டியது படைப்பு மட்டுந்தானே. வாசகன் கைக்கு இலக்கிய பிரதி செல்லும் கணத்தில் இருந்து படைப்பாளி உதிர்ந்துவிடுகிறான் இல்லையா? படைப்பு தரும் குவியம் மட்டுந்தானே வாசகனுக்கு முக்கியம். பிறகு ஏன் கலைஞன் பீடத்தில் அமர்த்தப்பட்டு அவன் முன்னால் மற்றவர்கள் தலை வணங்க வேண்டும்? அதை நோக்கி நடப்பது எழுத்தாளனின் விருப்பமாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா?

நன்றி.

அன்புடன்,
மணி
=====
அன்புள்ள மணிகண்டன்,

ஞானி அவரே தமிழியம் குறித்தும் மார்க்ஸியம் குறித்தும் கேட்டார் அல்லவா? அவர் சொன்னது இலக்கியம், பண்பாட்டு சார்ந்த விவாதங்கள் தேவை என்று மட்டுமே. அவை வெறும் அக்கப்போர் அலசலாக ஆகிவிடக்கூடாது என்றுதான். அது பலசமயம் உண்மையான விவாதங்களை இல்லாமலாக்கிவிடுகிறதல்லவா?
இணையத்திலும் பிறவற்றிலும் வெறும் வம்புகள் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன என்பது உண்மை. அவற்றுக்கு உரிய சுருக்கமான பதில்களை நான் சொல்வதுமுண்டு. காரணம் அவை இளம் வாசகனை வழிதிருப்பிவிட்டுவிடக்கூடாது என்பதனாலேயே. ஆனால் ஒருபோதும் அவற்றுடன் விரிவாக விவாதிப்பதில்லை. அந்த விவாதங்களுக்கு முடிவே இல்லை. பொறாமை, அரைகுறைவாசிப்பு, அரசியல் காழ்ப்புகள், மத-இன மாச்சரியங்களால் வரும் வம்புகளை ஒருபோதும் விவாதித்து வெல்ல இயலாது. அவற்றை உதாசீனம் செய்தே ஆகவேண்டும். நீங்களும் கூட அதைத்தான் செய்யப்போகிறீர்கள்.

யார் வேண்டுமானாலும் எதையும் விமரிசனம் செய்யலாம். நிராகரிக்கலாம். ஆனால் கொஞ்சம் நுண்ணுணர்வுள்ள வாசகன் உடனே கேட்க வேண்டிய கேள்வி 'சரி நீ யார்?' என்பதே. நீ என்ன வாசித்திருக்கிறாய், என்ன எழுதியிருக்கிறாய், அவற்றின் தரம் என்ன என்பதே. அந்த ஒரு கேள்வியே முக்கால்வாசி வம்புகளை சுருங்கச்செய்துவிடும்.

'பீடம்' என்பது என் சொல்லாட்சி அல்ல. அது பிறர் சொல்வது. அதற்கான பதில்தான் நான் சொன்னது. ஆனால் ஒரு கவிஞனாக நின்று யோசித்துப் பாருங்கள். மானுட வரலாற்றில் இன்று வரை எங்காவது படைப்பாளி இல்லாமல் பிரதி மட்டுமே 'பீட'த்தில் அமர்ந்திருக்கிறதா? உலகமெங்கும் இன்றும் மீளமீளப் பேசப்படுவது படைப்பாளிகளைப்பற்றியே. சொல்லப்போனால் சிந்தனையாலார்களைவிட, அரசியலாளார்களை விட, தலைவர்களைவிட இலக்கியவாதிகளைப்பற்றியே மானுடம் பேசிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் அதன்வழியாகவே அது தன்னை உருவாக்கி நீட்டித்துக்கொள்ள முடியும்.

படைப்பாளி யாரென தெரியாதபோது கூட அவனை உருவகித்துக்கொள்கிறது மானுட மனம். ஏனென்றால் மானுடத்திற்கு படைப்புகள் தேவை. படைப்புகள் என்பவை படைப்பாளியின் குரல்கள், அவன் ஆத்மா. படைப்பாளியிடமிருந்து படைப்பை பிரித்தே பார்க்க முடியாது. அது சாத்தியமே அல்ல. ஒரு கட்டத்தில் படைப்பாளி அவன் எழுதியவற்றின் குறியீடாக ஆவான். அவனே அவன் ஆக்கத்தின் பிரதிநிதியாக வரலாற்றில் நிற்பான்.

அதை இலக்கியவாதி இலக்காக கொள்ளலாமா, அது தேவையா, அது நல்லதா என்பதெல்லாம் விவாதமே அல்ல. அது மட்டுமே நடக்கும் அதுவே விதி என்பதே உண்மை.

சென்ற காலத்தில் படைப்பை படைப்பாளியின் ஆளுமையில் இருந்து பிரித்து ஒரு மொழிக்கட்டுமானமாக அணுகும் முறை மேல்நாட்டில் எழுந்தது. அது படைப்பு மட்டுமே முக்கியம் என்றது. காரணம் அதற்கு முன்னால் படைப்பாளியை அக்குவேறு ஆணிவேறாகக் கழட்டிப்போடும் விமரிசனமுறைகள் கோலோச்சின என்பதே. மேல்நாட்டில் ஓர் இயக்கத்துக்கு எதிர்வினையாக அடுத்த இயக்கம் உருவாவது வழக்கம்.

இங்கே சில விமரிசகர்கள், படைப்பியக்கத்தை புரிந்துகொள்ளவோ ஒரு நல்ல படைப்பை வாசிக்கவோ திராணியில்லாத சிலர், அந்தக்கொள்கைகளை அரைகுறையாகக் கொண்டுவந்து இறக்கி படைப்பாளியையும் படைப்பியக்கத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதைப் பயன்படுத்தினார்கள். தமிழகத்தில் எப்போதுமே படைப்பியக்கத்துக்கு எதிரான அரைவேக்காட்டுப் பண்டிதக்குரல் உண்டு. அந்தக்குரலின் எதிரொலிகள் இப்போதும் உள்ளன. அதுவே உங்கள் குரலிலும் உள்ளது
எங்கும் எந்த இடத்திலும் இக்கணம் வரை இலக்கியப்படைப்பாளியின் முக்கித்த்துவம் குறையவில்லை என்பதை நினைவில் வையுங்கள். அந்த விமரிசனமுறைகள்தான் காலாவதியாகியுள்ளன. ஏனென்றால் இது மானுடனின் அடிப்படை மனநிலை. எது முப்பது குடும்பங்கள் கொண்ட ஒரு சாதாரணப் பழங்குடிச் சமூகத்தில்கூட குலப்பாடகனை உருவாக்குகிறதோ அந்த அம்சமே இன்றும் இலக்கியவாதியை உருவாக்குகிறது.

ஒரு குலம், ஒரு சமூகம் அதன் கலைஞர்களின் மொழியால்தான் தொகுக்கப்படுகிறது. நினைவில் நீட்டிக்கப்படுகிறது. மனிதர்கள் பிறந்தி இறப்பா¡ர்கள், சமூகம் தொடர்ந்து செல்லும். அது நிகழ்வது மொழி வழியாக, மொழியில் இயங்கும் கலைஞர்கள் வழியாக. ஆகவேதான் அச்சமூகம் அவனுக்குரிய மதிப்பை அளிக்கிறது, அளித்தாகவேண்டும்.

அந்த போதம் உங்களுள் இருக்கும் வரைத்தான் நீங்கள் நான் கவிஞன் என்று நிமிர்ந்து நின்று சொல்லமுடியும். அப்படித்தான் பாரதி 'தமிழ்ச்சாதிக்கு நாம் கவிஞன்' என்றான். 'கேளடா மானுடா' என்று பாடினான். அந்த உணர்வை விமரிசகர்களின் முதிர்ச்சி இல்லாதக் சொற்களை நம்பி இழக்க வேண்டாம் என்றுமட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

'நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் நான் ஒரு குலப்பாடகன் [பார்ட்]' என்றார் ராபர்ட் ·ப்ரோஸ்ட். அதன்பின் உள்ளது அந்த சுயப்பிரக்ஞைதான்.

ஜெ
===============

6 எதிர் சப்தங்கள்:

selventhiran said...
This comment has been removed by a blog administrator.
Vaa.Manikandan said...

செல்வேந்திரன்,

இந்த இடத்தில் நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

இணையத்தில் வாசிப்பனுபவம் உள்ளவர்கள் இல்லை என்பது என் வாதமில்லை.

நான்
// ஆனால் வாசிப்பு என்பதே சிறிதும் இல்லாத மிக மிகச் சாதாரணமான வாசகர்கள் உலவும் தளமாகவே இணையத்தை பார்க்கிறேன். // என்றிருப்பதை,

பின்வருமாறு எழுதியிருக்க வேண்டும்.
// ஆனால் வாசிப்பு என்பதே சிறிதும் இல்லாத மிக மிகச் சாதாரணமான வாசகர்களும் உலவும் தளமாகவே இணையத்தை பார்க்கிறேன். //

தவறுதலான வார்த்தை பிரயோகம் முற்றிலும் வேறுபட்ட அர்த்தத்தை கொடுத்துவிடுகிறது.

அடுத்தவர்களின் வாசிப்பை சந்தேகிப்பது இல்லை இந்த வரிகளின் நோக்கம்.

மிக எளிய வாசகர்கள் பல்வேறு தளங்களைப் பற்றி ஒருவர் பேசும்போது புரியாமையின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ எத்தகைய சாதாரண கேள்விகளை வேண்டுமானாலும் எழுப்பலாம். இந்த இடத்தில் அந்தக் கேள்வியை ஜெ. மோ எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அறிந்து கொள்வதாகும்.

பிச்சைப்பாத்திரம் said...

நல்ல கேள்விகள்.. சுவாரசியமான பதில்கள். நன்றி. ஞானியின் ஆட்பேசத்தையும் சற்று சிந்தித்துப் பார்க்கலாம். இலக்கிய வரலாற்றின் பெரும்பாலான பகுதிகளை இவ்வாறான வம்புகளே அடைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறான வம்புகளை நீக்கிவிட்டால் தீவிர இலக்கிய வாசகர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துவிடுமோ என்கிற எண்ணம் கூட எனக்குண்டு. :-)

இளங்கோ கிருஷ்ணன் said...

மணி,

உங்கள் கேள்வி சார்ந்து ஞானி செய்த இடையூறு என்பது நிச்சயமாக அவை நாகரிகமானது அல்ல. ஆனால் ஞானி சொன்ன அந்த பதில் சரியானது. நீங்களே பதிந்து இருப்பது போல அந்தக் கேள்வியை நீங்கள் அறையில் கேட்டிருக்கலாம்.

Vaa.Manikandan said...

செல்வேந்திரன் தனது பின்னூட்டத்தின் ஒரு பகுதி தேவையற்றதாக விரும்பியதால் அதை வெட்டிவிட்டு மீண்டும் ஒட்டியிருக்கிறேன்.
=========

@ ஜெமோ
//தமிழ் அறிவியக்கத்தின் பெருபகுதியை எனக்கு எதிரான சக்தியாக நிறுத்திக்கொண்டு இந்த முரணியக்கத்தை நிகழ்த்துகிறேன்.//
//அதை மீறி 'பீடம்' உருவானால் அது காலம் கலைஞனுக்கு அளிக்கும் பீடம். அவனுக்குரிய பீடம் அது. உலகெமெங்கும் கலைஞர்கல் அமர்ந்திருக்கும் பீடம். அந்த பீடத்தின் முன் பிறர் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். முடியாதவர் மூலையில் அமர்ந்து பொருமவும் செய்யலாம் //
ஆஹா! ஏனோ ‘ஞானமெனும் பெருஞ்சிங்கம் எறும்புகளை உண்பதில்லை’ எனும் கமல்ஹாசனின் கவிதைவரிகள் என் நினைவில் ஊர்கிறது.
@மணிகண்டன்
// ஆனால் வாசிப்பு என்பதே சிறிதும் இல்லாத மிக மிகச் சாதாரணமான வாசகர்கள் உலவும் தளமாகவே இணையத்தை பார்க்கிறேன். //

இதை ஓர் எளிய உதாரணத்தின் மூலம் உறுதியாக மறுக்கிறேன் மணி. இந்நிகழ்வைப் பற்றிய அறிவிப்பு ‘சன் ம்யூசிக்’கிலோ, குமுதத்திலோ, தந்தி பேப்பரிலோ வெளிவரவில்லை. ஜெ-வின் தளத்தில் மட்டுமே வெளியானது. இரு உரையாடல்களிலுமாக சுமார் 200 வாசகர்கள் கலந்து கொண்டதும், ஜெவின் பிரம்மாண்ட படைப்புக்களான பி.தொ.நி. குரல், காடு, கொற்றவை, விஷ்ணுபுரம் ஆகியவை மீண்டும் மீண்டும் கேள்விக்குட்படுத்தப்பட்டதுமே சான்று.

நிகழ்வு முடிந்த பின்னரான குழு உரையாடலில் தமிழில் ஆரோக்கியமான விவாதங்கள் நிகழ்வதற்கான சூழல் இல்லாததைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது என்னளவில் ஒரு கருத்தைச் சொன்னேன் ‘ஓவ்வொருவனும் அடுத்தவனின் வாசிப்பை கேள்விக்குட்படுத்தி சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறான்.’ நீங்களும் இணைய வாசகனை ஏன் சந்தேகிக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

திடீர் திடீரென முளைக்கும் இலக்கிய அத்தாரிட்டிகள் புதிய வாசகனின் எளிய கேள்விகளைத் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கும் ஒரு எளிய உதாரணம். நிகழ்வின் போது கவிஞர் தென்பாண்டியன் “கொற்றவை படித்திருக்கிறேன். அது ஒரு நல்ல படைப்பு. ஆனால் சாகித்ய அகாடெமி பரிசில் அது நிராகரிக்கப்பட்டதற்குக் காரணமான நாவலில் சில போதாமைகள் இருப்பதாகச் சொல்கிறார்களே...?!” என்ற கேள்விக்கு அரங்கம் ஏளனமாகச் சிரித்தது சத்தியமாக ஏன் என்று எனக்குப் புரியவில்லை. மேற்படி கேள்வியை தென்பாண்டியன் மேம்போக்காக கேட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. ‘ஏன் அரங்கம் சிரித்தது?’

மற்றபடி ஞானி அடுத்தவர்களின் கேள்விகளில் அத்து மீறியதில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை. அவர் தனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை மார்க்ஸிய கோட்பாட்டு விமர்சகன் என முன்னிருத்தும் தீராத முனைப்பில் இருக்கிறார். இருந்து விட்டுப் போகட்டும். பிறரது வாசிப்பிலும் கேள்விகளிலும் ஏன் அத்துமீறுகிறார்? எளிய கேள்விகள் சமயங்களில் பிரம்மாண்ட பதில்களை இழுத்து வரும் உதாரணம்: ‘வாசகனுக்கு தகவல்களைக் கடத்தும் உத்வேகம்’ எனும் என் கேள்விக்கு ஜெவின் நீண்ட பதில் அற்புதமாக இருந்தது.

--செல்வேந்திரன்

ராஜரத்தினம் said...

ஜெ உடனான உங்கள் விவாதங்கள் நிறைய யோசிக்க வைக்கிறது... அனால் அவரோ ஞானியோ குறிப்பிட்டது போலவே இந்த கேள்விகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது யோசிக்க வேண்டியதே..
சபையில் கேட்க விவாதிக்க நிறைய இருக்கும் போது அவரது இணையம் சார்ந்த செயல்பாடுகளால் ஏற்பட்ட அரைவேக்காட்டு குறை குரல்களுக்கு அவர் பதில் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது .. (இதற்க்கான பதில்களை அவர் அவ்வப்போதுத்ன இணையத்திலேயே கூறி வருகிறார்; அவரை போல எல்லாவற்றிற்கும் எதிர்வினயாற்றும் எழுத்தாளர் தமிழில் உள்ளாரா என தெரியவில்லை )
அனால் இந்த விவாதத்தில் என்னை சங்கடப்படுத்தும் விஷயம் ஜெ வின் பீடம் குறித்த சிந்தனைகள். அவர் இது போன்ற சிந்தனைகளை முதலில் இருந்தே சொல்லி வருகிறார். அவரது செயல்பாடுகளும் அதன் அடிப்படியில் உள்ளன.எந்த மாபெரும் எழுத்தாளனும், சிந்தனவாதியும் இறுதியில் உணர்வது பிரபஞ்சத்தின் முன் மானிட பிரவாகத்தின் முன் தான் எத்தனை சிறியவன் என்பதே. அவர் கூறியது போல் படைப்பும் படைப்பாளியும் பிரிக்க முடியாதவை என்று எனக்கு தோன்றவில்லை. படைப்பை அணுக படைப்பாளி வெறும் வாசல் மட்டுமே என்பது எண்ணம. தல்ஸ்தோய் பற்றி தெரியாமலே என்னால் அன்னாவை ரசிக்க முடியும்..ஆனால் அன்னா தான் தல்ஸ்தோய் பற்றி யோசிக்க வைத்தவள். குறுந்தொகை எடுத்து கொள்ளுங்கள். அது தொகுப்பு.ஆனால் அதன் மொத்த படைப்பாளிகளையும் மீறி அதற்க்கு ஒரு ஆளுமை உண்டு.
இலக்கியம், மானுட தேடலுக்கு மாபெரும் பங்களிக்கிறது. படைப்பாளி-வாசகன் இலக்கியத்தை இயக்குபவன். அந்த தேடலில் எல்லாரும் புள்ளிகள் மட்டுமே..பீடம்,மேல்-கீழ் எல்லாம் வெற்று பிம்பங்கள். நீஎனக்கு சமம இல்லை என சொல்லும் படைப்பாளியாய் ஜெ தன் படைப்புகளில் இருந்து வாசகனிடம் இருந்து பிரிந்து எங்கோ உயரத்தில் வசிக்கிறார் என்றே தோன்றுகிறது..