
இந்த பேட்டையில் குடிசை போட்டு ஐந்து வருடம் முடிகிறது.ஏன் வந்தேன் எப்படி வந்தேன் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல்,நேரடியாகச் சொன்னால் எழுத வந்ததில் இருந்து சிறு இடைவெளிகள் தவிர்த்து ஐந்து வருடங்களும் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். மொத்தமாக 280 பதிவுகள்.
இடைப்பட்ட காலம் வரையிலும் எழுத்துக்கள் முதிர்ச்சியும் பக்குவமுமில்லாமல் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. இன்றைக்கு நான் எழுதிக் கொண்டிருப்பவையும் பக்குவப்பட்ட எழுத்துக்கள்தானா என்பதை என் பார்வையில் இருந்து கணிக்க முடியவில்லை என்றாலும், முன்பு எழுதியவையோடு ஒப்பிடும் போது இப்போதைய சரக்கு தேவலாம் ரகம்.
தலைக்கனம் வராமல் எழுத வேண்டும் என்றுதான் முயற்சித்திருக்கிறேன்.ஆனால் பல கட்டுரைகளில் '___'த்தனம் எட்டிப்பார்த்திருக்கிறது என்பது வெட்கமாக இருக்கிறது.
எழுத்து என்பதும் பயிற்சிதான். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது அதன் ஓட்டம் உருமாறி சீரான திசையில் நகர்வதை கவனிக்க முடியும்.நான் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயிற்சிக்கு 'பேசலாம்' பெரிதும் உதவியிருக்கிறது.
தொடக்க காலத்தில் வலைப்பதிவிற்கு எத்தனை பேர் வருகிறார்கள், வாசிக்கிறார்கள் என்பதனை கவனித்து வந்தேன். இடையில் இந்த எண்ணிக்கையின் மீது கவனம் இல்லாமல் போனது. சமீபத்தில் மீண்டும் கணக்குப்பார்க்கத் தோன்றியபோது ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. தேடுபொறிகளில் தேடுபவர்களுக்கு அனுஷ்கா,ஸ்ரேயா,சார்மி ஆகியோரின் படங்களும், "ஒரு நடிகையின் கதை", "காமக் கதை" என்ற குறிசொற்களும் இந்த வலைப்பதிவை காட்டிக் கொடுக்கின்றன என்பது இதைப்பற்றிய கவனமே இல்லாமல் இருந்துவிடுவது உசிதம் என்ற மனநிலையை கொடுத்திருக்கிறது.
ஆனந்தகுமார் காந்தி- இந்தப் பெயரை காமராஜர் அவருக்குச் சூட்டினாராம். அமெரிக்கவாசி. என் நண்பருக்கு நண்பர். பெங்களூரில் இருக்கும் இவரது அலுவலகம் எனது அலுவலகத்துக்கு பக்கமாக இருக்கிறது என்பதால் மாலையில் இவரை தனது வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லி நண்பர் சொல்லியிருந்தார். அழைத்து வரச் சொன்ன நண்பர் அலுவலகத்தில் இருந்து வந்து சேராததால் ஒரு கேரளக் கடையில் டீ குடித்துவிட்டு மொக்கை போட்டுக் கொண்டிருந்தோம்.நண்பர் வந்தவுடன் நான் கிளம்பிவிட்டேன்.
காந்தியின் மகனின் பெயர் 'மகிழன்' என்பதால், என் மகனுக்கு பெயர் தேடும் முஸ்தீபுகளில் இருக்கும் எனக்கும் நல்ல பெயர் பட்டியல் அனுப்பி வைக்கச் சொல்லி ஒரு மின்னஞ்சல் செய்தி அனுப்பினேன்.
மின்னஞ்சலில் என் பெயரை அடையாளம் கண்டவராக தான்'பேசலாம்' தளத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசிப்பதாகவும் உடனடியாக பேச வேண்டும் என்று பதில் அனுப்பினார். அடுத்த நாள் மாலையில் இன்னொரு டீக்கடையில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
முகம் தெரியாத ஒரு மனிதருடன் நீண்டகால பந்தத்தை எழுத்து மூலமாக தொடர்ந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியளித்தது. எழுதுவதை யாராவது படிக்கிறார்களா என்று சில சமயங்களில் யோசித்தாலும் எழுதிக் கொண்டேயிருக்கிறேன். அவ்வப்பொழுது நிகழும் இத்தகைய சந்தோஷமான தருணங்கள் என் சந்தேகத்திற்கு பதிலாக இருக்கின்றன.
மற்றபடி இந்தக் கட்டுரை எழுத ஆரம்பிக்கும் போது நிறைய விஷயங்களை எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவை வெட்டிவிவகாரத்துக்கு அடி போடுபவையாகவே இருக்கும் என்பதால் தவிர்த்துவிடுவதுதான் நல்லது. நிதானமாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
அனைவருக்கும் நன்றிகள்.