நேற்று(25th Dec 2009) சி.எஸ்.எஸ் அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தேன். பொத்தல்களுடனான ஒரு கிழிந்த அழுக்கு வேட்டி, பல நாட்களாக சவரம் செய்யப்படாத முகம் என்றிருந்தார். இதே தோற்றத்தில்தான் ஒரு மாவட்ட ஆட்சியர் தனக்கு விருது வழங்கும் விழாவுக்குச் சென்றிருக்கிறார்.
என் முகத்தை சட்டென அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் இருந்தார். அறிமுகப் படுத்திக் கொண்டேன். I am glad என்றார்.
வழக்கம் போல கம்யூனிஸ சித்தாந்தம் பன்னாட்டு நிறுவனங்களில் சிதைக்கப்படுவது குறித்தான சில கேள்விகளை கேட்டுவிட்டு, தன் உடல்நிலை பற்றியும் கொஞ்சம் பேசினார்.
அவர் புகைப்படம் எதுவும் எடுத்துக் கொண்டதில்லை. தன் புகைப்படங்கள் எதுவுமில்லாத ஒரு மனிதராக இருக்கிறார். எனக்குத் தெரிந்து புகைப்படங்கள் பிறர் எடுப்பதையும் பேட்டி எடுப்பதையும் அவர் அனுமதிப்பதில்லை.
தயங்கியவாறு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றார். வேண்டுகோளை நிராகரிக்க முடியதவராக "ஒரு கிழவன் முகம் தானேப்பா தெரியும்" என்றார். பரவாயில்லை என்று சொல்லியவாறு பாரதி விருதை அருகில் எடுத்து வந்து வைத்தேன். பாரதியை சந்தித்திருக்கிறார். தனது கல்லூரி படிப்பின் போது திருவல்லிக்கேணியில் பாரதி இருந்த போது சந்தித்திருக்கிறார். அதே பகுதியில் தான் அந்தச் சமயத்தில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும் இருந்திருக்கிறார். ஆனால் இவை பற்றிய சி.எஸ்.எஸ் நினைவுகள் மங்கியிருக்கிறது.
புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பும் போது அடுத்த முறை வரும் போது சந்திக்கிறேன் என்றேன். சிரித்துக் கொண்டு எப்பொழுதும் சொல்வது போல தூணைப் பிடித்துக் கொண்டு All the best என்றார். வெளியில் வண்டியை எடுக்கும் போதும் அவரைப் பார்த்தேன். அதே தூணைப் பிடித்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பின் குறிப்பு:
பாரதியார் 1921 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். எனவே 1910 இல் பிறந்த சி.எஸ்.எஸ் தன் கல்லூரி சமயத்தில் பாரதியை பார்த்திருக்க முடியாது. அவரே குறிப்பிட்டது போல தன் மங்கிய நினைவுகளில் இருந்து தரும் சில தகவல்களில் பிழை வருவதை தவிர்க்க முடியாது.(இந்தத் தகவலை எஸ்.வி.ஆர் அவர்கள் சுட்டிக் காட்டி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்)