
காற்றில் மிதந்து வந்த
பாலீத்தின் பை
அறைந்ததில்
இறந்து போனான் ப்ரனீத்
யாரோ பறக்கச் செய்த
பட்டத்தின் கயிறு
சத்யாவின்
கழுத்தை அறுத்திருக்கிறது
தூக்கிலிட்டுக் கொண்டவன்
விஷம் அருந்தியவனை விட
அதிர்ஷ்டசாலி
உறக்கத்தில் இறந்தவனுக்கு
நல்ல சாவு
வாய்த்திருக்கிறது
கழுத்தில் செருகப்பட்ட கத்திகளை
விட
நெஞ்சில் பாய்ந்த கத்திகள்
கருணை மிக்கவை
லாரியில் தலை நசுங்கியவனும்
நீருள் மூழ்கி இறந்தவனும்
மின்சாரம் தாக்கி மறைந்தவனும்
இறுதி மூச்சுக்கு முந்தைய மூச்சில்
நினைத்தவற்றை கவிதைகளாக்கலாம்
கொலை செய்யப்பட்டவர்களும்
நோய்மையில் மரணித்தவர்களும்
அலையும்
தெருக்களில்தான்
குழந்தைகள்
விழுந்து
காயம் பெறுகின்றன
விடுவிக்கப்படாத மரணத்தின்
புதிர்கள்
இறந்தவனின் புதைகுழி மீதும்
எரித்த சாம்பலின் நுனியிலும்
ஒட்டிக் கொள்வதாக சொல்கிறார்கள்.