Wednesday, November 11 By: வா.மணிகண்டன்

பெருமழைக் காமம்


காற்றின் வெற்றிரைச்சல்
ரகஸிய
கதைகளைச் சொல்லிக் கடக்கும்
இரவின் வெறுமையில்
பொழிகிறது பேய்மழை

தவளைகளின் ஈரச்சமிக்ஞை
புரிந்த
பிச்சைக்காரி
ஒதுங்கிய
சாராயக்கடை வாசலில்
மெளனமாய் ஒடுங்குகிறது
கருநாயும்

மரங்களின் விசிறலில்
இடம் மாறும்
மழையின் சோடியச் சிதறல்கள்
ஜன்னல் திரையசைவில்
நுழைகின்றன

தனிமையில் கசங்கிக் கிடக்கும்
அவன்
மழையை
ரஸிப்பதில் விருப்பமின்றி
திரும்பிப் படுக்கிறான்

மழைக்கும் அவனுக்குமான
பந்தம் அறுந்துபோனது-
தீராத காமமும்
ஓயாத மழையும்
பொய்
என்று அவள் சொன்னபோது.