Thursday, August 20 By: வா.மணிகண்டன்

பிரவீன் - உதிர முயலும் இலை

பிர‌வீனை என‌க்கு கொஞ்ச‌ நாட்க‌ளாக‌வும் அவன‌து அப்பாவை என‌க்கு நீண்ட நாட்க‌ளாக‌வும் தெரியும். பிரவீனுக்கு ப‌தின் மூன்று வ‌ய‌தாகிற‌து. கொஞ்ச‌ நாட்க‌ளாக‌ ப‌ள்ளிக்குச் செல்வ‌தில்லை. ட‌யாலிஸிஸ் செய்வ‌த‌ற்காக‌ ஒரு ட்யூப் செருகியிருக்கிறார்க‌ள். ப‌ள்ளியில் ஏதாவ‌து டியூப் மீது ப‌ட்டு அசைந்தால் ர‌த்த‌ப் போக்கை த‌டுக்க‌ முடியாது என்பதால் பள்ளிக்கு வேண்டாம் என நிறுத்திவிட்டார்க‌ள்.

எட்டுக்கு எட்டுக்கு சிங்கிள் பெட் ரூமில் க‌ட்டிலில் உட்கார‌ வைத்து டிவியை அவ‌ன் ப‌க்க‌மாக‌ திருப்பி ரிமோட்டை கொடுத்துவிட்டார்க‌ள். வ‌டிவேலையும், விவேக்கையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான். வ‌ந்து போவோர்க‌ள் எல்லோரும் சிகிச்சை முறைக‌ளையும், அத‌ன் ஆபத்துக்க‌ளையும் அதே அறையில் பேசுகிறார்க‌ள். பிர‌வீனுக்கு இவை எல்லாம் ச‌லித்து போயிருக்க‌ வேண்டும். அவ‌ன் உயிர் மீதான பிரிய‌ம் அவ‌னிட‌ம் இல்லாம‌ல் இருப்ப‌தாக‌ உண‌ர்ந்தேன். நான் சென்றிருந்த‌ போது ஒரு முறை முக‌த்தை பார்த்துவிட்டு டிவியை பார்க்க‌ ஆர‌ம்பித்துவிட்டான்.

வெளியே சென்று பேச‌லாம் என்று அவ‌ன‌து அப்பாவிட‌ம் சொன்னேன். "அவ‌னுக்கு எல்லாம் தெரியும் க‌ண்ணு, க‌ண்டுக்க‌ மாட்டான்" என்றார்.

இப்பொழுது இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இப்போதைக்கு வாரம் ஒருமுறை டயாலிசிஸ் செய்து வருகிறார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கும் நிலையில், தமிழக அரசின் கலைஞர் காப்பீடு திட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

தினக்கூலியான பிரவீனின் தந்தைக்கு அவரது ஒரே மகனை காப்பாற்றும் முயற்சியில் உதவலாம் என இயன்ற தொகையினை அவர்களுக்கு கொடுக்கும் விதமாக பணம் திரட்டத் துவங்கியிருக்கிறேன்.

மின்னஞ்சல் மூலமாகவே நண்பர்களை கேட்கலாம் என்றிருந்தேன். இதுவரைக்கும் மின்னஞ்சல் மூலமாக உதவி கோரியதில் ரூபாய் ஒன்பதாயிரம்(அதில் நண்பர் ஒருவர் மட்டுமே ஐந்தாயிரம் வழங்கினார்) கிடைத்திருக்கிறது.

இவ்வாறு உதவி கோரி பணம் திரட்டுவது என்பது எனக்கு முதல் முறை என்பதால், வலைப்பதிவு போன்ற பொதுவான இடத்தில் உதவி கோரும் போது ஏதேனும் சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வித‌த்தில் இப்பொழுது எழுத‌ வேண்டிய‌தாகிவிட்ட‌து.

இந்த நிதி திரட்டும் விவகாரத்தை இதுவரைக்கும் பிரவீனின் தந்தைக்கு தெரியப்படுத்தவில்லை. அவர் ஒரு தொகை கிடைக்கலாம் என எதிர்பார்த்து அதனை செய்ய முடியாமல் போகுமெனில் உண்டாக‌க்கூடிய‌ ஏமாற்ற‌த்தை தவிர்க்க‌வே சொல்லாம‌ல் இருக்கிறேன்.

மின்ன‌ஞ்ச‌ல் கூட‌ சில‌ருக்கு ம‌ட்டுமே அனுப்பி இத‌னை Forward செய்ய‌ வேண்டாம் என்று வேண்டிக் கொண்டேன். அப்ப‌டி அனுப்பினால் நிறைய‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ வேண்டி வ‌ர‌லாம். வ‌ரும் தொகையினை விட‌வும் ‍ப‌ன்ம‌ட‌ங்கான‌ கேள்விக‌ளை ப‌ல‌ரும் கேட்க‌க் கூடும்.

மேலும் அறுவை சிகிச்சைக்கு நான்கு இல‌ட்ச‌ம் வ‌ரையிலும் ஆக‌லாம் என்று அந்த‌ச் சிறுவ‌னின் த‌ந்தை தெரிவித்திருந்தார். இந்த‌த் தொகை பெரிது. என்னால் அவ்வ‌ள‌வு திர‌ட்ட‌ முடியாது என்றும் தெரியும். இருப‌த்தைந்தாயிர‌ம் என‌து குறிக்கோள். ஒரு ட‌யாலிஸிஸுக்கு ரூ.1300 எனில் ஒரு ப‌தினைந்து ட‌யாலிஸிஸூக்கு உத‌வ‌க் கூடும்.
===
நான் சொல்ல‌ வ‌ந்த‌து அதுவ‌ல்ல‌. சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஜிடாக்கில் பேசும் போது இத‌னைப் ப‌ற்றி பேசினேன். சில‌ர் ப‌ணம் தருவது ப‌ற்றி பேசினார்க‌ள். சில‌ர் ப‌ரிதாபப் ப‌ட்டார்க‌ள். சூழலுக்கு தகுந்த முடிவை எடுக்கிறார்கள். நான் யாராவ‌து உத‌வி கேட்டால் பெரும்பாலும் ப‌ரிதாபப்ப‌டுவ‌தாக‌ ந‌டித்திருக்கிறேன் என்ப‌தை நினைத்துக் கொள்ள‌ முடிகிற‌து.

இன்று ஒரு ந‌ண்ப‌ர் ர‌த்த‌ உற‌வுக‌ளில் யாராவ‌து சிறுநீர‌க‌ம் த‌ருகிறார்க‌ளா என்றார். அவ‌ன‌து அம்மா கொடுக்க‌ முடியாது. பிரவீனின் அப்பா கொடுத்தால் நாளை வேலைக்கு யார் போவ‌து, சாப்பாட்டுக்கு என்ன‌ வ‌ழி என்ற‌ பிர‌ச்சினைக‌ள். எத்த‌னை ர‌த்த‌ உற‌வுக‌ள் சிறுநீர‌க‌ம் தான‌ம் த‌ரும் அள‌வுக்கு இருக்கிறார்கள் என்ப‌தும் வினா. "இல்லை, காசுக்குத்தான் வாங்க‌ப் போகிறார்கள்" என்றேன்.

அதோடு நிறுத்தியிருக்க‌லாம். "இல்லை, அது ச‌ரிப்ப‌ட்டு வ‌ராது. என் சித்த‌ப்பாவுக்கு செஞ்சு ஒரே வ‌ருட‌த்தில் இற‌ந்துட்டாரு" என்றார். என‌க்கு வ‌ந்த‌ எரிச்ச‌லில் என்ன‌ சொல்வ‌து என்று தெரிய‌வில்லை.

பிரவீனின் குடும்பத்தாருக்கு தெரியும் இதில் எத்த‌னை பிர‌ச்சினைக‌ள் இருக்கிறது என்ப‌து. ம‌ருத்துவ‌ர்க‌ள் எல்லாவ‌ற்றையும் சொல்லி இருப்பார்க‌ள். இயலாத‌ சூழ‌லில்தான் ம‌ருத்துவ‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ முடிவுக‌ளை வ‌றுமையில் இருப்ப‌வ‌ர்க‌ள் எடுக்கிறார்க‌ள். அந்த முடிவு தவிர்த்த வேறு வழி பெரும்பாலும் இருப்பதில்லை. அந்தச் சூழலில் இந்த‌ மாதிரியான தேவையற்ற அறிவுரைக‌ளை அவ‌ர்க‌ள் எதிர்பார்ப்ப‌துமில்லை.

இத‌னை எழுதும் போது அறிவுரை தருபவர்களை தாறுமாறாக‌ திட்டி எழுத‌ வேண்டும் என்று தோன்றிய‌து. ஆனால் என‌க்கு சின்ன‌ அந்த‌ அறையில் அம‌ர்ந்து கொண்டு இதை விட‌ குரூர‌மான‌ வார்த்தைக‌ளை பிர‌வீன் கேட்டிருப்பான் என்ப‌தை நினைக்கும் போது எதையும் எழுத‌த் தோன்ற‌வில்லை.