சைபர் குற்றங்கள். இந்தச் சொல்லுக்கான சிக்கல்கள் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்தக் குற்றங்களை மேலோட்டமாக புரிந்து கொள்வதே சுவாரசியமானது. ஆயிரம் ரூபாய் கொடுத்து கம்ப்யூட்ட்ர் கோர்ஸ் படித்தவனால் செய்யப்படுபவை அல்ல இந்தக் குற்றங்கள். கம்ப்யூட்டரிலேயே கசங்கி மண்டையை உடைத்து "ரூட்" கண்டறிந்து மிக இலாவகமாக சைபர் குற்றங்களைச் செய்கிறார்கள் "கம்ப்யூட்டர் பிதாமகன்"கள். சுவரேறி, பூட்டு உடைத்து, கன்னக்கோல் போடுவதெல்லாம் தேவையே இல்லை. இருந்த இடத்தில் இருந்து நடத்தும் ஜகஜ்ஜாலங்கள்தான் சைபர் குற்றங்கள்.
பிரதமருக்கோ, முதலமைச்சருக்கோ மிரட்டல் இமெயில் 'கமுக்கமாக' அனுப்பிவிட்டு, யாரிடமும் அகப்படாமல் தப்பித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருப்பதுதான் மிக மட்டமான அல்லது குறைந்த பட்சமான இணையக் குற்றமாக இருக்க முடியும். ஒவ்வொரு கணிப்பொறிக்கென இருக்கும் பிரத்தியேக எண்ணை ஐ.பி.(இன்டர்நெட் புரொடோகால்) முகவரி என்கிறோம். அனுப்புகிற மெயிலில் ஒட்டிச் செல்லும் இந்த எண் எந்த ஊரில், எந்த இணைப்பிலிருந்து மெயில் வருகிறது என்ற தகவலை மிகத் துல்லியமாக காட்டிக் கொடுத்துவிடும்.
பின்னர் அந்த கணிப்பொறியின் மெமரியை சோதனையிட்டால் போதும். அனுப்பியவரின் கையில் விலங்கு விழ வேண்டியதுதான் பாக்கியாக இருக்கும். இந்த நுட்பத்திலும் தங்கள் வித்தையைக் காண்பித்து போலீஸ் கண்களில் மண் தூவுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உலகின் பெரிய சைபர் குற்றங்களோடு இவற்றை ஒப்பிட்டால், ஈமெயில் குற்றங்கள் எல்லாம் 'ஜுஜுபி'குற்றம்.
சாப்ட்வேர் வந்த புதிதில் ஒரு வங்கிக்கான புரோகிராம் எழுதிய கில்லாடி, அந்த வங்கியில் நடைபெறும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்கும் (அது கம்பெனிக்கு வரும் பணமாக இருக்கலாம் அல்லது கம்பெனியிலிருந்து வெளியில் செல்லும் பணமாக இருக்கலாம்)மிக மிகக் குறைந்த தொகையொன்று (1லிருந்து 5 பைசா என்ற அளவில்) தன் கணக்கிற்கு மாற்றும்படி எழுதிவிட்டார். தன்னுடைய ஒவ்வொரு பரிமாற்றத்திலும் 1 பைசா குறைகிறது என்பதை எந்த வாடிக்கையாளரும் கவனித்திருக்கவில்லை. இந்தக் கதை பல நாட்களுக்குத் தொடர்ந்து, அந்த வங்கி விழிக்கும் தருவாயில் கணக்கை சுத்தமாக மூடிவிட்டு மூட்டை கட்டிவிட்டார். இது பல முறைகளில் பல இடங்களில் நடந்து, தற்பொழுது இதன் பெயர் சலாமி தாக்குதல்.
இப்படியான இணையக் குற்றங்களையும் அதை கண்டறிந்த விதங்களையும் கவனிக்கும் போது மிக அலாதியான "கிரைம் நாவல்" படிப்பதற்கு ஈடான அனுபவம் கிடைக்கிறது. உலகில் நடந்த மிகக் கொடூரமானது முதல் மிகக் காமெடியானது வரையிலான சில இணையக் குற்றங்களை பற்றி வாசிக்கப் போகிறீர்கள். மற்ற வகைக் குற்றங்களோடு இணையக் குற்றங்களை நம்மால் எந்த வகையிலும் ஒப்பிடமுடிவதில்லை.
ஒரு தனித்த உலகத்தில் மிகச் சிறந்த அறிவாளிகளால் செய்யப்படுபவை இந்தக் குற்றங்கள். இந்தக் குற்றங்கள் ஏன் நடைபெறுகின்றன என்று பார்க்கும் போது உளவியல் ரீதியாக மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்குவதோடு, நவீனத் தொழில் நுட்பத்தின் உச்சகட்ட வளர்ச்சி சமூகத்தின் போக்கில் உண்டாக்கியிருக்கும் முடிச்சுகள் நம்மை புதிரான இருள் உலகிற்குள் அழைத்துச் செல்கின்றன.
எந்த பெரிய விஷயத்தையும் மிக எளிதாக தாண்டிவிடும் கம்ப்யூட்டர், இணையம் என்ற மாய உலகத்தின் தற்போதைய மாபெரும் குற்றங்கள் கூட வருங்காலத்தில் சின்னக் குழந்தைகளின் திருடன் போலீஸ் விளையாட்டாக மாறிவிடலாம்.
---------
இணையத்தில் சாத்தியமாகக் கூடிய பல குற்றங்களை எனக்குப் புரிந்த அளவிற்கு- எங்கள் ஊரில் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு டிராக்டர் ஓட்டிக் கொண்டிருக்கும் விஜயகுமாரை மனதில் வைத்து- அவனுக்கு சைபர் குற்றம் என்றால் என்னவென்று புரியும் அளவிற்கு எழுத முயன்றிருக்கிறேன்.
இந்தக் கட்டுரைகள் இருபது பகுதிகளாக அந்திமழை.காம் இணையதளத்தில் வரத் தொடங்கியிருக்கின்றன. உங்களுடைய கருத்துக்களை vaamanikandan@gmail.com என்னும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம்.
Apr 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 எதிர் சப்தங்கள்:
தெரிந்து கொள்ள (எனக்கு) நிறைய விஷயங்கள் உள்ள கட்டுரைத் தொடராக இருக்கும்.
அந்திமழை.காம் சரி. அப்படியே உங்கள் பதிவிலும் அவற்றைத் தொடர்ந்து வலையேற்றினால் வசதியாயிருக்கும்.
ஆகா...பல தகவல்கள் கிடைக்கும். ;)
\\ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அந்திமழை.காம் சரி. அப்படியே உங்கள் பதிவிலும் அவற்றைத் தொடர்ந்து வலையேற்றினால் வசதியாயிருக்கும்.\\
வழிமொழிக்கிறேன் ;)
பயனுள்ள தகவல்கள் .நன்றி:)
Post a Comment