Saturday, January 7 3 எதிர் சப்தங்கள் By: வா. மணிகண்டன்

நம் மழைக்காலம்

உள்துறை இலாகவை என் அமைச்சரவையில் சேர்ப்பதற்கான அழைப்பிதழில் எழுதப்பட்டிருந்த கவிதை. Irreversible dent :-)




உன் ப்ரியம்
படர்ந்த
நாட்களின் நடனத்தில்
கரைகிறது
தீராத் தனிமை

சாரலில்
நிறமழியாமல் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின்
வாழ்த்துகளில் தொடங்கும்
நம்
மழைக்காலத்தில்
உன் கரங்களை
பற்றிக் கொள்கிறேன் -

ஆயிரம் ஆண்டுகளுக்கான
தீரா
ப்ரியங்களுடன்.
Thursday, January 5 3 எதிர் சப்தங்கள் By: வா. மணிகண்டன்

முதல் பரிசு ஆல்டோ கார்!

ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது சிலிர்ப்பாகவே இருந்திருக்கிறது. இந்த வருடமும் அப்படியே இருக்கிறது.

புத்தகங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நண்பர்களோடு எழுத்தை பற்றி பேசுவது விரும்பிய போதெல்லாம் கிடைப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை காத்திருக்க வேண்டியிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியின் சந்தோஷம் எனக்கு பெங்களூரில் நடக்கும் கண்காட்சியிலோ அல்லது வேறொரு ஊரில் நடக்கும் கண்காட்சியிலோ கிடைப்பதில்லை.

இதுவரைக்கும் முகமே அறிந்திராத ஒருவருடன் வாசிப்பு பற்றி பேசுவதன் சுகம் தனித்துவமானது.அந்த அறிமுகம் இல்லாத முகங்களுடன் நீண்ட நேரம் பேசியதுண்டு.  இத்தகைய சாத்தியங்கள் நிறைந்த இடம் என்பதற்காகவே புத்தகக் கண்காட்சிக்கு செல்ல மனம் குறுகுறுக்கிறது.

புத்தகக் கண்காட்சியில் அதிகபட்சமான நாட்கள் அலைய வேண்டும் என்று விரும்பினாலும் 'குடும்பஸ்தன்' என்று விசிட்டிங் கார்டில் அடித்துவிட்ட பிறகு இயலாமல் ஆகிவிடுகிறது. 

பயணம் சார்ந்த பெரும்பாலான மசோதாக்கள் உள்துறையின் அனுமதிக்கு பிறகே நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதிக்கு மட்டும் அனுமதி தேவை என மசோதாவில் சேர்த்துவிட்டு இன்னும் ஒரு நாளை முன் அனுமதியின்றி சேர்த்துவிட திட்டம் வைத்திருக்கிறேன்.

7 ஆம் தேதி(சனிக்கிழமை) புத்தகக் கண்காட்சிக்கு வரும் நண்பர்கள் 9663303156 என்ற எண்ணிற்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் அழையுங்கள். நிச்சயம் சந்திக்கலாம். நான் அன்னா ஹசாரேவை தற்சமயம் பின் தொடர்வதில்லை என்பதால் 'மிஸ்டு கால்'கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
                                                                        *****
எனது 'கண்ணாடியில் நகரும் வெயில்'  கவிதைத் தொகுப்பும், 'சைபர் சாத்தான்கள்' கட்டுரைத் தொகுப்பும் உயிர்மையில் கிடைக்கின்றன. ஏற்கனவே இரண்டும் தலா 2001 பிரதிகள் விற்றுவிட்டதாகவும் 20001 பிரதிகள் அச்சடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரனை பொய்யாக்கும் விதத்தில் நான் 30001 பிரதிகள் விற்க வேண்டுமென டார்கெட் வைத்திருக்கிறேன். ம்ம்ம்..தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்!

பிரதி வாங்கிக் கொண்ட விபரத்தை பில் நெம்பரோடு மின்னஞ்சலில் அனுப்பினால் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளன்று குலுக்கல் முறையில் பம்பர் பரிசாக ஒரு ஆல்டோ காரும், இரண்டாம் பரிசாக இரண்டு ஹோண்டா ஆக்டிவாவும் வழங்கப்படுகிறது. பிரதிகள் வாங்கிய அத்தனை பேருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. ஏற்கனவே ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பிரதிகளை ரூ.30001, ரூ.25001 வீதம் ஏலம் எடுத்த வாசக கோடிகளுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.                                                              


Wednesday, January 4 0 எதிர் சப்தங்கள் By: வா. மணிகண்டன்

கலை கலைக்காக


வணக்கம் மணிகண்டன்.

உங்களின் புதிய வலைப்பூ வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

அப்புறமாக, வசுமித்ர தளத்தின் விவாதத்தில் 'கலை கலைக்காகவே' என்பதன் விமர்சனம் இருந்தது. ரசனை சார்ந்து நீங்கள் கவிதையைப் பற்றி எழுதுகிறீர்கள். கொஞ்சம் விரிவாக உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள். 

பிரியமுள்ள,
கிருஷ்ணப்பன்.

                                                   ***

அன்புள்ள கிருஷ்ணப்பன்,

வணக்கம்.

நண்பர் வசுமித்ர தளத்தில் நடைபெறும் விவாதம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்றே நினைக்கிறேன். அவர் தேவதச்சனை முடிந்துபோன கவிஞர் என்பதாக- சற்று கடினமான வார்த்தைகளில்- பிணம் என்பதாகவும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வருத்தத்தையளித்தது. 

அது சார்ந்த உரையாடலில் 'கலை கலைக்காகவே' என்ற சொற்றொடர் இடம் பெற்றிருந்தது. 'கலை கலைக்காக'வே என்பதும் 'கலை மக்களுக்காக'வே என்பதும் இருவேறுவிதமான கூற்றுகளாக நவீனத்துவத்தில் புழங்கி வருகின்றன.  

கலை கலைக்காவே என்பது நவீன வாழ்வியல் தரும் நெருக்கடிகளின் ஊடாக தன் இருப்பு(Self-Existence) குறித்தான படைப்புகளை முன்னெடுக்கும் படைப்பாளிகளின் வாதம். சுயம் சார்ந்த படைப்புகள் வாசகனுக்கு அளிக்கும் வாசிப்பனுவமே போதும் என்பதும் படைப்புகள் பிறர் சார்ந்த பிரச்சினைகளை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்பதும் அதன் சாராம்சம். இன்னமும் குறிப்பாகச் சொன்னால் படைப்புகளின் வழியே தனிமனித சிக்கல்களின் சிண்டுகளை அவிழ்க்கும் முயற்சி. 

கலை மக்களுக்காகவே என்பது பெரும்பாலும் இடதுசாரி கருத்துக்களைக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் கருத்தாக இருக்கிறது. கலை என்பது மக்களையும், மக்களின் பிரச்சினைகளைச் சார்ந்தும் இருத்தல் வேண்டும் என்கிறார்கள். படைப்புகள் என்பன வெறும் தனிமனிதச் சிக்கல்களை மட்டும்  பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதும், அவை வெற்றுப் புலம்பல்களாகிவிடுகின்றன என்பது இவர்களின் வாதம்.

கலை என்பது வெறும் கவிதை வடிவத்தை மட்டும் குறிப்பிடுவதில்லை. எழுத்தும் கலை, இசையும் கலை, நாடகமும் கலை. இதில் என் அபிப்பிராயம் என்று கேட்டால் என்னால் 'கவிதையை' மட்டுமே முன்னிறுத்திப் பேச முடியும் என்று நினைக்கிறேன்.

கவிதை மக்களின் பிரச்சினைகளை(சமூகச் சிக்கல்களை) சார்ந்து இயங்கக் கூடும். அப்படி இயங்குவதில் தவறும் இல்லை. ஆனால் அவை பிரச்சார தொனியிலானதாகவோ அல்லது கவித்துவத்தின் கூறுகளை இழந்துவிடுமேயானால் அவற்றை முற்றாக நிராகரிக்கலாம்.

அதே சமயத்தில், கவிதை தனிமனிதச் சிக்கல்களை பேசக் கூடாது என்பது முற்றாக தூக்கியெறியப்பட வேண்டிய வாதம். தனிமனித சிக்கல்களை புரிந்து கொள்ளாமலும், இந்தச் சமூகமும் வாழ்வியல் முறைகளும் என் மீது தரக்கூடிய அழுத்தத்தைப் பற்றி பேசாமலும், என்னால் சமூகத்தின் சிக்கல்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்? இந்த சுய புரிதலுக்கு கவிதைகளை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கவிதை, அதன் வடிவம், அதன் பாடுபொருள் உள்ளிட்ட அதன் நுண் சூட்சுமங்களை புரிந்து கொள்வதில்தான் நான் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன். 

இந்தக் கணத்தில்- கவிதை என்பது எனக்கான ஆசுவாசம் தருவதாக இருந்தால், என்னைக் கொண்டாடச் செய்வதாக இருந்தால், என் பிரியமும் துக்கமும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ள தன் தோள்களைக் கொடுத்தால் போதுமானது என்று நினைக்கிறேன். இன்னமும் ஆழ்ந்த வாசிப்பும், தொடர்ச்சியான சிந்தனையும், நீண்ட உரையாடல்களும் இந்த எண்ணத்தில் மாற்றம் உருவாக்கக் கூடும். 

நன்றி.

Monday, January 2 3 எதிர் சப்தங்கள் By: வா. மணிகண்டன்

காலில் காட்டைத் தூக்கிக் கொண்டு அலையும் வண்ணத்துப்பூச்சி

கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டின் விளக்கு விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தனித்துவமான கவிதை மொழியில் தமிழின் நவீன கவிதையை உயிர்ப்புடன் முன்னகர்த்திச் செல்லும் முன்னோடிக் கவிஞர் தேவதச்சன். 

எனக்கு முதலில் அறிமுகமான தேவதச்சனின் கவிதை 

என்
அன்பின் சிப்பியை
யாரும்
திறக்க வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஓட்டமும் நடையுமாய்

முதல் வாசிப்பிற்கு மிக எளிமையாகத் தோன்றும் இந்தக் கவிதை தரும் அனுபவத்தை என்னால் என்றைக்குமே விவரிக்க முடிந்ததில்லை. அன்பும் பிரியமும் உதாசீனப்படுத்தப்படும் போதெல்லாம் இந்தக் கவிதைதான் மனதின் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறது. தனிமையில் கசங்கிக் கிடந்த இரவுகளில் எல்லாம் இந்த வரிகளை யோசித்ததுண்டு. இரண்டு அல்லது மூன்று வரிகளில் எழுதப்படும் கவிதைகள் நல்ல அனுபவத்தை தருவதில்லை என்று வாதிடும் நண்பர்களை தர்க்க ரீதியாக தோல்வியடையச் செய்வதற்கு இந்தக் கவிதையை முன் வைத்திருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதை மட்டுமே தேவதச்சனின் நல்ல கவிதையன்று.

தனக்கும் முன்பும் தனக்குப் பின்னாலும் இல்லாத கவிதையின் வடிவத்தில், அடர்த்தியில், பாடுபொருளில் தனித்தன்மையான கவிதைகளால் நிரம்பியிருக்கிறது தேவதச்சனின் கவிதை உலகம். கவிஞர் மிகச் சாதாரணமான கவிதைக் காட்சிகளில் சிக்கலான புதிர்களை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களையும் சிக்கல்களையும் புதிர்களாகக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைகள் விடுகதைகளைப் போன்றவை. இந்தப் புதிர்களின் விடைகளைக் கண்டறிவதில் இருக்கும் சுவாரசியத்தைத்தான் வாசக மனம் விரும்புகிறது. தேவதச்சனின் துண்டிக்கப்பட்ட கவிதைக் காட்சிகளை இணைத்துப் பார்ப்பதே புதிர்களின் சிண்டுகளை நீக்குவதைப் போலத்தான் இருக்கிறது.

தனக்குள் வரும் உயிரிகளை வெளியேற முடியாதபடி மூடி அவற்றை நொதிக்கச் செய்யும் 'நெப்பந்தெஸ்(Nepenthes)'தாவரத்தின் செயற்பாடுக்கு எந்தவிதத்திலும் சளைக்காததாகத்தான் தேவதச்சனின் கவிதைகளை என்னால் மதிப்பிட முடிகிறது. தனக்குள் வரும் வாசகனை திரும்பத் திரும்ப பேசச் செய்வன இக்கவிதைகள். இந்த நொதித்தல் குறுகுறுப்பான நொதித்தல். அந்த குறுகுறுப்பு மனம் விரும்பும் குறுகுறுப்பு.
ஊட்டியில் நித்யா கவிதை அரங்கில் தேவதச்சனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கவிதையியலைப் பற்றி மிக நுணுக்கமாக வெகு நேரம் பேசக் கூடிய ஆளுமைகளில் தேவதச்சனை மிக முக்கியமானவராகக் கருதுகிறேன். கவிதை அரங்கு முடிந்து மேட்டுப்பாளையம் வரும் வரையில் அவரோடு பயணித்தேன். வெற்றிலைக் குதப்பலின் மணத்தோடு வீசிய கவிதைகளை இன்னமும் சில கணங்களில் நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

தேவதச்சனுக்கு வாழ்த்துக்களும், தகுதியானவருக்கு விருதைச் சூடிய அமைப்பினருக்கு பாராட்டுகளும்.

(தேவதச்சன் கவிதைகள் குறித்து எழுதிக் கொண்டிருக்கும் விரிவான கட்டுரையில் இருந்து ஒரு பகுதி)

டிசம்பர் சீஸன்

* புது வருடம் பிறந்திருக்கிறது. ஏழு ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வலைத்தளத்தில் எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவிலான பதிவுகள் கடந்த ஆண்டில்தான் பதிவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டை 'ரீவைண்ட்' செய்ததில் மண்டையில் உறைக்கும்படி அடித்தவைகளில் இதுவும் ஒன்று. வில்லனிடம் மூன்று அடி வாங்கிய பிறகு- மூன்றாவது அடியில் உதட்டோரம் வழியும் துளி இரத்தத்தை துடைத்துக் கொண்டு வெறியுடன் தாக்கும் கதாநாயகனை என நேற்று முழுவதுமாக போராடியதில் தளத்திற்கு புதிய வடிவமைப்பு வந்திருக்கிறது. இனி பதிவிட வேண்டியதுதான் பாக்கி. பாடிகாட் முனீஸ்வரனின் முழு அருள் கிடைக்க யாராவது சிபாரிசு செய்தால் நிறைய எழுத முடியும் போலிருக்கிறது.

* டிசம்பர் சீஸன் இசைக்கு மட்டுமில்லாமல் இலக்கியத்திற்கும் வந்துவிட்டது. ஜனவரியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு முன்னோட்டமாக டிசம்பர் மாதத்தின் பெரும்பாலான நாட்களில் புத்தகவெளியீட்டு விழா நிகழ்வுகள் நடைபெறுகிறது. சொல்லிவைத்தாற்போல முக்கியமான பதிப்பகங்கள் பெரும்பாலான கூட்டங்களை தேவநேயப்பாவணர் அரங்கில்தான் நடத்துகின்றன. பத்துக்கு பத்து அறையொன்று சல்லிசாக அண்ணாசாலையில் வாடகைக்கு கிடைத்தால் டிசம்பர் மாதம் இலக்கியபெருங்குடி மக்களோடு இனிதே கழியும் போலிருக்கிறது.

* உயிர் எழுத்து சார்பில் நடைபெறவிருந்த நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீஷங்கரின் சொற்பறவை கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை வழங்க சுதீர் செந்தில் அழைத்திருந்தார். மேடையில் இருக்கும் போது எதிரில் இருக்கும் பார்வையாளர்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டால் தைரியமாக பேசிவிடலாம் என்று ஒன்பதாம் வகுப்பில் தமிழாசிரியர் சொன்னது ஞாபகம் இருக்கிறது. ஆனால் இலக்கியக் கூட்டத்தில் மட்டும் இதைச் செயல்படுத்த முடிந்ததில்லை. புன்னகையே இல்லாமல் மாமனார் வீட்டில் சண்டைபிடித்துவிட்டு வந்தவர்களைப் போல இருக்கும் ஒவ்வொருவரும் என்னைவிடவும் அதிகம் வாசித்தவர்கள் என்ற நினைப்பு வந்து கொன்றுவிடுகிறது. அதனாலயே ஒரு கூட்டத்தில் பத்து நிமிடங்கள் பேச வேண்டுமானால் பதினைந்து நாட்கள் தயாரிப்பு தேவைப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கும் அப்படியான தயாரிப்பிற்கு பிறகு 'தானே' புயலின் காரணமாக கூட்டத்தை ஒத்தி வைப்பதாக தகவல் வந்தது. Just miss!

*தமிழில் நவீன இலக்கியத்தின் முன்னோடி கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்(க.நா.சு) பற்றிய மிக சுவாரசியமான கட்டுரை டிசம்பர்'2011 காலச்சுவடில் வெளிவந்திருக்கிறது. அச்சில் வாசிக்காதவர்கள் ஆன்லைனில் வாசிக்கலாம். பழ.அதியமானின் நகைச்சுவையுணர்வூட்டும் எழுத்துக்காகவே மூன்று முறை வாசிக்க முடிந்தது.

* இரண்டாம் முறை பிரான்ஸ் சென்றிருந்த போது கெப்'ட்-அக்ட் (Cap d'agde) என்ற கடற்கரைக்குச் சென்று வந்தேன். அது என்ன மாதிரியான கடற்கரை என்பதை கூகிளாண்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 'த்ரில்' ஆக இருந்தாலும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்காத அனுபவம். சற்று விரிவாகவே எழுத விரும்புகிறேன். இதற்கும் பாடிகாட் முனீஸ்வரனை துணைக்கு அழைத்தால் அவர் கடுப்பாகிவிட வாய்ப்பு அதிகம் என்பதால் தனியாகவே முயற்சிக்கிறேன்.

* பொங்கல் வருகிறது- சென்னை சங்கமம் உண்டா என்றுதான் தெரியவில்லை.

Friday, December 23 9 எதிர் சப்தங்கள் By: வா. மணிகண்டன்

நவீன கவிதையும், புதுக்கவிதையும் ஒன்றா?

வணக்கம்

என்னுடைய பெயர் சா.பாலமுருகன்.
குடந்தை அரசினர் கலைக் கல்லூரியில் ''தமிழ்க் கவிதைகள் - ஓரு மதிப்பீடூ''
என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருக்கிறேன். உங்களூடைய கலாப்ரியா குறித்த கட்டுரையை பார்வையிட நேர்ந்தது. மிகவும் நன்றாக இருந்தது

வினா : நவீன கவிதையும், புதுக்கவிதையும் ஒன்றா? வேறுபாடுகள் இருந்தால் சுட்டவும்

நன்றி
**************************
அன்புள்ள பாலமுருகன்,

வணக்கம்.

மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளை Modern Poetry என்கிறார்கள்.

Modern Poetry என்ற சொல்லை நவீன கவிதை என்றும் அல்லது புதுக்கவிதை என்றும் மொழி பெயர்க்க முடியும் என்றாலும்- தமிழ் கவிதைச் சூழலில் நவீன கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் அந்தச் சொற்களின் புழக்கத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கின்றன.

புதுக்கவிதை என்ற சொல் வாரமலரின் கடைசிப்பக்கத்தில் வரும் கவிதைக்கும், திரைக்கவிஞர்களின் கவிதைகளுக்கும், மேடைக் கவிதைகளுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. மரபை உடைத்த கவிதைகளில் பெரும்பாலானவை கூச்சல்கள் நிறைந்தவையாகவும், அலங்காரத்திற்கு முக்கியத்துவம் தருவனவாகவும் இருக்கின்றன. சில கவிதைகள் பிரச்சார தொனியிலானவை. இக்கவிஞர்கள் 'கவிதைக்கு பொய்யழகு' என வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டார்கள்.

தமிழ் கவிதையியலில் நவீன கவிதை என்பது ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா,சி.மணி,கலாப்ரியா,கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் என்ற கவிஞர்களின் தொடர்ச்சியாக வரும் கவிதைகளை குறிப்பிடவே பயன்படுத்தப்படுகிறது. Contemporary Poetry என்ற ஆங்கிலச் சொல் இந்தக்கவிதைகளுக்கு சரியாக பொருந்தும். இக்கவிதைகள் மேற்சொன்ன புதுக்கவிதைக்கு நேர்மாறானவை. நவீன கவிதைகளில் கவிஞன் துருத்திக் கொண்டிருப்பதில்லை. பிரச்சார நோக்கத்திற்காகவும் கவிதை பயன்படுவதில்லை.இங்கு கவிதை வாசகனுடன் நேரடியாக உரையாடுகிறது. நவீன கவிதையில் வாசகனுக்கும் கவிதைக்கும் இடையில் கவிஞன் என்பவன் வெறும் கருவி மட்டுமே.

கவிதைகள் தரக்கூடிய வாசிப்பனுபவம் என்பதையும் இந்தக் இரு வகையான கவிதைகளைப் பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். எதுகை மோனை போன்ற மொழி அலங்காரங்களும், நிறுத்தற்குறிகள் போன்ற பிளவுகளும் புதுக்கவிதையின் பிரதான அம்சங்களாக இருக்கின்றன. இவை மனித மனதின் மேல்மட்ட உணர்ச்சிகளை எளிதில் தூண்டக்கூடியவை. ஆனால் ஆழ்மனதில் உருவாக்கும் சலனம் என்பது எதுவுமில்லை.

நவீன கவிதைகளில் 'படிமம்' என்ற நுட்பம் பரவலாக பயன்படுகிறது. உதாரணத்திற்கு 'உடைந்த பாறை' என்பது ஒரு படிமம். கவிஞன் பாறை என்பதனை கவிதையில் ஒரு குறியீடாக பயன்படுத்தியிருக்கக் கூடும். இங்கு பாறை என்பது வெறும் கற்பாறை மட்டுமே இல்லை. அது சிதைந்த ஆளுமையைக் குறிப்பிடவோ, நொறுங்கிய மனதினைக் குறிப்பிடவோ கூட இருக்கலாம். என் அனுபவம் சார்ந்து அந்த படிமத்தை நான் 'எதுவாக' வேண்டுமானாலும் புரிந்துகொள்ளக் கூடும். அனுபவம் சார்ந்து கவிதை உருவாக்கும் சலனம் ஆழ்மனதோடு தொடர்புடையது. இதனை நவீன கவிதையின் முக்கியமான அம்சம் என நான் நம்புகிறேன்.

'படிமம்' என்பது மட்டுமே நவீன கவிதையின் நுட்பமில்லை. எல்லாக்கவிதைகளிலும் படிமம் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிக எளிமையான, நேரடியான நவீன கவிதைகள் இருக்கின்றன. அப்படியானால் இவை 'புதுக்கவிதை'யின் பிரிவில் வரக்கூடியனவா என்ற வினா எழலாம். இந்த இடத்தில் கவிதையின் வடிவம், அதன் உள்ளடக்கம் ஆகியவை கவனிக்கத் தக்கவை. (துருத்தலின்மை, கூச்சலின்மை போன்றவையும்). இந்த வித்தியாசத்தை தொடர்ச்சியான கவிதை வாசிப்பின் மூலமாக மிக விரைவில் புரிந்துகொள்ள முடியும்.

இந்த விளக்கம் மிகச் சிறிய குறிப்பு மட்டுமே. உங்களின் வினாவுக்கான பதிலை இன்னமும் விரிவாக்க முடியும்.

நன்றி.

வா.மணிகண்டன்.
Monday, December 19 1 எதிர் சப்தங்கள் By: வா. மணிகண்டன்

குழந்தையின் ஒற்றை நாணயம்



ஒற்றை நாணயத்தை
சுண்டிக் கொண்டிருக்கும்
குழந்தையின் அருகில்
அசிரத்தையாக பேசிக்கொண்டிருந்தார்கள்-
அவன்
மார்கழியில் குளிர் அதிகமாகிவிட்டதாகச் சொன்ன போது
ஒவ்வொரு வருடமும் இதையே சொல்கிறார்கள் என்றான்
இன்னொருவன்
வலதுகையில் புதிதாகத் தோன்றியிருக்கும் கரும்புள்ளியைக் காட்டியவனை
அசட்டை செய்தவன்
நேற்றைய மதுவிற்கு கடித்துக் கொண்ட மாமிசத்துண்டு
நன்றாக வெந்திருக்கவில்லை என்ற கணம்
அவள்
குங்குமப்பூ நிறச் சுடிதாரில் கடந்து சென்றாள்
கண்களை மட்டும் அவள் மீது திருப்பியவர்கள்
தேநீர் அருந்த விரும்புகிறார்கள்
சிகரெட் பற்றவைக்காத அந்தத் தருணத்தில்
அவனது செல்போன் அழைத்தது
சில வார்த்தைகளுக்குப் பிறகாக முகம் இருண்டவன்
பாதி நிரம்பியிருந்த தேநீர் குடுவையை வைத்துவிட்டு
ஓடத் துவங்குகையில்
குழந்தை நாணயத்தை
மீண்டும் சுண்டியது
ஒரு முறை கூட சுழலாத நாணயத்தை
திரும்பத் திரும்ப சுண்டியது
பூவும் தலையும் இடம்மாறினால்
அவனின் வானமும் பூமியும்
மாறிவிடக் கூடும் என நினைத்தவன்
வெறுமையின் சாயலோடு சிகரெட்டை பற்றவைத்தான்.
Tuesday, November 22 16 எதிர் சப்தங்கள் By: வா. மணிகண்டன்

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி



கருமுகில் திரண்டு நிற்கும்
இந்த மழைக்கால மாலையில்
மிக மூர்க்கமாக முயன்று கொண்டிருக்கிறேன்
செம்மண்ணைக் குழப்பி 
ஒரு குருவியைச் செய்துவிட-

தன் 
அழகின்மையின் துக்கத்தை 
கண்களில் சேகரித்திருக்கும் 
தவிட்டுக்குருவியைத்தான் உருவாக்கவிருக்கிறேன்

சின்னஞ்சிறு மஞ்சள் அலகில்
வயல்வெளியைத் தூக்கிச் செல்லும்
என் குருவி
தன் தலையை சிலுப்பி 
ஒரு நதியை இடம் மாற்றும்

அதன் 
சிறகுகளின் சாம்பல் நிறத்திற்காக
இந்நகரத்தின் இல்லாத வனங்களை பொசுக்கி வைத்திருக்கிறேன்
அலகுகளின் நிறத்திற்கு
சோடியம் விளக்கின் செம்மஞ்சள் ஒளியை சேகரித்திருக்கிறேன்
சீரற்ற அதன் பாடலுக்கு
வாகன இரைச்சலை பயன்படுத்திக் கொள்வேன்

தனக்கான போட்டியாளனை விரும்பாத
கடவுள்
பறக்கவே முடியாத இந்நகரத்தில்
குருவியின்
எளிமையான முதல் சிறகசைப்பு குறித்து
கேலி செய்கையில்
அவனை செருப்பால் அடித்து 
விரட்டிய கணம்
குழைத்த சேற்றுக்குள்
விழுகிறது
முதல் மழைத்துளி

Tuesday, November 15 6 எதிர் சப்தங்கள் By: வா. மணிகண்டன்

பறத்தலை மறந்த புறா


மெஜஸ்டிக் சிக்னலில்
இரண்டரை மாதங்களுக்கு முன்னதாக
கட் அவுட் ஒன்றை நிறுத்தினார்கள்-
ஜன்னல் திறந்த வீட்டில்
நடுங்கும் மெழுகுவர்த்தியென
காற்றசைவுக்கு சிறகை அசைக்கும்
32 அடி புறாவின்
நிறம் நீலம்
அதன்
கண்களுக்கு நேரெதிரில்
தன் பின்புறத்தை
கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்கும்
உள்ளாடையணிந்த
‘ஹாட் மாம் க்ளப்’க்காரியின் பெரும்படத்தை
நேற்றிரவு பொருத்தியிருக்கிறார்கள்
தன்னை யாரும் கவனிப்பதில்லை என்பதை
இன்று காலையில் புரிந்து கொண்ட புறா
தன் சிறகசைப்பை நிறுத்தி கண்களை மூடியது
சலனமற்ற இருப்பை தவமாக்கிய புறாவின் மீது
முன்னிரவு ஏழேகாலுக்கு சூடான பெருமூச்சை சொரிந்தாள்
க்ளப்காரி
தான் சிங்கமாக இருந்திருந்தால்
கட்டுகளை பிய்த்தெறிந்திருக்க முடியும் என நம்புகிறது
புறா
பறத்தலின் நுட்பத்தை மறந்துவிட்டிருந்தால்
விழுந்து நொறுங்கக் கூடும் என்று தயங்கிக் கொண்டிருக்கிறது
நீங்களும் நானும்
இந்த ஊரும் அடங்கிப்போன ஒரு கணத்தில்
பிங்க் நிற உள்ளாடையிலிருந்தவள்
பச்சை நிறத்திற்கு மாறுகிறாள்
புறா அந்த நொடியில் என்ன நினைத்தது
என்று யோசிக்கிறீர்கள்
தன் கண்களைத் திறந்திருந்தது
மறுநாள் காலை.
Thursday, November 10 8 எதிர் சப்தங்கள் By: வா. மணிகண்டன்

துளிகளின் கவிதை:தீபச்செல்வனின் கவிதைகளை முன்வைத்து.



கவிதை ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொருவிதமான பரிமாணத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. "இதுதான் கவிதை" என்று எவ்விதமான தீர்க்கமான முடிவுக்கும் கவிதை வாசகனாலும் கவிதையின் விமர்சகனாலும் வர முடிவதில்லை. கவிதையின் இந்த நீர்மைத்தன்மைதான் மற்ற எந்த இலக்கிய வடிவத்திலிருந்தும் அதனை தனித்துவமாக்கிக்காட்டுவதாக தோன்றுகிறது. கவிதை, கவிஞனின் அபத்தங்களின் வழியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் முழுமையாக நம்புகிறேன். அபத்தங்களின் கோர்வைதான் கவிதைக்கான எல்லையை யாராலும் நிர்ணயிக்க முடியாததாக மாற்றுகிறது. அபத்தத்தை உதறிவிட்டு அடுத்தவர்கள் தன்னை கவனிக்கத் துவங்குகிறார்கள் என்பதனை கவிஞன் உணரும் போதும், அவன் அடுத்தவர்களின் கவனத்தை யாசிக்கும் போதும் கவிதை பொலிவிழக்கத்துவங்குகிறது. 


சமீபகாலத்தில் எதிர்கொண்ட ஈழத்து கவிஞர்களின் கவிதை தொகுப்புகளை ஒருசேர வாசிக்கும் போது நீர்மைத்தன்மைxஅபத்தம் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்காமல் இருக்க முடியவில்லை. தற்கால ஈழத்தின் கவிதைகளை குறிப்பிட்ட வரையறைக்குள்- அதன் வடிவம், உள்ளடக்கம், கவிதை மொழி என குறிப்பிட்ட அம்சங்களின் மூலமாக தொகுக்க முடியுமா என்று முயற்சித்தால் இயலாது என்றே தோன்றுகிறது. தமிழின் பெரும்பான்மையான தற்கால கவிதைகளை குறிப்பிட்ட சில அம்சங்களின் மூலமாக தொகுக்க முடிவதில் இருக்கும் அதே சிக்கல்கள்தான் தற்கால ஈழக்கவிதைகளை தொகுப்பதிலும். மிகச் சமீபமாக வாசித்த அனார், தீபச்செல்வன், தமிழ்நதி, ரிஷான்செரீப், மாதுமை, அலறி, ஆகர்ஷியா, ஃபஹீமாஜஹான் என சில கவிஞர்களின் கவிதைகளில் இருந்தே இந்த முடிவுக்கு வர முடிந்திருக்கிறது. இவர்கள் மட்டுமே ஈழக்கவிஞர்கள் இல்லையென்றாலும் இவர்களை நிராகரித்துவிட்டு தற்கால புலம்பெயர் அல்லது ஈழக்கவிதைகளைப் பற்றி பேச முடியும் என்று தோன்றவில்லை. மேற்சொன்ன கவிஞர்களின் கவிதைகளை ஒரு சேர வாசித்தாலும் கவிதைகளை தொகுத்து கட்டுரையாக்குவாக்க அல்லது ஒப்பீட்டு விமர்சனமாக செய்ய முயலும் போது நேர்த்தியாக முடிக்க முடியும் என்று தோன்றவில்லை.



ஈழத்தின் மூத்த கவிஞர்களை சு.வில்வரத்தினம், வ.ஐ.ச.ஜெயபாலன், புஷ்பராஜன், சிவரமணி, சேரன், திருமாவளவன், செழியன் என்ற வரிசையில் மனதில் புரட்டினால் போர்ச்சூழல் குறித்தான கவிதைகளையே இந்த படைப்பாளிகளின் முக்கியமான கவிதைகள் என்று என்னால் சொல்ல முடிகிறது. ஆனால் தற்கால ஈழக கவிஞர்களின் முக்கியமான கவிதைகள் என்று எனக்குப்படுவதை தொகுத்தால் போர்ச்சூழல் தாண்டிய கவிதைகளையும் காண முடிகிறது. விதிவிலக்காக  தீபச்செல்வனின் முக்கியமான கவிதைகள் பெரும்பாலும் போர்ச்சூழல் சார்ந்த கவிதைகளாகத்தான் இருக்கின்றன. 



இரத்தத்திற்குள்ளும், துப்பாக்கி ரவைகளின் பயணத்தினூடாகவும் வாழும் கவிஞனின் பதிவுகள் அவை. மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் தீபச்செல்வனின் கவிதைகள் ஈழத்தின் துக்கங்களுக்கும் அந்த நிலம் எதிர்கொண்ட குரூரங்களுக்கும் சாட்சியாகி இருப்பவை. இரத்தத்தின் ஈரப்பசைகளையே இவரின் பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. அந்த நிலத்தின் வேதனையும் பலிகளும் நிறைந்த நாட்களில் அவற்றை அந்த மண்ணிலிருந்தே பதிவு செய்தவை தீபச்செல்வனின் கவிதைகள். இந்தக் கவிதைகள் வாசிப்பவனின் மயிர்க்கால்களைச் சில்லிடச் செய்கின்றன என்பதே அதன் பலம். 'சில்லிடச் செய்தல்' மட்டுமே கவிதையின் அடையாளமாக இருப்பதில்லை. கவிதையின் உண்மைத் தன்மை அந்த கவிதைக்கான அடையாளமாகிறது. தீபச்செல்வனின் கவிதைகளில் இருக்கும் தனித்துவமாக இதை குறிப்பிடுவேன். இந்த தனித்துவத்திற்காக ஈழத்தின் தற்கால கவிஞர்களின் பிரதிநிதியாக தீபச்செல்வனின் கவிதைகளை கவனிக்க முடிகிறது.


பின்வரும் ஒரு கவிதையை வாசித்துவிட்டு தீபச்செல்வனின் பிற கவிதைகளை வாசிப்பது பொருத்தமாக இருக்கும்.

"எருக்கலை பூக்களை சூடியபடி எனது காதலி
குழிகளில் இருந்து எழும்பி வருகிறாள்
எருக்கலை மரத்தின் வேர்களில் 
சகோதரனோ முகத்தை பரவியிருக்கிறான்
குழந்தைகளோ எருக்கலை இலைகளை வாசிக்கின்றனர்
மண்ணுக்கடியில் அவர்கள் இருக்கிறார்கள் என்று
பிதட்டுகின்றன குழந்தையாகிய தாயின் வார்த்தைகள்"

கவிதை தரும் பதட்டம் விரல்களை நடுங்கச் செய்கிறது. எருக்கம் பூச்செடியை என் கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எதிர்கொள்கிறேன். இதுவரை அதன் வெண்மை படர்ந்த இலைகளும் ஊதாநிறம் விரவிய வெண்மலர்களும் தவிர்த்து வேறந்த விதத்திலும் அது கவனத்தைக் கோரியதில்லை. இந்தக் கவிதையை வாசித்த தினத்திலிருந்து எருக்கம் செடி உள்ளூர அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த அதிர்வினை எழுத்துக்களாலும் வார்த்தைகளாலும் மட்டுமே விவரிக்க முடியும் என்று தோன்றவில்லை. வெம்மையில் தழைத்து நிற்கும் எருக்கம் கோடைக்கும் வறட்சிக்குமான குறியீடு. இங்கு எருக்கம்செடி மரணத்தின் குறியீடாகிறது. அந்த மரணம் வெம்மையில் நிகழும் மரணம். இம்மரணங்க்கள் அதீத பீதி மிகுந்தவை.வெம்மையையும் பீதியையும் கவிதை குறிப்புணர்த்துகிறது. கவிதையை வாசித்துச்செல்பவன் 'குழந்தையாகிய தாயின்' என்ற சொல்லில் தேங்கி விடக் கூடும். அவள் ஏன் குழந்தையாகிறாள் என்பதற்கான விடை தேவைப்படுகிறது. எந்த அதிர்ச்சியையும் தாங்கி மீண்டு வருபவள்தானே தமிழ்ப்பெண். அப்படித்தான் இங்கு காலம்காலமாக படிமமாக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய மனவலிமை கொண்ட பெண்ணை குழந்தையாக்கிய அதிர்ச்சி எத்தகையது என்பதான வினாக்களில் மனது சுற்றி வருகிறது. இந்த வினாவுக்கான பதில் முந்தைய  வரிகளில் இருக்கிறது. அத்தனை உறவுகளையும் மரணத்திற்கு தாரை வார்த்துவிட்டு பிதற்றிக் கொண்டிருக்கிறாள் தாய்.

"குழந்தையின் சோற்றுக்கிண்ணத்தில்
நிரம்பியிருந்தது மரணம்"

என்ற வரிகள் தரும் காட்சிகளை விட்டு நகரமுடியாதபடி இருக்கிறது அதன் ஆழம். எத்தனை குரூரமான மனம் உடையவன் என்றாலும் அவன் குழந்தையிடம் இரக்கக் குணமுடையவனாக இருப்பான் என்பது நம் கற்பிதம். இந்த அடிப்படைதான் அடுத்தவனால் தன் உயிர்போகும் சூழலில் ஒருவன் கடைசியாக பிரயோகப்படுத்தும் சொற்கள் "நான் புள்ளகுட்டிக்காரன்" என்பதாக இருக்கிறது என ஒரு மனோவியல் நூலில் வாசித்தேன். ஆனால் குழந்தைகளும் கூட போர்ச்சூழலில் எந்தவிதமான விதிவிலக்கும் இல்லாமல் கொல்லப்படுகின்றன. ஒரு இனத்தை அழிப்பதற்கு முதலில் அந்த இனத்தின் குழந்தைகளை அழிக்கிறார்கள் அரக்கர்கள். வன்மம் மிகுந்த மனிதர்களின் முகங்கள்தான் இவ்வரிகளில் புதைந்து கிடக்கின்றன. ஒரு நிழற்படமும், சலனப்படமும் தொந்தரவு செய்ய முடியாத ஒரு மனதை இரு வரிகள் தொந்தரவு செய்துவிட முடியும் போலிருக்கிறது.
                                                                 (2)

கவிதை ஒரு குவியத்தை நோக்கி நகரவேண்டியதில்லை அல்லது அது வேறு எதையும் சுட்ட வேண்டியதில்லை.(Pointless) வன ஓடையின் திசையின்மையைப் போலவே கவிதையும் தன் நகர்தல் பற்றிய பிரக்ஞையின்றி இருக்கலாம். இந்த திசையின்மையையும் நவீன கவிதைகளின் ஒரு கூறாகவே பார்க்கப்படவேண்டும். தீபச்செல்வனின் கவிதைகளுக்குள்ளாக இந்த அம்சம் இருக்கிறது. அதாவது கவிதையின் சில பத்திகள் இந்த திசையின்மையுடன் இருக்கின்றன.ஆனால் ஒரு கவிதை முழுவதையும் வாசிக்கும் போது அந்த அனுபவம் முழுமையாக கிடைக்கிறது என்று சொல்ல முடிவதில்லை. 

"வழிநெடுக அழிக்கப்பட்ட
கிராமத்தின் ஊமைத்துயரம்
கொட்டிக்கொண்டே போனது
துயரத்தை மணந்து கிராமமும்
அதைத்தூக்கியபடியும் பறவையும்
அடைபட்டுக் கொண்டிருந்தது"

மேற்சொன்ன கவிதைக்காட்சி "பறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்" என்ற கவிதையில் இருக்கிறது. இக்கவிதையின் பத்திகளும் மேற்குறிப்பிட்ட பத்தியும் கவிதையின் திசையற்ற நகர்தலை காட்சிப்படுத்துகிறது. ஆனால் கவிதையின் தலைப்பும் , ,முழுமையான கவிதையும் இந்தக் கவிதையின் திசையை அடையாளப்படுத்துகின்றன. கவிதையை கோட்பாடுகளின் அடிப்படையில் விமர்சகனுக்கு விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் வாசகனாக கோட்பாடுகளை கொஞ்சம் நகர்த்திவிட்டு கவிதையை மட்டுமே வாசிக்க மனம் விரும்புகிறது.

கவிதை மனம் வாய்க்கப்பெற்றவனுக்கு துக்கத்திலும் நடுக்கத்திலும் கவிதையே அவனது கரம் பற்றும் ஆறுதலாக இருக்கக் கூடும் என்பதனை தீபச்செல்வனின் கவிதைகள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு நகரம் வெறிச்சோடிய போதும், கிளைமோர் தாக்குதலில் மனிதப் பணியாளர் பலிகொள்ளப்படும்போதும், முக்கிய சாலை பயன்பாட்டிற்கில்லை என பூட்டப்படும் போது, கவிஞன் ஒருவன் கொல்லப்படும் போது இவருக்கும் கவிதையே வேதனையின் வடிகாலாக இருந்திருக்கிறது.

"உடைந்த வானத்தின் கீழாக
நிலவு
தொங்கிக் கொண்டிருந்தது
நட்சத்திரங்கள் பேரிரைச்சலோடு
புழுதியில் விழுந்துகிடந்தன"

எந்தக் கணத்திலும் குண்டுகள் தம் தலைமீது விழக்கூடும் என்ற நிலையில் பதுங்குழியில் இருப்பவன் இயற்கையும் அழகியலையும் சிதைத்துவிடவே விரும்புகிறான் அல்லது குறைந்தபட்சம் அவற்றை உதாசீனப்படுத்துகிறான். அடுத்த கணம் பற்றிய நிச்சயமின்மை அவனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் போது மென்மையான உணர்வுகளுக்கு அவன் இடம் அளிப்பதில்லை. இந்த புரிதலே எனக்கு முந்தைய வரிகளில் உருவாகிறது.

"எனது அறையைச் சூழ்ந்து வந்தன
பல மிருகங்கள்
இரவைக் கடித்து குதறிய
மிருகங்களின் வாயில் கிடந்து
இரவு சீரழிந்தது
நிறுத்தப்பட்ட துப்பாக்கிகளின் முன்பாக
எனது இரவின் பாடல்
விழுந்து சிதறிக் கிடந்தது
இன்னும் எனது காதலி
அறை போய்ச்சேரவில்லை"

ஷெல்களுக்குள்ளும், எறிகணைக்குள்ளும் வாழ்பவனும், களத்தில் ஆயுதம் ஏந்தியவனும் காதலிக்காமல் இருப்பதில்லை. ஆனால் அந்தக் காதல் எளிமையானதில்லை.அதன் சிக்கல்களும் எதிர்கொள்ளும் ஆபத்துக்களும் வெறும் காதலுக்கானது மட்டுமில்லை. அவர்களின் உரிமைக்கும், அந்தரங்கத்திற்கும், உயிருக்கும் ஆனது. இதை மேற்சொன்ன கவிதை வரிகள் துல்லியமான படமாக்குகிறது.
                                                        
                                                               (3)

தீபச்செல்வனின் கவிதைகளில் உரிமை கோரல் இல்லை, தாம் இழந்துவிட்டவைகளுக்காக அடுத்தவர்களின் கருணை கோரல் இல்லை, புலம்பல்கள் இல்லை- ஆனால் கவிதைகளை வாசித்து முடிக்கையில் அவர்கள் இழந்த உரிமைக்காக ஒரு கணம் யோசிக்கிறேன்; அவர்களின் இழப்புகளுக்காக சற்றேனும் விசனப்படுகிறேன்; அவர்களின் துக்கங்களுக்காக சிறிதேனும் புலம்புகிறேன். கவிதைகளில் இருக்கும் துருத்தலின்மையை இவரின் கவிதைகளின் முக்கிய அம்சமாக சொல்லத் தோன்றுகிறது.

"ஒரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி: யாழ் நகரம்"

என்ற கவிதை ஒரு காட்சியை சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிறது. அந்தக் கவிதையில் கவிஞன் வருந்தவில்லை; கோபப்படவில்லை, எந்தவிதமான உணர்ச்சியுமில்லாத செய்தி அறிவிக்கும் வானொலிப்பெட்டியென இருக்கிறது கவிதை. இனந்தெரியாத பிணமும் அதற்கு முந்தைய வரி சுட்டும் உணவகம்- குறிப்பாக கொத்து ரொட்டிக் கடையும் அதன் பிறகான அமைதியும் உருவாக்கும் ஒரு வெளி வாசகனுக்குள்ளாகவும் அமைதியை உருவாக்குகிறது. அது வெறுமையான அமைதி.அந்த அமைதி வாசிப்பவன் யோசிப்பதற்கான பெரும் இடத்தை அளித்துவிடுகிறது. இதுவே வாசகனுக்கும் கவிதைக்குமிடையேயான உறவு. இத்தகைய கவிதை-வாசகன் உறவை தனது ஒவ்வொரு கவிதையிலும் தீபச்செல்வன் உறுதிப்படுத்துகிறார். இதையே தீபச்செல்வனின் முக்கியமான பலமாக நான் கருதுகிறேன்.

"இந்த நகரத்தில் மட்டும்
ஏதோ ஒரு விதத்தில்
மனிதர்கள் தீர்ந்து கொண்டிருக்கிறார்கள்
தங்கள் பிள்ளைகளை
மரணங்களுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு
புதைந்துபோன தாய்மார்களின் 
கண்ணீரில் எரிந்த நகரம்
சூடேறிக்கொண்டிருந்தது"

துப்பாக்கிகளுக்கு முன்பாகவும் வேட்டை மிருகங்களின் கோரப்பற்களுக்குமிடையில் காதலும் உறவுகளும் அகப்பட்டுக்கொள்கின்றன. மனிதர்கள் தீர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சொற்பிரயோகம் கவனிக்கப்படத்தக்கது. தீர்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றிருக்க முடியும். அப்படியிருப்பின் அது தரக்கூடிய பொருள் வேறு. தீர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எப்படி தீர்கிறார்கள் என்பதனை ஒரு கேள்வியாக வைத்திருக்கிறது- மர்மமான முறையில் தீர்கிறார்கள். இந்த நகரம்தான் குழந்தைகளை இழந்துவிட்ட தாய்களின் "கண்ணீரில் எரிந்தது". இப்பொழுது சூடேறிக் கொண்டிருக்கிறது. இப்படியான சொற்களின் விளையாட்டை கவிதைகளில் சாவகாசமாக நிகழ்த்துகிறார். 

தீபச்செல்வனின் "பதுங்கு குழியில் பிறந்த குழந்தை" தொகுப்பாகட்டும், தனது வலைத்தளத்தில் அவர் எழுதும் பிற கவிதைகளாகட்டும்- அந்தக் கவிதைகள் சுற்றி வருவது மிகச் சிறிய வட்டமே. போர்ச்சூழலில் இன்னல்படும் மக்கள், தானும் தன் குடும்பமும் எதிர்கொள்ளும் வாதைகள், சண்டையில் உருமாறும் நகரமும் நகரத்தின் அங்கங்களும். இது எல்லா கவிஞனுக்கும் கிடைக்காத அனுபவம். அனுபவத்தை நேரடி சாட்சியாக எந்தவிதமான வெற்று அலங்காரமும் இல்லாமல் பதிவு செய்கிறார் தீபச் செல்வன். இந்த நேர்மையான சாட்சியமே என்னை தீபச்செல்வனை இக்காலத்திய மிக முக்கியமான ஈழக் கவிஞனாக குறிப்பிடச் செய்கிறது. 

இவரது பெரும்பாலான கவிதைகள் சொற்களுக்காகவும், நேர்த்திக்காகவும் காத்திருக்காத கவிதைகள். செதுக்கப்படாத சொற்களின் அடுக்குகளாகவே இந்த கவிதைகளை காண்கிறேன். நேர்த்தியின்மையும், சொற்சிக்கனமின்மையும் கவிதையின் பலவீனமாகத் தென்படுகிறது. ஆனால் பாடுபொருளின் கனமும் அது தன்னுள் புதைத்திருக்கும் தீர்க்கவே முடியாத சோகமும் இந்த பலவீனங்களை வீழ்த்திவிடுகிறது. இதுவே தீபச்செல்வனை ஈழத்தின் கவிதை தொடர்ச்சியில் அழுத்தமான இடம்பெறச் செய்கிறது.

(விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10.9.2011 அன்று நிகழ்ந்த கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம்)


நன்றி: உயிர் எழுத்து- நவம்பர்'2011