May 18, 2013

போலீஸ் ஸ்டேஷனும் அங்கு கிடைக்கும் மரியாதையும்


வாழ்க்கையில் ஒரு முறை சிறைச்சாலைக்கு சென்று பார்க்க வேண்டும் என ஆசை இருக்கிறது. அதுவும் சஞ்சய் தத் காட்டும் டகால்ட்டிகளை பார்த்தால் ஜெயில் என்பது பெரிய விஷயமே இல்லை போலிருக்கிறது. வீட்டுச் சாப்பாடு, மெல்லிய மெத்தை, தலையணை எல்லாம் கொடுத்துவிடுகிறார்கள். எப்படியும் நியூஸ்பேப்பரையும், சில சஞ்சிகைளையும் கொடுத்துவிடுவார்கள்.  இது போக சிறைச் சாலைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதி கேட்டிருக்கிறாராம். பிறகு என்ன தேவை? புதிதாக கல்யாணமானவராக இருந்தால் பெண்டாட்டி மட்டும்தான் பாக்கியாக இருக்கும். திருமணம் ஆகி பல வருடங்கள் ஓடிவிட்டதால் இதனை தாதாபாய் மிகச் சிறந்த விடுதலையாக பயன்படுத்திக்கொள்ளுவார் என நினைக்கிறேன்.

தமிழ்நாட்டிலும் புழல் சிறை ஏகப்பட்ட வசதிகளுடன் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு போலீஸ்காரர்களை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. மற்றவர்களிடம் மரியாதையாக பேசும் போலீஸ்காரர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் படுகேவலமாக நடத்தும் போலீஸ்காரர்களை பார்த்திருக்கிறேன். ‘றேன்’ என்பதைவிட ‘றோம்’ பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட அத்தனை பேருமே பார்த்திருப்போம்.

சில வருடங்களுக்கு முன்பாக அப்பாவுக்கு ஒரு விபத்து நிகழ்ந்தது. பணியிலிருந்து ரிடையர்ட் ஆன பிறகுதான் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டியே பழகினார். அதுவரைக்கும் சைக்கிள், டிவிஎஸ் 50, சுசூகி மேக்ஸ் 100 ஆர் மட்டும்தான். கார் ஓட்டிப் பழகிய பிறகு- அதை  ‘பழகிய பிறகு’ என்று சொல்ல முடியாது. குத்துமதிப்பாக ஓட்டத் தெரிந்த போது புத்தம் புது காரை எடுத்துக் கொண்டு பண்ணாரியில் கிடாவிருந்துக்கு போயிருக்கிறார். கூடவே அம்மாவும். போகும் போதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை. விருந்துக்கு போன இடத்தில் ‘அதுக்குள்ள ஓட்டி பழகிட்டீங்களா?’ என்று ஆளாளுக்கு உசுப்பேற்றியிருப்பார்கள் போலிருக்கிறது. வெற்றிலை பாக்கு சிவக்க வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

வீட்டிலிருந்து பண்ணாரிக்கு நாற்பது கிலோமீட்டர் இருக்கும். ஆக, போக வர எண்பது கிலோமீட்டர். திரும்பி வரும் போது மெயின்ரோட்டிலிருந்து வீட்டிற்கு பிரியும் சிறு சாலையில்தான் சனிபகவான் கட்டில் போட்டு படுத்திருக்கிறார். இன்னும் நூறு மீட்டர் தாண்டினால் வீடு வந்துவிடும் என்ற நினைப்பில் அப்பா வண்டியைத் திருப்ப, ஒரு பெண் இடது பக்கமாக வர அப்பா வலது பக்கமாக திருப்ப அந்தப் பெண் திடீரென்று வலது பக்கமாக நகர இப்படியே இட-வல-இட சடுகுடு விளையாடி டென்ஷனில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்து வேப்பமரத்தில் சாத்தித்தான் வண்டியை நிறுத்தியிருக்கிறார். பின்னால் ஸீட்டில் அமர்ந்திருந்த அம்மா ஒரு பல்டியடித்து முன்னாடி கண்ணாடியில் மோதி முன் மண்டை காயத்தோடு தப்பிவிட்டார். தினத்தந்திக்காரனுக்கு ‘அப்பளம் போல நொறுங்கிய கார்’ என்று நியூஸ் கொடுத்து உதவிய அப்பாவுக்குத்தான் கால் முறிந்துவிட்டது.

விபத்து பற்றி கேள்விப்பட்டு பெங்களூரிலிருந்து அவசர அவசரமாக பஸ் பிடித்து வந்த போது அப்பாவை தனியறையில் வைத்திருந்தார்கள். என்னை பார்த்ததும் அம்மா ‘ஓ’வென அழத் துவங்கினார். நிலைமை கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்தது. இந்த விபத்தினால் பிரச்சினைதான்; ஆனால் பயப்படும்படியான பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்றவுடன் அடிபட்ட காரை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. மருத்துவமனையிலிருந்து விபத்து நடந்த இடத்திற்கு போன போது பக்கத்தில் இருந்த பாழடைந்த வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார்கள். ஒரு கீறல் கூட விழாத மினுமினுப்பான கார் இப்பொழுது தகர டப்பாவைப் போல கிடந்தது. 

‘புதுக்கார் என்பதால் எண்பது சதவீதம் இன்ஷூரன்ஸ் வாங்கிவிடலாம், எதற்கும் ஒரு எஃப்.ஐ.ஆர் வாங்கிவிடுங்கள்’ என்று சொன்னார்கள். உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பினேன். தனியாக போயிருக்கக் கூடாது. ஆனால் போய்விட்டேன். அதுவும் ஜீன்ஸ் பேண்ட்டும், டீ-சர்ட்டுமாக.

ஸ்டேஷனில் முரட்டுக்கிடாய்களாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு போலீஸ்காரரிடம் விவகாரத்தைச் சொன்னவுடன் ‘இரு...பார்க்கலாம்’ என்றார். அந்த ‘இரு...பார்க்கலாம்’மில் ஒரு தெனாவெட்டு இருந்தது பாருங்கள். வாழ்நாளில் அப்படியொரு இளக்காரத்தையும், தெனாவெட்டையும் பார்த்ததே இல்லை.

அவர் ‘இரு..பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டார் என்பதற்காக மணிக்கணக்காக ‘இரு’ந்தேன். ஆனால் அவர்தான் பார்க்கவில்லை. ஸ்டேஷனுக்குள் யாராவது வருவதும் போவதுமாக இருந்தார்கள். கரைவேட்டி கட்டியவர்களைத் தவிர மற்ற எல்லோருமே ஏதாவதொருவிதத்தில் பம்மிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் கரைவேட்டிக்காரர்களும் பம்மிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாதவாறு அவர்களுக்கு நடிக்கத் தெரிந்தது.

இனி யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகாக இன்னொரு போலீஸ்காரர் வந்தார். அவரிடமும் மொத்த கதையும் சொல்ல வேண்டியிருந்தது. அவரோ ‘எஸ்.ஐ வரட்டும்’ என்றார். அடுத்த சில மணிகளில் எஸ்.ஐ வந்தார். அவர் இன்ஸ்பெக்டர் வரட்டும் என்றார். இப்படியே அடுத்தது டி.எஸ்.பி, எஸ்.பி என்று நீண்டு டி.ஜி.பி வந்தால்தான் எஃப்.ஐ.ஆர் போடுவார்களோ என்று பிதுங்கிக் கொண்டிருந்தேன். 

நல்ல வேளையாக இன்ஸ்பெக்டர் வந்தவுடன் ஒரு போலீஸ்காரர் போய் அவரை பார்த்துவிட்டு வந்து ‘டெத் இல்லைன்னா எஃப்.ஐ.ஆர் எல்லாம் போட முடியாது. அது எங்களுக்கு பெரிய பிரச்சினை’என்றார். இதுக்காக யாரைக் கொல்வது என்று புரியாமல் ‘இன்ஷூரன்ஸ் வாங்க தேவைப்படுதே சார்’ என்ற போது,

‘அப்போ உங்க அப்பாவை அக்யூஸ்ட்ன்னு எழுதட்டுமா’ என்றார். இந்த எழவெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அப்பாவை குற்றவாளி என்று எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

‘வேறொண்ணு பண்ணலாம். இந்த இடத்தில் விபத்து நடந்துச்சுன்னு ஒரு ரெஸிப்ட் தர்றேன் அதை கொடுத்தா இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வாங்கிக்குவாங்க’ என்றார். 

‘சரி சார் எழுதிக் கொடுங்க’ என்றவுடன் மேலும் கீழும் பார்த்தார். அவர் ‘மேட்டர்’ எதிர்பார்க்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. 

இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என்று நினைத்து ‘விண்ணப்பம் எழுதி கொடுத்துட்டு போ. போய்ட்டு நாளைக்கு யாராவது பெரியவங்களோட வா’என்றார்.

இதைவிட என்னை வேறு மாதிரி ‘இன்சல்ட்’ செய்திருக்க முடியாது. காரணம், அப்பொழுது எனக்கு திருமணம் ஆகியிருந்தது. ‘பெரியவன்’ என்று நம்பி திருமணமே செய்துவிட்டார்கள் ஆனால் இன்னமும் இந்த போலீஸ்காரர் என்னை பொடியனாக நினைக்கிறார் என்பதுதான் பெரிய டார்ச்சராக இருந்தது. 

ஸ்டேஷனில் இருந்த சில மணி நேரங்களில் பார்த்த வரைக்கும் யாருக்குமே மரியாதை இல்லை. எல்லோரையும் ஏதாவதொரு விதத்தில் இளப்பமாக பார்க்கிறார்கள். இன்ஸ்பெக்டரிடம் மட்டும் ‘அய்யா அய்யா’ என்று கூழைக் கும்பிடு போட்டார்கள். மற்ற அத்தனை பேரும் அவர்களைப் பொறுத்தவரை ‘அக்யூஸ்ட்’தான் போலிருந்தது.

விண்ணப்பத்தை எழுதிக் கொண்டிருந்தேன். இன்ஸ்பெக்டர் வெளியே போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது இரண்டு போலீஸ்காரர்கள் நான்கைந்து பேரைக் கூட்டி வந்தார்கள். ஒரே குடும்பம் போலிருந்தது. ஒரு முதியவர், அவரது மனைவி, அவர்களின் மகன் மற்று மகள். ஒரு போலீஸ் பெண்மணியிடம் இன்ஸ்பெக்டர் கண்ணிலேயே ‘என்ன?’ என்பது போலக் கேட்டார். 

‘அந்த மூலவாய்க்கால் திருட்டு கேசுங்க அய்யா’ என்றார். ‘ம்ம்’ என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் வெளியேறிவிட்டார். 

நான்கு பேரையும் அமரச் சொல்லிவிட்டு அந்த போலீஸ்கார பெண்மணி அறைக்குள் சென்றுவிட்டார். பெண்மணியும், மகனும், மகளும் தரையில் அமர்ந்து கொண்டார்கள். வேஷ்டியும், பனியனும் அணிந்திருந்த அந்த முதியவர் மட்டும் பெஞ்சில் அமர்ந்து கொண்டார். 

போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவது அந்த குடும்பத்திற்கு புதியதாக இருந்திருக்க வேண்டும். அந்த பெண்மணி துக்கம் தாளாமல் தனது வாயில் துணியைப் பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தார். மற்ற மூவரும் தலையை நிமிர்த்தவே இல்லை. அவர்களைப் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது. விரைவாக ஸ்டேஷனை விட்டு நகர்ந்துவிட வேண்டும் எனத் தோன்றியது.

அவசரமாக விண்ணப்பத்தை எழுதி முடித்திருந்தேன். போலீஸ்காரரிடம் கொடுக்க போன போது மிக ஆவேசமாக போலீஸ் பெண்மணி அறையிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த முதியவரை அறைந்ததை பார்த்தேன். ஒரு நிமிடம் நெஞ்சு அடைத்துக் கொண்டது. திடீர்த்தாக்குதலை எதிர்பார்ககாத பெரியவர் நிலைகுலைந்து போனார். முதியவருடன் இருந்த பெண்மணி கதறிய போது, ‘வாயை மூடச் சொல்லி’ அவருக்கும் அடி விழுந்தது. அத்தனை பலத்தையும் திரட்டி தனது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றார். எதற்காக அந்தக் குடும்பத்தைக் கூட்டி வந்திருக்கிறார்கள், இப்பொழுது ஏன் அடிக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை. யோசிக்க விருப்பமும் இல்லாமல் இருந்தது. உண்மையைச் சொன்னால் அந்தச் சமயத்தில் நடுக்கமாக இருந்தது. அந்த ஸ்டேஷனின் சூழல், வெளிச்சம். அவர்களின் அதிகாரம் அத்தனையையும் மீறி பேசுவதெல்லாம் சாத்தியமே இல்லை என்று தோன்றியது. 

ஸ்டேஷனை விட்டு வெளியேறுவதை விட எனக்கு வேறு எந்த வழியும் இல்லை. அந்தக் குடும்பத்திற்கு அந்த வாய்ப்பும் கூட கிடையாது. அங்குதான் இருந்தாக வேண்டும். தொண்டையை அடைத்த கசப்புடன் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய போது ஸ்டேஷனில் இருந்த மரத்தில் பறவைகள் தாறுமாறாக கத்திக் கொண்டிருந்தன. இருள் சற்று தடித்திருந்தது.

May 17, 2013

நீங்களும் உங்கள் சடங்குகளும்


மேட்டூர் அணையில் வெறும் 27.5 அடிக்குத்தான் தண்ணீர் இருக்கிறதாம். அது எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பெரும்பாலான அணைக்கட்டுகளில் இரண்டு மூன்று பக்கெட் அளவுக்குத்தான் தேறும் என்கிறார்கள். 

ஆனால் ரமணனை எப்பொழுது டிவியில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்கிறார். பல வருடங்களுக்கு முன்பாக ஊர்ப்பக்கங்களில் ‘மழை தொட்டச்சி’ என்ற ஒரு பூச்சி அவ்வப்போது தென்படும். XL சைஸ் வெட்டுக்கிளி. தொங்கிப் போன கிழவனைப் போல- I mean, தலை தொங்கிப்போன கிழவன் - தலையை அசைத்துக் கொண்டே நடக்கும். அதனருகில் சென்று ‘தொட்டச்சி தொட்டச்சி மாமன் ஊரில் மழை பெய்யுமா?’ என்றால் தலையை அசைக்கும். நாம் என்ன கேட்டாலும் அப்படித்தான் தலையை அசைக்கும்.எதுவுமே  கேட்காவிட்டாலும் கூட அப்படித்தான் அசைக்கும் என்பதால்‘மாமன் ஊரில் மழை பெய்தாலும் பெய்யும்’ என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது தொட்டச்சிக்கு பதிலாக ரமணன் வந்துவிட்டார். தொட்டச்சி தலை அசைப்பதற்கு பதிலாக ரமணன் வாயை அசைக்கிறார். 

நமக்குத்தான் தெரியுமே! மழை இல்லை. வானம் பொய்த்துவிட்டது.

மழையே இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் இன்னமும் ஊர் ஊருக்கு மாரியம்மன் பண்டிகை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் எங்கள் ஊரில் ஐந்தாறு மாரியம்மன்ஸ். புதூருக்கு ஒன்று, பழையூருக்கு ஒன்று, வன்னியர்களுக்கு ஒன்று, போயர்களுக்கு ஒன்று என்று சித்திரை வந்தால் மாரியம்மன்ஸ் சந்தோஷம் ஆகிவிடுகிறார்கள். இத்தனை மழை அம்மன் இருந்தும் மழை வரும் பாட்டைத்தான் காணவில்லை. வெயிட்! இன்று நாஸ்திகம் பேசி புரட்சி செய்கிறேன் என யோசிக்க வேண்டியதில்லை. அது ஒரு Flow இல் வந்துவிட்டது. அவ்வளவுதான்.

மழைப்பாட்டை எதற்கு ஆரம்பித்தேன் என்றால் அபிலாஷின் ஒரு குறிப்பை படித்தனால். ஆர்.அபிலாஷை தெரியும்தானே? இப்பொழுது உயிர்மையில் அவர்தான் தொடர்ந்து கவர்ஸ்டோரியை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ரொம்ப நல்ல மனுஷன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் என்னை புகழ்ந்து எழுதியிருக்கிறார். என்னையெல்லாம் புகழ்ந்து எழுதினால் நல்ல மனுஷன் என்று சொல்லாமல் என்ன சொல்வது? அவர் எழுதியதில் இரண்டாவது பத்தியில் கடைசி வரியை படித்துவிட்டு “அய்யய்ய அவரு உங்களை கலாய்க்கிறாருங்க” என்றார் உள்துறை அமைச்ச்சர். ஆனால் எங்கள் நட்பில் பங்கம் விளைவிக்க மேற்கொள்ளப்படும் உள்நாட்டு சதி என்பதாக புரிந்து கொண்டு அதையும் பாராட்டாகவே எடுத்துக் கொண்டேன். 

அபிலாஷ் உண்மையிலேயே நல்ல நண்பர். இப்பொழுதெல்லாம் அவரை டென்ஷன் ஆக்குவதற்கு மிகச் சிறந்த உபாயத்தை கண்டுபிடித்திருக்கிறேன். ‘ராஜூமுருகனோட வட்டியும் முதலும் இருக்கு பாருங்க....’என்று ஆரம்பித்தால் போதும். அதன் பிறகு அவர் பேசத் துவங்கிவிடுகிறார். ராஜூமுருகன் எழுத்தின் மீது அவருக்கு அவ்வளவு பாசம். ஃபேஸ்புக்கிலோ அல்லது ஏதோ ஒரு கட்டுரையிலோ ராஜூமுருகன் சபரிமலைக்கு போவதாகவும், எழுத்தாளர்கள் சடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் அபிலாஷ் எழுதியிருந்தார்.

நான் சபரிமலைக்கு போயிருக்கிறேன் என்பதால் ‘சுள்’ என்றது. என்னளவில் சடங்குகள் என்பவை வெறும் செயல்கள் மட்டும் இல்லை. அவை அனுபவங்கள். 

எங்கள் ஊர் மாரியம்மன் பண்டிகையில் ஒவ்வொரு வருடமும் அக்னிக்கும்பம் எடுத்துவிடுகிறேன். பெயருக்குத்தான் பூச்சட்டி என்பார்கள். ஆனால் ஒரு மண் சட்டியில் கால்வாசி அளவுக்கு தவிட்டை நரப்பி அதன் மீது குச்சிகளைப் வைத்து நெருப்பை மூட்டி விடுவார்கள். அதை தூக்கிக் கொண்டு ஊரை வலம் வர வேண்டும். எங்கள் ஊரில் மாரியம்மன் பண்டிகை சித்திரை மாதம், அக்னிநட்சத்திரத்தில்தான்  வரும் என்பதால் ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக நடுக்கமாக இருக்கும்.

அதுவும் இப்பொழுதெல்லாம் ஊரின் பெரும்பாலான வீதிகளை தார்ச் சாலை ஆக்கிவிட்டார்கள். கும்பத்தின் வெப்பம் கைக்கு சவால் என்றால் தார்ச்சாலை யின் வெப்பம் பாதத்துக்கு சவால். சாலையில் தண்ணீர் ஊற்றாமல் விட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் ‘சாமிகள் வருகுது’ என்று தண்ணீரை ஊற்றிவிடுவார்கள். புகையைச் சேர்த்துக் கொண்டு சூடு கிளம்பும் பாருங்கள். யப்பா!

ஒரு வினாடி கூட நிற்கவே முடியாது. பறையடிக்கு ஏற்ப ஆடிக் கொண்டே வந்தாக வேண்டும். அவ்வப்போது நெருப்பு அணைந்து புகை கண்களைக் கருக்கும். இதில் நடுநடுவே நிறுத்தி நெய், வெண்ணெய் என்று சகட்டு மேனிக்கு கும்பத்திற்குள் ஊற்றிவிடுவார்கள். அது மேலே இருக்கும் சூட்டையெல்லாம் இழுத்துக்கொண்டு தவிடு வழியாக ஊடுருவி உள்ளங்கையில் கபடி ஆடும். 

இந்த ஊர்வலம் மொத்தமாக முடிய மூன்று மணி நேரம் ஆகும். மொத்த நேரமும் கிட்டத்தட்ட தியானம் போலத்தான். அத்தனை சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு கோயிலை அடைந்து விட வேண்டும் என பற்களைக் கடித்துக் கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் இது ஒரு enjoyment கூட.  

சித்திரை வெயிலில் மூன்று மணி நேரத்திற்கு கால் சூட்டையும் பொறுத்து, கும்பத்தையும் கீழே விட்டுவிடாமல் கோயிலை அடையும் போது மிகப்பெரிய நம்பிக்கை உருவாவதாக உணர்கிறேன். அந்த நம்பிக்கை அடுத்த வருடம் முழுவதற்குமான ஆன்ம பலத்தை தருகிறது என நம்புகிறேன்.

இது போன்ற நம்பிகைக்களாலும், திருப்தியினாலும் சடங்குகளின் மிகப்பெரிய விசிறியாக இருக்கிறேன்.  இது ஒரு சாம்பிள்தான். எந்த மதமாகவும், சாதியாகவும் இருந்தாலும்  சடங்குகள் வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். பெரும்பாலான சடங்குகளில் நாம் கற்றுக் கொள்வதற்கும், தொடர்வதற்கும் ஏதாவது இருக்கும். அதை கண்டுபிடித்தால் போதும்- அனுபவிப்பதற்கும் அதில் ஏதோ ஒன்று இருக்கும்.

May 16, 2013

வாங்க சின்னதா ஒரு புரட்சி பழகலாம்


சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதாவதொரு விதத்தில் கெட்டவர்களாக இருக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், சதி செய்கிறார்கள், போக்கிரிகளாக திரிகிறார்கள், களவாடுகிறார்கள்.

அமெரிக்கா கெட்ட நாடு, இந்தியா திலுப்பாமாரி தேசம்.

தேசங்கள்தான் ஆகாவழிகள் என்றால் மன்மோகன் சிங் அமுக்கமான ஆள், சோனியா கேடி, கருணாநிதி சதிகாரர், ஜெயலலிதா மோசம், விஜயகாந்த் குடிகாரன், ராமதாஸ் சாதி வெறியன். 

அரசியல்வாதிகள் மட்டுமில்லை- அம்பானிகள் திருடர்கள், இன்போசிஸ் நாராயண மூர்த்தி மலை முழுங்கி, விஜய் மல்லய்யா கேப்மாரி. 

பிஸினஸ் ஆட்கள் மட்டுமா? த்ரிஷா அரைவேக்காடு, ரஜினி ஒரு ஃப்ராடு, கமல் பார்ப்பனன், அமிதாப் பச்சன் ஒரு வியாபாரி.

சினிமாக்காரன்தான் இப்படியென்றால் சுஜாதா விஷம் கக்கி, ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ், எஸ்.ராமகிருஷ்ணன் மழுப்பல்வாதி, சாரு ஒரு வுமனைஸர். 

பிறகு யார்தான் இங்கே நல்லவர்கள்? எல்லோரையும் கழித்துவிட்டால் மிச்சமிருப்பதும் நீங்களும் நானும்தான். என்னைப் பற்றி வாசிக்க உங்களுக்கு சில புகார்கள் இருக்கும். உங்களை குத்திக்காட்ட எனக்கு சில மேட்டர் இருக்கும். அவ்வளவுதான். கதை முடிந்தது! 

மேற்சொன்னவர்களின் உண்மையான முகங்கள் நமக்குத் தெரியாதா என்ன? அச்சு அசலாகத் தெரியும். ‘இவன் இப்படித்தான்’ என்று தெரிந்து வைத்திருந்தாலும் சகித்துக் கொள்கிறோம். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியும் இல்லை. மன்மோகன் சிங்கும், நரேந்திர மோடியும் வேண்டாம் என்றால் அடுத்த பிரதமர் யார்? கருணாநிதியும். ஜெயலலிதாவும் வேண்டாம் என்றால் மூன்றாவதாக யார்? எந்தத் திசையில் கை நீட்டினாலும் கிடைக்கக் கூடிய இன்னொருவன் இருப்பதைவிட படு ‘டேஞ்சராக’ இருப்பான் என்பதால் இருப்பதில் ஒன்றை ஒத்துக் கொள்கிறோம்.

நாம்தான் கிடைக்கும் கத்தரிக்காயை ஏற்றுக் கொள்கிறோம் என்றால் புரட்சியாளர்கள் ‘சும்மா’ இருப்பார்களா?. நாம் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நம்மை வறுத்தெடுக்கிறார்கள். ‘அட மந்திகளா...இவன்தான் உங்களுக்கு கிடைத்தானா?’ ‘சொம்புதூக்கிகளே! உங்களுக்கெல்லாம் சுரணையே இல்லையா?’ ‘சோற்றில் உப்பு போட்டுத்தான் தின்கிறீர்களா?’ என்கிறார்கள். 

இப்படியே எதற்கெடுத்தாலும் நம்மை ‘சப் சப்’ என்று அறைந்து கொண்டிருந்தால் நமக்கு என்ன மிச்சமாகும்? வெறும் குற்றவுணர்ச்சிதான்.

சாமானியர்களுக்கு வெறும் குற்றவுணர்ச்சியை உருவாக்குவது மட்டும்தான் இங்கு புரட்சியாக இருக்கிறது. குற்றச்சாட்டுகளையும், புலம்பல்களையும், வெறுப்புகளையும் வெவ்வேறு வாக்கியங்களில் எத்தனை நாட்களுக்குத்தான் பேசுவது?.

அரசியல் பிரச்சினைகளையும், சமூகச் சிக்கல்களையும் பேசக் கூடாது என்பதில்லை- பிரச்சினைகளுக்கு எதிராக குரல் எழுப்பவர்கள் தேவைதான். ஆனால் எது அலர்ஜியாக இருக்கிறதென்றால் இணையவெளியில் கம்யூனிசம் பேசும் மனிதர் கார்போரேட் பத்திரிக்கையில் நிருபராக இருக்கிறார். சமத்துவம் பேசும் புரட்சியாளர் தனியார் தொலைக்காட்சியின் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார். பெரியாரின் கொள்கைகளை பேசுபவர்கள் சினிமா பத்திரிக்கையில் பக்கத்திற்கு பக்கம் நடிகையர்களை உரித்து தொங்கவிடுகிறார்கள். மார்க்ஸை புகழ்ந்து புளாங்கிதம் அடைபவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் அமர்ந்து கொண்டு ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் புரட்சி செய்கிறார்கள். கேட்டால் பிழைப்பு வேறு கொள்கை வேறு என்று கொடிபிடிக்கிறார்கள்.

இங்கு இருக்கும் எந்த புரட்சியாளனும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்வதில்லை. அவன் மோசம், இவன் மோசம் என்று அடுத்தவனைக் கை காட்டி வெறும் புகார்ப்பட்டியல் மட்டும்தான் வாசிக்கிறார்கள். ‘அவர்கள் மோசம் என்று எங்களுக்கும்தான் தெரியுமே’ என்று சொல்லிப் பாருங்கள். ‘அதுதான் எங்களால் செய்ய முடியும், தீர்வை மக்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும், புரட்சி வெடிக்க வேண்டும்’  என்பார்கள். 

‘எவன் எப்படி போனால் நமக்கென்ன?’ என்பதும், பிரச்சினைகளிலிருந்து சற்று விலகிப் போய்விடுவதும்தான் இங்கு யதார்த்தம். இந்த யதார்த்தத்தில்தான் 99.9% பேரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தக் கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் என்று நிரூபிப்பதற்காக புரட்சியாளராக வேடம் போட்டுக் கொள்கிறோம். எதைப் பார்த்தாலும் அறச்சீற்றத்தை காட்டிவிடுகிறோம். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரைக்கும் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பெரியாரியவாதியாகவும், சமத்துவவாதியாகவும், கம்யூனிஸ்டாகவும், பரோபகாரியாகவும் காட்டிக் கொண்டு மாலை 5.05 மணிக்கு சாதாரணமானவர்களாகிவிடுகிறோம்.  

சரி விடுங்கள். அடுத்தவர்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? நான் மட்டும் யோக்கியமா? ஏதோ சில புரட்சியாளர்களை ஃபாலோ செய்ததன் side effect இது.

மாதாமாதம் ஃசாப்ட்வேர் கம்பெனி படியளப்பதை மடியில் ஏந்திக் கொள்ளும் நான் எல்லாம் இப்படி ஓவராக கூவிக் கொண்டிருந்தால் ‘கார்பரேட் கைக்கூலி இப்படித்தான் பேசுவான்’ என்று ஒரே அடியில் மண்டையை பிளந்துவிடுவார்கள் என்பதால் கியரை மாற்றிக் கொள்வதுதான் நல்லது. 


தடாகா என்றொரு தெலுங்குப்படம் வந்திருக்கிறது. வேட்டை படத்தின் ரீமேக். நாக சைதன்யா நடித்திருக்கிறார். அதெல்லாம் தேவையில்லாத சமாச்சாரம். தமன்னா நடித்திருக்கிறார். இதுதான் முக்கியம். அதைவிடவும் முக்கியம் ஆண்ட்ரியாவும் கூட நடித்திருக்கிறார். கூகிளில் தேடினால் ஏகப்பட்ட படங்களாக வந்து கொட்டுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூர் முழுவதும் படத்தின் போஸ்டரை ஒட்டியிருந்தார்கள். திங்கட்கிழமை அலுவலகம் வரும் போது ஒரு போஸ்டரைக் காணவில்லை. எல்லாவற்றையும் கிழித்து வைத்திருக்கிறார்கள். அதுவும் தமன்னாவையும் ஆண்ட்ரியாவையும் மட்டும் குறி வைத்து கிழித்திருக்கிறார்கள். வெறும் நாக சைதன்யா மட்டுமே இருக்கும் கிழிந்த போஸ்டர் இருந்தால் என்ன? பொசுங்கினால் என்ன? பெங்களூரில் இது ஒரு கெட்ட பழக்கம். நடிகைகளின் படங்களை குறி வைத்துக் கிழிக்கும் ஆணாதிக்கவாதிகளால் இந்த ஊர் நிரம்பியிருக்கிறது. பெண்களை மட்டும் போஸ்டரில் இருந்து கிழிக்கும் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இதற்கெல்லாம் இந்த தேசத்தில் புரட்சியே வெடிக்காதா என்று ஒரே யோசனையாக இருக்கிறது. 

May 15, 2013

பையனுக்கு எதில் இண்ட்ரெஸ்ட்?


ஒரு போன். 

அது போதும் நம்மை கொஞ்ச நேரம் ஜெர்க் ஆக்குவதற்கு. அப்படி ஒரு போன் இன்று காலையில் வந்தது.

“பொண்ணு ஆயிரத்து நூறுக்கு மேல மார்க் வாங்கியிருக்கா...ஆனால் மெடிக்கல் வேண்டாம்; இஞ்ஜினியரிங் வேண்டாம்; பி.எஸ்.சி அக்ரி வேண்டாம்; டீச்சிங் வேண்டாம்; ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் வேண்டாம்ங்கிறா ...வேற என்ன படிக்கிறதுக்கு இருக்கு?”

இது உண்மையிலேயே டக்கரான கேள்வி. கிட்டத்தட்ட 99% சதவீத பாடப்பிரிவுகளை அந்தப் பெண் நிராகரித்துவிட்டாள். இனி மிச்சம் இருக்கும் பாடத்திட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். வேறு என்ன பாடங்கள் இருக்கின்றன? இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்க்கலாம். 

அதற்கு முன்...

இப்படி மெடிக்கல், பொறியியல் போன்ற முக்கியமான பாடத்திட்டங்களை நிராகரிப்பதை ‘என்கரேஜ்’ செய்வதாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒரே பாடத்தையே இலட்சக்கணக்கானவர்கள் படிப்பதும், வேறு வழியே இல்லை என்ற பட்சத்தில் மட்டுமே பிற பாடங்களை தேர்ந்தெடுப்பதும் நீண்டகால நோக்கில் பார்க்கும் போது சமூகத்தில் மிகப் பெரிய பின்விளைவை உருவாக்கியிருக்கும். 

இப்படி யோசிக்கலாம்- இன்றைக்கு பொறியியல், மருத்துவம் தவிர்த்து பிற துறைகளில் படிக்கும் மாணவர்களில் எத்தனை சதவீதத்தினர் ‘இந்த பாடத்தைதான் படிக்க வேண்டும்’ என்ற ஆர்வத்தில் சேர்ந்திருப்பார்கள்? ஐம்பது சதவீதம்? முப்பது சதவீதம்? இருபது? ம்ஹூம். குத்துமதிப்பாக கணித்தாலும் கூட பத்து சதவீதம் கூட தேறாது. இந்த நிலை இன்னும் இருபது வருடங்களுக்குத் தொடர்கிறது என வைத்துக் கொள்வோம். அப்பொழுது ‘வேறு வழியே இல்லாமல்’ ஆர்ட்ஸ் படித்தவர்கள்தான் ஆசிரியர்களாக பெஞ்ச்சை தேய்ப்பார்கள். ‘வேறு வழியே இல்லாமல்’ தமிழும், ஆங்கிலமும் படித்தவர்கள்தான் தமிழ், ஆங்கில பாடத்திட்டத்தை உருவாக்குவாக்குவார்கள். அறிவியலின் அடிப்படையான இயற்பியலை ஆர்வத்தோடு படித்தவர்கள் ஆராய்ச்சி கூடங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். ‘வேறு வழியே இல்லாமல்’ வேதியியல் படித்தவர்கள்தான் உரத் தொழிற்சாலைகளிலும், மருந்துத் தொழிற்சாலையிலும் பணியில் இருப்பார்கள். 

அது சரி. சமூகம், விளக்கெண்ணெய் என்று பார்த்து ஒன்றுக்கும் உருப்படியில்லாத கோர்ஸில் படித்து என் மகன்/மகளின் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டுமா? இப்படி யாராவது கேட்டால் அது அந்தப் பெண் கேட்டதை விட முக்கியமான கேள்வி.  ‘வித்தியாசமான பாடத்தை படிக்கிறேன் பேர்வழி’ என்று குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்வதை போல முடிவெடுக்க வேண்டியதில்லை. உதாரணமாக ரோபோடிக்ஸ் படிக்க பையன் விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். அட! வித்தியாசமாக இருக்கிறதே என்று நாமும் சேர்த்துவிடுகிறோம். அதற்கு இந்தியாவில் வேலை வாய்ப்பு இருக்கிறதா என்றால் சத்தியமாக இல்லை. இந்தியாவில்தான் வேலை இல்லையே தவிர வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும்.

அதே போலத்தான் பயோ டெக்னாலஜி பாடமும். கல்லூரிக்கு கல்லூரி பயோ-டெக்னாலஜி பாடங்களைத் துவங்கியிருக்கிறார்கள். உண்மையில் இத்தனை பேருக்கு வேலை கொடுக்குமளவுக்கு இந்தியாவில் பயோ-டெக்னாலஜி ஆய்வுகள் நடப்பதில்லை. ஆய்வகங்களும் இல்லை. ஆனால் வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும்.

இப்படியான சில பாடத்திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், படித்து முடித்துவிட்டு இந்தியாவில் வேலை செய்யப் போகிறோமா அல்லது வெளிநாடு செல்ல விரும்புகிறோமா? வெளிநாடு செல்வதென்றால் மேற்படிப்பு படிப்பதற்கான குடும்பச் சூழல் இருக்கிறதா? வெளிநாட்டு கல்லூரிகளில் அட்மிஷன் பெறுமளவிற்கு உழைப்பும் திறமையும் நம்மிடம் இருக்கிறதா என்பதையெல்லாம் நமக்கு நாமே கேட்டுக் கொள்ளலாம். 

இருக்கும் பாடங்களை எல்லாம் list செய்வது, மேற்சொன்ன கேள்விகளும் கிட்டத்தட்ட என்ன பாடத்தை தேர்ந்தெடுப்பது என்ற தெளிவை கொடுத்துவிடும். ஒருவேளை தெளிவு கிடைக்காத பட்சத்தில், ‘தகுதியானவர்களின்’ ஆலோசனையை நாடலாம்.

‘மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப பாடத்தை தேர்ந்தெடுக்கட்டும். பெற்றோர்கள் அவர்களை வதைக்க வேண்டாம்’ என்று நேற்று சொன்னதற்கு ஆளாளுக்கு சண்டைக்கு வருகிறார்கள். ‘ப்ராக்டிகலாக பார்த்தால் மாணவர்களுக்கு பாடத்தை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு தெளிவு இல்லை’ என்றார்கள். அவர்கள் சொல்வதை 100% ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இங்கு பல ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமுமே கூட தெளிவு இல்லைதான். பிறகு மாணவர்களிடம் எப்படி தெளிவை எதிர்பார்க்க முடியும்?

மாணவர்கள் பாடத்தை தேர்ந்தெடுக்கட்டும் என்றால் முழுமையாக அவர்களாவே முடிவு செய்யட்டும் என்பதில்லை. அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான அத்தனை வழிவகைகளையும் உருவாக்கிக் கொடுப்போம் என்று அர்த்தம். கணிதமே பிடிக்காத மாணவனிடம் ‘நீ கணித ஆசிரியர்தான் ஆக வேண்டும்’ என்று அழுத்த வேண்டாம் என்று அர்த்தம். மற்றபடி, அவர்கள் மட்டுமே முடிவு செய்யட்டும்; நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம் என்று அர்த்தம் இல்லை.

மூன்றாம் வகுப்பிலிருந்து மைனாக்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பவனிடம், பறவையியல் பற்றி படிப்பதற்கான பாடத்திட்டம் இருக்கிறது என்று அறிமுகம் கொடுக்கலாம். சைக்காலஜி பற்றி பேசும் பெண்ணிடம் கல்லூரிகளில் சைக்காலஜி தனிப் பாடமாகவே இருக்கிறது என்று தெரியப்படுத்தலாம். தொல்பொருள் பற்றிய விருப்பம் உடையவனுக்கு Institute of Archaeology என்ற கல்வி நிறுவனத்தை பற்றி தெரியச் செய்யலாம். இவை போன்ற பாடத்திட்டங்கள் யாவுமே வேலை வாய்ப்பை உடையன; படித்து முடித்த பிறகு என்ன செய்வது என்று புலம்ப வைக்காதவை. 

நம் மகனும், மகளும் பதினேழு அல்லது பதினெட்டு வருடங்களாக நம்மோடுதானே இருக்கிறார்கள்? அவர்களின் ஆர்வம் நமக்குத் தெரியாதா என்ன? என் மகனின் ஆர்வம் என்னவென்று தெரியாது என்று யாராவது சொன்னால் ‘அப்படின்னா...அவன் என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் யோக்கிதையும் உங்களுக்கு இல்லை’ என்று தைரியமாகச் சொல்லிவிடலாம்.

இமெயில் ஐடியை திருடி என்னய்யா பண்ணுவீங்க?


இமெயில் ஐடி கூட திருடப்படும் வஸ்தா என்றால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஐடியை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் என்பது திருடும் ஆளையும், திருட்டுக் கொடுத்த ஆளையும் பொறுத்து இருக்கிறது. ஒருவேளை ஃபேஸ்புக் பிரபலம் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியின் ஐடியை ஆட்டையை போடுகிறோம் என வையுங்கள்- அதில் ‘செம’ சாட் மெசேஜ்கள் இருக்கம் அல்லவா? அதுவே சுப்பிரமணியசுவாமியின் ஐடியை அடித்தால் அரசியல் கருமாந்திரம்தானே இருக்கும்!

இமெயில் ஐடி திருடுவது என்பது இரண்டு வகையில் நடக்கலாம். முதல் வகையில் நமது கடவுச்சொல்லை மட்டும் திருடிக் கொண்டு நாம் வழக்கம்போலவே மின்னஞ்சலை இயக்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் கொடுத்திருப்பார்கள். மின்னஞ்சல் களவாடப்பட்டிருப்பதே தெரியாமல் நாம் மின்னஞ்சலை உபயோகப்படுத்திக் கொண்டிருக்க, மூன்றாவது கண் நமது சமாச்சாரங்கள் அத்தனையையும் உளவு பார்த்துக் கொண்டிருக்கும். 

இரண்டாவது வகை திருட்டில் களவாடப்பட்ட மின்னஞ்சலை அதன் சொந்தக்காரர் திரும்ப உபயோகப்படுத்தவே முடியாது.போனது போனதுதான். 

இரண்டு வகைகளில் முதல் வகையான திருட்டுதான் செம டேஞ்சர். அதனால் இவ்வகையான திருட்டை தடுக்க கிட்டத்தட்ட அனைத்து மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களும்(யாஹூ,ஜிமெயில், ஹாட்மெயில் போன்ற)நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.

அது எப்படி?

மின்னஞ்சல் கணக்கை நாம் துவங்கும் போது, ரகசியக் கேள்வி ஒன்று கேட்கப்படும் அல்லவா?. 'உங்கள் செல்லப்பிராணியின் பெயர் என்ன?' 'உங்கள் முதல் ஆசிரியரின் பெயர் என்ன்?' என்ற ரீதியில் இருக்கும் கேள்விகளுக்கு நாம் பதிலைச் சொல்லி வைத்திருப்போம். ஒருவேளை நமது கடவுச்சொல்லை மறந்துவிட்டால், இந்த ரகசியக் கேள்வியை நாம் கணக்கு வைத்திருக்கும் இணையத்தளம் கேட்கும். நாம் சரியான பதிலைச் சொன்னால், புதியக் கடவுச் சொல் ஒன்றை அவர் கணக்குத் துவங்கும் போது கொடுத்திருந்த இன்னொரு மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் அல்லது அதே பக்கத்தில் புது கடவுச் சொல் காண்பிக்கப்படும்.

இதற்காகவே மின்னஞ்சல் கணக்குத் துவங்கும் போது இரண்டாவது மின்னஞ்சலை(Secondary Email ID) கொடுத்து வைக்க வேண்டும். சில இணையத்தளங்கள் இந்த இரண்டாவது மின்னஞ்சல் ஐடியை, கடவுச் சொல்லைத் தேடும் போது தேடுபவருக்கு உரிய தகவல்களை அனுப்பி வைப்பதற்காக உபயோகப்படுத்திக் கொள்கின்றன. ரகசியக் கேள்விகளும் பிறரால் யூகிக்க முடியாத அளவிலான கேள்வியாக இருப்பது உசிதம்.

இப்படியாக தனது ரகசியக் கேள்விக்கு பதில் சொல்லி, இணையதளத்திடம் இருந்து கடவுச் சொல்லை பெற்றுக் கொள்ளும் போது பழைய கடவுச் சொல் அழிக்கப்பட்டு, புதிதாக கடவுச் சொல் வ்ழங்கப்படும். திருடுபவருக்கோ அல்லது மெயி ஐடியின் சொந்தக்காரருக்கோ என யாராவது ஒருவருக்குத்தான் கடவுச் சொல் கிடைக்கும் என்பதால் இரண்டு ஆட்கள் ஒரே மின்னஞ்சலை இயக்குவது அவ்வளவு சுலபமில்லை.இத்தகைய நடவடிக்கையின் மூலம் முதல் வகையான திருட்டு தடுக்கப்பட்டுவிடுகிறது. 

ஒருவரின் மெயில் ஐடியை மற்றவர் திருடிவிடும் போது, களவு கொடுத்தவர் தனது மெயில் ஐடியை உபயோகப் படுத்த முடிவதில்லை. இதனால் இந்த மெயில் ஐடியின் மூலமாக புதிதாக எந்த தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள மாட்டார். மெயில் ஐடியை திருடியவர், அந்த மின்னஞ்சலில் சேமித்து வைத்திருக்கும் பழைய தகவலகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ள முடியும். 

                                                                       (2)

என் நண்பர் ஒருவரின் இமெயில் ஐடி களவாடப்பட்டது. பல தகவல்களையும் கம்ப்யூட்டரிலேயே வைத்துக் கொள்ளும் தலைமுறையயைச் சார்ந்தவர் என்றாலும் முதலில் அவர் அதன் பாதிப்பை உணரவில்லை.

நண்பர் வேறொரு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு மற்றொரு சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தவர். பழைய நிறுவனத்தோடு இவருக்கு என்னமோ லடாய். அதனால் Relieving letter எல்லாம் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நண்பரும் புது நிறுவனத்தின் மேலாளருக்கு இந்த விஷயங்களை விலாவாரியாக மின்னஞ்சலில் அனுப்பி இந்தச் சான்றிதழ்களில்லாமல் தன்னை பணிக்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால் தாம் இணைவதாக‌ தெரிவித்திருக்கிறார். மேலாளரும் சம்மதம் தெரிவித்து மின்னஞ்சலில் பதில் அனுப்பி இருக்கிறார். 

பணிக்கு சேர்ந்த பிறகு, மூன்று மாதம் கழித்து புது நிறுவனத்தில் ஏதோ தணிக்கை இருப்பதாகவும் இவரின் அனுபவச் சான்றிதழ் தேவைப்படுவதாகவும் கேட்டிருக்கிறார்கள். தான் ஏற்கனவே மேலாளரிடம்  அனுபவச் சான்றிதழ்களை கொடுக்க முடியாது என்று மின்னஞ்சல் அனுப்பியதையும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து தனக்கு பதில் அனுப்பியதையும் விளக்கியிருக்கிறார். இவரின் கெட்ட நேரம் அந்த மேலாளர் வேறு நிறுவனத்திற்கு மாறி போய்விட்டார். புது மேலாளரோ, பழைய மேலாளரிடமிருந்து வந்த மின்னஞ்சலின் பிரதியைக் கொடுத்தால் தான் சமாளித்துக் கொள்வதாக சொல்கிறார்.  மின்னஞ்சலை சேமித்து வைத்திருந்த மெயில் ஐடியை யாரோ திருடிவிட்டார்கள் என்று "சிறுபிள்ளைத்தன"மாகவும் சொல்ல முடியாது.

கணிணியில் இருக்கும் தகவல்களை மென்பிரதி(Soft Copy) என்றும் அச்சுப் பிரதியில் இருப்பனவற்றை வன்பிரதி(Hard Copy) என்றும் சொல்கிறார்கள். நண்பரும் சாப்ட்காப்பியை மட்டுமே வைத்துக் கொள்ளும் பழக்கமுடைய‌ வகையறா என்பதால் இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களை தன் யாகூ ஐடியில் சேகரித்திருக்கிறார். அதுதான் தற்பொழுது திருடப்பட்ட ஐடி. என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் வாழ்நாளின் மிக அதிகபட்ச குழப்ப நிலைக்குச் சென்றிருந்தார். 

கடைசியாக தனது பழைய நிறுவனத்தில் நெட்வொர்க் துறையில் பணிபுரியும் நண்பர் ஒருவரை தாஜா பிடித்து மேலாளரின் மின்னஞ்சலில் இருந்து அந்த பழைய மெயிலை எடுத்து கொடுத்து தப்பித்துவிட்டார். ஒரு மின்னஞ்சல், ஒரு மனிதனின் வாழ்க்கையில் இத்தனை அவஸ்தைகளை கொண்டுவர முடியுமா என்று தத்துவார்த்தமாக பல நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறார்.

                                                                         (3)

இந்த மின்னஞ்சல் திருட்டு கார்பொரேட் நிறுவனங்களின் அளவிலும் நடக்கின்றன. தன் எதிராளி நிறுவனத்தின் பணியாளர்களின் மின்னஞ்சல்களைத் திருடி அந்த மின்னஞ்சலில் இருந்து எதிராளியின் வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அனுப்புவார்கள். இந்தத் தகவல்கள் வைரஸ் கொண்டதாக இருக்கலாம் அல்லது அந்த வாடிக்கையாளரை எரிச்சலூட்டும் வகையில் இருக்கலாம். இந்த வைரஸோ அல்லது தகவலோ வாடிக்கையாளரை பாதிக்கும் போது அதனை அனுப்பியவரை தேடிப்பார்ப்பார். தனக்கு சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்துதான் வைரஸ் வந்திருக்கிறது என்று நம்புவார். இத்தகைய தவறான மின்னஞ்சல் மூலமாக தனக்கும், தன் வாடிக்கையாளருக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் நிலைக்கு செல்லும் போது தன் மின்னஞல்களைத் திருட்டுக் கொடுத்த நிறுவனம் தனது வாடிக்கையாளரை 'தாஜா' செய்யவும், தான் பிரச்சினை உண்டாக்கிய மின்னஞ்சலை அனுப்பவில்லை என்பதனை புரிய வைக்கவும் படாதபாடு பட வேண்டியிருக்கும். வாடிக்கையாளருக்கு ஏற்படும் பாதிப்பு பெரியதாக இருப்பின் அவரை எப்படியும் சமாதானம் செய்ய முடியாமல் போகும்.

அமெரிக்காவில் எத்தி என்பவர் ஒரு சிறிய மென்பொருள் நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார். அதற்காக இனடர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர் (ஐ எஸ் பி) யிடம் தன் நிறுவனத்திற்கென இணையதளமும், மின்னஞ்சலும் பெற்றிருக்கிறார். இதனைத் தெரிந்து கொண்ட அவரின் எதிராளி நிறுவனம், அந்த மின்னஞ்சலை எத்தியிடமிருந்து திருடிவிட்டார்கள். இரவோடு இரவாக அந்த மின்னஞ்சலில் இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு தாறுமாறாக‌ மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறு மொத்தமாக அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு Spam என்று பெயர். இது போன்ற மின்னஞ்சல்கள் நம்மை தொந்தரவு செய்வதாக உணர்ந்தால் அது குறித்து புகார் செய்யலாம். www.spamcomp.com போன்ற இணையதளங்கள் இத்தகைய புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பதற்காகவே செயல்படுகின்றன‌. இந்த 'ஸ்பாம்காம்ப்' போன்ற நிறுவனங்க‌ள் குறிப்பிட்ட ஐஎஸ்பியைத் தொடர்பு கொண்டு ஸ்பேம் மெயில் அனுப்பும் நிறுவனத்தின் மொத்த இணையத்தளத்திற்கும் தடை விதிக்கக் கோருவார்கள். பின்னர் ஐஎஸ்பியால் அந்தத் தளம் முடக்கப்படும்.

நல்ல இணையத்தளங்களை உருவாக்குவதற்கென நிறுவனங்கள் இலட்சக் கணக்கில் செலவு செய்கின்றன. எத்தி ஆரம்பித்த தளமும் மிகப்பெரும் செலவைத் தின்றிருக்கிறது. அவரின் எதிரி நிறுவனம் இவரின் மின்னஞ்சலைத் திருடி மின்னஞ்சல் அனுப்பியதும்மில்லாமல் அதே நிறுவனம் 'ஸ்பாம்காம்ப்'பில் எத்தியின் நிறுவனத்திலிருந்து ஸ்பேம் மின்னஞ்சல்கள் அனுப்பபட்டிருக்கின்றன என்று புகார்களையும் அனுப்பியிருக்கிறது. இந்த விவகாரத்தால் எத்தியின் இணையதளம் முடக்கப்பட்டது. இப்பொழுது எத்தி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். விசாரணை முடிந்து இந்த மின்னஞ்சல்களை தான் அனுப்பவில்லை என்று எத்தியால் நிருப்பிக்க முடிந்தால் அவரது தளம் மீண்டும் வழங்கப்படலாம்.இப்படி நிறுவனங்களிடமிருந்து, தனி மனிதனிடமிருந்தும் திருடப்படும் ஐடிகளைக் கொண்டு அவர்களின் வணிகத்தில் இழப்பினை உண்டாக்குதல், தவறான தகவல்களைப் பரப்பி கெட்ட பெயரினை உருவாக்குதல், ஸ்பாம் மின்னஞ்சல்களை அனுப்புதல் போன்றதான செயல்களின் மூலமாக அவர்களுக்கெதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விட முடியும்.

                                                                         (4)

என்னைப் பொறுத்த வரைக்கும் மிகச் சுவாரசியமான மின்னஞ்சல் திருட்டு என் நண்பன் சாதிக் செய்ததுதான். கல்லூரி காலத்தில் தொடர்ந்து ஒரு பெண்ணிடம் சாட் செய்து வந்தான். மின்னஞ்சல் வாழ்த்து அட்டைகள், தொலைபேசி உரையாடல்கள் என இருவரும் மிக நெருக்கமாகி கிட்டத்தட்ட அந்தப் பெண்ணை காதலிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டான். "சாட்டிங் உறவுகளில் எந்த நம்பகமும் இல்லை. அவளுக்கு உன்னைப் போலவே வேறு பல நண்பர்கள் இருக்கிறார்கள்" என்று இன்னொரு நண்பன் சாதிக்கிடம் எச்சரித்திருக்கிறான். 

கொஞ்சம் சந்தேகம் கொண்ட சாதிக் துப்பறிதலில் ஈடுபட்டான். ஒரு பெண் பெயரில் ஐடி உருவாக்கினான். தன் தோழியோடு பழகுபவனை இவனுக்கும் தெரியும் என்பதால் (அவன் பெயரை சங்கர் என்று வைத்துக் கொள்வோம்) சங்கரோடு பெண் பெயரில் பேசியிருக்கிறான். சாதிக்கை பெண் என்று நினைத்து கொண்ட சங்கர் வழிந்து கொண்டே சாதிக்கின் தோழியோடு இருக்கும் தன் அந்தரங்க பேச்சுகளை உளறியதுமில்லாமல் நாமும் அவ்வாறு நெருக்கமாக இருக்கலாம் என்று உருகியிருக்கிறான். 

முழிப்பு வந்த சாதிக் தன் தோழியின் மின்னஞ்சலை உடைத்து விட்டான். உடைத்த மின்னஞ்சலில் நுழைந்தால், அந்தப் பெண் கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்களிடம் மிக அந்தரங்கமாக பேசியிருக்கிறாள்- off the record போடாமல். சாதிக் ஒன்றும் உத்தமனில்லைதான். இவன் வெவ்வேறு நான்கைந்து பெண்களிடம் இப்படி அந்தரங்கமாக பேசியிருக்கிறான். இதே போல்தான் அவள் வேறு நான்கைந்து பையன்களிடம் பேசியிருக்கிறாள்.

"ஒவ்வொரு உறவும் வேறு வேறு தளத்தில் இயங்குகின்றன. இதில் ஒரு உறவு குறித்து மற்ற உறவுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் சாட்டிங் போதை போன்றது. எதையாவது எவளிடமாவது பேசிக் கொண்டேயிருக்க வேண்டும்" என்றெல்லாம் சொல்லித் திரிந்தவன் அவளின் மெயில் ஐடியைத் திருடிய பின் சாட்டிங்கையே விட்டுவிட்டு சவூதியில் அமைதியாக இருக்கிறான். ஒட்டகப்பாலை குடித்துக் கொண்டு.

May 14, 2013

அவ்வளவுதான்


துளசிமணி சித்திக்கும் பாப்பு சித்திக்கும் சிறு வயதாக இருக்கும் போதே அவர்களது அம்மாவை ஏதோ ஒரு நோய் வாரிக் கொண்டு போய்விட்டது. புற்று நோய் என்றார்கள். அது சரியாக ஞாபகம் இல்லை. அவர் இரண்டு பெண்களையும் தவிக்கவிட்டு போய்விட்டதாக அவ்வப்போது யாராவது அழுததுதான் மங்கலாக ஞாபகத்தில் இருக்கிறது. திக்குத் தெரியாத வயதில் இருந்த சித்திகள் சம்பந்தமான அத்தனை பொறுப்புகளையும் அவர்களது அண்ணனான சின்னச்சாமி மாமாதான் ஏற்றுக் கொண்டார். 

இரண்டு சித்திகளும் எனது அம்மாவுக்கு சித்தப்பாவின் மகள்கள். அம்மாவின் ஊரில்தான் சித்திகளும் இருந்தார்கள். சிறுவயதில் நான் அமத்தாவிடம் அதிகமாக இருந்ததனால் சித்திகளின் வீட்டிலும் ஏகபோகமாக திரிந்திருக்கிறேன். அப்பொழுது அந்த ஊரில் டி.வி வந்திருக்கவில்லை. ரேடியோவும் கூட யாராவது ஒரு சிலர் வீட்டில்தான் இருக்கும். அப்படியிருந்தும் பிரச்சினையில்லாமல் பொழுது போய்க் கொண்டிருந்தது. சித்திகள்தான் எனக்கு தாயம் விளையாட்டு சொல்லித் தந்தார்கள், ஐந்தாங்கல் அவர்களிடம் கற்றுக் கொண்டது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. அடைகாக்கப்பட்ட முட்டையிலிருந்து வெளியேறிய புத்தம் புதுக் கோழிக் குஞ்சு ஒன்றை முதன்முதலாக தொட்டுப்பார்த்ததும் அவர்கள் வீட்டில்தான்.

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த வயதில் துளசிமணிச் சித்தி சமையல் செய்யப் பழகியிருந்தார். அப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இருக்காது. குடி நீருக்காக ஒரு அடி பம்பு இருக்கும். அதில் இருந்துதான் குடத்தில் நிரப்பிக் கொள்வார்கள். கியாஸ் அடுப்பும் கிடையாது. விறகு வெட்டித்தான் எரிக்க வேண்டும். வெள்ளை நிற ட்யூப்லைட்டும் கூட அரிதுதான். தோட்டத்தில் மோட்டார் ஓடும் போது பெண்கள் துணி துவைப்பார்கள். ஓடும் தண்ணீரில் ஊர்க்கதைகள் அத்தனையும் கரைந்து கொண்டிருக்கும். குழந்தைகளான நாங்கள் கதைகளைக் கேட்டுக் கொண்டே குளித்துக் கொண்டிருப்போம்.

ஆழ்துளைக் கிணறுகளோ, சொட்டு நீர்ப்பாசனமோ வந்திருக்காத அந்த வானம் பார்த்த பூமியில் தண்ணீர் இல்லாத சமயத்தில் நிலக்கடலை பயிர் செய்வார்கள். கொஞ்சம் தண்ணீர் இருந்தால் புகையிலை காற்றில் ஆடும். இதுதான் வாழ்வாதாரமாக இருந்தது. இடையில் வரும் வறட்சியின் காரணமாக அவ்வப்போது வீட்டில் இருக்கும் குண்டுமணி தங்கமும் அடமானத்திற்கு போகும் அல்லது தெரிந்தவர்களிடம் ஆயிரம் ஐந்நூறு ‘கைமாத்தாக’ வாங்குவார்கள். இந்தத் தொகைக்கு வட்டி எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. கையில் பணம் சேரும் போது திருப்பிக் கொடுத்தால் போதும். மனிதர்கள் அத்தனை நம்பிக்கையுடையவர்களாக இருந்தார்கள்.

சின்னச்சாமி மாமா வீட்டில் எப்பொழுதும் அரை மூட்டை கடலைக்காய் இருக்கும். அவ்வப்போது வறுத்து பொரியில் கலந்து கொடுப்பார்கள். மிக்சரும், ஜிலேபியும் சர்வ சாதாரணமான தின்பண்டங்களாக உருமாறியிராத காலம் அது. விஷேசங்களின் போது மட்டும்தான் அதையெல்லாம் வாங்குவார்கள். ஊருக்குள் எந்த வசதியும் இல்லை என்றாலும் வாழ்க்கை ஒன்றும் சிக்கலானதாக இல்லை. மாறாக அத்தனை சுவாரசியமானதாக இருந்தது. 

துளசிமணிச் சித்தி படித்தாரா என்று தெரியவில்லை. வீட்டு பொறுப்புகளை எடுத்துக் கொள்ளத் துவங்கியிருந்த போது பாப்புச் சித்தி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தார். எண்பதுகளின் பருவப் பெண்ணிற்கான எந்த அம்சமும் குறையாமல் ஒற்றை சடை, கொஞ்சம் மல்லிகையோ அல்லது கனகாம்பரமோ சூடிய வாடை,பாவாடை தாவணி, அளவான சிரிப்பு என்று இன்னமும் கண்ணுக்குள் நிற்கிறார். இதெல்லாம் எனது ஐந்து வயதுக்குள் நடந்தவை.

அதன் பிறகு என்னை எங்கள் ஊருக்கு அழைத்து வந்துவிட்டார்கள். எப்பவாவது விடுமுறைக்கு செல்லும் போது அரைமணி நேரமோ அல்லது கால் மணி நேரமோ பார்த்து பேசுவதோடு சரி. பிறகு அதுவும் இல்லை. அதற்கு காரணமிருக்கிறது. துளசிமணி சித்திக்கு முதலில் திருமணம் நடந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து பாப்புச் சித்திக்கும் நிகழ்ந்தது. அவர்கள் திருமணம் முடிந்து வேறு ஊருக்குப் போன பிறகு அவர்களை பார்ப்பதும் பேசுவதும் முற்றாக நின்று போனது. ஏதாவது குடும்ப விழாக்களில் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கும். சில வார்த்தைகள் பேசிக் கொள்வோம். அந்த சில வினாடிகளில் குழந்தைப் பருவம் நினைவில் ஊஞ்சலாடும். அவ்வளவுதான்.

துளசிமணி சித்திக்கு ஒரு பெண்; பாப்பு சித்திக்கும் ஒரு பெண். சித்திகளின் மகள்கள்தான் என்றாலும் அவர்களைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பள்ளி, கல்லூரி என அவர்கள் பிஸியாகிவிட, வேலை, குடும்பம் என நாங்களும் ஒதுங்கிவிட அவ்வப் போது அவர்களை நினைத்துக் கொள்வதோடு சரி. 

சென்ற ஞாயிற்றுக்கிழமை துளசிமணிச் சித்தி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ஈரோட்டில் வீடு கட்டிவிட்டார்கள். புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பதற்காக வந்திருந்தார். தனது மகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சென்ல்வதாகவும், கணவருக்கு இன்னும் ஓராண்டில் பணி ஓய்வு கிடைக்கப் போவதாகவும், கிட்டத்தட்ட வாழ்வில் பெரும்பாலான கடமைகளை தான் வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும்- அத்தனை சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். பாப்புச் சித்தியின் மகளும் கல்லூரியில் சேர்ந்துவிட்டாளாம். அவர்களும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று பூரித்தார். இரவு பேசிவிட்டு கிளம்பும் போது வெகுநேரமாகிவிட்டது.  

ஒரு வாரம் ஆகிவிட்டது. நேற்று வழக்கம் போல அலுவலகப் பணியில் இருந்த போது ஒரு ஃபோன். துளசிமணிச் சித்தி இறந்துவிட்டாராம். தூக்கி வாரிப் போட்டது. துக்கம் தொண்டையை அடைக்கத் துவங்கியது. காரணம் கேட்ட போது சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்றார்கள். காலன் அதோடு நிற்கவில்லை. பாப்பு சித்தியின் கணவரையும், பாப்பு சித்தியின் மகளையும் சேர்த்து வாரிக் கொண்டான்.பாப்பு சித்திக்கும், துளசிமணிச் சித்தியின் மகளுக்கும் பலத்த அடி. இப்பொழுது மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

ஐந்து பேரும் காரில் போயிருக்கிறார்கள். ஏதோ ஒரு வாகனத்தை முந்த முயன்ற போது எதிரில் வந்த வாகனத்தில் மோதி விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று பேரை பறித்துக் கொண்டு, இரண்டு பேரை படுகாயப்படுத்திவிட்டு போயிருக்கிறது அந்த விபத்து.

விரும்புவதை மட்டும் எடுத்துக் கொள்ள வாழ்க்கை நம்மை அனுமதிப்பதில்லை, அதே சமயம் அது கொடுப்பதையெல்லாம் ஏற்றுக் கொள்வது நமக்கு அத்தனை எளிதானதாக இல்லை.

தகவல் தெரிந்த பிறகு நேற்று மதியத்திலிருந்து எதையும் செய்ய இயலவில்லை. மொத்தக் குடும்பத்தையும் ஒரு விபத்து அஸ்தமனாக்குவதை ‘விதி’ என்று ஆறுதல்படுத்திக் கொண்டு விட முடியவில்லை. இரண்டு குடும்பங்களின் இருபது ஆண்டுக் கனவுகள் வாகனத்தின் சக்கரங்களில் ரத்தச் சகதியோடு நசுக்கப்பட்டிருக்கிறது. நேற்றிலிருந்து எனது மொத்த பால்யமும் கருகியது போல ஒரு உணர்வு. பாப்புச் சித்தியின் மகள் குழலினியின் ஃபேஸ்புக் பக்கத்தை துழாவிக் கொண்டிருந்தேன். அந்த பிஞ்சுப்பெண்ணின் விரல்கள் தட்டச்சிய வாக்கியங்களின் மூலமாக சில வார்த்தைகளாவது அவளோடு பேச வேண்டும் எனத் தோன்றியது. அவளுக்கு காது கேட்கவில்லை. அவளுடனான பேசும் முயற்சியில் எனது மொத்த இரவும் தீர்ந்திருந்தது. அவர்களின் மொத்த வாழ்வும் தீர்ந்துவிட்டது என்று புரிந்த போது தூக்கமே வராமல் தூங்கிப் போயிருந்தேன்.

சொல்லியடித்தால் அது கில்லிதான்..


“பையன் புத்திசாலி, ஐ.ஏ.எஸ் கூட ஈஸியா பாஸாகிடுவான்...அதனால் அவன் கலெக்டர்தான் ஆக வேண்டும்” இப்படி உசுப்பேத்தி ரணகளமாக்கும் பெற்றோருக்கும் உற்றோருக்கும் ஒரு அட்வைஸ் செய்யச் சொன்னால் என்ன சொல்வீர்கள்? 

நானாக இருந்தால் “Please..கொஞ்சம் அடங்குங்க” என்பேன்.

+2 முடிக்கும் மாணவர்கள் கல்லூரிப் படிப்பில் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும். ஆனால் அதை அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும். ஐ.ஏ.ஏஸ் ஆனாலும் சரி; ஏரோநாட்டிகல் சயின்ஸானாலும் சரி- அந்த ஆர்வம் மாணவர்களிடமிருந்துதான் வர வேண்டும். அதை விட்டுவிட்டு நமது விருப்பத்தை எல்லாம் பிள்ளைகளிடம் திணிக்கக் கூடாது.
‘நான் கலெக்டராக நினைத்தேன். என்னால்தான் முடியவில்லை அதனால் எனது மகனாவது கலெக்டர் ஆகவேண்டும்’ என்று அழிச்சாட்டியம் செய்வது போன்ற கொடுமை வேறெதுவும்  இருக்க முடியாது. 

பையன் பத்தாம் வகுப்பில் 450 வாங்கியிருப்பான். அவனுக்கு பொருளாதாரமோ அல்லது வணிகவியலோ படிக்கலாம் என்ற விருப்பம் இருந்திருக்கும். ஆனால் இங்குதான் 425  மதிப்பெண்ணைத் தாண்டிவிட்டால் முதல் க்ருப்பில்தான் சேர வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆயிற்றே. பொடனியில் கையைப் வைத்துத் தள்ளி ஃபர்ஸ்ட் க்ரூப்பில் சேர்த்திருப்பார்கள்.  அதோடு நில்லாமல், +2வில் 1150 மதிப்பெண்களைத் தாண்டி விட வேண்டும் என அடுத்த இரண்டு வருடங்களுக்கும் அவன் கழுத்தை நெரிப்பார்கள். கடைசியில் அவன் நொந்து 800+  மதிப்பெண்களோடு நூடுல்ஸ் ஆகிவிடுவான். அவ்வளவுதான். சோலி சுத்தம்.

இக்பால் சிங் தலிவால்- இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 1996 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் முதல் ரேங்க் வாங்கியவர் யாரென்று தேடினால் இந்தப் பெயரை கேள்விப்படக்  கூடும்.

ஆமாம். அந்த ஆண்டு இக்பால்சிங்தான் சிவில் சர்வீஸஸ் தேவில் முதல் ரேங்க். 

இக்பால் சிங் பள்ளிப் படிப்பிலேயே பட்டாசு கிளப்பியவர். அந்த படி படித்ததற்கு நாமாக இருந்தால் அடுத்த குறி டாக்டர் அல்லது இஞ்ஜினியராக இருந்திருக்கும். ஆனால் இக்பால் சிங் தலிவால் டாக்டரும் ஆகவில்லை, இஞ்ஜினியரும் ஆகவில்லை. பொருளாதாரம் படித்தார். டெல்லி யுனிவர்சிட்டியிலேயே ‘தல’தான் முதல் ரேங்க். அடுத்து எம்.ஏவிலும் அடித்து தூள் கிளப்பிவிட்டு அதே ஆண்டு எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் 229வது ரேங்க். ஆனால் அதோடு திருப்தியடையவில்லை. அதற்கு அடுத்த ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வெழுத அதில் முதல் ரேங்க்கை அள்ளி எடுத்தார். ஐ.ஏ.எஸ் தேர்வில் பாஸ் செய்வதற்கு கூட ஆளாளுக்கு ஐந்து முறை, ஆறு முறை முக்கிக் கொண்டிருக்க இரண்டாவது முறையே இந்திய அளவில் முதல் ரேங்க் எடுக்கக் அவர் சொன்ன ஒரே காரணம் “ஆர்வம்”. பொருளாதாரத்தில் அவருக்கு இருந்த ஆர்வம்தான் அவரை உச்சாணிக் கொம்பில் தூக்கி நிறுத்தியது.

ஐ.ஏ.எஸ் பயிற்சியை தமிழ்நாடு Cadre இல் வெற்றிகரமாக முடித்துவிட்டு இக்பால் சிங் பணிக்கு சேர்ந்த இடம் கோபிச்செட்டிபாளையம். துணைக் கலெக்டராக வந்து சேர்ந்தார். அப்பொழுது  நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். எனது தமிழாசிரியர் பாரிமணியம்தான் அவருக்கு தினமும் தமிழ்க் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதால் அவர் மூலமாக அவ்வப்போது  இக்பால் சிங்கிடம் பேசியிருக்கிறேன். அப்பொழுது எனக்கு ஆங்கிலம் பேச வராது. துணைக் கலெக்டருக்கு தமிழ் முழுமையாகத் தெரியாது என்பதால் இரண்டு பேருமே உளறிக் கொள்வோம்.  வீட்டில் ‘துணைக் கலெக்டரிடம்’ பேசுவேன் என்று சொன்ன போது யாருமே நம்பவில்லை. பிறகு அவர் பிறந்த ஊர், அவர் வாக்கிங் அழைத்து வரும் நாய்க்குட்டியின் பெயரை எல்லாம்  சொல்லத் துவங்கிய போது வீட்டில் எனக்கு மரியாதை உண்டாகியிருந்தது. அவர்தான் நான் நினைவு தெரிந்து பார்த்த முதல் ‘கில்லி’.

அனுமதியில்லாத கடைகளை தூக்குவதும், மணல் கடத்தல் லாரிகளை மடக்குவதும், அரசியல்வாதிகளை அடக்குவதுமாக இக்பால்சிங் தலிவால் எங்கள் ஏரியாவில் கதாநாயகன் ஆகிக் கொண்டிருந்தார். ‘அதிகாரிகள் ஆரம்பத்தில் இப்படித்தான் துள்ளுவார்கள் பிறகு அடங்கிவிடுவார்கள்’ என்று விமர்சித்தார்கள். விமர்சித்தவர்களின் முகத்தில் தயவுதாட்சண்யம் இல்லாமல் கரியைப் பூசினார். அவர் நினைத்திருந்தால் ஆட்களை மிரட்டியும், தனது பாக்கெட்டை நிரப்பியும் ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் ‘அடங்காப்பிடாரி’ என்பதைத்தான் தொடர்ந்து தனது அடையாளமாக்கிக் கொண்டிருந்தார். 

தனது வேலையோடு சேர்த்து கிராமங்களின் சமூக-பொருளாதார நிலை குறித்தான கட்டுரைகளை எழுதினார். ஈரோடு மாவட்டத்தின் மலைவாழ் பிரதேசங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்  குறிப்புகளை உருவாக்கினார், நிலச் சீர்திருத்தங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். கவனித்துப் பாருங்கள். இந்தச் செயற்பாடுகள் அனைத்துமே அவரது விருப்பமான பொருளாதாரவியல் சார்ந்தே இருந்தது.

இதன் பிறகு சில அரசுத் துறைகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். அப்பொழுதும் அவர் யாருக்கும் ‘அடங்கவில்லை’ என்றுதான் பேசிக் கொண்டார்கள். அவரை நம்மவர்கள் பந்தாடியிருக்கக் கூடும் அல்லது தனது பொருளாதார ஆர்வப் பசிக்கு ‘பெஞ்ச் தேய்க்கும்’ வேலைகளின் மூலமாக சோறு கிடைக்காமல் திணறியிருக்க வேண்டும். அவர் செய்த காரியம் சிம்பிளானது. ஐ.ஏ.எஸ்ஸைத் தூக்கி எறிந்துவிட்டு அமெரிக்கா போய்விட்டார். 

இப்பொழுது பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. ஐ.ஏ.எஸ் என்பது அந்தத் தேர்வில் ஜெயித்து வரும் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் கனவு. அந்தக் கனவை நான்கைந்து ஆண்டுகளில்  ஒருவர் தூக்கியெறிந்தார் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? அதுவும் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தவர் .அவர் விரும்பியிருந்தால் அரசியல்வாதிகளின் காலை நக்கிக்  கொண்டு சைரன் வைத்த காரும், கஜானா நிறைய பணமுமாக இருந்திருக்க முடியும். ஏதாவது துறையில் ‘செகரட்டரி’ ஆகி பதவியின் பந்தாவிலும், பணத்தின் குளுமையிலும்  வாழ்க்கையின் மீதி நாட்களை ஓட்டியிருக்க முடியும்.

ஆனால் அதிகாரம், பதவி, பணம் என அத்தனையும் துறந்த இக்பால் சிங் தாலிவால் இப்பொழுது அமெரிக்காவின் நெம்பர்.1 பல்கலைக்கழகமான மாசச்சூசெட்ஸில் பொருளாதாரத் துறையில்  பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இப்பொழுதும் கூட அவரிடம் ஏன் ஐ.ஏ.எஸ்ஸைத் துறந்தீர்கள் என்று கேட்டால் அவர் சொல்லக் கூடிய காரணம் “ஆர்வம்” என்பதாக இருக்கும் என  நம்புகிறேன்- பொருளாதாரத் துறையில் அவருக்கு இருக்கும் ஆர்வம்.

இப்பொழுது இக்பால் சிங் தலிவாலைப் பற்றிக் குறிப்பிடக் காரணம்- ஆர்வம் மட்டுமே ஒருவனது கல்வியையும், வாழ்க்கையும் நிர்ணயிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை  வலியுறுத்துவதற்காக. அப்படி மட்டும் அமைந்துவிட்டால் அந்தத் துறையில் அவன் ‘கிங்’ ஆகிவிட முடியும். எங்கெல்லாம் நாம் அரைகுறையாக இருக்கிறோமோ அங்கெல்லாம்தான் நாம்  அடுத்தவனுக்கு பயப்படுவோம். எங்கெல்லாம் நாம் கோலோச்சும் அளவுக்கு ‘சப்ஜெக்டை’ அறிந்து வைத்திருக்கிறோமோ அங்கெல்லாம் யாரைக் கண்டும் பயப்பட மாட்டோம். கோலோச்ச  வேண்டுமானால் அந்தத் துறையில் ஆர்வம் இருக்க வேண்டும். அந்த ஆர்வம்தான் கற்பதற்கான மனநிலையை உருவாக்கும். இந்த கற்றல்தான் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். 
அந்தத் தன்னம்பிக்கைக்கு ஒரே வழி- நமக்கு பிடித்த, நமக்கு ஒத்துவரக் கூடிய துறையைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான். 

உங்களின் மகனோ அல்லது மகளோ அவர்களுக்கு விருப்பமான துறையத் தேர்ந்தெடுப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். ஜெயிப்பதையும் தங்கள் துறையில் கில்லியடிப்பதையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

May 11, 2013

இரண்டு குட்டையில் எந்தக் குட்டை நல்ல குட்டை?


“பத்தாவதுல 472 மார்க் எடுத்தான்...இப்பவும் டோட்டல் 1043 இருக்கு...ஆனா கட் ஆஃப் சரியில்லை....என்ன செய்யறது?” என்ற ரீதியில் புலம்பிக் கொண்டிருக்கும் யாரையாவது கடந்த இரண்டு நாட்களில் பார்த்தீர்களா? நான் பார்த்தேன். ஒன்றில்லை ஏகப்பட்ட ஆட்களை. 

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் அதே அளவுக்கு பிரகாசிக்க முடியாமல் போவது சர்வ சாதாரணம்தான். அதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணம் ‘உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கும்’ கான்செப்ட்தான். பத்தாம் வகுப்பில் அதிகமான மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு அவர்களையும் அறியாமல் ஆழ்மனதில் 'Over confidence' உருவாகியிருக்கும். அதை தூபம் போட்டு சுற்றியிருப்பவர்கள் ஊதிவிடுவதால் அதே ‘Over confidence' அடுத்த இரண்டு ஆண்டுகளில் கவிழ்த்து குப்புற போட்டுவிடுகிறது என்கிறார்கள் சில மனோவியல் நண்பர்கள். இது பற்றி தனியாக அலசுவோம்.

இப்போதைக்கு கவிழ்ந்தாகிவிட்டது. அடுத்தது என்ன செய்வது? முதலில் குழம்ப வேண்டாம். கப்பல் எதுவும் கவிழ்ந்துவிடவில்லை. ஜஸ்ட் +2 மதிப்பெண்கள்தான் குறைந்திருக்கிறது. ஒரு விதத்தில் இது நல்லதும் கூட. பொறியியல், மருத்துவம் என்ற பெருங்கூட்டத்தில் இருந்து விலகி வேறொரு நல்ல படிப்பைப் பற்றி யோசிப்பதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியிருக்கிறது. 

B.Sc(Statistics) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தப்படிப்பை முடித்தவர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா? பி.எஸ்.சியில் Psychology பாடப்பிரிவு இருப்பது தெரியுமா? இந்தப் பாடத்தில் முதுநிலைப் படிப்பிற்கு இருக்கும் பிரகாசமான வேலை வாய்ப்பு பற்றி அறிந்திருக்கிறீர்களா? வனவியல், மீன்வளம் ஆகியன பற்றிய படிப்புகளுக்கு உருவாகியிருக்கும் அளவுக்கதிகமான ‘டிமாண்ட்’ பற்றி எங்கேயாவது படித்திருக்கிறீர்களா?

ம்ஹூம். கேள்விப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

நமக்கு +2 முடித்தால் இரண்டே குட்டைதான் தெரிந்திருக்கிறது. ஒன்று மருத்துவக் குட்டை. இன்னொன்று பொறியியல் குட்டை. 

கோடிக்கணக்கில் டொனேஷன் கொடுப்பதற்காக அப்பனும் ஆத்தாளும் சம்பாதித்து வைத்திருந்தால் மருத்துவக்குட்டையில் விழுந்துவிடலாம்தான். அப்படி வாய்ப்பு இல்லாதவர்கள்? பல் மருத்துவத்திற்கு தனியார் கல்லூரிகளில் ஃபீஸ் மட்டும் ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஐந்து லட்சம் கேட்கிறார்கள். டிகிரி முடித்து வரும் போது கிட்டத்தட்ட முப்பது லட்சம் செலவு ஆகியிருக்கும். எதற்காக இத்தனை பல் மருத்துவர்களை இந்த தேசம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது? உண்மையில் அத்தனை பல் மருத்துவர்களுக்கான தேவை இருக்கிறதா? போகிற போக்கைப் பார்த்தால் வெட்டுப்பல் ஸ்பெஷலிஸ்ட், சிங்கப்பல் ஸ்பெஷலிஸ்ட், கடவாய்ப்பல் ஸ்பெஷலிஸ்ட் என்று போர்டுகள் தொங்கும் போலிருக்கிறது.

தமிழ்நாட்டில் இஞ்ஜினியரிங் பற்றி கேட்கவே தேவையில்லை. நூற்றுக்கு அறுபது சதவீத எலெக்ட்ரிக்கல் இஞ்ஜினியர்களுக்கு ‘மின்சாரத்தை’ வரையறுக்கத் தெரியாது. கம்யூனிகேஷன் இஞ்ஜினியர்களுக்கு ‘பைபர் ஆப்டிக் கேபிள்’ இயங்கும் தத்துவம் தெரியாது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியர்களால் ‘ஹார்ட் டிஸ்க்’ பற்றி மூன்று நிமிடங்கள் தொடர்ந்து பேச முடியாது. இது ‘டூ மச்’ ஆகத் தெரிந்தால் நீங்களே உங்களுக்குத் தெரிந்த இஞ்ஜினியரிங் மாணவர்களிடம் இத்தகைய கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்.இன்னும் ஒருபடி மேலே போய் இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்களிடம் கூட ‘டெஸ்ட்’ செய்து பார்க்கலாம். 

தமிழகத்தில் ஐந்நூற்று சொச்சம் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவை ஒவ்வொரு ஆண்டும் ‘வத வத’வென பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பொறியியல் முடித்தவர்கள் எல்லாம் ஆறு இலக்கச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெறும் மாயை. மிகச் சொற்பமான நபர்கள்தான் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டும்தான் மற்றவர்களின் கண்களுக்குத் தெரிகிறார்கள். ஆனால் பொறியியல் முடித்துவிட்டு திக்குத் தெரியாமல் நிற்கும் மாணவர்கள் ஏராளமாக உண்டு. பி.ஈ. முடித்துவிட்டு மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வேலையில் இருப்பவர்களை பார்த்திருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அவர்களின் நிலைமை மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும். 

வேறு வழியும் இல்லை. ‘போனாம் போக்கி’ கல்லூரிகளில் படித்துவிட்டு ‘ஏனோ தானோ’ என வெளியில் வரும் இலட்சக்கணக்கான இளைஞர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள நிறுவனங்கள் தயாராக இல்லை. அவர்கள் அத்தனை பேருக்கும் வேறு ஏதாவதொரு திறன் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் அவர்களின் திறமை, ஆர்வம் பற்றிய எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் பக்கத்துவீட்டுக்காரன் சொன்னான், பங்காளி சொன்னான் என பொறியியல் குட்டையில் தள்ளிவிட்டு ‘மந்தைகளாக்கி’ அவர்களின் எதிர்காலத்தை பாழடித்துக் கொண்டிருக்கிறோம். பரிதாபமாக இருக்கிறது.

பொறியியல், மருத்துவம் ஆகியன மட்டுமே படிப்பு இல்லை. ஏகப்பட்ட choice இருக்கின்றன. ப்ளீஸ்...இந்த இரண்டையும் தவிர்த்துவிட்டு வேறு படிப்புகளையும் யோசிப்போம்.

May 10, 2013

இந்த கட்-ஆஃப்புக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும்?


+2 முடித்த பிறகு இன்ஜினியரிங்தான் சேர வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்பவர்களுக்கு பெருங்குழப்பம் இருக்கும். அதிலும் கிராமப்புற மாணவர்கள் இருக்கிறார்கள் பாருங்கள். கண்ணைக் கட்டி கருங்காட்டில் விட்டது போல திணறிக் கொண்டிருப்பார்கள்.

எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது? எந்த பாடம்? அந்தக் கல்லூரியில் படித்தால் கேம்பஸ் இண்டர்வியூ இருக்குமா? இந்த பாடத்தை தேர்ந்தெடுத்தால் வேலை வாய்ப்பு அமோகமாக இருக்குமா என்றெல்லாம் ஆயிரத்தெட்டு கேள்விகள் இருக்கக் கூடும்.  இந்த சந்தேகம் எல்லாம் தவறே இல்லை. கண்டவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு போய் குழியில் விழுந்துவிடாமல்  நமக்கு தோன்றும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் கண்டுபிடித்து தெளிவான முடிவை எடுக்கலாம்.

நேற்று +2 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் குழம்பியதை பார்க்கும் போது கவுன்சிலிங் வரைக்கும் குட்டி குட்டியாக சில கட்டுரைகளை தனிப்பட்ட அனுபவத்திலிருந்து எழுதலாம் என்று தோன்றியது- கட் ஆஃப், கவுன்சிலிங், பாடங்கள், கல்லூரிகள் என இயன்றவரைக்கும் ஒரு ரவுண்ட் அடிக்கலாம். யாராவது ஒரு சிலருக்கேனும் பயன்படும் என நினைக்கிறேன்.

அநேகமாக அத்தனை ப்ளஸ் டூ வாலாக்களும் இந்நேரம் கட்-ஆஃப் மதிப்பெண்ணை கணக்கிட்டிருப்பார்கள். இருந்தாலும் அதில் இருந்தே தொடங்கிவிடலாம். இது சிம்பிளான கணக்கீடுதான். கணிதத்தில் வாங்கிய மதிப்பெண்ணை இரண்டால் வகுத்துக் கொள்ள வேண்டும். இயற்பியல் மற்றும் வேதியியல் பாட மதிப்பெண் ஒவ்வொன்றையும் நான்கால் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் கூட்டினால் கிடைக்கும் மதிப்பெண்கள்தான் கட்-ஆஃப்.

உதாரணமாக ஒரு மாணவர் கணக்கு பாடத்தில் 182, இயற்பியலில் 195 மற்றும் வேதியியல் 187 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

கணக்கு        -  182/2    = 91
இயற்பியல் -  195/4    = 48.75
வேதியியல் -  187/4   = 46.75

கட்-ஆஃப் = 91+48.75+46.75 = 186.5/200

இதை வைத்துக் கொண்டு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும்? சென்ற வருடத்தில் இந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தெந்தக் கல்லூரிகளில் ஸீட் கிடைத்திருக்கிறது என்பதை கொஞ்சம் ஆராய்ந்தால் இந்த ஆண்டும் அதே கல்லூரியில் அட்மிஷன் வாங்கிவிட முடியுமா என்பதை குத்து மதிப்பாக கணக்கிட்டு விட முடியும். இருந்தாலும் இது அத்தனை துல்லியமான கணிப்பாக இருக்க வாய்ப்பில்லை.

உதாரணமாக சென்ற ஆண்டு வினாத்தாள் எளிமையாக இருந்திருந்தால் 186.5யை விட நல்ல கட் ஆஃப் உடைய மாணவர்கள் நிறைய பேர் இருந்திருப்பார்கள். எனவே இதை சுமாரான கட்-ஆஃப் ஆகத்தான் கருத முடியும். அதுவே இந்த ஆண்டு வினாத்தாள் கடினமாக இருந்திருந்தால் 186.5 என்பதையே நல்ல கட்-ஆஃப்பாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியானால் இந்த ஆண்டு கட்-ஆஃப் எப்படிப்பட்டது என்பதை இன்னொரு கணக்கு மூலம் முடிவு செய்யலாம்.

சென்ற ஆண்டு ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை பேர் இருநூறுக்கு இருநூறு வாங்கியிருக்கிறார்கள் என்றும் இந்த ஆண்டு அதே போல எத்தனை பேர் கலக்கியிருக்கிறார்கள் என்பதை ஒப்பிடுவதுதான் லாஜிக். சென்ற ஆண்டு கணிதப் பாடத்தில் 2656 பேர் 200க்கு 200 வாங்கியிருக்கிறார்கள். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2,352 ஆக குறைந்திருக்கிறது. சென்ற ஆண்டு இயற்பியலில் 142 பேர் அதுவே இந்த ஆண்டு 36 பேர்தான். வேதியியலில் கடந்த ஆண்டு 1444 பேர் அதுவே இந்த ஆண்டு 1499. இயற்பியலும் கணிதமும் கடந்த ஆண்டை விட சற்று கடினமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. வேதியியல் சற்று எளிமையாக இருந்திருக்கக் கூடும். இப்பொழுது அது பிரச்சினையில்லை. விசாரித்த வரையில் சென்ற வருடமும் இந்த வருடமும் கட்-ஆஃப் மதிப்பெண்களில் பெரிய வித்தியாசம் இருக்காது போலிருக்கிறது. அப்படியே இருந்தாலும் ஒன்று அல்லது ஒன்றரை மதிப்பெண் வரைக்கும் கூட்டிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அதாவது இந்த ஆண்டு 186.5 மதிப்பெண் வாங்கியிருந்தால் கடந்த ஆண்டு 188 மதிப்பெண்ணுக்கு ஸீட் கிடைத்த கல்லூரிகளில் இடம் பிடித்துவிடலாம். 

சென்ற ஆண்டிற்கான கட்-ஆஃப் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. பின்வரும் லின்க்கின் வாலைப் பிடித்துச் சென்று  அதில் மாவட்டம், கல்லூரி, சாதிப்பிரிவு ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து பார்த்தால் கடந்த ஆண்டில் இந்த மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் இடம் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே கல்லூரிகளில் இடம் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.


கீழே இருக்கும் இந்தப் படம் 2011 ஆம் ஆண்டுக்கான பட்டியல்-

அந்த வருடத்தில் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் 199.25 மதிப்பெண்கள் தேவைப்பட்டிருக்கிறது. கோவை குமரகுரு கல்லூரியில் சேர்வதற்கு எஸ்.சி பிரிவினருக்கு 184.25 மதிப்பெண்கள் தேவைப்பட்டிருக்கிறது.



இப்படியான Comparision மூலமாக கடந்த ஆண்டுகளில் நமது கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த கல்லூரிகளை அடையாளம் கண்டுவிட்டால் அவற்றை அடிப்படையாக வைத்து ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பட்டியல் கவுன்சிலிங் போகும் போது நிச்சயம் தேவைப்படும். அது பற்றி பேசலாம்....

அவர்களை ஏன் சாவடிக்கிறீங்க?


பதினேழு அல்லது பதினெட்டு வயதில் இத்தனை பதற்றம் தேவையில்லை. ஆனால் நாம் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்? நேற்று அந்தக் கொடுமையை நேரில் பார்க்க வேண்டியிருந்தது. நேற்றுதானே +2 ரிசல்ட் வந்திருந்தது?

மாணவர்கள்தான் மதிப்பெண்களின் பிரிண்ட் அவுட்டை கையில் வைத்துக் கொண்டு கொத்து புரோட்டா போடுகிறார்கள் என்றால் அவர்களை பெற்றவர்களின் ரவுசு அதைவிடவும் அதிகம். தங்களது செல்போனில் இருக்கும் நெம்பரையெல்லாம் அழைத்து ‘இந்தக் கட்-ஆஃப்புக்கு அந்தக் காலேஜ் கிடைக்குமா?’  ‘கம்ப்யூட்டர் சயின்ஸா? சிவில் இஞ்சினியரிங்கா?’ என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்கள். எதிர்முனையில் பேசிக் கொண்டிருப்பவரின் மகனோ மகளோ சென்ற வருடங்களில் பொறியியல் சேர்ந்திருக்கக் கூடும். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது போல ஓரிருவரை இஞ்ஜினியரிங் சேர்த்தவர்கள் இப்பொழுது கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ‘ஆட்டோமொபைலுக்குத்தான் செம ஃப்யூச்சர்’ ‘ட்ரிப்பிள் ஈயா? அதெல்லாம் வேண்டாம்’ என்று முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அளப்பவர்களில் முக்கால்வாசிப்பேர் கவுண்டமணியாரின் பாணியில் புண்ணாக்கு விற்பவனும், பருத்திக்கொட்டை விற்பவனும்தான். இந்த மாதிரி ஆட்களை நேரில் பார்த்தால் முதல் வேலையாக கீழே போட்டு கொரவலியைக் கடிக்க வேண்டும்.

பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்ததும் நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு விதத்தில் அக்கிரமம் செய்கிறோம் என நினைக்கிறேன். மாணவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ‘ப்ரஷர்’ ஏற்றிவிடுகிறோம். 

ஒவொருவருடமும் குறைந்தபட்சம் மூன்று லட்சம் பேர் சிவில் சர்வீஸ் தேர்வின் ஆரம்பகட்ட தேர்வை (prelims) எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு நாம் அட்வைஸ் செய்கிறோம்? ஆனால் அதே சமயம் +2 மாணவன் ஒவ்வொருவனுக்கும் குறைந்தபட்சம் ஐம்பது பேராவது அட்வைஸ் செய்து சாவடித்துவிடுகிறார்கள். இதையெல்லாம் வினாவாக்கினா சிம்பிளாகச் சொல்லிவிடுவார்கள். ‘சிவில் சர்வீஸ் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்ய நமக்கு தகுதி இல்லை’என்று. நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள். +2 மாணவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு நம்மில் எத்தனை பேருக்கு தகுதி இருக்கிறது?

தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்ற கணக்காக ஆளாளுக்கு கிளம்பியிருப்பதனால்தான் 1100க்கு மேலான மதிப்பெண்ணை வாங்கிய பெண்ணும் மூக்கைச் சிந்திக் கொண்டிருக்கிறாள். 850 வாங்கியவளும் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறாள்.

இவர்கள் இப்படியென்றால் மீடியாக்காரர்களின் லோலாயம் த்ரீ மச். மாநிலம், மாவட்டம், மண்டலம், பள்ளி என்று எந்த அளவில் மதிப்பெண் வாங்கியிருந்தாலும் வீடு தேடிப் போய் வாய்க்குள் மைக்கை விட்டுவிடுகிறார்கள். ஃபுல் மேக்கப்பில் இருக்கும் அம்மாவோ அப்போவோ வாய் நிறைய பற்கள் தெரிய தங்களது பிள்ளைக்கு லட்டு ஊட்ட அதை படம் எடுத்து பக்கத்திற்கு பக்கம் நிரப்பி வைத்துவிடுகிறார்கள். குறைந்த மதிப்பெண் வாங்கியவர்களை இதைவிட இன்சல்ட் செய்ய முடியாது. நம்மை விட வேறு யாரும் மதிப்பெண்களை இந்த அளவுக்கு புனிதப்படுத்த முடியாது என நினைக்கிறேன். படையல் போட்டு, பூஜை நடத்துகிறோம்.

ரிசல்ட் வந்த அடுத்த நாளில் பத்திரிக்கைகளின் பக்கம் முழுவதும் ‘ஆத்தா ஈஸ்வரி ஹைடெக் பொறியியல் கல்லூரி’யை நடத்திக் கொண்டிருக்கும் முன்னாள் கசாப்புக்கடைக்காரர்களும் இந்நாள் கல்வித்தந்தைகளுமான மீசைக்கார ஆசாமிகள் தங்களது கல்லூரியின் ஆஃபர்களை பற்றி விலாவாரியாக பேட்டியாக கொடுக்கிறார்கள். இன்றைக்கு இஞ்ஜினியரிங் கல்லூரி நடத்துபவர்களில் பாதிக்குமேல் சிலை திருடியவனும், சங்கிலி பறித்தவனுமாக இருப்பது நம் தொழில்நுட்ப-அரசியல் புணர்ச்சியின்...ச்சீ...புரட்சியின் சாபக்கேடு. இந்த ஜிங்கிலிஸ்தான் செய்தித்தாள்களில் பக்கத்திற்கு பக்கம் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

தொலையட்டும் விடுங்கள். மார்க் கலாச்சாரம், அட்மிஷன் சில்லரைத் தனங்கள், ப்ராய்லர் கோழி வளர்ப்பு முறையை நகல் எடுத்து மாணவர்களை வளர்க்கும் நாமக்கல் பள்ளிகள் ஆகியனவற்றை கலாய்க்க இன்று சரியான நாள் இல்லை. அப்பன் சொல்வதை கேட்பதா? ஆத்தாவின் ப்ரெண்ட் சொல்வதைக் கேட்பதா? அந்தக் கல்லூரியா? இந்தக் கல்லூரியா? எந்தப் பாடம் என ‘மெர்சல்’ ஆகிக் கிடக்கும் மாணவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. 

மார்க், கட்-ஆஃப், கோர்ஸ் போன்ற சொற்கள் பூதங்களாக மாறி நிற்கும் காலகட்டத்தில் துரதிருஷ்டவசமாக ப்ளஸ் டூ எழுதித் தொலைத்துவிட்டார்கள்.  ‘ஆனது ஆகியாச்சு..இனி அடுத்தது என்ன’ என்று தெளிவாகச் சொல்வதற்கான ஆட்கள் இங்கே ரொம்பக் குறைவு. ‘எங்க பெரியக்காவோட மச்சான் பையன் ஒருத்தன் கட் ஆஃப் 197 வாங்கியிருக்கான்’ என்று சம்பந்தமில்லாத ஒருவனை அந்த வினாடிக்கான எதிரியாக்குவதில்தான் குறியாக இருப்பார்கள். ஓசியில் அட்வைஸ் செய்பவர்களுக்கும், அசால்ட்டாக ஐடியா கொடுப்பவர்களுக்கும் தெரிந்த பாடங்கள் நான்கைந்து மட்டுமே. ஆனால் அத்தினியூண்டு மேட்டரை வைத்துக் கொண்டிருந்தாலும் ‘இவன் சொல்வது ஒருவேளை சரியாக இருக்குமோ?’ என்று சந்தேகம் வரும்படியாக பேசி குழப்பிவிட்டுவிடுவார்கள். முடிந்தவரை அட்வைஸ் அரை மண்டையர்களிடம் மாட்டிக் கொள்ளாதபடி தங்களையும் தங்களது பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. 

இவர்களையெல்லாம் தாண்டி அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை மாணவர்கள் பார்க்கட்டும். மதிப்பெண்கள் குறைந்ததாக நினைக்கும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை வாங்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிடுவது நல்லது. ஒரு தாளுக்கு ரூ.275 கட்டணம் என நினைக்கிறேன். நல்லதோ கெட்டதோ- அத்தனை தாள்களையும் வாங்கி வைத்துக் கொண்டால் பிற்காலத்தில் நமது நினைவுச்சின்னமாகிவிடும் வாய்ப்பிருக்கிறது. நகல்களை வாங்கிப்பார்த்தால் ஒரு மதிப்பெண் கூடுதலாக வரக்கூடும் என்ற சந்தேகம் வந்தால் கூட மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்துவிடலாம்.

மறுமதிப்பீடு, ரேங்க் பட்டியல் என்பதெல்லாம் இன்னொரு பக்கம் இருக்கட்டும்.

பெற்றவர்களும் கூட மேம்போக்கான அட்வைஸ்களுடன் மாணவர்களை அவர்களின் போக்கில் விட்டுவிடுவதுதான் அவர்கள் செய்யும் ஒரே உபகாரமாக இருக்கக் கூடும். மாணவர்களும் எடுத்தவுடனே ‘எனது கட்-ஆஃப்புக்கு எந்த காலேஜ்’ கிடைக்கும் என களமாட வேண்டியதில்லை. முதலில், என்னென்ன பாடங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கட்டும். அதற்காக அலையட்டும். எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை சொல்வார்கள். ‘அழுதழுது புள்ளை பெத்தாலும் அவதான பெத்தாகோணும்’ என்று. பன்னிரெண்டு வருடம் செக்கிழுக்க வைத்துவிட்டோம். இன்னும் ஒரு வாரம்தானே! கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு பாடத்திலும் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். எதைப் படித்தால் என்ன வேலை கிடைக்கும்? எந்தவிதமான தொழில் தொடங்கலாம் என்பதை அவர்களாகவே புரிந்து கொள்வது அவசியம். அதன் பிறகு அவர்களாக முடிவு செய்யட்டும். நான்கைந்து நாட்களுக்கு பிறகு மாணவர்களின் குழப்பம் அதிகமாகியிருப்பதாகத் தோன்றினாலோ அல்லது மிகவும் தவறான முடிவை எடுத்திருப்பதாகத் தோன்றினாலோ மட்டுமே ‘உண்மையிலேயே அனுபவம்’ உள்ளவர்களின் ஒத்தாசையைத் தேடலாம். அதுவரை மாணவர்களாகவே முடிவு செய்வதுதான் உசிதம். 

சத்தியம் கூட செய்ய முடியும்! நீங்களும் நானும்தான் சொதப்புவோம். சரியான புரிதலை உருவாக்கிவிட்டால் தொண்ணூற்றைந்து சதவீத மாணவர்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்துவிடுவார்கள்.